உனக்காக நான் காத்திருக்கிறேன்

.
உனக்காக நான் காத்திருக்கிறேன் 555


என்னுயிரே...

மலைகளில் ஆயிரமாயிரம்
பாறைகள் இருந்தாலும்...

கோவிலில் சிலையாக
மாறும் பாறை எது...

குளத்தில் படியாகா மாறும்
பாறை எது தெரிவதில்லை...

தினம் பூத்து
சிரிக்கும் மலர்களில்...

மாலையாகும்
மலர்கள் எது...

பூஜைக்கு போகும்
மலர்கள் எது தெரிவதில்லை...

இந்த மனித
வாழ்க்கை உன்னோடா...

இல்லை நான்
பிறந்த மண்ணோடா...

எதுவும் தெரியாமலே நானும்
உன்னை தொடர்கிறேன்...

நீ காத்திருக்க வைக்கிறாய்
நான் காத்திருக்கிறேன்.....

nanri https eluthu.com/

மலையக மக்கள் எழுத்தாளர் மல்லிகை சி. குமார் காலமானார். - Memon Kavi

.


மலையக மக்கள் எழுத்தாளர் மல்லிகை சி. குமார் இன்று (27.01.2020) மாலைக் காலமானார்.
கொடகே புத்தக நிறுவனம் நடத்தும் கையெழுத்துப் போட்டிக்கு (2019) அனுப்பப்பட்ட கையெழுத்துப் பிரதிகளில் சிறந்த சிறுகதைப் பிரதியாக அவரது வேடத்தனம் சிறுகதைத் தொகுப்பு தெரிவு செய்யப்பட்டு நூலாக அச்சடிக்கப்பட்டு முடிந்த நிலையில் எதிர்வரும் பெப்ரவரி 13ந்திகதி கொழும்பில் கொடகே நிறுவனத்தின ரால் நடத்தப்படும் பரிசளிப்பு விழாவில் அவருக்கான விருது வழங்கப்பட இருந்த காலகட்டதில் அவர் எம்மைப் பிரிந்து விட்டார். 

அவருடன் அந்தப் புத்தகத்திற்கான Dummy மற்றும் அட்டைப்படம் என்னால் அனுப்ப பட்ட தருணத்தில்தான அவருடன் இறுதியாக நான் பேசினேன். அந்த கையெழுத்துப் பிரதிக்கான விருதும் அப்பிரதி நூலாக வெளிவரப் போகிறது என்ற செய்தியும் அவருக்கு மகிழ்ச்சி அளித்திருந்தது என்பதை அந்த உரையாடலில் மூலம் தெரிந்து கொண்டேன்.. இன்றைய அவரது மறைவு இந்த நூலுக்காக உழைத்த நண்பர் கே. பென்னுத்துரைக்கும் அவரது உறவினர் எழுத்தாளர் மு.சிவலி்ங்கம் மற்றும் எனக்கும்பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.. அவரது படைப்பு விருது பெற்றிருப்பதும் அது நூலாக வெளிவரும் ஏற்பாடு கணிசமான அளவில் முடிந்து விட்டது என்ற ஆத்மத் திருப்தியுடன் எம்மை விட்டு அவர் பிரிந்து இருக்கிறார். மலையக இலக்கியவாதிகளில் ஒரு தொழிலாளியாக வாழ்ந்து மலையகத்தின் யதார்த்தத்தைத் தன் எழுத்துகளில் எமக்கு விட்டுச் சென்று இருக்கிறார்.
மல்லிகை சி. குமார் மலையக மண்ணில்
கால்பதித்த, தன்னை அம்மண்ணில்
விதைத்த, மலையக மண்ணைச் சுவாசமாய்
கொண்ட ஒரு படைப்பாளி.யாக வாழ்ந்து எம்மை விட்டுப் போய் இருக்கிறார்.
மலையக மக்கள் இலக்கியத்தின் வரலாற்றில் முன் முகமாக என்றும் அவர் வாழ்வார்..
அவரைப் பிரிந்து மாறாத் துயரத்தில் மூழ்கி இருக்கும் அவரது குடும்பத்தினரின் துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம்.


Nantri 
Memon Kavi 

இலங்கையில் பாரதி ! விஜி இராமச்சந்திரன் – மெல்பன்

.


இலங்கையில் மகாகவி பாரதி வியாபித்திருந்த வரலாற்றைக்கூறும் நூல்

முருகபூபதியின் நாற்பது ஆண்டுகால உழைப்பின் வரவு: இலங்கையில் பாரதி !


"தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ"

இந்த பாரதியின் வரிகள் எத்தனை கம்பீரமானவை. வாழ்வின் அத்தனை நம்பிக்கையையும் ஊட்டும் அருங்கவிதை.

2020
ஆம் வருடத்தை இப்படி ஒரு புத்தகத்துடன் துவங்குவது மனதிற்கு ஒரு தெம்பையும் நம்பிக்கையும் ஊட்டியது என்று சொல்லலாம். அந்தப் புத்தகம் ஈழத்து புலம்பெயர் மூத்த எழுத்தாளர் முருகபூபதி அவர்களின் படைப்பான "இலங்கையில் பாரதி" என்பதாகும்.

சமூகத்தின் பொதுவுடமைக்காக எழுதிய மகாகவி பாரதிநாட்டு சுதந்திரத்திற்காகவும், நலிவுற்றோர் சுதந்திரத்திற்காகவும் பாடிய பாடல்களும் கவிதைகளும்  . வி. மெய்யப்ப செட்டியாரின்  ( ஏவிஎம்) கையில் காப்புரிமை எனும் பெயரில் சிறைப்பட்டுக் கிடந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர்தான் அவற்றுக்கு சுதந்திரம் கிடைத்தது என்று சொன்னால் அது மிகையல்ல!

மகாகவி பாரதியை ஈழத்து மக்கள் எப்படி எல்லாம் வாசித்து நேசித்து வாழ்ந்து வந்தனர், வருகின்றனர் என்பதையும் அந்தத் தேசியக் கவியின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டத்தை ஈழப் பத்திரிகைகளும், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகளும் எப்படி எல்லாம்  பெருவிழாவாக கொண்டாடினார்கள் என்பதையும் நல்முத்துக்கள் கோர்த்து எடுத்தார் போல் மிக அழகாக முருகபூபதி பதிவு செய்துள்ளார்.

ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுத்த பாரதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திற்கு பாரதி இயல் ஆய்வாளர்கள் தொ. மு. சிதம்பர ரகுநாதன்,  பேராசிரியர் எஸ்.  ராமகிருஷ்ணன் மற்றும் எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் ஆகியோர் தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்வீட் சிக்ஸ்ட்டி தெய்வப்பிறவி - ச சுந்தரதாஸ்

.


அறுபது ஆண்டுகளுக்கு முன்பு 1960ம் ஆண்டு வெளிவந்த குடும்பச்சித்திரம் தெய்வப்பிறவி. பிரபல இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சு இருவரும் இந்தப்படத்தை இயக்கியிருந்தார்கள் .
கமால் பிரதர்ஸ் சார்பில் கமால்தீன் ஏ வீ எம்   பட நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருந்தார்.

சிவாஜி , பத்மினி ,எஸ் எஸ் ஆர் , எம் என் ராஜம் , தங்கவேலு, சாரங்கபாணி , தாம்பரம் லலிதா , எம் சரோஜா, ஏ கருணாநிதி என்று ஏராளமானோர் நடிப்பில் இப்படம் உருவாகியிருந்தது.

கட்டட  மேஸ்திரியாக இதில் சிவாஜியும் , சித்தாளாக   பத்மினியும் நடித்திருந்தனர் . மேஸ்திரிக்கும் சித்தாளுக்கும் இடையே மலரும் காதல் திருமணத்தில் முடிகிறது . மேஸ்திரியின் தம்பியை வளர்க்கும் பொறுப்பை சித்தாளும் , சித்தாளின் தம்பியை வளர்க்கும் பொறுப்பை  மேஸ்திரியும் ஏற்றுக் கொள்கின்றனர் .
கால கதியில் மேஸ்திரியின் வருமானம் உயர்ந்து செல்வந்தராகிறார் . அந்தஸ்தும் உயர்கிறது . இளைஞர்களாக வளரும் மேஸ்திரியின் தம்பியும் , சித்தாளின் தம்பியும் ஒரே பெண்ணை விரும்புகின்றனர் . அதேசமயம் எங்கிருந்தோ வரும் மேஸ்திரியின் உறவான ஒரு தாயும் அவள் மகளும் இவர்கள் குடும்பத்திட்குள் அடைக்கலம் புகுந்து விடுகின்றார்கள் , இதன் காரணமாக தேவையில்லாத சந்தேகமும் சச்சரவும் உருவாகிறது .



முகில்கள் வீசிய பனிக் குண்டுகள் - கன்பரா யோகன்

.                                           



தெருவோரமெங்கும் வரிசையாக நின்ற ஓக் மரங்களின் இலைகளால் தெரு மூடப்பட்டிருந்தது. அதன் கீழே இலைகளை  விழுத்திய பனிக்குறுணிகள் படையாக தெருவை மறைத்திருந்தன. அவை உண்மையில் குறுணிகள் அல்ல குண்டுகள் என்றுதான்   சொல்லவேண்டும். இவை ஒரு கோல்ஃப் பந்தின் அளவிலும் கூட விழுந்தன.
கடந்த ஞாயிற்றுக் கிழமை மெல்பேனிலும்,  திங்களன்று கன்பராவிலும் சிட்னியின் சில பகுதிகளிலும் ,  மழை  பெய்ததிலும் பார்க்க பெருந் தொகையாய்  வீழ்ந்தவை பனிக் கற்கள்.
இவை வீழ்ந்த வேகத்தினால்  ஓடும் காருக்கு ஏற்படும் சேதாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரிலும் மிக அதிகம். கண்ணாடி விண்ட்  ஸ்கிரீனை துளைத்து தலையில் பட்டால் பெரிய காயத்தையும் ஏற்படுத்தலாம்.  துப்பாக்கிக்கு குண்டினாலேற்பட்ட துளைகள் போல பல கார்களில்  துவாரங்களைப் போட்டன இந்தப் பனிக் குண்டுகள்.
பல கார் சாரதிகள்  திடீரென ஏற்பட்ட இந்த பனிக்குண்டுகளின் தாக்கத்திலிருந்து தப்புவதற்காக மேம்பாலங்களின் கீழும் மற்றும் பாதையோரங்களிலும் கார்களை நிறுத்த முற்பட்டனர். தெருவில் சென்ற வாகனங்கள், கூரையில்லாத கார் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கார்கள், மற்றும் கார் விற்பனை, திருத்துமிடங்களில் தரித்து நின்ற வாகனங்கள் என்று எதையும் விட்டு வைக்கவில்லை இந்த பனிக்குண்டுகள்.  
மரங்களே இல்லாத புல் வெளியில்  இந்த  இந்தப் உறை பனியின்   வெண்  கோளங்கள்  சடுதியாக ஒரு தற்காலிக பனிச் சறுக்கு மைதானத்தை உண்டாக்கின.   தலையில் பட்டால் மண்டை  பிளந்து விடும் என்ற பயமேதுமில்லாத இளங்கன்றுகள் சில மேற் சட்டைகளைக் கழற்றிப் போட்டு அதில் சறுக்கி விளையாடின.   
கன்பராவில் மட்டும் 11,000 வாகனங்களுக்கு மேல் சேதம் என்றும், இதைவிட
கட்டடங்கள், வீடுகள்,  குறிப்பாக அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் (ANU) தாவரவியல் ஆராய்ச்சிக் கூடத்தின் கண்ணாடிக் கூரை அறைகள் பல சேதமாகியதில் பல மாதக்கணக்காக ஆய்வு மாதிரிகளையும் இந்த  பனிக்குண்டுகள் சேதமாக்கி அளித்துப் போட்டன.

காட்டுத் தீயில் கருகி நொந்திடும் கங்காரு வாழ் கடல்சூழ் கண்டம் - பரமபுத்திரன்

.


காட்டுத்தீ என்பது புவியில் தோன்றிய  ஒரு புதிய செய்தியாக அல்லது சவாலாக சொல்லமுடியாது. ஆதி முதல் தீ பூமியினை பாகம் பாகமாக  உண்டுதான்  வந்திருக்கின்றது.  அது மட்டுமல்ல அதன் சுவாலை மூலம் அனலை உமிழந்துதான் உள்ளது. பூமியின்  காடுசூழ் பகுதிகள்   மட்டுமல்ல புவியின் எந்த ஒரு பகுதியிலும்  தீ உருவாகும் வாய்ப்பு நிலை பொதுவானது. இவ்வாறு உருவாகும் தீ வேகமாக பரவுவது மட்டுமல்ல தன்னை  சூழவுள்ள அனைத்தையும் எரித்து அழிப்பது என்பதும் வழமையான ஒன்று. இதேவேளை தீ பரவுமானால் அந்த இடத்தில் எதுவும் மீதியின்றி முற்றாக அழிக்கப்படும் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.   ஆனால் காடுகளில் தீ உருவாகும் போது கட்டுப்படுத்துவது கடினம். அது மட்டுமல்ல, இது ஈரவலயக்காடுகள்,  உலர்வலயக்காடுகள்  ஆகிய இரண்டு பிரதேசங்களிலும்  தீ உருவாதல், பரவுதல் இரண்டுமே  நடக்கக்கூடிய ஒன்று. ஆனால் இன்று இது ஒரு மாபெரும் உருவெடுக்க என்ன காரணம்  என்பதனை கொஞ்சம் ஆராய்வோம்.

.நிலம் நீர் தீ வளி விசும்பு ஐந்தும்
கலந்த மயக்கம் இந்த உலகம்.

நாம் வாழும் கோள் புவி. இது ஐம்பூதங்களின் கலவை அதாவது இந்த உலகமானது நிலம், நீர், வளி,  நெருப்பு, ஆகாயம் இந்த ஐந்தும் கலந்து உருவாகி உள்ள ஒன்று என்று தொல்காப்பியம் கூறுகின்றது. அதுவும் ஒரே அளவில்  அல்ல,  வேறுபட்ட அளவில் கலந்துள்ளது. அந்த அளவு மாறினால் புவியின் சமநிலை  குழம்பும் என்பது தமிழன் விதி. நாட்டிலே காட்டுத்தீ இவன் பேசுவதோ வேதாந்தம் என்ற எண்ணம் இப்போது உங்களுக்கு எழும். காரணம் தமிழரை பொறுத்தவரை உலகில் இருவகையினரை வேறுபடுத்தலாம், அவர்கள் சிந்தாந்திகளும் வேதாந்திகளும் எனக்கூறலாம். சித்தாந்தி உடன் நடப்பதை மட்டும் சிந்திப்பான். வேதாந்தி ஏறத்தாழ உலக இயக்கத்தை முற்றாக புரிந்துகொள்பவன். அதனால் தான் வேதாந்தமென்பது எமக்கு புரியாதது என்ற கருத்தினை தருகின்றது. ஆனால் அது உண்மை அல்ல. நீண்ட கால நடவடிக்கையை விளங்கிக்கொண்டு நடப்பவன் வேதாந்தி.  ஒரு சிறு உதாரணம் மூலம் இதனை சொல்லமுடியும். 

" யோகக் கலை சாகாக் கலை "

.

           
    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ]
               
முன்னாள்  தமிழ் மொழிக்கல்வி இயக்குனர் 

  நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம் என்பது எல்லோருக்கும் தெரிந்த முக்கியமான விஷயமாகும்.ஆனால் அதற்காக நாங்கள் எவற்றையெல்லாம் தேர்ந்தெடுத்து இருக்கின்றோம்  என்பதை எவருமே கவனத்தில் கொள்ளுவ    தில்லை.நோய்கள் வந்தவுடன் வைத்தியரை நாடுவோம். அவர் பல மருந்து மாத்திரைகளையெல்லாம் எழுதித்தந்திடுவார். அத்துடன் விடவும் மாட்டார்.
அந்தப் பரிசோதனை , இந்தப்பரிசோதனை என்று சொல்லி அங்குமிங்கும் இருக்கின்ற நோயியல் ஆய்கூடங்களுக்கு அனுப்பிபடாதபாடுபடுத்திவிடுவார்.
பணமும் செலவழிந்து , நோயும் மாறாத நிலையில் , என்ன செய்வது என்று அறியாமல் , புரியாமல், வேறொரு விஷேடவைத்திய நிபுணரைப் பார்ப்பதற்கு ஆயத்தமாகிவிடுவோம்.
     
இதுதான் பலரது வாழ்வில் நிகழும் பரிதாபகரமான சம்பவமாகிவிட்டது.
இப்படியெல்லாம் நொந்து , வெந்து, போகாமல் இருப்பதற்கு மிகவும் அருமை
யான வழி ஒன்றை எமது முன்னோர்கள் ஆக்கி அளித்துச் சென்றுள்ளார்கள்.
அதுதான் யோகம் தருகின்ற யோகாவாகும்.
     
சுவர் இருந்தாலத்தான் சித்திரம் வரையமுடியும்.அந்தச் சுவரும் இடிந்து விழும் நிலையிலோ , உடைசலாய் ஓட்டையாய் இருக்கும் நிலையிலோஅங்கு 
சித்திரத்தை வரையமுடியுமா? முடியவே முடியாது ! இங்கே சுட்டப்படுவது 
எங்களது உடம்பினையே ! ஆகையால் உடலை என்றும் ஆரோக்கியமாக 
வைத்திருப்பதற்கு யாவரும் தயாராகவேண்டும் என்பது மிகவும் கட்டாயமானதாகும்.

வாசகர் முற்றம் - அங்கம் 06 - முருகபூபதி

.

சங்க இலக்கியத்திலிருந்து நவீன இலக்கியம் வரையில் வாசித்து தேர்ந்திருக்கும் அசோக் !

தாஸ்தாவஸ்கியை ஆதர்சமாக கொண்டிருக்கும் இளம்தலைமுறை வாசகர்!

 
                                                               

சுந்தர ராமசாமி எழுதிய ஒரு புளியமரத்தின் கதை நாவல் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்வு, மெல்பனில் கடந்த ஆண்டு ( 2019 ) நடந்தவேளையில் நான் முதல் முதலில் சந்தித்த இலக்கிய வாசகர் அசோக்.

தமிழகம்  - மதுரையில் பிறந்து வளர்ந்தவர். பொறியியல் துறையில் கற்றுத் தேர்ந்தவர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மெல்பன் வாசியாகிவிட்டவர்.

தன்னை தீவிர வாசகனாக்கியவர், மதுரையில் தனது தமிழ் ஆசானாக விளங்கியவரான  குமரேசன் அய்யா என நன்றியோடு சொல்லிவருகிறார்.

சமூகத்தில் ஒரு நல்லபிரஜை உருவாவதற்கு பெற்றவர்களும்  ஆசிரியர்களும் நல்ல உறவுகளும் சிறந்த நட்புகளும், படிக்கும் புத்தகங்களும்தான் பிரதான காரணம் என்பார்கள்.

பள்ளிப்பருவத்தில் அசோக்கின் தமிழ் ஆர்வத்தை அவதானித்த ஆசான் குமரேசன், பரீட்சைகளில் தமிழ்ப்பாடத்தில் அசோக் சிறந்த மதிப்பெண்கள் பெறும்போதெல்லாம், பேனை வாங்கி பரிசளித்து பாராட்டி ஊக்குவித்தவர்.

இதனை இங்கு அசோக் நினைவூட்டுவதன் ஊடாக அன்றைய ஆசிரியர்களின் அடிப்படை இயல்புகளை இக்காலத்தலைமுறையினருக்கும் இக்கால ஆசிரியர்களுக்கும் நல்லதோர் செய்தியாகத்  தருகின்றார்.
அந்த ஆசான், அசோக்கிற்கு  செய்யுள் மற்றும் சங்கத்தமிழ் பாடல்களையும் இலக்கியப்பாடல்களையும் சொல்லிக்கொடுத்துள்ளார்.

அசோக்,  தனது  வாசிப்பு அனுபவத்தை  பாடசாலையில்  கற்ற துணைப்பாட நூல்களிலிருந்தே பெற்றிருக்கிறார்.  அந்நாட்களில் படித்த  நூல்களை சுருங்கக் கூறுதல் ,  அதனை சுருக்கி எழுதுதல் முதலான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மழைக்காற்று – தொடர்கதை – அங்கம் 20 - முருகபூபதி

.



அபிதா, திட்டமிட்டவாறு புதன்கிழமை மதியம் சுபாஷினியுடன் வங்கிக்குச்சென்று தனக்கென ஒரு கணக்கை திறந்து, ஜீவிகா தந்த சம்பளப்பணத்தில் இருபதினாயிரம் ரூபாவை வைப்பிலிட்டாள்.
நீண்ட நாட்களுக்குப்பின்னர் அவள் பார்த்த ரொக்கப்பணம். கணவன் பார்த்திபன் இருந்தவரையில் அனைத்து வரவுசெலவுகளையும் அவனே பார்த்துக்கொண்டான். சேமிப்புசெலவு பற்றி எதுவுமே தெரியாமல் பத்து ஆண்டுகளாக சில பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து, கிடைத்த சொற்ப வருமானத்தில் வயிற்றை கழுவிக்கொண்டிருந்தவள். நல்லவேளை அம்மா, அப்பா, பார்த்திபன் உடனிருந்த காலத்தில் வெளியுலகம் தெரியாமல், குறைந்த பட்சம் நன்றாக சமைக்க கற்றுக்கொண்டாள்.

அந்த அனுபவம் இப்போது உதவியிருக்கிறது. ஒரு தைப்பொங்கல் நாளில்  வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயிலுக்குச்சென்றபோது,  அங்கு கடமையிலிருந்து தன்னைக்காணும் சந்தர்ப்பங்களில்,  நங்கி அப்பிட்ட பைத்தொங்கல் இல்லையா..?  எனக்கேட்ட  அந்த தென்னிலங்கை சீருடைக்காரனுடைய உச்சரிப்பிலிருந்த தவறை திருத்தியபோது,     நோ. பைத்தொங்கல். தைப்பொங்கல்  ஈஸ் கரக்ட் வோர்ட்  எனச்சொன்னாள்.
அதன்பின்னர் அபிதா அந்தப்பக்கமே செல்லவில்லை.  ஒருநாள் கனவில் அவன் வந்து தைப்பொங்கல் கேட்டான். அந்த உருவம் திடீரென கணவன் பார்த்திபன் உருவமாக மாறியதையடுத்து, திடுக்கிட்டு எழுந்தாள். அதன்பிறகு அத்தகைய கனவுகள் அவளுக்கு வரவில்லை.
இருந்தாலும் வருடாந்தம் தைப்பொங்கல் தினம்  வரும்போதெல்லாம் அபிதாவுக்கு அந்தக்கனவு நினைவுக்கு வரும். பக்கத்தில் குடியிருந்த பாக்கியம் ஆச்சியிடம் அந்தக்கனவு பற்றி அவள் சொன்னபோது,  உன்ர புருஷன்ட ஆத்மா எங்கோ அலைந்துகொண்டிருக்கிறது.  அவன்ர படத்தை வைத்து ஒருநாளைக்கு சமைத்து படையல்போட்டு, இரண்டொரு பிச்சைக்காரர்களுக்கு கொடு. பிறகு அந்தமாதிரியான கனவுகள் வராதுஎன்றா.

பின்னர் அவ்வாறு அபிதா ஒருநாள் செய்தாள். பார்த்திபனுக்கு மிகவும் பிடித்தமான கருணைக்கிழங்கு கறியும் செய்து படைத்திருந்தாள்.
அப்போதும்,   நங்கி நங்கி  என அழைக்கும் அந்த சீருடைக்காரனின் முகம் நினைவுக்கு வந்தது. அவன்  அன்று பொங்கலை ஆசையோடு கேட்டானா..? , அல்லது வேறு நோக்கத்துடன் கேட்டானா..? என்ற  மனக்குழப்பமும் அவளுக்கு வந்தது.
பாக்கியம் ஆச்சியிடம் அவன் பற்றி அபிதா எதுவுமே சொல்லவில்லை. சொன்னால்,  கண்காது வைத்து கதை வேறுவிதமாகத்திரும்பிவிடும்.
தன்னார்வத்தொண்டு என்ற பெயரில் வெளிநாடுகளிலிருந்து வரும் சில ஆண்களிடம் சிக்கிய விதவைப்பெண்கள் பற்றியும் அதே பாக்கியம் ஆச்சிதான் கதைகள் சொல்லியிருக்கிறாள். அதெல்லாம்  உண்மையா.. ? பொய்யா…?  என்பதும் அபிதாவுக்குத் தெரியாது.