பொங்கலோ பொங்கல் !
















 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் …. அவுஸ்திரேலியா



 


தைபிறந்து விட்டாலே தங்கமே தங்கம் 
தளர்வகன்று போயிடும் தங்கமே தங்கம்
பொங்லென்று சொன்னாலே தங்கமே தங்கம்
புத்துணர்வு பிறந்திடுதே தங்கமே தங்கம் 

நன்றி சொல்லும் பெருவிழாதான்  பொங்கலாகுமே 
நாளுதிக்கும் சூரியயனே நமக்கு ஆதாரம் 
உழவதனை உளமிருத்தும் உயர்ந்த விழாவே 
உயர்வான எங்களது பொங்கல் விழாவே 

வாசலிலே கோலமிட்டு வாழை கட்டியே
மஞ்சளிஞ்சி கரும்புமதில் சேர்த்துக் கட்டியே 
தோரணமாய் அலங்கரித்து வீட்டு வாசலில் 
தொடங்கிடுவோம் பொங்கிவிட விளக்கு ஏற்றியே 

பொங்கல் வாழ்த்து!

 

தை மலர்ந்து - தமிழ்ப் புத்தாண்டு மலர்ந்து –

வையகம் வாழ் தமிழர் வாழ்வும்

இறையருளால் மலர வேண்டி வாழ்த்துவோம்.

 

தை மலர்ந்து வருக வருகவே!


பொங்கல்தனை இனிமைபொங்கப் “பொங்கலோ பொங்கல்
பொலிந்திடுக” என்றேபுத் தரிசி கொண்டு
பொங்கியதைப் புடவிவாழப் பொற்கதிர் வழங்கும்
பொற்புமிகு பரிதிக்குப் படையல்செய்து

பொங்கிநிற்கும் இந்நாளில் தமிழ ரெல்லாம்
புகலரிய ஒற்றுமையை மனதிற் பொங்கிப்
பொங்குமின்பத் ‘தமிழ்த்தாயை’ நினைந்து வணங்கிப்
போற்றிடவே தைமலர்ந்து வருக வருகவே!

பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள் !

                


              















 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா


தைபிறந்தால் வழிபிறக்கும் " என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். அந்த வழக்கம் மனத்தில் புத்துணர்வையும் , உத்வேகத்தையும் , உவந்தளிக்கும்.

" தை பொறந்தால் (பிறந்தால்) வழி பிறக்கும் தங்கமே தங்கம்                
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்                                      
முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்                                           
குத்து விளக்கேத்தி வச்சு ( வைத்து ) தங்கமே தங்கம்                               
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம் "  

- என்னும் இந்தப் பாடல் மனமகிழ்ந்த பொங்கலை, மலர்ந்த பொங்கலை , மண்வாசனை தரும் பொங்கலை , உயிர்த்துடிப்பான பொங்கலை , கலாசாரம் பண்பாடு கலந்த பொங்கலை நினைவூட்டிகிறதல்லவா ?  இப்படி ஒரு காலம் இருந்தது. ஆனால் அப்படி ஒரு காலம் வரவேண்டும் என்பதுதான் எல்லோரினதும்  பேராவலும் ஆகும்.

" உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்                            
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் "
" உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லைக் கண்டீர்                                        
பழுதுண்டு வேறோர் பணிக்கு " 
" சேற்றில் கால் வைக்காவிட்டால் சோற்றில் கைவைக்க முடியாது "

எம் ஜி ஆர் சந்திரபாபு மோதல் - ச. சுந்தரதாஸ்

 

தமிழ்த் திரையுலகிலும், அரசியலிலும் மங்காப் புகழ் பெற்று விளங்கியவர் மக்கள் திலகம் எம் ஜி ஆர். அவருடைய நூற்றி ஏழாவது பிறந்த தினம் இம்மாதம் பதின்னேழாம் திகதியாகும். 1917 ஜனவரி 17ம் திகதி பிறந்த அவர் தமிழக முதல்வராக பத்தாண்டுகளுக்கு மேல் பதவி வகித்து மறைந்த பின்னரும், அதாவது முப்பத்தியேழாண்டுகள் கழிந்த பின்னும் இன்னும் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கிறார்.


நல்லவராக, கொடைவள்ளலாக, ஏழைகளுக்கு இரங்குபவராக, தாய்க்குலத்தை மதிப்பவராக அவருக்கென்று ஓர் இமேஜ் , பிம்பம் இன்று வரை இருந்து வருகின்ற போதும் , அவருக்கு எதிரான விமர்சனங்களும், எதிர்மறை கருத்துகளும் அவ்வப்போது வைக்கப் பட்டே வருகின்றன. அவற்றில் ஒன்று தான் நகைச்சுவை நடிகர் ஜே பி சந்திரபாபுவின் திரையுலக வாழ்வை அவர் சீரழித்து விட்டார், அவர் இயக்கிய படத்தில் தொடர்ந்து நடிக்க மறுத்து அதனால் அவரை மன உளைச்சலுக்கும், பொருளாதார சீர்குலைவுக்கும் ஆளாக்கி விட்டார் என்பதாகும். இன்றும் அவர் மீது இப் பழிச்சொல் சுமத்தப் பட்டு வருகிறது. ஆனால் இது பற்றிய உண்மை விவரங்களை எம் ஜி ஆர் என்றும் வெளிப்படுத்தியதில்லை. சந்திரபாபு ஒருசில விவரங்களை சொன்ன போதும் அவை முழுமையாக இல்லை. பிரபல கதாசிரியரும், வசனகர்த்தவுமான ஆரூர்தாஸ் தான் எழுதிய ஒரு நூலில் இது தொடர்பான சில தகவல்களை எழுதியிருந்தார். அத் தகவல்களும் பூரண விளக்கத்தை தரவில்லை.

ஆனால் இந்த விஷயங்கள் நடந்து அறுபது ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது மேலும் சில புதிய தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன. அந்த தகவல்களை வெளியிட்டவர் வேறு எவருமில்லை , சந்திரபாபுவின் கூடப் பிறந்த சகோதரர் , இன்று உயிரோடு இருக்கும் ஒரே தம்பி ஜவஹர் தான் அவர்!

தூத்துக்குடியில் கிறிஸ்துவ மீனவ சமூகத்தில் பிறந்து சிறு வயதிலேயே இலங்கைக்கு சென்று வளர்ந்து, அங்கு தனது ஆங்கில அறிவையும், நாகரீகத்தையும் பெற்றுக் கொண்டு மீண்டும் சென்னைக்கு திருப்பியவர் சந்திரபாபு. நடிப்பின் மீது இருந்த அதீத ஆர்வத்தால் கடும் முயற்சி செய்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை தேடிக் கொண்ட சந்திரபாபு மிக குறுகிய காலத்தில் பிரபல நகைச்சுவை நடிகராக உருவானார்.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 91 முதல் விருதை அரைநூற்றாண்டுக்கு ( 1972 இல் ) முன்பே எனக்கு வழங்கிய ரத்தினசபாபதி அய்யர் ! அய்யரின் அமுத விழாக்காலத்தில் எனக்கு பாராட்டு விழா !! முருகபூபதி


இம்மாதம் 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மெல்பனில்,  Berwick  என்ற இடத்தில் அமைந்துள்ள மூத்த பிரஜைகள் மண்டபத்தில், நான் அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினர் எனக்கு பாராட்டு விழாவை நடத்தினார்கள்.

கடந்த ஆண்டு,  கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருதையும், பிரான்ஸில் வென்மேரி அறக்கட்டளை  வழங்கிய வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் விருதையும் நான் பெற்றுக்கொண்டமையினால், இந்த பாராட்டுவிழாவை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை சங்கத்தின் முன்னாள் தலைவரும், சமகால செயற்குழு உறுப்பினருமான இலக்கிய நண்பர் சட்டத்தரணி, பாடும் மீன் சு. ஶ்ரீகந்தராசா அவர்கள் முன்வைத்து,  தனது முழு உழைப்பினையும் வழங்கி அனைவரையும் இணைத்து  நடத்தி முடித்துவிட்டார்.

  இந்த விழா அவசியமில்லை.  நான் எனக்குத்தெரிந்த தொழிலையே


செய்து வருகின்றேன்.  “ என்று நான்  எடுத்துக்கூறியிருந்தேன். எனினும்  என்னை சம்மதிக்கவைத்து அவர் நடத்தினார்.

இந்த விழா கடந்த ஆண்டு இறுதியில்தான் நடக்கவிருந்தது.  எதிர்பாராதவகையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு வந்தமையால், நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

எனினும், அவர் விடாப்பிடியாக எடுத்த பணியை நிறைவேற்றியே தீருவோம் என்ற மனப்பான்மையோடு தீவிரமாக இயங்கியிருந்தார்.  சங்கத்தின் தலைவர் எழுத்தாளர் ஓவியர் கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்களின் தலைமையில் விழா நடந்தது. 

அன்று  கடுமையான மழைநாள்.  எனினும் பலரும் திரளாக வருகை தந்து சிறப்பித்தனர். கலந்துகொண்ட  அனைவரும் தங்கள் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

இதனால் எனக்கு எந்தப்புகழும் இல்லை. அனைத்துப்புகழும் விழாவை ஒழுங்கு செய்வதில் முன்னின்று உழைத்த நண்பர் பாடும் மீன் ஶ்ரீகந்தராசா அவர்களையும்,  அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தலைவர் உட்பட அனைத்து  செயற்குழு உறுப்பினர்களையும் நிகழ்ச்சியில் உரையாற்றியவர்களையும் இணைந்து கொண்டவர்களையும்தான் சாரும்.

என்னைப்போன்ற எழுத்தாளர்கள் அனைவருமே விருதுகள், பாராட்டுரைகள்,  பரிசுகள் எதனையும் எதிர்பார்க்காமலேயே இந்தத் துறைக்கு வந்தவர்கள்.

இவையெல்லாம் எழுதத் தொடங்கி சிறிது காலத்தின் பின்னர் அல்லது  பல ஆண்டுகளுக்குப்பின்னர்தான் எழுத்தாளர்களுக்கு கிடைத்திருக்கின்றன.

சிலருக்கு கிடைக்காமலே போயிருக்கின்றன. பலர் விருதுகளை காணாமலேயே கண்களை நிரந்தரமாக மூடிவிட்டனர்.

 அதனால், விருது கிடைக்காதவர்கள் அனைவருமே சிறந்த எழுத்தாளர்கள் இல்லை என்ற முடிவுக்கு நாம் வந்துவிட முடியாது.

படைப்பிலக்கியம் மற்றும் ஊடகத்துறைக்குள் நான் பிரவேசித்து  அரைநூற்றாண்டும் கடந்துவிட்டது.

இந்த ( 2024 )  ஆண்டு ஜூலை மாதம் வந்தால்,  எனது முதலாவது சிறுகதை கனவுகள் ஆயிரம் வெளிவந்து, 52 வருடங்களாகப்போகிறது.

அதன்பின்னர், அச்சிறுகதையும் இடம்பெற்ற சுமையின் பங்காளிகள் என்ற எனது முதலாவது சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு 1976 ஆம் ஆண்டில் இலங்கையில் தேசிய சாகித்திய விருதும் கிடைத்துவிட்டது.

படித்தோம் சொல்கின்றோம்: இளம்பருவம் கண்ணாடித் தம்ளருக்கு ஒப்பானது ! கைதவறினால் என்னவாகும் ? என்பதை சித்திரிக்கும்….. சியாமளா யோகேஸ்வரனின் “ கானல் நீர் “ நாவல் !! முருகபூபதி


இலங்கை பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரியான திருமதி சியாமளா யோகேஸ்வரன்,   ஒருநாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு,  தான் எழுதியிருக்கும் கானல் நீர்  என்ற  புதிய நாவலுக்கு அணிந்துரை எழுதித்தருமாறு கேட்டார்.

அவரது குரல் எனக்குப் புதியதாக இருந்தது. முன்னர் கேட்டிராத குரல் !

 “ எங்கேயிருந்து தொடர்புகொள்கிறீர்கள்…?  “ எனக்கேட்டேன். அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிறிஸ்பேர்ண் நகரத்திலிருந்து எனச்சொன்னார்.

நான் மூன்று தசாப்த காலமாக வசிக்கும் அவுஸ்திரேலியா


கண்டத்திலிருந்து மற்றும் ஒரு எழுத்தாளரா..? ஆச்சரியத்துடன் உரையாடினேன்.

எனது முகவரியைப்பெற்று தான் ஏற்கனவே எழுதி வெளியிட்டிருந்த இதயராகம் (  நாவல் - 2021 ) உறவுகள்                                   ( சிறுகதைத் தொகுதி - 2022 ) ஆகிய நூல்களையும் அனுப்பியிருந்தார்.

சியாமளா யோகேஸ்வரன் புதிய தலைமுறை எழுத்தாளர் என்பதை அவருடனான உரையாடலிலும், அவர் அனுப்பியிருந்த இரண்டு நூல்களிலுமிருந்தும்  தெரிந்து கொள்ள முடிந்தது.

ஏற்கனவே கானலில் மான் ( தெணியான் ) , கானல் தேசம்                               (நடேசன்) முதலான தலைப்புகளில் நாவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றை எமது ஈழத்து எழுத்தாளர்களே எழுதியிருக்கின்றனர்.  ஒருவர் வடமராட்சியில் மறைந்துவிட்ட  ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியான். மற்றவர் நான் புகலிடம் பெற்று வாழும் அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் நகரில் வசிக்கும் எழுத்தாளர் நடேசன்.

இந்த வரிசையில் இதே கண்டத்தில் குவின்ஸ்லாந்து மாநிலம் பிறிஸ்பேர்ண் நகரிலிருந்து சியாமளா யோகேஸ்வரன் தனது கானல் நீர் நாவலை வரவாக்கியிருக்கிறார்.

போரில் நீ வென்றால், அதை நீ விபரிக்க வேண்டியதில்லை.  தோற்றால், அதை விபரிக்க நீ அங்கிருக்கக்கூடாது “

அடல்ஃப்ஹிட்லர் இவ்வாறு இரண்டாம் உலகப்போர் முடிவடைவதற்கு முன்னர் சொன்னார்.   தனது முடிவு எத்தகையது…?  என்பதை தீர்க்கதரிசனமாகவே சொல்லிவிட்டாரோ ! ?  எனவும் யோசிக்கத் தோன்றியது.

ஒவ்வாரு மனிதரதும் வாழ்க்கைப்போரும் இத்தகையதே! ஒவ்வொருவரதும் வெற்றியையும் தோல்வியையும் வேறு யாரோ ஒருவர்தான் எழுத்தில் பதிவுசெய்து வைக்கின்றார்.  சிலர் தத்தம் வாழ்க்கையை சுயசரிதைப் பாங்கில் எழுதுகின்றனர்.

ஒரு மனித உயிர் பிறந்த நேரம் முதல், அதாவது தாயின் கருவறையிலிருந்து வெளிப்பட்டு, இப்பூவலகைப் பார்க்கத் தொடங்கி மரணிக்கும் வரையில் எது எதற்காகவோ போராடிக்கொண்டிருக்கிறது.

இலங்கைக்கு மார்க்கம் படிக்க வந்த ரஹ்மான் மாத இதழ் ஆசிரியரான கதை ! முருகபூபதி


மூத்த தலைமுறையினருக்கு 1971 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் தென்னிலங்கையில் நடந்த மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுதக்கிளர்ச்சி பற்றி நன்கு தெரிந்திருக்கும்.

கியூபாவில் அரசியல் மாற்றத்தை ஃபிடல் காஷ்ரோவுடன் இணைந்து  ஆயுதப்போராட்டத்தினால்  ஏற்படுத்திய புரட்சி இளைஞர் சேகுவேராவின் பெயரை அக்கால ஊடகங்கள் அப்போது  அதற்குச் சூட்டி, சேகுவேரா போரட்டம் என்று வர்ணித்தன.

ஏர்ணஸ்ட் சேகுவேராவுக்கும் அந்தக்கிளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை !


அப்போது நான் படித்துவிட்டு, வேலை தேடும் படலத்தில் இருந்தேன்.  எம்மைப்போன்ற இளைஞர்கள் வெளியே நடமாடுவதற்கும் அப்போது அஞ்சினோம்.

எமது வீட்டிலே வளர்மதி நூலகம் அமைத்து நண்பர்களுக்கிடையில் நூல்களை பரிமாறிப் படித்தோம்.  அந்த நூலகத்தில் இணைந்திருந்தவர்கள் மல்லிகை இதழையும் யாழ்ப்பாணத்திலிருந்து தபாலில் வரவழைத்து படித்தோம்.

1972 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மல்லிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழும் வெளியிட்டோம். அதில் எமது நூலகம் பற்றி ஒரு சிறிய கட்டுரையை  நான் எழுதியிருந்தேன்.

குறிப்பிட்ட நூலகத்திற்குத் தேவைப்பட்ட இலக்கிய நூல்களை வாங்குதற்காக கொழும்பில் ஆட்டுப்பட்டித் தெருவில்  அமைந்திருந்த ரெயின்போ அச்சகத்தில் இயங்கிய அரசு வெளியீட்டு நிறுவனத்திற்கு அக்காலப்பகுதியில் சென்று சில நூல்களையும் வாங்கினேன்.

அப்போதுதான் அதன் உரிமையாளர் எழுத்தாளர்  எம்.ஏ.ரஹ்மான் அவர்களை முதல் முதலில் சந்தித்தேன்.

அந்த அச்சகத்தில்தான் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ். பொ. என்ற எஸ். பொன்னுத்துரையை முதல் முதலில் பார்த்தேன். 

ரெயின்போ அச்சகத்தில் அச்சிடப்பட்ட அரசு வெளியீடுகளான மு. தளையசிங்கம் எழுதிய புதுயுகம் பிறக்கிறது,  மஹாகவி  உருத்திரமூர்த்தியின் குறும்பா, அகஸ்தியரின் நீ                ( உணர்வூற்று உருவகச்சித்திரம் ) எஸ். பொ. வின் வீ,  எஸ். பொ. அறிக்கை, ஏ. ஜே. கனகரத்னாவின் மத்து,  உட்பட சில நூல்களைப்  பெற்றேன்.

நூலகத்திற்காக அவை வாங்கப்பட்டமையால் ரஹ்மான், எனது இலக்கிய ஆர்வத்தை பார்த்துவிட்டு  குறைந்த விலையில் தந்தார்.

இவ்வாறு அரைநூற்றாண்டுக்கு முன்னர் எனக்கு அறிமுகமான ரஹ்மான் அவர்களுக்கு இந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி 90 வயதாகப்போகிறது.

கடந்த வாரமும் சென்னையிலிருந்து என்னுடன் வெகு உற்சாகமாக நீண்டநேரம் தொலைபேசியில் உரையாடினார்.

இவரும் இரசிகமணி கனகசெந்தி நாதன், எஸ்.பொ., மஹாகவி  உருத்திரமூர்த்தி, வி. கந்தவனம்,  ஏ. ரி. பொன்னுத்துரை ஆகியோரும்  எங்கள் நீர்கொழும்பூரில் மூன்று நாட்கள் நடந்த தமிழ் விழாவுக்கு வருகைதந்தபோது எனக்கு பன்னிரண்டு வயது.

அந்த விழாவில் நாடகங்களும் நடந்தன. இலக்கிய சொற்பொழிவுகளும் இடம்பெற்றன. நாடகங்கள் புரிந்தளவுக்கு இலக்கியப்பேச்சுக்கள் புரியாத பருவம் அது.

வீரகேசரி நீர்கொழும்பு பிரதேச நிருபர் பணிக்கு நான் 1972 இல் விண்ணப்பித்தபோது, மல்லிகையில் எனது ஆரம்பகால எழுத்துகளை பார்த்துவிட்டு, என்னை பரிந்துரைத்து கடிதம் எழுதித்தந்தவர்தான் எம். ஏ. ரஹ்மான். 

அந்தவகையில் என்னை ஊடகவியலாளனாக்கிய பெருமையும் இவரையே சாரும் என்பதை நன்றியோடு தெரிவிக்கின்றேன்.

இவரது ரெயின்போ அச்சகத்திலிருந்துதான் 1964 ஆம் ஆண்டு தொடக்கம் இளம்பிறை மாத இதழும் வெளிவரத்தொடங்கியது.

இவர்தான் அதன் நிருவாக ஆசிரியர்.

அருள் வாக்கி அப்துல் காதர்  மலர், சாகித்திய மலர் , கல்வி மலர்,  இளைஞர் மலர் , ஆசாத் மலர் ,  திருக் குர் ஆன் மலர், மீலாத் மலர்,  மற்றும் காந்தி நூற்றாண்டு மலர் உட்பட பல சிறப்பு மலர்களையும் இளம்பிறை அக்காலப்பகுதியில் வெளியிட்டது.

இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாற்றை வாசகர்கள் தெரிந்துகொள்வதற்கும் இளம்பிறை இதழ்கள்  பெரிதும் உதவியிருக்கிறது.

உள்ளடக்கத்தில் இஸ்லாமிய  மார்க்க சிந்தனைகள் மட்டுமன்றி,  கட்டுரைகள், விமர்சனங்கள்,  சிறுகதைகள்,  கவிதைகள், நூல் அறிமுகங்கள்  என்பனவற்றுக்கும் போதிய களம் வழங்கியது.

இலங்கைச் செய்திகள்

 இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஜப்பான் நிதி அமைச்சர் பாராட்டு

03 பேரிடமும் விட்டுக்கொடுப்பு இல்லாததால் தமிழரசுக் கட்சி தலைமை தெரிவுக்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு

ஜனாதிபதியை சந்தித்த பிரித்தானிய இளவரசி ஆன்

சுற்றுலா இலக்குகள் இலங்கை 04 ஆவது இடம்

ஜனாதிபதித் தேர்தல்: ஐ.தே.க வேட்பாளராக ஜனாதிபதி ரணில்



இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஜப்பான் நிதி அமைச்சர் பாராட்டு

- ஜனாதிபதியின் சரியான பொருளாதார வேலைத்திட்டமே காரணம்

January 12, 2024 5:16 pm

– ஜப்பான் உதவியில் கைவிடப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிப்பதில் கவனம்

உலகச் செய்திகள்

யெமன் ஹூத்திக்கள் மீது அமெ., பிரிட்டன் தாக்குதல்

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஹேகில் ஆரம்பம்

போயிங் விமானங்கள் அவசர தரையிறக்கம்

காசா போர் 4ஆவது மாதத்தை தொட்டது: உயிரிழப்புகள், பிராந்திய பதற்றம் உச்சம்

காசாவில் கடும் தாக்குதல்களுக்கு மத்தியில் பிராந்தியத்தில் போர் பரவுவதை தடுப்பதற்கு பிளிங்கன் மும்முரமாக பேச்சு: போரைத் தொடர இஸ்ரேல் உறுதி



யெமன் ஹூத்திக்கள் மீது அமெ., பிரிட்டன் தாக்குதல்

செங்கடலில் பதற்றம் அதிகரிப்பு

January 13, 2024 6:14 am 

செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வரும் யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வான் மற்றும் கடல் வழியாக தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை கையாளுதல்!

 January 10, 2024


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன் பொது வேட்பாளர் யோசனையை வரவேற்றிருக்கின்றார்.
கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் ஏற்கனவே இது தொடர்பில் தாம் பரிசீலித்து வருகிறாரெனக் கூறியிருந்த நிலையில் செல்வம் அடைக்கலநாதன் அந்த யோசனையை வரவேற்றிருக்கின்றார்.
ஏனைய கட்சிகளுடன் இது தொடர்பில் பேசவுள்ளதாகவும் கூறியிருக்கின்றார்.
எனினும், தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் இதுவரையில் தெளிவான நிலைப்பாடுகள் இல்லை.
இதேவேளை, வழமைபோல் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டுமென்று கூறியிருக்கின்றார்.
2009இற்கு பின்னர் இடம்பெற்ற மூன்று தேர்தல்களின் போதும் அவர் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்தார்.
ஆனால், அவரின் கோரிக்கையை மக்கள் கருத்தில் கொள்ளவில்லை.
தேர்தல் பகிஷ்கரிப்பு ஓர் உசிதமான யோசனை அல்ல – ஆனால், தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சிறந்தது – ஆனால், அதற்கு அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும்.
அவ்வாறில்லாது போனால் இந்த விடயத்தை முன்னெடுக்க முடியாது.
பொது வேட்பாளரை நிறுத்துவதா அல்லது இல்லையா என்பதற்கு அப்பால் – முதலில், ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு கையாள்வது என்பதில் தெளிவான புரிதல் இருக்கவேண்டியது அவசியம்.
அது தொடர்பில் தீர்க்கமான முடிவு ஒன்றுக்கு வரவேண்டும் – அதாவது, வழமைபோல் தென்னிலங்கையின் வேட்பாளர் ஒருவரின் வாக்குறுதிக்கு செவிசாய்த்து அவரை ஆதரிப்பதா அல்லது தமிழ் மக்களின் நலனை கருத்தில்கொண்டு ஜனாதிபதி தேர்தலை ஒரு பேரம் பேசுதலுக்கான துருப்புச்சீட்டாக கையாள்வதா? வழமைபோல்தான் தேர்தலை கையாள்வது என்றால் இது பற்றிய விவாதங்கள் தேவையில்லை.

சிட்னி முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் 22/01/2024

 


2023ஆம் ஆண்டு இந்திய சினிமாவின் டாப் 10 திரைப்படங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த முக்கிய தமிழ் படங்கள்

 January 13, 2024

கடந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கு மாபெரும் வரமாக அமைந்தது.

பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படங்களும், சிறிய பட்ஜெட்டில் உருவான திரைப்படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இந்நிலையில், வசூல் ரீதியாக இந்தியளவில் டாப் 10 இடத்தை பிடித்திருக்கும் இந்திய திரைப்படங்கள் குறித்து லிஸ்ட் வெளியாகியுள்ளது.

இந்த டாப் 10 லிஸ்டில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் 2வது இடத்தில் அனிமல் மற்றும் 3வது இடத்தில் மீண்டும் ஷாருக்கானின் பதான் திரைப்படம் இடம்பிடித்துள்ளது.

தமிழில் இருந்து ரஜினியின் ஜெயிலர் 6வது இடத்தையும், விஜய்யின் லியோ 7வது இடத்தை பிடித்துள்ளன நிலையில், மணி ரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 10வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.