- ஐங்கரன் விக்கினேஸ்வரா
உலகளாவிய ரீதியில் டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்தின் வர்த்தக வரிச் சுமைகளால் பாதிப்புக்குள்ளான நாடுகளில் தற்போது தேர்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கனடாவில் நடந்த தேர்தல் முடிவுகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அடாவடித்தனத்துக்கு எதிரான பலத்த அடியாக கணிப்பிடப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் நேற்று சனிக்கிழமை (3) பொதுத் தேர்தல் நடைபெற்றது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தேர்தலை அறிவித்த பின்னர் கடந்த ஐந்து வாரங்களாக தீவிர பிரசாரம் நடைபெற்று வந்தது.
இந்த இரு நாட்டு தேர்தல்களில் ஆளும் கட்சிகளுக்கான ஆதரவே அதிகரித்து வந்துள்ளது. கனேடிய தேர்தலும், அரவுஸ்திரேலிய தேர்தலும் ட்ரம்ப் அரசாங்கத்தின் வரிச்சுமை காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் எதிர்ப்புக் குரலாகவே கருத இடமுண்டு.
ஆஸியில் ஆளும் கட்சி ஆதரவு
2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி (அவுஸ்திரேலியாவில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. தற்போதைய நிலவரப்படி அந்தக் கட்சியின் செல்வாக்கு சிலகாலம் சரிந்திருந்தாலும், மீண்டும் முன்னிலையில் இருந்தது.
கொவிட் தொற்றுக் காலத்தின் பின்னர் அவுஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள், அதிக பணவீக்கம் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வீட்டுவசதி மற்றும் வாடகை போன்ற காரணங்களில் மக்கள் விரக்தியடைந்துள்ள சூழலில் இந்த பொதுத் தேர்தல் நடைபெற்றது.
இரண்டாவது தடவையாக மூன்று ஆண்டு பதவிக் காலத்தை எதிர்பார்க்கும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸின் தொழிலாளர் கட்சி, தற்போது பிரதிநிதிகள் சபையில் உள்ள 151 இடங்களில் 77 இடங்களைக் கொண்டிருந்தது.
அதேவேளை பெரும்பான்மையான வாக்காளர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் மீது சந்தேகம் கொண்டிருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளிப்படுத்தின.