தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

கவிதை உலகினிலே கந்தவனம் வாழுவார் !

 கவி மன்னனுக்கு கவிதையால் அஞ்சலி 









மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 



எங்கள் கந்தவனத்தை இறைவன் அழைத்திட்டான்
தங்கமகன் கந்தவனம் தமிழ்க்கவிதை கேட்பதற்கு
நிறைவாழ்வு வாழ்ந்திட்டார் நீள்துயில் கொண்டிட்டார் 
அவரிடத்தை நிரப்புதற்கு ஆர்வருவருவார் அவனியிலே 

அன்புநெறி அணைத்தார் அதற்குத் துணையானார்
விசுவலிங்கம் நட்பை விருப்புடனே அவரேற்றார் 
சைவத்தை மனமிருத்தி சன்மார்க்க வழிநடந்தார்
தமிழ்க்கவிதை வாகனத்தில் தரணியெங்கும் வலம்வந்தார் 

ஆசானாய்ப் பணிசெய்த ஆளுமையே கந்தவனம்
ஆங்கிலமும் செந்தமிழும் அறிந்தவரே கந்தவனம் 
ஆன்மீகம் அவரகத்தில் ஆழமாய் பதிந்ததனால்
அன்புநெறி பயணித்து ஆண்டவன் அடிசேர்ந்தார் 

நனவிடைதோய்தல் - அஞ்சலிக்குறிப்பு. ஈழத்தின் மூத்த தலைமுறை படைப்பாளி கவிஞர் வி. கந்தவனம் நினைவுகள் ! ! முருகபூபதி


இலங்கை வடபுலத்தில்,  தென்மராட்சியில் விநாயகர் – சின்னம்மா தம்பதியரின்  புதல்வனாக 1933 ஆம் ஆண்டு பிறந்து, தனது மாணவப் பருவத்திலேயே இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கி,  பாடசாலை ஆசிரியராக , அதிபராக பணியாற்றி ,  பின்னாளில் தென்னாபிரிக்காவிலும் கல்விச்சேவையாற்றியிருக்கும்   கவிஞர் வி. கந்தவனம் அவர்கள்,  கனடாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் இலக்கிய மற்றும் ஆன்மீகப்பணிகளில் ஈடுபட்டவர்.

இம்மாதம் 11 ஆம் திகதி கனடாவில் மறைந்திருக்கும் கவிஞர் கந்தவனம் அவர்கள் தமது 91 வயதில் விடைபெற்றுள்ளார்.

அவருடன் எனக்கு நெருக்கமான இலக்கிய உறவு இல்லையாயினும்,


அவர் பற்றிய நினைவுகள் நெஞ்சில் பசுமையாக வாழ்கின்றது. நினைவுகளுக்கு மரணம் இல்லை அல்லவா..?

 ஆறு தசாப்தங்களுக்கு முன்னர், எங்கள் நீர்கொழும்பூரில் இயங்கிய இந்து வாலிபர் சங்கத்தில் மூன்று நாட்கள் தமிழ் விழா நடந்தது. அப்போது அதன் அருகே அமைந்திருந்த விவேகானந்தா வித்தியாலயத்தில் ( இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி ) நான் ஐந்தாம் தரத்தில் படித்துக்கொண்டிருந்தேன்.

அந்தத் தமிழ்விழாவில் உரையாற்றுவதற்காக  கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் பலர் வந்திருந்தனர்.

இரவு நிகழ்ச்சியில்  மூன்று நாடகங்களும் இடம்பெற்றன.  எனக்கு நாடகம் பார்க்க விருப்பம்.  பேச்சாளர்கள் பகல்பொழுதில் இலக்கிய உரை நிகழ்த்தினார்கள்.

எனக்கு அதில் ஆர்வம் இருக்கவில்லை.  நாடகங்களை மாத்திரம் பார்த்தேன்.

அந்த நாடகங்களை எழுதி, இயக்கியிருந்தவர் குரும்பசிட்டியிலிருந்து வந்திருந்த கலைஞர் ஏ.ரி. பொன்னுத்துரை.  இவருடன் வருகை தந்திருந்த மேலும் சில எழுத்தாளர்கள், அறிஞர்களின் பெயர்களை ஆறு தசாப்தங்களுக்குப் பின்னரும் நான் நினைவில் வைத்து சொல்வதற்குக் காரணம்,  பின்னாளில் நானும் ஒரு எழுத்தாளனாகவும், அதே இந்து வாலிபர் சங்கத்தின் உறுப்பினராகவும், செயலாளர் – நிதிச்செயலாளர் பதவியில் அங்கம் வகித்தமையினாலும்தான் என்று கருதுகின்றேன்.

அந்த மூன்று நாள் தமிழ் விழா பற்றிய செய்திகளைக்கூறும்  சங்கத்தின் ஒரு பதிவேட்டு நூல்,  பின்னாளில் சங்கத்தின் பொன்விழா காலத்தில் வெளிவந்தது.  அப்போது நான் அவுஸ்திரேலியாவிலும்,  கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் கனடாவிலும் இருந்தோம்.

குறிப்பிட்ட தமிழ் விழாவில் உரையாற்றியவர்தான் கவிஞர் விநாயகர் கந்தவனம். இவருடன் வருகை தந்து உரையாற்றியவர்கள்: எஸ். பொன்னுத்துரை,  மஹாகவி  உருத்திரமூர்த்தி, இளம்பிறை ரஃமான், இரசிகமணி கனக செந்திநாதன், சு. வேலுப்பிள்ளை, ஏ. ரி. பொன்னுத்துரை.

ஈழத்து இசை நாடகக் கலைஞன் நடிகமணி வி.வி.வைரமுத்து நூற்றாண்டு - கலாநிதி த.கலாமணி பேசுகிறார்

 


அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக கலாநிதி த.கலாமணி அவர்களைத் தொடர்பு கொண்டு எடுத்திருந்தேன். 

அந்தப் பகிர்வின் ஒலிவடிவம் இதோ




தமிழ்விசை என்னும் இணையத்தளத்தில் வெளியான வி.வி.வைரமுத்து அவர்கள் குறித்த பதிவை நன்றியோடு மீள் இடுகையாகத் தருகின்றேன்.

கூத்திசை நடிகர். இசையமைப்பாளர்
பிறந்தது: காங்கேசந்துறை - தமிழீழம்
வாழ்வு: பெப்ரவரி 11, 1924 - ஜூலை 8, 1989
ஈழத்தின் இசை நாடக வரலாற்றில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு மாபெரும் கலைஞராகத் திகழ்ந்தவர் அமரர் நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்கள் அன்று மட்டுமல்ல இன்றும்கூட ‘அரிச்சந்திரா” நாடகமென்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது வைரமுத்து அவர்கள்தான்!. கலைஞர்கள் பல நாடகங்களில் பல பாத்திரங்களில் நடிப்பார்கள். ஆனால் அரிச்சந்திரனாக நடித்தால் மட்டும் அவர்களை நடிகமணி வைரமுத்து அவர்களுடன் ஒப்பிட்டே பார்ப்பார்கள். அப்படியாக மக்கள் மனங்களில் எல்லாம் அரிச்சந்திரனாகவே வாழ்ந்து மறைந்தவர் இவர்.

இவர் நடித்த ‘அரிச்சந்திரா மயானகாண்டம்” நாடகம் மட்டும் 3000க்கும் அதிகமான தடவைகள் மேடையேற்றப்பட்டு பெரும் சாதனையை நிலை நாட்டியிருப்பதோடு இலங்கை வானொலியிலும் பல தடவைகள் ஒலிபரப்பப்பட்டிருப்பதும் இலங்கையில் தயாரான நிர்மலா” என்னும் திரைப்படத்தில் இன் நாடகத்தின் ஒரு சிறு காட்சி இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நாடகமே இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் ஒளிபரப்பு செய்த முதல் தமிழ் நாடகமும் ஆகும்.

கலாநிதி தம்பிஐயா கலாமணி நினைவேந்தல் - வழங்குபவர் எழுத்தாளர் லெ.முருகபூபதி

 


ஈழத்துப் புலமைசார் சமூகத்தின் சொத்து, அரங்கியல் அனுபவமும் சேர்த்த அரும்பெரும் கல்விமான் எங்கள் அன்புக்குரிய கலாநிதி த.கலாமணி அவர்களின் பிரிவில் துயர் கொள்கிறோம்.

உயர் கற்கைகளை மேற்கொண்டு கலாநிதி பட்டத்தை பெற்றுக் கொண்ட அவர் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.

கலை இலக்கிய துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் காத்தவராயன் உள்ளிட்ட பல இதிகாச புராண நாடகங்களை தயாரித்தும் நடித்தும் மேடையேற்றியுள்ளார்.  

கலாநிதி தம்பிஐயா கலாமணி குறித்து எழுத்தாளர் லெ.முருகபூபதி அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வழங்கிய அஞ்சலிப் பகிர்வைக் கேட்க


சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2024

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள் 2024

06 - 04 - 2024  SAT  அன்பாலயம் வழங்கும்  "இளம் தென்றல் 2024

05 - 05 - 2024  Sun     திருக்குறள் மனனப் போட்டிகள் - 2024

முற்பகல் 9.00 மணி சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபம்


05 - 05 - 2024  Sun     ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2024

முற்பகல் 11.00 மணி சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபம்


01 - 06 - 2024  Sat    ஈழத் தமிழர் கழகம் வழங்கும் 

                                "தொண்டு வழங்கும் இராத்திரி"  சிட்னி

15 - 06 - 2024  Sat    எந்திரமாலை


அனைத்துலக பெண்கள் தினம் : பெண்கள் எழுச்சியினை அணைந்து விடாது காத்து, அடுத்த தலைமுறையினருக்கு கைமாற்றுவோம். பிரான்ஸிலிருந்து சந்திரிக்கா


இப்போது நூறு ஆண்டுகளைக் கடந்து சர்வதேச ரீதியாக ஒவ்வொரு  மார்ச் மாதமும்  08 ஆம்  திகதியில் கொண்டாடப் பட்டுவரும் "பெண்கள் தின" மானது, அதன் அர்த்த கனபரிமாணம் பற்றி அறியப்படாமலேயே, காதலர் தினம், வேறு களியாட்ட தின நிகழ்வுகள் போல கொண்டாடப்படுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல இது.

  பெண்கள் தம்மீதான சகல ஒடுக்குமுறை மற்றும்  வன்முறைகளிலிருந்து விடுபடவும், தங்கள் உடலையும் தங்கள் வாழ்க்கையையும் சுதந்திரமாக அனுபவிக்கவும், பலாத்காரமற்ற, ஆண் - பெண் பாகுபாடு இல்லாமல்


சமமாக  வாழும் உரிமையும், உடல் மற்றும் மனோ ஆரோக்கியத்தின் மிக உயர்ந்த தரத்திற்கான கல்வி கற்கும் உரிமை , சொத்துரிமை, வாக்குரிமை மற்றும் சம ஊதியத்தில் உரிமை ஆகியவற்றை பெறுவதற்காகவும், சுதந்திர உணர்வு பெற்று விழித்தெழுந்த பெண்களின் வீரம் செறிந்த தொடர் போராட்டங்களினால் உருவாகியதாகும். 

எழுத்துக்கள், வாதங்கள் என நீண்ட நெடிய இப்போராட்டத்தில் இரத்தமும் சதையுமாக தம்மை அர்ப்பணித்த பெண்களின் தியாகம் பற்றிய எந்தவித எண்ணமும், உணர்வும் இல்லாமல், வெறுமனே பரஸ்பரம் பூச்செண்டுகள் , பரிசுப் பொருட்கள் பரிமாறி வாழ்த்துகள் சொல்வதுமாக இத்தினத்தை பெரும்பான்மையானவர்கள் கொண்டாடும் நிலைதான் இன்றைய யதார்த்தம்.

 ஜேர்மன் நாட்டைச்சேர்ந்த  கிளாரா ஜெட்கின் (Clara zetkin ) எனும் மாபெரும் பெண் புரட்சியாளரை இன்று எத்தனை பெண்கள் அறிந்துள்ளார்கள் ?  எனும் கேள்வி எழுகிறது.

"சர்வதேசப் பெண்கள் தினம் " நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கின்ற யோசனையை முன்மொழிந்து அதன் ஆணிவேராக செயற்பட்டவர் கிளாரா ஜெட்கின்.

பெண்ணானவள் , மனைவியாகவோ , தாயாகவோ, பிறரைச்சார்ந்து வாழ்க்கை நடத்துபவள் என்னும் நிலைமை மாறவேண்டும் என்றார்  கிளாரா,

" தனமும் இன்பமும் வேண்டும் 
தரணியிலே பெருமை வேண்டும் 
கண் திறந்திட வேண்டும் 
பெண் விடுதலை வேண்டும் "
என்ற  மகாகவி பாரதியாரின்  கூற்றை , நூறாண்டுகளுக்கு முன்பே  கண்ட எமது  சமூகம் இன்று எந்தளவுக்கு  பெண்கள் முன்னேற்றத்தினை கண்டிருக்க வேண்டும்! ?

யாழ்மண்ணின் யோக புருஷர் யோக சுவாமிகள் !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
 மெல்பேண் .... அவுஸ்திரேலியா     

 

   சித் என்றால் அறிவு ஞானம் தெள்ளிய பார்வை ,கூர்


நோக்கு, விரிந்த நோக்கு என்று பொருள் சொல் லப்படுவதால் - சித்தர்களை அறிவாளிகள் ஞானிகள்,  தெளிந்த பார்வையினை உடையவர்கள் கூர்ந்த நோக்கினை உடையவர்கள்,கடந்து சிந்திப்பவர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா !

  சித்தர்கள் என்பவர்கள் மானிடம் செழித்திட வாழ்ந்த மகா ஞானிகள் எனலாம். " அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு " என்னும் தத்துவமே அவர்களது இறுக்கமான தத்துவமாய் இலங்கியது எனலாம். எதை யும் விரும்பார். எதையும் தமக்காக்கிட எண்ணார். மற்றவர் நலனுக்காய் அவர்கள் எப்பொழுதும் கைகொ டுத்திடவே எண்ணுவார்கள். அதன் வழியில் பயணப்படுவார்கள்.

  " மக்கள் சேவையினை மகேசன் சேவையாய் " எண்ணி இப்பூவுலகில் வாழ்ந்தவர் பல சித்தர்கள் இருக் கிறார்கள்அப்படியான சித்தருக்கென்று ஒரு பரம்பரையே இருக்கிறது என்பதை வரலாற்றால் அறிகி றோம்.

  பாரத நாட்டில் திருமூலருடன் சித்தர் பரம்பரையினை இணைத்துக் கூறுவது வழக்கம். திருமூலர் மூவா யிரம் வருடங்கள் இம்மண்ணுலகில் வாழ்ந்து பல அரிய பெரியபணிகளையெல்லாம் ஆற்றினார் என்று அறிகிறோம். அவரின் பேராற்றல் வியந்து பார்க்கக் கூடியதாகும். அவரின் திருமந்திரம் என்னும் திவ்விய நூல் பலவித கருத்துக்களின் பொக்கிஷமாய் மிளிர்கிறது எனலாம். திருமூலரைத் தொடர்ந்து பல சித்தர் கள் பாரத மண்ணில் வந்தார்கள். அவர்களில் சிலர் ஈழத்திலும் கால்பதித்து சமூக நலனுக்காய் பலவற் றைச் செய்தார்கள் என்றும் அறிய முடிகிறது.

  ஈழத்துச் சித்தர்கள் என்றும் சொல்லும் பொழுது மற்றய சித்தர்களை விட மாறு பட்டவராய் வேறு பட்ட வராய் ஒருவர் யாழ்ப்பாண மண்ணிலே பிறந்துஎல்லா இடமும் திரிந்து,யாவருக்கும் சுமை தாங்கியாய்ஆன்மீக வெளிச்சமாய் விளங்கியிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுவது சாலவும் பொருந்தும் என எண்ணுகின்றேன். ஆடையில் ஆடம்பரம் இல்லை. தனிப்பட்ட எந்த அலங்காரங்களும் இல்லை. எளிமை யான் வாழ்வு. பரிவாரங்கள் இல்லை.பவனி இல்லை. யாரும் சந்திக்கலாம். ஏற்றத்தாழ்வுகள் பார்ப்பதும் இல்லை. நாடியவர்களின் நலன் காக்கும் நன்மருந்து.

  நல்லூரில் தேரடியில் ஞானம் பெற்று கொழும்புத் துறையில் குடிசையில் அமர்ந்து அருளாட்சி புரிந்து இறையடியைச் சரண் புகுந்த யோகர் சுவாமிகள்தான் அப்பெரும் சித்தராவார்.

கை கொடுத்த தெய்வம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 சாரதா படத்தின் மூலம் இயக்குநராகி , குறுகிய காலத்தினுள்


இயக்குனர் திலகம் என்ற பட்டத்தை பெற்றவர் கே எஸ் கோபாலகிருஷ்ணன். இந்த இயக்குனர் திலகம் முதல் தடவையாக நடிகர் திலகத்தையும், நடிகையர் திலகத்தையும் இணைத்து இயக்கியப் படம்தான் கை கொடுத்த தெய்வம். எம் எஸ் வேலப்பன் என்பவர் படத்தை தயாரித்திருந்தார். ஒரு பெண்ணைப் பற்றி அவதூறு பேசுவது மோசமான செயல் ,அது அவளை மட்டும் அன்றி முழு குடும்பத்தையும் நிர்மூலம் ஆக்கி விடும் என்ற உண்மையை உணர்த்தும் விதத்தில் படத்தின் கதை அமைந்திருந்தது.


செல்வந்தரான மகாதேவனுக்கு இரண்டு மகள்கள். மூத்தவள்

கோகிலா நல்லவள், இளகிய உள்ளம் கொண்டவள் ஆனால் வெகுளி. இவளுடைய அப்பாவித்தனமான நடத்தையும், பேச்சும் பலருடைய ஏளனத்துக்கும் , கண்டனத்துக்கு ஆளாகிறது. இவளுடைய வெகுளித்தனத்தை அறிந்து கொள்ளும் வரதன் என்ற ரௌடி அவள் நடத்தை கெட்டவள் என்றும் , தனக்கும் அவளுக்கும் தொடர்பிருப்பதாகவும் ஊரில் புரளியை பரப்புகிறான். ஊராரும் அதனை நம்புகின்றனர். இதனால் அவமானம் தாங்க முடியாமல் அவளின் அண்ணன் ரவி ஊரை விட்டே போய் விடுகிறான். தங்கை சகுந்தலா கவலைப் படுகிறாள். மகாதேவனோ மனம் உடைந்து போய் விடுகிறார்.

அமிர்தராஸ் நகருக்கு சென்று தெருவில் மயங்கி விழும் ரவிக்கு , ரகு உதவுகிறான். தொழிலும் பெற்று கொடுக்கிறான். இருவரும் உற்ற நண்பர்களாகின்றனர் . ஆனாலும் ரவி தன்னுடைய குடும்பப் பின்னணியை அவனிடம் மறைகிறான். ரகுவின் பெற்றோர் அவனுக்கு பெண் பார்த்து அவனை ஊருக்கு வரவைக்கிறார்கள். கோகிலாதான் அவர்கள் பார்த்த பெண். ஊருக்கு வரும் ரகு கோகிலாவின் வெள்ளை மனதை புரிந்து கொள்கிறானா , அவளுக்கு கை கொடுக்கிறானா என்பதே மீதி படம்.

நான்கு நாட்கள் கொண்டாட்டம் – சிறுகதை கே.எஸ்.சுதாகர்


“ஐயா… இதைப்போல ஒரு ஐம்பது, போஸ்ற்கார்டில் எழுதித் தர முடியுமா?” பவ்வியமாக சால்வையை இடுப்பில் ஒடுக்கிப் பிடித்தபடி அகத்தன் நின்று கொண்டிருந்தான். உடம்பின் மேல் வெறுமை படர்ந்திருந்தது. அதிலே கன்றிப்போன காயங்களும், வெய்யில் சுட்டெரித்த தழும்புகளும் இருந்தன. என்னவென்று வாங்கிப் பார்த்தார் உடையார்.

 அது உண்மையில் போஸ்ற்கார்ட்டே அல்ல. அதனளவில் வெட்டப்பட்ட காகித அட்டைகள். அதில்,

         பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ்

நிகழும் ரெளத்திரி வருடம், மாசி மாதம் இருபதாம் நாள் நடைபெறவிருக்கும் வள்ளியம்மையின் சாமர்த்திய வீட்டுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 கொண்டாட்டம் நாலுநாட்கள் நடைபெறும்.

 தங்கள் நல்வரவை நாடும்,

அகத்தன் – பாய்க்கியம் குடும்பத்தினர்

 “ஓ… சாமத்தியச் சடங்கு வைக்கப் போறாய் போல கிடக்கு?”

 “ஓம் ஐயா… வள்ளியம்மையும் பெரிசாகி இரண்டு வருஷமாப் போச்சு!”

 “அது சரி…. இதை உனக்கு ஆர் எழுதித் தந்தது? அவரைக்கொண்டே மிச்சத்தையும் எழுதுவிக்கலாமே?”

வெடுக்குநாறிமலை ஆலய சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வில் பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்ட தடங்கல்கள் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்

சிறிலங்கா அரசும் அதன்  இராணுவபோலீஸ் நிர்வாகங்களும் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் கைதுகள்நில அபகரிப்பு மற்றும் பொது மக்களின் அன்றாட செயற்பாடுகளில் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள்இடையூறுகள் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.

கடந்த வெடுக்குநாறிமலை ஆலய சிவராத்திரி  வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட ஆலய பூசகரின் கைதும் பக்தர்களின் கைதும் கண்டனத்துக்கு உரியதுடன்  இவர்கள் அனைவரும்  உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். மேலும் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் விக்கிரகங்கள் மீள கையளிக்கப்பட்டு அவற்றினை அபகரித்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்க வேண்டிய அரச நிர்வாகம் அதற்கு மாறாக பல்லாண்டு காலமாக வழிபட்டு வரும் தமிழ் மக்களின் மீது அரச படைகளை ஏவி விட்டு அச்சுறுத்த முனைகின்றது. அடக்குமுறைகள்தான் எம் மக்களை போராட நிர்ப்பந்தித்தது என்ற யதார்த்தத்தை சிங்கள தேசம் புறக்கணித்தபடியால்தான் இன்று அது கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறன கைதுகளும், தமிழர்களின் வழிபாட்டு உரிமைகளை தடுத்து வழிபாட்டு தளங்களை அபகரிப்பதும், தொல்லியல் திணைக்களம் போன்ற அரச இயந்திரத்தின் அங்கங்களை ஏவி விடுவதும், தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தினை சிதைத்து துண்டம் துண்டமாக்கி அவற்றை சிங்கள பௌத்த அடையாளங்களால் உருமாற்றம் செய்து தொடர்ச்சியான நிலப் பரப்பினை கொண்ட தமிழர் தாயகம் என்ற எம் உரிமை கோரிக்கையை சிதைப்பது சிறிலங்கா அரசின் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பின்   திட்டமிட்ட மூலோபாயம் ஆகும். 

இலங்கைச் செய்திகள்

மாகாண, தேசிய பேதங்களுக்கு அப்பால்​   சகல பாடசாலைகளையும் மத்திய அரசின் கீழ் கொண்டுவர தீர்மானம்

டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதரவு தெரிவித்த ஜனாதிபதி

வடமாகாண ஆளுநரை சந்தித்த அவுஸ்திரேலிய நிபுணர் குழுவினர்

வடக்கில் சுற்றுலா தளங்களை அபிவிருத்தி செய்ய ஏற்பாடு

சென்னை, பலாலி விமான சேவைகளை அதிகரிக்கத் திட்டம்

சென்னை – பலாலிக்கிடையே Indigo Air சேவை நடத்த தயார்

வெடுக்குநாறி மலை விவகாரம்: கைதுசெய்யப்பட்ட 8 பேரையும் விடுவிக்க கோரி ஆர்ப்பாட்ட பேரணி



மாகாண, தேசிய பேதங்களுக்கு அப்பால்​   சகல பாடசாலைகளையும் மத்திய அரசின் கீழ் கொண்டுவர தீர்மானம்

தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த விரைவில் நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு

March 14, 2024 12:00 pm 

பாராளுமன்றின்
அனுமதியுடன்
முன்னெடுக்கப்படும்
நடவடிக்கையால் அமைச்சர் மாறினாலும் கல்விக்
கொள்கைகளில் மாற்றம்
ஏற்படாது.  

மாகாண பாடசாலைகளை எதிர்காலத்தில் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தேசிய பாடசாலை,  மாகாண பாடசாலைகள் என்ற பேதங்களுக்கப்பால் ஒரே விதமான பாடசாலைகளாக  சகலதையும் செயற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

உலகச் செய்திகள்

 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்–பைடனின் போட்டி உறுதி

மாலைதீவில் இந்தியாவின் ‘வெளியேற்றம்’ ஆரம்பம்

காசா உயிரிழப்பு 31,000 ஐ கடந்ததுத் பேச்சுவார்த்தை இழுபறியுடன் நீடிப்பு

காசாவில் போர் நிறுத்தம் இன்றி ரமழான் ஆரம்பம்

ஏழு ஒஸ்கார்களை அள்ளிய ‘ஓபன்ஹைமர்’ திரைப்படம்

காசாவில் உதவிக்காக காத்திருந்தவர்கள் மீதான இஸ்ரேலின் மற்றொரு தாக்குதலில் 25 பேர் பலி



அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்–பைடனின் போட்டி உறுதி

March 14, 2024 8:07 am 

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவதற்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கையை ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது முன்னாள் போட்டியாளரான டொனால்ட் டிரம்ப் வென்றுள்ளனர்.

கட்டுரை - கோட்டாவின் புத்தகம் என்ன சொல்கிறது?

 March 9, 2024



♦ வீரகத்தி தனபாலசிங்கம்

கோட்டாபய ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை ‘ என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்கான சதி ‘ (The Conspiracy to oust me from the Presidency ) என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுதப்பட்டிருக்கும் அந்த நூலை இலங்கையின் முக்கியமான நூல் நிலையங்களில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று அவர் கடந்த வாரம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் அறியத் தந்திருக்கிறார். கொழும்பில் அரசியல்வாதிகளையும் இராஜதந்திரிகளையும் அழைத்து பெரும் ஆரவாரத்துடன் நூல் வெளியீட்டு வைபவத்தை நடத்துவதை அவர் தவிர்த்திருக்கிறார்.

உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் இந்த நூலுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், இலங்கையில் மக்கள் மத்தியில் பெரிய பரபரப்பை நூல் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறமுடியாது.

கட்டுரை - வெடுக்குநாறி

 March 17, 2024


வெடுக்குநாறி மலை சிவன் ஆலய விவகாரம் தமிழ் சூழலின் அரசியலை சூடாக்கியிருக்கின்றது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ்தேசிய மக்கள் முன்னணி) வெடுக்கு நாறி விவகாரத்தை முன்வைத்து, அதன் எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்துவருகின்றது. ஏனைய கட்சி களோ, ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவித்திருக்கின்றன.
இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் நாங்கள் ஒன்றிணைந்து ஒரு தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தி, எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் நிர்ப்பந்தம் உருவாகுமென்று, ஜனாதிபதியிடம் வலியுறுத்தும் துணிவு தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு இருந்தால் அது வரவேற்கத்தக்கது – ஆனால், நமது தமிழ் கட்சிகளின் தலைவர்களிடம் இதனை எதிர்பார்கலாமா?
ஆனால், இதற்கு முன்னரும், இந்து ஆலயங்கள் தொடர்பிலும், புத்த விகாரைகள் தொடர்பிலும் சில சர்ச்சைகள் எழுந்திருந்தன. அவற்றை முன்னிறுத்தியும் ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்பு ஊர்வலங்களும் இடம்பெற்றிருந்தன.
அந்த பிரச்னைகள் தீர்ந்துவிட்டனவா அல்லது ஒவ்வொரு புதிய பிரச்னை வருகின்ற போதும், முன்னைய பிரச்னைகள் கைவிடப்படுகின்றனவா? குருந்தூர் மலை பிரச்னைக்கு என்ன நடந்தது? மயிலிட்டி பிரச்னைக்கு என்ன நடந்தது? இவைகள் தொடர்பில் எல்லாம் ஏராளம் பேசப்பட்டது.
முன்னணி எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் கைவிடப்பட்டுவிட்டது.
திருகோணமலை கன்னியா வெந்நீருற்று விவகாரத்திலும் எதிர்ப்புகள் காண்பிக்கப்பட்டன – விடப்போவதில்லை என்று வீரவசனங்கள் பேசப்பட்டன – ஆனால்,
இறுதியில் இருந்ததும் இல்லாமல் போன கதையானது. ஒரு சிறிய நிலத்துண்டு மட்டுமே, கன்னியா வெந்நீர் ஊற்றில் இந்துக்கள் வசமிருக்கின்றது.

சிட்னி துர்கா தேவி தேவஸ்தானத்தில் ஏப்ரல் 09 செவ்வாய் முதல் ஏப்ரல் 17 புதன்கிழமை வரை நடைபெறும் சிறப்பு 9 நாட்கள் திருவிழா (வசந்த நவராத்திரி)

 

சிட்னி துர்கா தேவி தேவஸ்தானத்தில் ஏப்ரல் 09 செவ்வாய் முதல் ஏப்ரல் 17 புதன்கிழமை வரை நடைபெறும் சிறப்பு 9 நாட்கள் திருவிழாவிற்கு (வசந்த நவராத்திரி) பக்தர்கள் துர்கா தேவியின் அருளையும் அருளையும் பெற அன்புடன் அழைக்கிறோம்.

ஏப்ரல் 14, 2024 ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மகா சண்டி ஹோமம் நடத்தப்படும்.

இந்த நிகழ்ச்சி விநாயகர் ஹோமத்துடன் தொடங்குகிறது.

மஹா சண்டி ஹோமம் மிகவும் சக்திவாய்ந்த சடங்கு மற்றும் சிட்னியில் உள்ள துர்கா கோவிலில் பெரிய அளவில் நடக்கிறது.

இந்த புனித சடங்கில் பயன்படுத்தப்படும் நவ துர்கா செப்பு யந்திரங்கள் விழா முடிந்ததும் கிடைக்கும். இந்த நவ துர்கா நிற செப்பு யந்திரம் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் கடினமான பிரச்சனைகளை நீக்கும்.

அன்புடன்,

கோவில் நிர்வாக குழு

சிட்னி ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தானம்

21 ரோஸ் கிரசண்ட், ரீஜண்ட்ஸ் பார்க், NSW -2143 Ph: (02) 9644 6682 , 04502 09724

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 36 “சட்டநாதன் புனைவுகள் : உரையாடல்”


நாள்:
         சனிக்கிழமை 30-03-2024       

நேரம்:     

 இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30      

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

 வழி:  ZOOM

 Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

 

உரை நிகழ்த்துவோர்:

 கலாநிதி தி.செல்வமனோகரன்

திறனாய்வாளர் அருண்மொழிவர்மன்

கலாநிதி சு.குணேஸ்வரன்

திறனாய்வாளர் சி.ரமேஷ்

 

ஒருங்கிணைப்பு:

அகில்  சாம்பசிவம்

 மேலதிக விபரங்களுக்கு: -  001416-822-6316

 www.ilakkiyaveli.com

திருக்குறள் மனனப் போட்டிகள் -5 May 2024


இப்
போட்டிகள் மே மாதம் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் முற்பகல் 9.00 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.

போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் வயது வரம்பும்

பிரிவுகள்

பிறந்த திகதி விபரம்

பாலர் ஆரம்ப பிரிவு

01.08.2019 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்

பாலர் பிரிவு

01.08.2017 க்கும் 31.07.2019 க்கும் இடையில் பிறந்தவர்கள்

கீழ்ப்பிரிவு

01.08.2015 க்கும் 31.07.2017 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மத்தியபிரிவு

01.08.2012 க்கும் 31.07.2015 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மேற்பிரிவு

01.08.2009 க்கும் 31.07.2012 க்கும் இடையில் பிறந்தவர்கள்

அதிமேற்பிரிவு

01.08.2005 க்கும் 31.07.2009 க்கும் இடையில் பிறந்தவர்கள்

 

பெற்றோர்களின் முழுப்பெயர்,  அவர்களின் தொலைபேசி இலக்கம், மின்அஞ்சல் முகவரி, பங்குபற்றுவர்களின் முழுப்பெயர் மற்றும் பிறந்த திகதி ஆகிய விபரங்களை மின்னஞ்சல் மூலமாக மே மாதம்  4ம் திகதிக்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக tikmsydney@gmail.com    என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் போட்டிக்கான விதிமுறைகள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு:

திரு கு கருணாசலதேவா           0418 442 674

திருமதி ஜெகநாதன்             0434 098 842