தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

நினைத்துப் படிப்போம் நிமலனும் மகிழுவான் !

 




















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண்   …..  அவுஸ்திரேலியா 


வள்ளுவம் படிப்போம் வள்ளலார் படிப்போம்
பட்டினத் தடிகள் பாட்டையும் படிப்போம்
நாலடி படிப்போம் நல்லுரை படிப்போம்
தேனார் திரு  வாசகம் படிப்போம்

மூலரைப் படிப்போம் மூதுரை படிப்போம்
சீலமாம் அடியார் திருமுறை படிப்போம்
கம்பனைப் படிப்போம் கவிமணி படிப்போம்
பாரதி பாரதி தாசனைப் படிப்போம்

படிப்போம் படிப்போம் பலதும் படிப்போம்
படித்ததை மனதில் பக்குவப் படுத்துவோம்
படித்ததை படித்த நிலையிலே விட்டிடா
படித்ததை  வாழ்வுக்குப் படிக்கல் லாக்குவோம் 

அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் மெல்பன் மணி மறைந்தார் ! அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலச்சங்கத்தில் இணைந்திருந்தவர் ! முருகபூபதி

வுஸ்திரேலியா – மெல்பனில் எம்மத்தியில் வாழ்ந்த முன்னாள்


ஆசிரியரும்,  மூத்த எழுத்தாளருமான திருமதி கனகமணி அம்பலவாண பிள்ளை ( மெல்பன் மணி ) அவர்கள் மறைந்துவிட்டார், என்ற துயரமான செய்தி அறிந்தவுடன், அன்னாரின் புதல்வி இசை ஆசிரியை திருமதி ரமா சிவராஜா அவர்களை தெடர்புகொண்டு அனுதாபமும், ஆறுதலும் தெரிவித்துவிட்டே,  இந்த அஞ்சலிக்குறிப்பினை கனத்த மனதுடன் எழுதுகின்றேன்.

நான் உடல் நலம் குன்றியிருக்கும் சமகாலத்தில், தமது மகள், மருமகனுடன் என்னைப்பார்க்க வந்து ஆறுதல் சொன்னவர், இந்த இலக்கிய சகோதரி.

அவர் பற்றி, இடம்பெற்ற ஒரு விரிவான ஆக்கம், கடந்த மார்ச் மாதம் நான் வெளியிட்ட யாதுமாகி ( இரண்டாம் பாகம் ) நூலிலும் வெளியாகியிருக்கிறது.

முன்னர் ஊடகங்களில்  அந்த ஆக்கம் வெளியானபோதும்  அவர் அதனை வாசித்திருக்கிறார்.

மீண்டும் அந்தப்பதிவை எமது வாசகர்களுக்கு வழங்குகின்றேன்.

 தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்தை 2001 ஆம் ஆண்டு


ஆரம்பித்தபோதே, நூல்கள் தொடர்பான வாசிப்பு அனுபவப் பகிர்வு நிகழ்ச்சியையும் அதில் இணைத்துக்கொண்டோம்.  கடந்த பல வருட காலமாக இந்நிகழ்வு நடந்துவருகிறது.

எழுத்தாளர்கள் எவ்வளவுதான் எழுதினாலும் அவற்றை படிப்பதற்கு வாசகர்கள் இல்லையேல்,  எழுத்தாளர்கள் காணாமல் போய்விடுவார்கள். கலைஞர்களுக்கு ரசிகர்கள் எவ்வளவு முக்கியமோ, அவ்வாறே எழுத்தாளர்களுக்கும் வாசகர்கள் மிக மிக முக்கியம்.

2003 ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் விழாவை நான் வதியும் மெல்பனில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தபோது, எனது கண்ணில் கலியுகத்தின் சில பக்கங்கள்  என்ற சமூக நாவல் தென்பட்டது.  அதனை எழுதியிருந்தவர் மெல்பன் மணி.  எனக்கு இந்த எழுத்தாளரின் பெயர் அப்போதுதான் முதல் முதலில் அறிமுகமானது.

எழுதியவர் பெண்தான் என்பதை அக்கதையின் படைப்பு மொழியிலிருந்து புரிந்துகொண்டேன்.  பின்னர் விசாரித்துப்பார்த்தேன். அவ்வாறுதான் அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் நகரில் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் வதியும்  திருமதி கனகமணி அம்பலவாணபிள்ளை அவர்கள் எனக்கு முதலில் அறிமுகமானார்.

2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில்  நடந்த விழாவில் , கவிஞர் அம்பியின் தலைமையில் நடந்த கருத்தரங்கில் மெல்பன் மணி,  “ முதியோரும் புலம்பெயர் வாழ்வும்    என்ற தலைப்பில் உரையாற்றினார். 

சிவஞானத் தமிழ்ப் பேரவை நடாத்தி வரும் திருத்தலத் திருமுறை முற்றோதல் 200ஆவது வார நிகழ்வு

 

பன்னிரு திருமுறைகள் சைவத் தமிழ் அடியார்களுக்குக் கிடைத்த பெரும் அருட் செல்வம்.

இவற்றிலே முதல் ஏழு திருமுறைகளும் தேவாரங்கள் ஆகும்.  இத்திருமுறைகள்  திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இறையருள் பெற்று அருளிய மிகச் சிறப்பான பதிகங்கள் கொண்டவை.  இந்த நாயன்மார்கள் இப்பதிகங்களைப் பாடிப் பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கின்றார்கள்.  இப்பதிகங்களைப் பாராயணஞ் செய்யும் அடியார்கள் இன்றைக்கும் பல அற்புதங்களைத் தங்கள் வாழ்விலே கண்டு வருகின்றார்கள். சைவத்தையும் தமிழையும் போற்றிப் பாதுகாக்க நாயன்மார்கள் பல தலங்களுக்கும் சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் எம்பெருமானைப் பரவிப் பாடி அருளிய பதிகங்கள் இவை.

இத்தேவாரப் பதிகங்களைத் தல வாரியாக முற்றோதல் செய்வது சைவ மரபாகப் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றது.  அந்த வகையில் சிவஞானத் தமிழ்ப் பேரவை இப்பதிகங்களைத் தலவரிசையில் முற்றோதல் செய்து வருகின்றது.

இந்த முற்றோதலை சிவாக்கர யோகிகள் திருஞானசம்பந்தர் திருமடம் திருமுறைக் கலாநிதி அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் அவர்கள் மிகச்சிறப்பாக நடாத்தி வருகின்றார்கள்.

ஒவ்வொரு தலத்தின் சிறப்பையும் வரலாற்றையும் சுவாமிகள் விரிவாகச் சொல்லி அத்தலத்தில் அருளப்பட்ட அனைத்துப் பதிகங்களையும் உரிய பண்ணோடு பாடி வருகின்றார்கள்.  பதிகங்களில் பொதிந்திருக்கும் அரிய கருத்துகளையும் அடியார்களுக்கு விளக்கி வருகின்றார்கள்.

பதிகங்களைப் பாடுதற்கு முன்னர் அப்பதிகத்தை அருளிய நாயனாரைத் துதிக்கும் வகையில் உரிய பதினொராந் திருமுறைப் பாடலைப் பாடிப் பின்னர் பதிகம் பாடியதும் பெரிய புராணத்தில் இருந்து அப்பதிகம் அருளப்பட்ட வரலாற்றைக் குறிக்கும் பாடல்களையும் பாடுவது மிகவும் சிறப்பாக அமைந்து வருகின்றது.

நிறைவாக அத்தலத்தில் அருளப்பட்ட திருப்புகழ் பாடலையும் சுவாமிகள் பாடிப் பொருளுஞ் சொல்லி வருவது மேலும் சிறப்புச் சேர்ப்பதாக உள்ளது.

பார்த்தேன்! இரசித்தேன்! பகிர்கிறேன்! - -- தமிழ் வளர்த்த சான்றோர் விழா வர்ணனை தொடர்ச்சி - யசோதா - விழா வர்ணனை தொடருகிறது

 

"திருமதி கலையரசி சின்னையா அவர்களின் அடக்கமான பேச்சு! ஆழமாக கருத்துகள்! தெளிந்த நீரோடைபோன்ற கனிந்த பேச்சு! விழா அமைப்பாளர் சார்பிலே அவருக்கு எமது நன்றி. எங்கே அவருக்கு மீண்டும்  ஒரு பலத்த கரகோசம்! " என்று திருமதி கலையரசி சின்னையா அவர்களின் பேச்சுத் திறனை வியந்து பாராட்டியதைத் தொடர்ந்து சரோஜாதேவி சுந்தரலிங்கம் அவர்கள் அடுத்த நிகழ்ச்சியாகத் தொடரும்   இன்னிசைபற்றி அறிவிக்கும் பொழுது

 


பாரதி பள்ளியின் தமிழ்க் குழந்தைகளுக்கான முன்னோடிக் காணொளி இனி Youtube தளத்திலும் - கானா பிரபா

 ஆஸி தேசத்தில் விக்டோரியா மாநிலத்தைத் தளமாகக் கொண்டு


இயங்கும் பாரதி பள்ளி கல்விக் கூடம்

தமிழ்க் கல்வி முன்னெடுப்புகளில் பரவலான செயற்பாடுகளில் கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கிச் சாதனை படைத்து வருகின்றது.

1995 ஆம் ஆண்டிலேயே தம் பள்ளி மாணவர்களைக் கொண்டு பாப்பா பாரதி என்ற ஒளி நாடாவை வெளியிட்டது ஊடகத் துறையில் ஒரு முன்னோடிச் செயற்பாடு எனலாம்.
இன்று Youtube இல் குழந்தைகளுக்கான பகிர்வுகள் இருந்தாலும் அவற்றின் பங்களிப்பு மட்டுப்படுத்தப்பட்டே இருக்கின்றது.
இந்தச் சூழலில்
"ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் இருப்பது போல, உண்மையான மனிதர்கள் தோன்றி நடிக்கும் குழந்தைகளுக்கான காணொலிகள் இன்னும் தமிழில் இல்லை. 
எல்லாம் கார்ட்டூன்கள் தான். இந்தக் குறையைச் சிறிதளவாவது நீக்கவும் இக் காணொலிகள் பங்களிக்கும்.

30 ஆண்டு வரலாற்றைக் கொண்ட இக் காணொலிகளை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டிய

தேவை உள்ளது. அத்துடன் குழந்தைகளுக்குக் களிப்பூட்டும் காட்சி ஊடகங்கள் பற்றிய சிந்தனைகளும் வளர வேண்டிய உள்ளது"
 என்று பாரதி பள்ளியின் நிறுவனர் திரு.மாவை நித்தியானந்தன் குறிப்பிடுகிறார்.
Hon Julian Hill MP (Assistant Minister for Citizenship, Customs and Multicultural AffairsAssistant Minister for International Education)  அவர்களால் வரும் ஜூலை 6 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு
Tony Sheumack Centre for Performing Arts, Berwick, Vic 3806 என்ற அரங்கில்
இந்தக் காணொலித் தளப்பகிர்வுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து பின்வரும் தளம் வழியாக இந்தப் பெறுமதியான பகிர்வுகளைத் தமிழ்ச் சமூகம் கண்டு ரசிக்கவும் தம் பிள்ளைகளுக்குக் காட்டவும் வழியேற்படுத்தியிருக்கிறார்கள்
பாரதி பள்ளியின் இந்த முன்னோடிச் செயற்பாட்டுக்கும், தொடர்ந்து தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கி வரும் பன்முக இயக்கத்துக்கும் வாழ்த்துகளும், நன்றிகளும்.

மண்டை ஒடுன்னா சும்மாவா!

 


-சங்கர சுப்பிரமணியன்.





மனித எலும்புக் கூட்டின் ஒரு பகுதிதான் மண்டை ஒடு. மனிதர்களை இறந்த பின்
புதைப்பது மற்றும் எரிப்பது என இரண்டு வழக்கங்கள் உள்ளன. புதைப்பதால் மட்டுமே மண்டை ஓடுகளைப் பெறமுடியும். அதிலும் உடல் மக்கியபின்னரே தோண்டி எடுக்க முடியும் என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் விஞ்ஞான ஆசிரியர் சிவகுரு.

விஞ்ஞான ஆசிரியர் என்றாலும் சிவபக்தர். நெற்றியில் திருநீற்றுப்பட்டை அதன் மத்தியில் சந்தனக் கீற்று. சந்தணக்கீற்றில் ஜவ்வாது பொட்டு அதன் மேல் குங்கும பொட்டு
என்று பார்க்க மிகவும் கம்பீரமாக இருப்பார். அவரிடம் மாணவர்கள் விஞ்ஞான வகுப்பு என்றாலும் சிவனைப் பற்றி கேட்டால் மறுக்காமல் பதில்சொல்வார்.

அப்படிப்பட்ட சிவபக்தரிடம் மாணவன் பாலு,

“சார், ஒரு மண்டை ஓடு கிடைப்பதற்கே உடல் மக்கும்வரை காத்திருக்க வேண்டுமே அப்படி என்றால் சிவபெருமான் மண்டை ஒடுகளை சேகரிக்க என்ன பாடுபட்டிருப்பார்?”

“ஏய், என்னடா சொல்ற, சிவபெருமான் மண்டை ஒடுகளை சேகரித்தாரா?”

“ஆம் சார், பார்வதியின் மண்டை ஓடுகளை
சேகரிக்க எவ்வளவு பாடுபட்டிருப்பார்?”

“எப்பா இரு இரு, பார்வதி என்னவோ பத்துபேர் என்பதுபோல் பர்வதியின் மண்டை ஓடுகளை சேகரிக்க சிவன் எவ்வளவு பாடுபட்டார் என்கிறாயே?”

“பார்வதி பத்துபேர் இல்ல சார். ஐம்பத்தியொரு பேர் சார்.” என்றான்.

பாலு சொன்தைக்கேட்ட  ஆசிரியர் சிவகுரு குழம்பினார். நான் ஒரு சிவபக்தனாக இருந்தும் இது தெரியவில்லையே. வேடன் கண்ணப்பரைப் படித்திருக்கிறேன். திருத்தொண்டரை படித்திருக்கிறேன். ஆனால் பார்வதி ஐம்பத்தியொரு பேர் என்பதைப் பற்றி படிக்கவில்லையே.
கேள்விப்பட்டதும் இல்லையே. கற்றது கைமண் அளவு என்பது இதைத்தானோ என்று எண்ணினார்.

இவன் சொல்வது உண்மைதானா? அல்லது நம்மைக் குழப்புவதற்கு ஏதாவது சொல்கிறானா என்று நினைத்தவர் அவனிடமே நீ சொல்வது உண்மையே என்று கேட்டார். பாலு உண்மைதான். நான் படித்ததைத்தான் சொல்கிறேன் என்றார்.

திருப்பதி ஆண்டவர். ( Part 1) __________________ நாட்டிய கலாநிதி. கார்த்திகா கணேசர்.



எம்மில் சிலரோ  பணம் சம்பாதித்து செல்வந்தராக பணம் படைத்தோருக்கான ஆடம்பர வாழ்வு
வாழ்கிறார்கள்.  ஆண்டவரால் படைக்கப்பட்ட மக்கள்தான் இப்படியாஆண்டவர்களின் கோயில்களிலும் சில
பணமும் , படாடோபமும் கொண்ட கோயில்களும் உண்டு. அதேசமயம் வருவாய்க்கு திண்டாடும் கோயில்களும் உண்டு.
இது எப்படி என எண்ணத் தோன்றுகிறதா?
Good பிஸினஸ் - இதற்கு எப்படி சிறந்த விளம்பரம் தேவையோ அதேபோல ஆண்டவருக்கும் உண்டு. சில கோயில்கள் புதுமையானது என பெயர் பெற்று விடுகின்றன.அப்படியான கோயில்களுக்கு மக்கள் நேர்த்தி கடன்கள் செய்து, தாம் நினைத்தது நடந்துவிட்டால், ஆண்டவனுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து காணிக்கையும் செலுத்துவார்கள்.   இவ்வாறான சிறப்புகள் பேசப்படாத கோயில்கள் வருமானம் வராது திண்டாடுவதையும் நாம் காண்கிறோம். ஆண்டவனை நம்பும் பக்தர்களே இதற்குக் காரணம்.

இந்திய பெருங்கண்டத்தில் மிக பணம்படைத்த கோயிலான திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம், இந்திய அரசுக்கு பணம் கடன் கொடுத்து வட்டியும் பெற்றுள்ளது. திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க வருடம் பூராவும்  கோடிக்கணக்கில் மக்கள் வருகிறார்கள். இவ்வாறு வந்து போகும் பக்தர்கள் வெங்கடாசலபதிக்கு பலவாறாக காணிக்கை செலுத்துகிறார்கள். 
காணிக்கையை பெற்ற வெங்கடாசலபதியோ தம்மை நன்றாக வாழ வைப்பார், இன்னல்கள் வராது காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம்.

பலகோடிக்கு அதிபதியான 8 அடி உயரம் கொண்ட வெங்கடாசலபதி சுயம்புவாக தோன்றியதாக மக்கள் நம்புகிறார்கள், இது 2000வருடம் பழமையானது எனவும் நம்பப்படுகிறது. திருப்பதி ஆண்டவரான பாலாஜியோ இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு, கொஞ்சமேனும் வேர்வைசிந்தாது ஓடி உழைக்காது, பலகோடி சம்பாதிக்கிறார்.
இதற்கும் ஒரு கதை உண்டு, அதுவும் ஒரு பெண்மேல் கொண்ட காதல் கதை தான். ஆண்டவணோ காதல் விவகாரத்தில் மானிடர் எல்லோரையும் மிஞ்சிவிட்டார்.


                 பாலாஜியின் காதல்.
              ——————————-

“நூல்களைப் பேசுவோம்”











 







நீலவானம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 எம் ஜி ஆர் நடித்து வெற்றி பெற்ற தெய்வத் தாய் படத்துக்கு வசனம்


எழுதியதன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கே. பாலசந்தர். அந்தப் படத்தை டைரக்ட் செய்தவர் பி. மாதவன். தெய்வத் தாய் வெற்றி பெற்ற போதும் அதன் பிறகு பாலசந்தரும், மாதவனும் மீண்டும் எம் ஜி ஆருடன் இணைந்து வேறு படங்களில் பணியாற்றவில்லை. எம் ஜி ஆரை அணுசரித்துப் போவதில் உள்ள சிரமங்களை எண்ணி இரண்டு பட்டதாரி இளைஞர்களும் அவரை விட்டு ஒதுங்கி விட்டார்கள் எனலாம். ஆனாலும் இவர்கள் இருவரும் இணைந்து சிவாஜியின் படம் ஒன்றில் பணியாற்றினார்கள். மாதவன் இயக்க பாலசந்தர் கதை வசனம் எழுதி உருவான அந்தப் படம் தான் நீலவானம். 



அறுபதாண்டுகளுக்கு முன் வெளியான இந்தப் படத்தில் தனது

சொந்த தியேட்டரான சாந்தியின் சிவாஜி டிக்கெட் கிழிப்பவராக ஒரு காட்சியில் நடித்திருந்தார். அது மட்டுமன்றி இந்தப் படத்தில் சிவாஜிக்கு இரண்டு காதலிகள் இருந்தும் டூயட் இல்லை. அதே போல் சிவாஜியும், பாலசந்தரும் இணைந்த முதல் படமும், விசுவநாதன் தனித்து இசையமைக்கத் தொடங்கிய பின் சிவாஜிக்கு இசையமைத்த முதல் படமும் இதுவேயாகும். 


செல்வந்தர் குடும்பத்தில் ஒரே மகளாகப் பிறந்து செல்லமாக வாழ்பவள் கௌரி. திருமணம் செய்து குழந்தைக்கு தாயாக வேண்டும் என்பது அவளின் ஆசை. வெகுளித் தனமும், அப்பாவித்தனமும் கொண்ட அவளை தன்னிடம் வேலை பார்க்கும் வசதி குறைந்த பாபுவுக்கு கல்யாணம் செய்து வைக்க பிரயத்தனம் செய்கிறார் சோமநாதன். அதற்கு காரணம் இருக்கிறது. பாபுவின் கல்விக்கு உதவியவர் சோமநாதன். அதனால் அவனின் இந்த உதவியை அவர் எதிர்பார்க்கிறார். அதுமட்டுமன்றி கௌரிக்கு புற்று நோய் இருப்பதையும், அவள் வாழப் போவது சில காலம் என்பதையும் அறிந்து நொருங்கிப் போகும் சோமநாதனும், அவர் மனைவி கமலாவும் இந்தத் தீர்மானத்துக்கு வருகிறார்கள். பாபு ஏற்கனவே விமலாவை காதலிக்கிறான். ஆனாலும் சோமநாதனின் நிலையறிந்து கௌரியை மணக்க சம்மதிக்கிறான். கௌரி, பாபு கல்யாணம் நடக்கிறது. தனக்கு குழந்தை பேறு இல்லை என்பதையோ, புற்று நோய் இருப்பதையோ அறியாத கௌரி பாபுவை மனதார நேசிக்கிறாள். பாபுவோ அவள் நிலை எண்ணி துன்பத்தில் துடிக்கிறான் . இதனிடையே பாபுவின் பழைய காதலி விமலா அடிக்கடி அவன் வாழ்வில் குறுக்கிட்டு தொல்லை தருகிறாள். கௌரியின் நோயை குணமாக்க பாபு செய்யும் முயற்சி பலித்ததா என்பதே படத்தின் முடிவு.

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

13-07-2025 Sun: Laughing Go Laughing - comedy drama - Bryan Brown Theatre, cnr of Chapel and Rickard Roads, 80 Rickard Road, Bankstown NSW 2200 at 6 PM.

18-07-2025 Fri : ஆடிப்பூரத் திருவிழா வெள்ளிக்கிழமை 18ஆம் தேதி அன்று விநாயகர் பூஜையுடன் தொடங்கி, திங்கள் 28ஆம் தேதி  வரை நடைபெறும் at Sydney Sri Durga Devi Devasthanam 

27-07-2025 Sun: ஆடிப்பூரத் தேர் திருவிழா at Sydney Sri Durga Devi Devasthanam

27-09- 2025  Sat: சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி at The Bryan Brown Hall, Bankstown 6pm.:'

இலங்கைச் செய்திகள்

செம்மணியில் மனித புதைகுழி தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது-பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்

செம்மணி மனித புதைகுழிகள் - பிரிட்டிஸ் அரசாங்கம் ஆழ்ந்த கவலை

சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர

இலங்கை விமான சேவையில் இடம்பெற்ற ஊழல், மோசடி குறித்து விசாரிப்பதற்கு விசேட விசாரணைக்குழு

அர்ச்சுனாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமார் கைது   


செம்மணியில் மனித புதைகுழி தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது-பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்

Published By: Rajeeban

04 Jul, 2025 | 08:28 AM

செம்மணியில் ஒரு  மனித புதைகுழி    தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறதுஎன பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சியோபைன் மெக்டோனா எம்.பிதெரிவித்துள்ளார்.

செம்மணியில் ஒரு  புதைகுழி தோண்டப்படுதல்தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது - மேலும் சர்வதேச சமூகம் இறுதியாக உண்மை பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வழங்க செயல்பட வேண்டும் என்று கோருகிறதுஎன அவர் தெரிவித்துள்ளார்

உலகச் செய்திகள்

இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்தாகிறது 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்


இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்தாகிறது 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்

03 Jul, 2025 | 01:09 PM

புதுடெல்லி: இந்த ஆண்டு இறுதிக்குள் 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியாவும், அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க மூத்த பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கர்னல் கிறிஸ் டெவின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செவ்வாயன்று (ஜூலை 1) நடைபெற்ற ஒரு தொலைபேசி உரையாடலின் போது, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தும், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்த ஆண்டு இறுதியில் சந்திக்கும் போது புதிய கட்டமைப்பை இறுதி செய்து கையெழுத்திட ஒப்புக்கொண்டனர்.

ஆடிப்பூர உற்சவம் 18/07/2025 - 28-07-2025

 ஆடிப்பூர விழா தேவிகளை போற்றும் வகையில், துர்கை தேவியின் பராகாசத்தையும், பக்தர்களை ஆசீர்வதிக்க இந்த உலகிற்கு அவள் வந்ததையும் கொண்டாடும் புனித நாள் ஆகும்.

ஜூலை (ஆடி) மாதம் வந்து விட்டது.
இந்த ஆண்டின் ஆடிப்பூரத் திருவிழாவை 10 நாட்கள் கொண்டாட இருக்கிறோம். விழா வெள்ளிக்கிழமை 18ஆம் தேதி ஜூலை 2025 அன்று விநாயகர் பூஜையுடன் தொடங்கி, திங்கள் 28ஆம் தேதி ஜூலை 2025 வரை நடைபெறும்.

தினமும் இரவுகளில் ஹோமம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள் மற்றும் பரிவார மூர்த்திகளின் பிரதக்ஷணம் (சுற்றுப் பணிகள்) நடைபெறும்.

ஆடிப்பூரத் தேர் திருவிழா ஞாயிறு 27ஆம் தேதி ஜூலை 2025 அன்று நடைபெறவுள்ளது.



ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவில் பிரதிஷ்டை நாள் 7/7/2025

 


Laughing கோ Laughing 13/07/2025

 


சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி 27/09/2025