இலங்கையில் இன்னும் கடினமான விவகாரங்கள் நிலுவையில் உள்ளன : ஜோன் கெரி
பஷில் ராஜபக்ஷவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு 11 ஆம் திகதி வரை விளக்கமறியல்
மஹிந்தவை சந்தித்த மைத்திரி வெளியேறினார்..!
இணக்கமின்றி முடிவடைந்த மைத்திரி–மஹிந்த சந்திப்பு
இலங்கையில் இன்னும் கடினமான விவகாரங்கள் நிலுவையில் உள்ளன : ஜோன் கெரி
05/05/2015 இலங்கையில் இன்னும் சில கடினமான விவகாரங்கள் சவாலான முறையில் நிலுவையில் உள்ளதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய மற்றும் சமாதான இலங்கைக்கான தனது எதிர்பார்ப்பை என்னிடம் பகிர்ந்துகொண்டமை சிறப்பான விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் இலங்கையில் அமெரிக்க தூதரக உத்தியோகத்தர்களுடனான சந்திப்பின்போது அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி மேற்கண்டவாறு தெரிவித்ததாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
"இலங்கையின் தலைவர்களை சந்தித்து அவர்களுடன் நேரத்தை செலவிட கிடைத்தமை மகிழ்ச்சிக்குரிய விடயம். இலங்கையின் எதிர்காலம் குறித்த அவர்களின் நோக்கங்களை உணரக்கூடியதாக இருந்தது" என்றும் ஜோன் கெரி குறிப்பிட்டுள்ளார்.
"" காலை வேளையில் தமிழ்த் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். ஐக்கிய மற்றும் சமாதான இலங்கைக்கான அவர்களின் எதிர்பார்ப்பை என்னிடம் பகிர்ந்துகொண்டமை சிறப்பான விடயமாகும். ஆனால் இலங்கையில் இன்னும் சில கடினமான விவகாரங்கள் நிலுவையில் உள்ளன" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பை கோடிட்டுக் காட்டி ஜோன் கெரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சிறந்த உறவை கட்டியெழுப்ப செயற்பட்டுவரும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகத்தர்களுக்கும் ஜோன் கெரி நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க , வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் தலைமையிலான பிரதிநிதிகளை நேற்று முன்தினம் ஜோன் கெரி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க ராஜாங்கச் செயலாளராக கமையாற்றிய வில்லியம் பியர்ஸ் ரொஜர்ஸ் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அதன் பின்னர் ஜோன் கெரியே இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்தமை விசேட அம்சமாகும். நன்றி வீரகேசரி
பஷில் ராஜபக்ஷவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
05/05/2015 திவிநெகும நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நன்றி வீரகேசரி
07/05/2015 முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் 20 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நன்றி வீரகேசரி
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு 11 ஆம் திகதி வரை விளக்கமறியல்
06/05/2015 கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற
உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
மஹிந்தவை சந்தித்த மைத்திரி வெளியேறினார்..!
06/05/2015 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடையேயான சந்திப்பு பாராளுமன்ற கட்டிடத் தொகுதில் குறுகிய நேரம் இடம்பெற்றுதோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
இச்சந்திப்பின் போது எவ்வாறான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என இன்னும் தெரியவரவில்லை.
இச்சந்திப்பின் போது சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவது தொடர்பில் இரு தரப்பும் அதிக கவனம் செலுத்தும் என ஜனாதிபதி ஊடகம் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
இணக்கமின்றி முடிவடைந்த மைத்திரி–மஹிந்த சந்திப்பு
07/05/2015 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற விஷேட சந்திப்பு இணக்கப்பாடின்றி முடிவுக்கு வந்தது. இந் நிலையில் இருவரும் மீண்டும் பிறிதொரு நாளில் சந்தித்து பேச தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை களமிறக்க வேண் டும் என்ற பிரதான கோரிக்கை உள்ளிட்ட ஐந்து விடயங்களை முன்வைத்து இந்த சந்திப்பானது நேற்று பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்றது.
பிற்பகல் 1.30 மணிக்கு ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இந்த சந்திப்புக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிற்பகல் 12.45 மணிக்கு பாராளுமன்ற வளாகத்துக்கு வருகை தந்தார். முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பிற்பகல் 1.45 மணிக்கு பாராளுமன்றத்துக்கு வருகை தந்தார்.
இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரம் இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட விஷேட குழுவினரும் சந்திப்பில் கலந்துகொண்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, எம்.கே.டீ.எஸ்.குணவர்தன, துமிந்த திஸாநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னாள் ஜனாதிபதியுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்தன, டலஸ் அலகப்பெரும மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் கலந்துகொணடனர்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனதிபதி மஹிந்தவை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறக்குதல், எதிர்வரும் 15 ஆம் திகதி கலைக்கபட தீர்மானிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கால எல்லையை நீடித்தல், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பலப்படுத்தல், கட்சியில் போட்டியிடுவதற்கு அனுமதியளிக்கும் வேட்பு மனு குழுவில் மஹிந்த அணியினரையும் இணைத்தல், புதிதாக வெளியிடப்பட்ட நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்தல் ஆகிய ஐந்து விடயங்கள் தொடர்பிலேயே இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந் நிலையில் ஒரு மணி நேர கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறியதுடன் அதனைத் தொடர்ந்து 10 நிமிடங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அங்கிருந்து வெளியேறினார். ஜனாதிபதி வெளியேறும் போது பாராளுமன்ற நுழைவாயிலில் காத்திருந்த ஊடகவியலாளர்களிடம் எதுவும் குறிப்பிடாததுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ,' ஜெயவேவா.., நான் போய் வருகின்றேன்' என ஊடகவியலாளர்களுக்கு கையசைத்து தெரிவித்து விட்டு சென்றார்.
ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும் சென்றதன் பின்னர் அவர்களது குழுவினர் பாராளுமன்றத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மாலை நான்கு மணியளவில் அவர்கள் பாராளுமன்றில் இருந்து வெளியேற ஆரம்பித்தனர்.
இந் நிலையில் சந்திப்பு குறித்து ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருடன் கலந்துகொண்ட நீர்பாசன அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஊடகங்களிடம் குறிப்பிடுகையில்,
ஸ்ரீ லங்க சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கும் கட்சியின் ஆலோசகர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கட்சியின் எதிர்காலம் குறித்த விஷேட சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பானது நூற்றுக்கு நூறு வீதம் வெற்றிகரமாக முடிவுற்றது. இரு தரப்பினரும் மீண்டும் இணக்கம் கண்டுள்ளோம். இந்த சந்திப்பின் போது பல விடயங்கள் குரித்து நாம் கலந்துரையாடினோம்.
விஷேடமாக எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வது குறித்து இதன் போது ஆராயப்பட்டது. இந்த சந்திப்பின் போது கட்சி குறித்த விடயங்களே ஆராயப்பட்டன. அரசாங்கம் குறித்த எந்தவிதமான விடயங்களும் பேசப்படவில்லை. இந்த சந்திப்பு குறித்து கட்சியின் செயலாளர் உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிப்பார்' என்றார்.
இதனையடுத்து பாராளுமன்றில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் குமார வெல்கம ஊடகங்களிடம் குறிப்பிடுகையில்,
'ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கும் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான இந்த சந்திப்பு குறித்து நாம் முழுமையாக திருப்தி கொள்ள முடியாது. எனினும் இரு தரப்பும் தொடர்ந்தும் பேசுவதற்கு முடிவு செய்துள்ளோம். ஜனாதிபதி மைத்திரிபாலவையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் ஒரே மேடைக்கு கொண்டுவருவதே எமது முயற்சியாகும். அது தொடர்பிலேயே இந்த பேச்சுக்களை நாம் நடத்துகின்றோம். இந்த பேச்சுவார்த்தைகளின் போது நாம் விஷேடமாக எதிர்வரும் பாரளுமன்ற தேர்தலில் மஹிந்த ரஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்துமாறு யோசனை முன்வைத்தோம். எனினும் அது தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன திருப்திகரமான பதில் எதனையும் தரவில்லை. அந்த யோசனைக்கு அவர் தொடர்ந்தும் மெளனம் காக்கின்றார்.
அதே போன்று உள்ளூராட்சி சபைகளின் கால எல்லையை நீடிப்பது குறித்த யோசனைக்கும் திருப்திகரமான பதில் இல்லை. ஏனைய கோரிக்கைகளும் அவ்வாறே அமைந்தன.
எனினும் நாம் முன்வைத்த நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடர்பிலான யோசனையும் கோரிக்கையும் ஜனதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவை செயற்படுத்தும் அல்லது தலையீடு செய்யும் அரசியல் தலையீடுகளை நீக்க ஜனாதிபதி எம்மிடம் உறுதியளித்தார்.
எனினும் பிரதமர் வேட்பளர் கோரிக்கையே எமது பிரதான கோரிக்கை. விரைவில் அதற்கான சாதகமான பதிலை நாம் எதிர்ப்பார்க்கின்றோம். அது குறித்த நம்பிக்கை எமக்கு உள்ளது. அதனால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம். என்றார்.
இந் நிலையில் மஹிந்த ரஜபக்ஷவுடன் இனைந்து கலந்துரையாடலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்தனஇ டலஸ் அலகப் பெருமஇ ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் இனைந்து ஊடகங்கள் முன்னிலையில் பேசினர். அவர்கள் சர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் டலஸ் அலகப் பெரும குறிப்பிடுகையில்,
'எமது பிரதான கோரிக்கையான பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனதிபதி மஹிந்தவை களமிறக்குவது குறித்து ஜனாதிபதி சம்மதம் தெரிவிக்காவிடினும் அதனை கட்சியின் மத்திய செயற்குழு ஊடாக தீர்மானிக்கும் நிலைப்பாடில் அவர் உள்ளார். ஏனைய விடயங்கள் தொடர்பிலும் உறுதியான இனக்கப்பாடுகள் எட்டப்படவில்லை. எனினும் எமது கோரிக்கைகளுக்கு அமைவாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடர்பில் அவதானம் செலுத்தி அதில் தலையீடு செய்யும் அரசியல் சக்தியை நீக்குவதற்கு ஜனாதிபதி சம்மதம் தெரிவித்தார்.
இந் நிலையில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் குழுவினரும் எமது குழுவினரும் ஒவ்வொரு வாரமும் சந்தித்து கலந்துரையாட நாம் தீர்மானித்துள்ளோம். என்றார்.
இதேவேளை சந்திப்பு தொடர்பில் சுதந்திரக் கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்ச யாப்பா அறிக்கையொன்றை விடுத்திருந்தார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் உட்பட 5 முக்கிய விடயங்கள் தொடர்பாக நேற்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்இ முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கும் கட்சியின் ஆலோசகர் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது.
இதன்போது முக்கிய 5 விடயங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது. எதிர்வரும் பொதுத்தேர்தலின் பிரதமர் வேட்பாளர். உள்ளூராட்சி சபைகளை கலைத்தல்.
பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவது. போன்ற காரணங்களே ஆராயப்பட்டன. அத்தோடு வேட்பாளர்கள் பட்டியல் தொடர்பாகவும் ஆராயபட்டது.
மேலும் விசேட குற்றவியல் விசாரணை பிரிவு அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது தொடர்பாக சில பாராளுமனற உறுப்பினர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அதிக அக்கறை காட்டினார்.
அத்தோடு பேச்சுவார்த்தைகளின் அனைத்து விபரங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயற்குழுவில் முன்வைப்பதற்கும். அவை தொடர்பாக விவாதிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டது. இதேவேளை சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு அனைவரும் கட்டுப்பட்டு கட்சி ஒழுக்கத்தை பாதுகாக்க வேண்டுமென்றும் இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment