பாண்டில் அல்லது தாளம் – கஞ்சக்கருவி
உலோகங்களால்
வார்க்கப்படுபவை கஞ்சக்கருவிகள். ஜால்ரா, சிங்கி,
மணி,
ஜாலர்
என பல பெயர்களால் அழைக்கப்படும் தாளம், கஞ்சக்கருவிகள்
வகையைச் சேர்ந்தது. இசையின் கால அளவுகளை
சீர்படுத்தி நேர்க்கோட்டில் பயணிக்கச் செய்வதே
தாளம். இசையும் தாளமும் உடலும் உயிரும் போன்றது. பிரித்தால் இரண்டுமே
இறந்துபோகும். நாதசுரம், மிருதங்கம்,
கடம்,
கஞ்சிரா,
ஆகிய எல்லா லய வாத்தியங்களையும் தாளம் தான் கட்டுப்படுத்துகிறது.
பழங்குடி மக்களின் நாட்டியத்தில் இருந்தே தாளம் பிறந்ததாகச் சொல்கிறார்கள்
இசையறிஞர்கள். வேட்டையாடிக் கிளர்ந்த மகிழ்வு அதிர அவர்கள் ஆடும் நடனத்தில்,
பாடலுக்குத்
தகுந்தவாறு பாதங்களைக் கொண்டு செய்த கணக்கீடே 'தாளம்’
என்றானதாம். ஆஸ்திரேலிய பழங்குடிகள் ஒரு சிறிய கல்லில் கட்டைக்கொண்டு தட்டி தாளமிடுகிறார்கள்.
காலப்போக்கில்,
தாளத்திற்கென
ஒரு இசைக்கருவி வடிவமைக்கப்பட்டது. இரண்டு உலோகத் துண்டுகள் அல்லது கட்டைகளே
முதலில் தாளமாக பயன்படுத்தப்பட்டன. அதன்பின் இலக்கண சுத்தியோடு நவீன தாளக்கருவிகள்
வந்தன. இலைதாளம், குழிதாளம் என தரத்துக்கும்
தன்மைக்கும் ஏற்ப பெயர்களும் உருவாயின.
ஓதுவார்கள், நட்டுவனார்கள்,
நாட்டுப்புற
பாடகர்கள் என இசையோடு தொடர்புடைய பலரும் தாளக்கருவியைப்
பயன்படுத்துகிறார்கள். தெருக்கூத்து, கோலாட்டம்,
வில்லுப்பாட்டு,
கனியான் கூத்து, எருதுகட்டு மேளம், பழங்குடியினர் இசை
, கொங்கு நாட்டின் கொட்டுத்தவுல்
சாமி அழைப்பு,
நாடகங்கள் போன்றவற்றிலும் இது முதன்மை பெற்றிருந்தது. திரிபுடை
தாளம் முழங்க, நாதசுரக்காரர்
இசைக்கும் மல்லாரி ராகத்தை வைத்தே பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் வசிக்கும் மக்கள்,
இறைவன் வீதியுலா தொடங்கியதைத் தெரிந்து
கொள்வார்கள். இன்று பெரும்பாலான கோயில்களில் மின்சார
இசைக்கருவிகள் வந்துவிட்டதால், மரபுரீதியான இந்த நிகழ்வுகள்
மறைந்து விட்டன.
தாளம்
இசைக்கும் சிவ பூதகணங்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் தனி சிற்பங்களையும், தோரண சிற்பங்களையும்
நாம் தமிழ்நாட்டில் பல கோவில்களில் காணலாம். மிகப் பழமையான வெட்டுவான் கோவில் குடவரையில்
தாளம் இசைக்கும் பூதகண சிற்பம் உள்ளது. "மத்தளி
மூன்றும் கரடிகை ஒன்றும் தாளம் ஓரணையும்" என்பது சீனிவாசநல்லூர் குரங்குநாதர்
கோயில் கல்வெட்டுத் தொடர்.
வேள்விக்குடி அருள்மிகு சொன்னவாறு
அறிவார் கோவில்(கல்யாணசுந்தரேசுவரர் தற்காலப் பெயர்)
கல்வெட்டில் அக்கோவிலில் வழிபாடு நடக்கும் நேரங்களில் பறை ஒன்று,
மத்தளம்
நான்கு, சங்கு இரண்டு, காளம்
இரண்டு, செகண்டிகை ஒன்று, தாளம்
ஒன்று, கைம்மணி இரண்டு இவைகள் ஒலிக்கப்பெற்று வந்த செய்தியைக்
கூறுகிறது.
செம்பு
மற்றும் வெள்ளீயக் கலவையால் தாளம்
செய்கிறார்கள். வெண்கலம், ஐம்பொன்னால் செய்யும் மரபும்
இருந்தது. நாதஸ்வரத்துக்கு நரசிங்கம்பேட்டை போல தாளத்துக்கு நாச்சியார்கோவில். உலோகத்தை
நீராக உருக்கி அதை வார்க்க வேண்டும்.
தாளம்
வார்க்க வண்டல் மண் அவசியம். இந்த நாச்சியார் கோவில் பகுதிகளில்
மட்டுமே
கிடைக்கிறது. இந்த வண்டல் மண்ணைச்
சலித்து சாக்கில் கட்டி விற்பனைச் செய்கிறார்கள்.
அந்த மண்ணை வாங்கி மரச்சட்ட அச்சில் தாளத்தின் வடிவத்தை
வைத்து அந்த மண்ணால் நிரப்பி தட்டிக் கெட்டிப்படுத்த
அச்சு தயார். பின்பு அடுப்பில் கொதிக்கும் உலோகத்தைக்
கரண்டியில் அள்ளி ஊற்றி ஆர வைக்கிறார்கள்.
10 நிமிடம் கழித்து மண்ணைக் கொட்டினால்
கொத்தாக வந்துவிடுகிறது தாளம். பிறகு ஓரத்தைத்
தட்டி கடைசல் பட்டறையில் கடைந்து பாலிஷ்
போட தாளம் தயார். 40 ரூபாய் முதல் 200
ரூபாய்
வரை விலை போகிறது.
‘‘ஒரு
காலத்தில் 500&க்கும் அதிகமானோர் தாளக்கருவி உற்பத்தி
செய்தார்கள். இப்போது எல்லோரும் குத்துவிளக்கு, பாத்திரத்
தயாரிப்புக்கு மாறிவிட்டார்கள். எப்போதாவது ஓரிருவர் வந்து கேட்கிறார்கள்.
அவர்களுக்கு மட்டும் செய்து கொடுக்கிறோம்’’ என்கிறார் நாச்சியார் கோவிலைச் சேர்ந்த
குமரேசன். விற்பனை இன்மை, அங்கீகாரம் இன்மை காரணமாக
இசைக்கருவிகள் செய்து வந்த பலர் இப்பொழுது வேறு தொழில்
நாடிச் சென்று விட்டார்கள். இப்போது தொழில் செய்யும் பலரும்
அடுத்த தலைமுறைக்குப் பயிற்றுவிக்க விரும்பவில்லை.
தமிழர்களின்
கலாச்சாரத்தை சார்ந்த தொழில்கள் அழிய விடாமல் காக்க வேண்டியது அரசின் கடமையாக
இருக்கிறது. ஆனால் தமிழக அரசாங்கம் இதைப் பற்றி எல்லாம் என்றுமே கலவலைப்படாது.