ஆடுகிறான் மனிதனிப்போ ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... ஆஸ்திரேலியா


     இயல்புநிலை மாறியது
     செயற்கையதில் ஏறியது 
     மனமதிலே நவநினைப்பு
     குடியேற்றம் ஆகியது

     மனிதனது நடவடிக்கை
     இயற்கைக் கெதிராகியது
     வாழ்வினிலே பலதுன்பம்
     வந்தபடி இருக்கிறது !

     நாகரிக மெனும்மாயை
     நாளுமே மறைப்பதனால்
     ஆகாயம் பூமியெலாம்
     அடிமையென எண்ணிவிட்டான்
     வேண்டாத பலவற்றை
     விரும்பியே நாடியதால்
     வேதனையின் பிடியினிலே
     மாளுகிறான் மனிதனிப்போ !

     விஞ்ஞானம் கண்டறிந்தான்
     விந்தைகளும் விளைந்தனவே
     மேலுலகை கீழுலகை
     விட்டுமவன் வைக்கவில்லை 
     உடல்பிரித்தான் உருக்கொடுத்தான்
     உணர்வுதனை அழித்திட்டான்
     மனிதனிப்போ உலகினிலே
     அமைதியற்றே உலவுகிறான் ! 

சிட்னி ஸ்ரீ துர்க்கா திருக்கோவிலில் வரலட்சுமி விரதம் 31/07/2020


 ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக் கிழமை அன்று, வரலட்சுமி விரதத்தை  ஏராளமான  பெண்கள் 31/07/2020 ம் திகதி சிட்னி ஸ்ரீ துர்க்கா திருக்கோவிலில்  மேற்கொண்டார்கள் 


வரலட்சுமி விரதத்தின் மகத்துவம்!
பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம். இதனால், திருமணமான பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் சேரும். கன்னிப்பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிட்டும். அம்பிகையின் அருளால் விரும்பிய நலன்கள் வாழ்வில் கிடைக்கப்பெறும்.



போட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு முள்ளானை வசந்தன்


போடவேணும் வாக்கொன்று வருகின்ற தேர்தலிலே
சூடவேணும்  வெற்றிவாகை  எங்களது கட்சிகள்தான்
அரங்கேறுது ஈழத்தில் அடுத்த தேர்தலொன்று
ஆளுக்காள் குற்றம்சொல்லி அதிக வேட்பாளர்கள்
ஐந்தாறு  வாக்கிருந்தால் ஆளுக்கொன்று போட்டிடலாம்
ஐயகோ  என்செய்வேன் ஒருவாக்கே எனக்குண்டு 
மக்களுக்குத்  தொண்டாற்ற மனமுவந்து நிற்கிறார்கள்
மாளிகையில் சென்றுதம் மக்களுக்காய்  பேசிடுவர்
பூரிப்பாய் இருக்குதையோ புதுச்செய்தி இதுஎமக்கு
யாரிங்கு கேட்பார்கள் நானிங்கே இதைச்சொன்னால்
அடிபட்டு நிற்கிறார்கள் ஆளுக்கொரு திக்காக  
யாருக்குக்கு போடவென நானிங்கு திகைக்கையிலே  
அபிப்பராயம் சொல்கிறார்கள் ஆளுக்கொரு எண்ணத்துடன்
போடவேண்டாம் வாக்குஎன்று பத்திரமாய் வைத்திருந்தால்
போடுகினம் வேறுஆட்கள் என்பெயரை தன்பெயராய்
அடிமையாக வாழ்வோரை  சமநிலைக்குத்  தூக்கிடவே  
அரசியலில் புகுந்துவிட  அன்றொருவர் முடிவெடுத்தார்
அடிமைநிலை களைவதற்கு அயராது அவருழைத்தார்
ஆபிரகாம் லிங்கனென்ற  புகழ்பெயர்தான்  அவர்பெயராம் 
மக்களால்  ஆளப்படும்  மக்களின் ஆட்சியது  

பத்திரிகையாளர் காசி. நவரட்ணம் நினைவுகள் சொல்லமறந்த கதைகளின் ஊடாக அஞ்சலிப்பகிர்வு ! 1986 இறுதியில் நடந்த லிபரேஷன் ஒப்பரேஷன் ஒத்திகை முருகபூபதி


  இந்த 2020 ஆண்டு கொரோனோவுடன் பிறந்து எனக்குப்பிரியமான சிலரையும் மரணிக்கச்செய்துவிட்டது.

தொடர்ந்து வரும் மரணச்செய்திகள்  மனதில் சஞ்சலத்தையும் பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி, நானும் மாரடைப்புக்குள்ளாகி, மருத்துவமனை சென்று திரும்பினாலும், துயரச்செய்திகள் அடுத்தடுத்து வந்துகொண்டுதானிருக்கின்றன.
இலட்சக்கணக்காக மக்கள், கண்ணுக்குத்தெரியாத எதிரியால் கொல்லப்பட்டுக்கொண்டும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தப்பதிவினை எழுதும் ஜூலை மாதம் இறுதிவரையில் எனக்குப்பிரியமான சிலரை இழந்துவிட்டேன்.
கலைவளன்  சிசு நாகேந்திரன்,  ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் நீர்வை பொன்னையன்,   பிரான்ஸில் கலைஞர் ஏ. ரகுநாதன், மற்றும் எழுத்தாளர் தமிழ்ப்பிரியா,  அவுஸ்திரேலியா மெல்பனில் நாகராஜா மாஸ்டர், 3 CR வானொலி சண்முகம் சபேசன்,  கலை, இலக்கிய ஆர்வலர் இராஜேந்திரா, இலங்கையில் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன், கிழக்கிலங்கையில்   மண்டுர் மகேந்திரன்,  தமிழகத்தில் விமர்சகர் கோவைஞானி…. இவ்வாறாக ஒவ்வொருவராக விடைபெற்றபோது,  அவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலிப்பகிர்வுகளை தொடர்ச்சியாக எழுதி எழுதி மனதை தேற்றிக்கொள்ள முடிந்தாலும்,  இந்தத் தொடர் முற்றுப்பெறாமல் தொடருவதும் விதிப்பயன்தானோ…? என்று யோசித்துக்கொண்டிருந்தபோது,  நேற்றைய தினம் எனது நீண்டகால நண்பரும் இலங்கையின் மூத்த பத்திரிகையாளருமான காசி. நவரட்ணமும் மறைந்தார் என்ற செய்தி வந்து சேர்ந்துள்

கோதபயாவின் மூன்று முகம்!-- கர்னல் ஆர்.ஹரிஹரன்

.

இலங்கையில், ஆக., 5ல், பார்லிமென்ட் தேர்தல் நடக்கவிருக்கிறது. முன் நடந்த தேர்தல்களிலிருந்து, இந்த தேர்தல் முற்றிலும் மாறுபட்டது.

முதல் காரணம், கொரோனா தாக்கத்தால், தேர்தல் தேதி ஏற்கனவே, இரண்டு முறை மாற்றப் பட்டது. அரசியல் கட்சிகள் நடத்தும் தேர்தல் கூட்டங்களுக்கும், வீதியோர சந்திப்புக்களுக்கும், தேர்தல் கமிஷன் பலத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தல் நடத்தும் இடங்களில் அதிகாரிகளும், வாக்காளர்களும் கடைப்பிடிக்க வேண்டிய சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள், எவ்வாறு ஓட்டுப்பதிவை பாதிக்கும் என்பது கேள்விக் குறியாக உள்ளது.

இரண்டாவது, இலங்கை அரசியல் களத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ராஜபக்சே அரசியல் குடும்பத்தின், இலங்கை பொதுஜன முன்னணி கட்சி, நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளான, இலங்கை சுதந்திரா கட்சியையும், ஐக்கிய தேசிய கட்சியையும் ஓரங்கட்டி முன்னிலையில் நிற்கிறது. ராஜபக்சே கட்சியே, ஆட்சியை கைப்பற்றலாம் என்பதே, பலரின் எதிர்பார்ப்பு.

மூன்றாவது, அரசியலில் அதிகம் பங்கு பெறாத, கோதபய ராஜபக்சே, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், இந்த தேர்தல், அவர் எதிர் கொள்ளும் முக்கியமான அரசியல் சவாலாகும். இதுவே, அவரது அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்க போகிறது.

பயணங்கள் ஓய்வதுண்டு: நினைவுகள் ஓய்வதில்லை - குன்னுார் உன்னி.

.


அன்றாடம் 15 கி.மீ.,துாரம் வனங்களுக்குள் நடந்து சென்று தபால் பட்டுவாடா செய்து வந்த சிவன் தற்போது ஒய்வு பெற்றுவிட்டார். தான் நடந்து சென்று வந்த பயணங்களின் நினைவுகளை தற்போது அசை போட்டபடி இப்போது இருக்கிறார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் வண்ணார
பேட்டையை சேர்ந்தவர் சிவன்,
கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக
தபால் துறையில் பணியாற்றி வந்தார்.

ஹில்குரோவ் தபால் நிலையத்திற்கு வந்த பிறகுதான் இவர் மக்கள் போற்றும் தபால்காரரானார்.காரணம் வனப்பகுதிக்குள் வாழும் பழங்குடியின மக்கள் உள்ளீட்டவர்களுக்கு தபால் கொடுப்பதற்காக காட்டுக்குள் 15 கி.மீ துாரம் சலிக்காமல் நடந்து சென்று வந்தார்.ஒரு தபால் கார்டு என்றாலும் அது சம்பந்தப்பட்டவர்களுக்கு முக்கியம்தான் என்ற மிதமிஞ்சிய பொறுப்புடன் சென்று சம்பந்தப்பட்டவர்களை நேரில் பார்த்து கொடுப்பார் அதில் படிக்கத் தெரியாதவர்கள் இருந்தால் படித்தும் காட்டுவார்.

வனங்களுக்குள் சென்று வரும் போது பல முறை கரடி,காட்டெருமை,யானை உள்ளீட்ட விலங்குகளை பார்த்திருக்கிறார் ஆனால் இதுவரை அவைகள் இவரை எதுவும் செய்தது இல்லை அவைகளுக்கு தெரியும் போலும் மக்கள் சேவகர் இவர் என்று.


அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 25 – உடுக்கை/உடுக்கு – சரவண பிரபு ராமமூர்த்தி


உடுக்கை/உடுக்கு – தோற்கருவி

அனைவரும் அறிந்த ஒரு தமிழர் இசைக் கருவியாகவே உடுக்கை திகழ்ந்து வருகிறது. பழங்காலத்தில் மண்ணால் செய்யப்பட்டு பக்கவாட்டில் தோல் போர்த்தப்பட்டு
இசைக்கப்பட்டது உடுக்கை. நிகழ்காலத்தில் வேங்கை அல்லது பலா மரத்தைக் குடைந்து உடுக்கைக்கான உடல்பகுதி செய்யப்படுகிறது. சில  காலமாக உடுக்கையின் உடல்பகுதி வெண்கலம், பித்தளை போன்ற உலோகங்களிலும் செய்யப்படுகிறது. இவை நீண்டு உழைக்கக் கூடியதாகவும், காலத்திற்கும் இருப்பதாகவும் இருக்கின்றது. இருபுறமும் மரத்திலோ அல்லது பிம்பு வளையத்திலோ சுமார் ஆறு இன்ச் அளவுள்ள வளைவுகள் செய்யப்பட்டு அதில் மாட்டின் இரைப்பையில் இருந்து எடுக்கப்படும் சவ்வைக் கொண்டு நன்கு இழுத்து, சோற்றின் பசையாலோ அல்லது அரைத்து காய்ச்சிய புளியங்கொட்டையின் பசையினாலோ ஒட்டப்படுகிறது.  முன்பு சில இடங்களில் முயலின் சவ்வு பயன்படுத்தப்பட்தாக தெரிகிறது. இப்பொழுது நெகிழி தான் பெரும்பாலும். இதன் பிறகு ஒட்டிய தட்டுகளை துணிகளில் கட்டி ஒருநாள் அளவிற்கு உலர விட்டு பிறகு உடுக்கை உடன் சேர்த்து
கட்ட தயாராகிவிடுகிறது உடுக்கை. உடுக்கைக்கு துணியாலான கச்சையும் கட்டப்படும். உடுக்கையின் ஓசையை கட்டுப்படுத்த கொங்காரம் உதவியாக இருக்கிறது அதை அழுத்தி பிடித்து/விடுத்து இசைக்கும்பொழுது வெவ்வேறு விதமான ஓசை வெளிப்படுகிறது. உடுக்கையின் வீரியத்தை அதிகரிக்க குதிரை வால் முடியை இசைக்கப்படும் முகத்தின் எதிர் முகத்தில் குறுக்காக பொருத்துவதும் உண்டு.


பண்ருட்டி பலா மிகப் பிரபலம். இதன் சுவை தனித்துவமானது. பண்ருட்டி நகரம், காடாம்புலியூர், சாத்திப்பட்டு, மாம்பட்டு, காட்டுக்கூடலூர், வரிசன்குப்பம் உள்ளிட்டக் கிராமங்களில் பலாவைக் குடைந்து இசைக்கருவிகள் செய்யப்படுகிறது. கடந்த 35 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டுவரும் காடாம்புலியூரைச் சேர்ந்த ஏழுமலை பண்ருட்டிப் பலா மரம் குறித்த சில அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்: “இசையுடன் இணைந்த மரங்களில் முதன்மை இடத்தை வகிப்பது பண்ருட்டிப் பலா மரங்கள், அதற்கு முக்கியக் காரணம் வறண்ட பூமியான செம்மண் கொண்ட பண்ருட்டியில் விளையும் பலா மரங்களுக்குக் கடினத் தன்மை அதிகம், இதிலிருந்து ஒழுகும் பாலின் தன்மையும் அடர்த்தியானது. இத்தகைய சிறப்பு பண்ருட்டியில் விளையும் பலா மரங்களுக்கே உண்டு என்பதால், இசை வித்வான்கள் எதிர்பார்க்கும் நாதமும், சுருதியும், பிசகின்றி, துல்லியமாகக் கிடைக்கும். இது இறைவன் கொடுத்த வரம் என்றால் மிகையல்ல. தவில், உடுக்கை, செண்டை போன்ற இசைக் கருவிகள் இங்கே செய்கிறோம். வெளிநாடுகளில் இருந்து இசைக் கருவிகள் வேண்டி பல ஆர்டர்கள் வந்தாலும் அவற்றை அனுப்புகின்ற கூலி, விற்கும் பொருளைக் காட்டிலும் கூடுதலாக உள்ளது. இதனால் பலர் இத்தொழிலை தொடர்ந்து செய்ய தயங்குகின்றனர்.”

கையெழுத்து -நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்


 

.
எம்மில் பலருக்கு பேனாவில் மை இருக்கிறதா? பேனா சரியாக எழுதுகிறதா? என்று பார்ப்பதற்குக் கையெழுத்துப் போட்டுப் பார்க்கும் பழக்கம் உண்டு. இப்படியாக நான் ஒரு முறை ஒரு வெற்றுத் தாளில் கையெழுத்துப் போட்டு பேனாவைச் சரி பார்த்தேன். தொழிலதிபரான என் நண்பர்,’ இப்படியாகக் கண்டபடி போடாதைங்கோ வெற்றுத் தாளில் ஒரு கையெழுத்து உங்கள் உடமைகளையே இழக்கச் செய்யும்’ என்றார்.

ஆமாம், கையெழுத்தை எமது அத்தாட்சியாக பல இடங்களில் போடுகிறோம். ஒருவர் கையெழுத்துப் போல பிறிதொருவர் கையெழுத்து அமைவதில்லை. எமது கைரேகையின் வேறுபாடு ஒருவருக்கு இருப்பதைப் போல மற்றவருக்கு அமைவதில்லை. அது போலத்தான் எமது கையெழுத்தும். இதனாலேயே இந்தக் கை ஒப்பத்திற்கு இத்தனை மதிப்பு. எம்மை அடையாளம் காட்டும் கருவி இது.

நாட்டில் நடக்கும் பல குற்றங்களில் இந்தத் திருட்டுக் கையெழுத்தும் ஒன்று. பொருளைத் திருடுவது, கொலை செய்வது எல்லாம் மிகக் கஸ்டமான காரியம். ஆனால் கையெழுத்தைத் திருடுவது மிக இலகுவான விஷயம். இதனால் இந்தத் திருட்டு மற்றய திருட்டுக்களை விட அதிகமாகவே  நடை பெறுகிறது. இதைக் கண்டு பிடிப்பதற்கென குற்றவியல் பிரிவில் விஷேஷ பயிற்சி பெற்ற ஆய்வாளர்கள் உள்ளனர்.


இனிய இலக்கிய சந்திப்பில் சாலமன் பாப்பையா 22 August 20

.

இலங்கைச் செய்திகள்


நுவரெலியாவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

நீதிபதி இளஞ்செழியனுக்கு குவியும் பாராட்டுக்கள்

தொல்பொருள் பாரம்பரியத்தை காக்க ஆலோசனை குழு நியமனம்

பொதுஜன பெரமுன தமிழ் பிரிவினால் பந்துல குணவர்த்தனவுக்கு ஆசீர்வாதம்

ராஜித, ரூமிக்கு எதிராக சட்ட மாஅதிபர் குற்றப்பத்திரம்

மொட்டு வேட்பாளர் பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை

Jaffna Got Talent‌ 2020 இறுதிப் போட்டி நாளை



நுவரெலியாவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ



பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்று அங்கு விஜயம் செய்து மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொண்டார். இ தொ. கா.பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க முத்தையா பிரபாகரன் உட்பட வேட்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.   நன்றி தினகரன் 

உலகச் செய்திகள்


மலேசியாவின் லங்காவி தீவு அருகே ரொஹிங்கியர்கள் உயிருடன் மீட்பு

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிபிற்கு 12 ஆண்டு சிறை

சென்டு நகர துணைத் தூதரகத்தில் இருந்து அமெரிக்கா வெளியேற்றம்

சீனாவின் 5 பிராந்தியங்களில் புதிய வைரஸ் கொத்தணிகள்

ஜெர்மனியில் இருந்து 12,000 அமெரிக்க துருப்புகள் வாபஸ்

விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி வழக்கு


மலேசியாவின் லங்காவி தீவு அருகே ரொஹிங்கியர்கள் உயிருடன் மீட்பு




மலேசியாவின் லங்காவி தீவு அருகே கடலில் மூழ்கியிருக்கலாம் என்று கருதப்பட்ட ரொஹிங்கிய அகதிகள் 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அகதிகள் ஒரு சிறிய தீவிலிருந்த புதருக்குள் மறைந்திருந்ததாக மலேசியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிறன்று லங்காவி எல்லையில் சிறிய படகில் அகதிகள் சிலர் மலேசியாவிற்குள் செல்ல முயன்றனர். கள்ளத்தனமாக கடலில் இருந்து அவர்கள் கரைக்குச் செல்ல முயன்ற போது கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் அஞ்சினர்.
ஆனால், அகதிகள் சிறிய தீவுக்குள் மறைந்து இருந்ததை தேடல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மீட்கப்பட்ட ரொஹிங்கிய அகதிகள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆட்கடத்தல் தொடர்பில், ரொஹிங்கிய அகதிகள் இருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். அகதிகள் பெரிய படகில் இருந்து சிறிய படகிற்கு மாற்றப்பட்டு நாட்டிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக நுழையத் திட்டமிடுவதாக அதிகாரிகள் கூறினர்.
மியன்மாரில் அடக்குமுறையை எதிர்கொள்ளும் ரொஹிங்கிய அகதிகளில் பெரும்பாலோருக்கு விருப்பமான புகலிடமாக மலேசியா கருதப்படுகிறது.
மலேசியா அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடு இல்லை என்று தெரிந்தும் ரொஹிங்கிய அகதிகள் தொடர்ந்து கள்ளத்தனமாக அங்கு செல்ல முயன்று வருகின்றனர்.    நன்றி தினகரன் 

என்ர அப்பாவின்ர கார் (சிறுகதை) உஷா ஜவகர் (அவுஸ்திரேலியா)

                                                                 
 என்ர அப்பாவின்ர காரை நான் எப்போது முதன்முதலாய் பார்த்தேன் தெரியுமா?  
1980 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நடுப்பகுதியில் தான் பார்த்தேன். அப்போது எனக்கு பதினெட்டு வயது.  கொழும்பில A /L பரீட்சை எழுதிட்டு விடுமுறையின் போது சாம்பியாவுக்குப்  போனேன்.  நான் சாம்பியாவில் கிட்வெ ( kitwe)  என்ற சின்ன நகரத்தில் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் என்னை வரவேற்க வந்து நின்றது அந்தக் கார்.
நல்ல சாக்லேட் நிறம். அதுக்காக கடும் மண்ணிறம் எண்டு சொல்லிவிட முடியாது. கண்ணுக்கு குளிர்ச்சி தரும் இளம் மண்ணிறம் என்றே சொல்லலாம்.  அதன் வெளித்தோற்றம் ஒரு குட்டி ஆமை போல இருந்தது. அது ஒரு போர்க்ஸ் வேகன் (Vaux Wagon) கார்.  அதன் நம்பர் பிளேட்  கூட எனக்கு இப்ப ஞாபகமில்லை.  அந்தக் குட்டி ஆமையை என்ர அப்பா ஓட்ட, என்ர அக்கா முன் சீட்டிலும் நான் அதன் பின் சீட்டிலும் இருந்தம். ஆமை கிட்வே றோட்டில் வழுக்கிக் கொண்டே பவனி வந்து மெதுவாக எமது வீட்டு வாசலில் நின்றது.  இரவு படுத்து விட்டு. அடுத்த நாட்காலை அறையை விட்டு வெளியே வந்தேன்.அப்பா தன்  காரை மும்முரமாக கழுவிக் கொண்டிருந்தார். காரைக்  கழுவித் துடைத்ததும் அந்த கார் ' பள பள' என மின்னியது என்ர  அப்பா கிட்வே சிட்டி கவுன்சிலில் வேலை செய்து கொண்டிருந்தார். ஒரு கிழமையில் மூன்று அல்லது நான்கு தரம் அந்தக் காரை நன்கு கழுவுவார். தன்ர பிள்ளைகளை நேசிப்பதைப் போலவே அந்தக் காரையும் நேசித்து வந்தார். அயலவர்களிடம் கார் இல்லாவிட்டால் தன் காரில் அவர்களை ஏற்றி தன்னுடன் அழைத்து செல்வார்.
அந்தக் காரில் ஏறாத சாம்பியரோ,இந்தியரோ அல்லது இலங்கையரோ அந்தச் சுற்று வட்டாரத்தில் இருக்கவில்லை என உறுதியாக கூறலாம்.  சில காலத்தின் பின் என் அக்காவின் கல்யாணத்திற்கு அந்த ஆமை தான் அங்கும் இங்கும் ஓடி ஓடி மாடு மாதிரி உழைத்ததுஅதை விட பொம்பிளை காராயும் கிட்வே நகரத்தைச் சுற்றி அலங்காரத்துடன்,அகங்காரத்துடன்  பவனி வந்தது.  பின்னர் 1990ஆம் ஆண்டு கிட்வேக்கு ஐந்து தமிழ் இளைஞர்கள் டீச்சர்களாய் வேலை பார்க்க வந்து சேர்ந்தார்கள்.அவர்களுக்கு என்ர அப்பாதான் காரோட்டக் கற்றுக் கொடுத்தார்.அவர்கள் கார் பழகவும் அந்த ஆமைதான் அனுசரணையாக இருந்தது.

எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் – 03 விமர்சனங்கள் – எதிர்வினைகளின் ஊடாக பயணித்த படைப்புகள் ! முருகபூபதி


எனது முதலாவது சிறுகதை கனவுகள் ஆயிரம் 1972 ஜூலை மாதம் முதல் வாரத்தில் மல்லிகையில் வெளிவந்ததைத் தொடர்ந்து இரண்டாவது கதையாக நான் எழுதியது அந்தப்பிறவிகள்.
இச்சிறுகதையும்  நீர்கொழும்பு பிரதேச கடற்றொழிலாளர்  சமூகத்தின் பேச்சுவழக்கிலேயே அமைந்திருந்தது. இதனை பூரணி காலாண்டிதழுக்கு அனுப்பியிருந்தேன்.
அதனை மூலப்பிரதியிலேயே படித்திருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழின் ஆசிரிய பீடத்திலிருந்த நண்பர் மு. கனகராஜன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மற்றும் ஒரு சிறுகதையை எழுதி அவரிடம் கொடுத்தேன். அதன்பெயர் தரையும் தாரகையும். இச்சிறுகதையும் 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி வெளியானது.
பூரணி காலாண்டிதழ். ஆகையால் அதற்கு அனுப்பியிருந்த அந்தப்பிறவிகள் சிறுகதை, அதன் இரண்டாவது இதழிலேயே வெளியானது. அம்மாதம் ( 1972 )  ஒக்டோபர் என நினைக்கின்றேன்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக  அமைந்திருந்த ராஜேஸ்வரி பவானுக்கு நான் அடிக்கடி செல்வது வழக்கம். அங்கேதான் ஈழத்து இலக்கிய இதழ்களையும் தமிழக நூல்களையும் வாங்குவேன். அதனால் அதன் உரிமையாளரின் புதல்வனும் எனக்கு நன்கு அறிமுகமானவர்.
அவர் 1977 ஆம் ஆண்டில் நடந்த இனக்கலவரத்தின்போது வெள்ளவத்தையில் கொல்லப்பட்டார்.  அவரை 1972 முதல் நன்கு அறிவேன்.
பூரணி இதழில் எனது சிறுகதை வெளியாகியிருக்கும் தகவலையும் அவர்தான் எனக்குச்சொன்னார். அந்த சைவ உணவகத்தில் காசாளர் மேசைக்கு முன்பாக பரப்பி வைத்திருந்த இலக்கிய இதழ்களுக்கு மத்தியில் பூரணி இரண்டாவது இதழையும் கண்டு வாங்கினேன்.  அதன் முகப்பு அட்டையில் பெனடிக்ற் பாலன், சட்டநாதன், கிருஷன் சந்தர் ஆகியோருட்பட  நன்கு  அறியப்பட்ட  மேலும் சில   எழுத்தாளர்களின் பெயர்களுடன் எனது பெயரும்  இடம்பெற்றிருந்தது கண்டு ஆச்சரியப்பட்டேன்.

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் – அங்கம் - 24 குழந்தை இலக்கியம் “ கொஞ்சும் தமிழ் “ பெற்ற சாகித்திய விருது !


எமது தாயகம் இலங்கையில், எழுத்தாளர்கள் – கலைஞர்கள்
மத்தியில்  இலக்கியம் மற்றும் கலைத்துறைப்பணிகளில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு அரச மட்டத்தில் பாராட்டு விருதுகள் வழங்கப்படுவதை அறிவீர்கள்.
அதற்காக இலங்கை கலாசார அமைச்சினால் சாகித்திய மண்டலம் என்ற அமைப்பும் தோன்றியிருந்தது. இந்த அமைப்பு கலாசார திணைக்களத்தின் கீழ்  வருகிறது.
1967 ஆம் ஆண்டு நான் எழுதியிருந்த கிறீனின் அடிச்சுவடு என்ற நூலுக்கும் சாகித்திய விருது கிடைக்கவிருப்பதாக ஒரு செய்தி எனது காதில் விழுந்தது.  அச்செய்தி நம்பகமாகவும் இருந்தது.
கலாசார திணைக்களத்தில் செயலாளராக அச்சமயம் பணியிலிருந்தவர் கே.ஜி. அமரதாச.  இவர் தமிழ் அபிமானியாவார். தானாகவே தமிழை கற்றுக்கொள்ளவும் பேசவும் விரும்பியவர்.
பின்னாளில் இவர், மகாகவி பாரதியாரின் சில கவிதைகளையும் சிங்கள மொழியில் பெயர்த்தவர்.  இவர் பற்றி எனது நண்பர் முருகபூபதி எழுதிய கட்டுரைகள்  மும்மொழியிலும் வெளிவந்துள்ளதையும் அறிவேன்.
இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுடனும் நல்லுறவுகொண்டிருந்தவர்தான் அமரதாச.
ஒரு நாள் அவர்,  கொழும்பில் என்னை வீதியோரத்தில் கண்டுவிட்டு, “  அம்பி… உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது.  விரைவில் அச்செய்தி உங்களைத் தேடி வரும்  “ என்று புதிர்போட்டார்.
 “ என்னவென்று சொல்லுங்கள் ? “  எனக்கேட்டேன்.
 “ அம்பி, நீங்கள் எழுதியிருக்கும் கிறீனின் அடிச்சுவடு   புத்தகத்தை சாகித்திய மண்டலம் பரிசுக்குத் தெரிவுசெய்துள்ளது. விரைவில் உங்களுக்கு கடிதம் வரும். “  என்றார்.
 “ அப்படியா… சரி…. வரும்போது வரட்டும்  “ என்று சொல்லிவிட்டு, சிறிது நேரம் அவருடன் உரையாடி மகிழ்ந்துவிட்டு அகன்றேன்.
ஆனால், அவர் சொன்னவாறு எனக்கு கடிதம் ஏதும் வரவேயில்லை. நான் அதற்காக காத்திருக்கவும் இல்லை.

மழைக்காற்று ( தொடர்கதை ) - அங்கம் 46 முருகபூபதி

நாட்கள் சக்கரம் பூட்டி விரைந்து ஓடிவிட்டதாகவே அபிதாவின் மனதிற்குப்பட்டது. நிகும்பலையூருக்கு வந்து சேர்ந்தது,  அதன்பின்னர் தொடர்ச்சியாக நடந்துவிட்ட சம்பவங்கள், இந்த வீட்டில் காணக்கிடைத்த மனிதர்கள், அவர்களின் இயல்புகள், அவர்களால் சொல்லப்பட்ட கதைகள், அவளாகத் தெரிந்துகொண்ட கதைகள்….
முன்பொரு காலப்பகுதியில் வன்னிபெருநிலப்பரப்பெங்கும் பெற்றோருடனும் உறவுகளுடனும், திருமணத்தின் பின்னர் கணவன், குழந்தையுடனும் அலைந்துழன்று , போர் முடிந்ததோடு, அனைத்துறவுகளும் அற்றுப்போன வேளையில்  தேடிவந்து தஞ்சமடைந்த இடத்தில் சந்திக்கநேர்ந்த அனுபவங்கள் அனைத்தையும் மனதில் அசைபோட்டுக்கொண்டு,  இறுதியாக விடைபெற்றுச்சென்ற ஜீவிகாவின் பெரியப்பா சண்முகநாதனை ஒரு கணம் நினைத்துப்பார்த்தாள்.
யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பியதும் அவரிடம் காணப்பட்ட மாற்றங்களிலிருந்து,  ஏதோ புதிய ஞானம் பெற்றவராகவே அவர் அவளுக்குத் தென்பட்டார்.
விமானநிலையம் செல்லுவதற்கு முன்னர்,  வீட்டின் பின்வளவுக்கு அழைத்து அவர் தன்னுடன் பேசிய பாங்கு, மேலும் அவர் சில நாட்களுக்கு இங்கே நின்றிருக்கலாமே எனத் தோன்றச்செய்தது.
 “ அபிதா… இம்முறை பயணத்தில்  யாழ்ப்பாணத்தில்  நின்றவேளை  நான் கண்ட தேர்தல் கூத்துக்களைப்பார்த்தபோது, உன்னையும் உன்னைப்போன்று கணவன்மாரையும் மகன், மகள்மாரையும் தேடிக்கொண்டிருக்கும் தாய்மார்தான் அடிக்கடி நினவுக்கு வந்தார்கள்.
எமது தமிழ்இனம் சபிக்கப்பட்ட சமூகமோ என்றும் எண்ணத்தோன்றியது.  இந்த நாட்டுப்பிரச்சினையை காரணம் காண்பித்து நாமெல்லாம்  வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிவிட்டோம்.  ஓடமுடியாதவர்கள் கிடைத்ததை வைத்து காலத்தை ஓட்டுகிறார்கள்.
வெளிநாடு சென்ற உறவினர்களின் வெளிநாட்டு வீடுகளின்  காணிகளில் ஏதோ காசுமரம் முளைத்திருக்கிறது என்ற எண்ணத்தில்தான் அங்கே பலரும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.  அவர்கள்தான் அப்படியென்றால், இம்முறை தேர்தலுக்கு நிற்கும் எமது தமிழ் அரசியல்வாதிகளும் வெளிநாட்டு உறவுகளின் நிதியாதரவுடன்  பத்திரிகைகளில் முழுப்பக்கம், அரைப்பக்கம், கால் பக்கம் விளம்பரங்கள் வெளியிட்டு வாக்கு வேட்டையில் ஈடுபடுகிறார்கள்.
நாடாளுமன்றத்திற்கு செல்லவேண்டிய பிரதிநிதிகளின் எண்ணிக்கையுடன், தேர்தலில் நிற்பவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப்பார்த்தால் சிரிப்புத்தான் வந்தது.  தோற்போம் எனத் தெரிந்துகொண்டே கட்டுப்பணம் செலுத்தி, இலட்சக்கணக்கில் செலவிட்டு விளம்பரம் செய்கிறார்கள்.

புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம் - அங்கம் 06 ( மதுரை உலகத் தமிழ்ச்சங்கமும் அவுஸ்திரேலியத் தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து நடத்திய காணொளி ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை ) அவுஸ்திரேலியாவில் கவிதை இலக்கியம் முருகபூபதி


" கவிதையாக்கங்குறித்து முரண்பட்ட இரண்டு எண்ணங்கள்


எம்மிடையே நிலவுகின்றன. இயல்பாகச் சிலருக்கு அமைந்த ஒருவகைப் படைப்பாற்றலின் வெளிப்பாடே கவிதை என்பர் ஒரு சாரார். இலக்கண இலக்கியங்களை கற்றுத்தேர்ந்தவர்கள், பயிற்சியினாற் பாடுவது கவிதை என்பர் மற்றொரு சாரார். இவ்விரு கூற்றுக்களிலே ஒன்றே உண்மை என்று நாம் ஏற்கவேண்டியதில்லை. அதுமட்டுமன்று, ஒன்றை மாத்திரம் பிரதானப்படுத்துவது, உண்மையைத்தேடும் முயற்சிக்கு வீணே வரம்புகட்டுவதுமாகும்."  இவ்வாறு நான்கு தசாப்தங்களுக்கு முன்பே, பேராசிரியர் க. கைலாசபதியும் கவிஞர் இ.முருகையனும் இணைந்து எழுதியிருக்கும் கவிதை நயம் என்னும் நூலின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கவிதைக்கு மிகவும் முக்கியம் எளிமை. அந்த எளிமை திரைப்படப்பாடல்களில் மலினப்பட்டது வேறு விடயம். தமிழ்நாட்டில், பாரதியைத்தொடர்ந்து பாரதிதாசனும் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், கம்பதாசனும், கண்ணதாசனும்  வாலியும்  கவிதைக்கு மற்றும் ஒரு பரிமாணம் வழங்கியமை போன்று, இலங்கையில்  ஈழத்து பூதன் தேவனார் முதல் கவிஞர்கள் மஹாகவி உருத்திரமூர்த்தி, இ.முருகையன், நுஃமான், நீலாவணன், மு. பொன்னம்பலம், மு.தளையசிங்கம்,  அம்பி, நாகராஜன், அ.ந. கந்தசாமி, சில்லையூர் செல்வராசன், கே. கணேஷ், சி.வி. வேலுப்பிள்ளை  உட்பட மேலும் பல மூத்த கவிஞர்கள் கவிதைத்துறையை வீச்சுடன் முன்னெடுத்தனர்.
இவர்களில் மஹாகவி உருத்திரமூர்த்தி " குறும்பா" என்ற வடிவத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.
பின்னாளில்,  இலங்கையில் மருதூர்க்கனி,   சோ. பத்மநாதன்,  சேரன், வ.ஐ. ச. ஜெயபாலன், ஊர்வசி, அனார், ஜவாத்மரைக்கார், ஜின்னா ஷரிப்புத்தீன் ,  அன்புடீன்,  முத்துமீரான், மொழிவரதன்,  மேமன்கவி, சித்தாந்தன், கருணாகரன், காவ்யன் விக்னேஸ்வரன், முதலான எண்ணிறைந்த கவிஞர்கள் கவிதைத் துறைக்கு வளம் சேர்த்தனர்.  அவர்களின்  பெயர்ப்பட்டியல் நீளமானது.
இலங்கையில் 32 நாடுகளைச்சேர்ந்த ஆயிரம் கவிஞர்களின் கவிதைகளும் தொகுக்கப்பட்டு வௌியாகியிருக்கிறது.
இலங்கையிலும்   தமிழ்நாட்டிலும்  1970-1980  காலப்பகுதியில் புதுக்கவிதை எழுச்சிமிக்க   இலக்கியமாக     பேசப்பட்டது.  தமிழ்நாட்டில்    வானம்பாடி    கவிஞர்களாக     வீச்சுடன்   எழுதவந்த                   வைரமுத்து,     மேத்தா, அப்துல்ரஹ்மான்,    அக்கினிபுத்திரன்,  மீரா,    சிற்பி, தமிழ்நாடன்,   தமிழவன், தமிழன்பன்,  கோவை  ஞானி,                    வைதீஸ்வரன்,பரிணாமன், புவியரசு,   இன்குலாப், கங்கைகொண்டான், உட்பட     பலரின்  புதுக்கவிதைகளின் தாக்கம் இலங்கையிலும் நீடித்தது.

அதேவேளை சிதம்பர ரகுநாதன்,  கலைமகள்  கி.வா. ஜகந்நாதன் முதலானோர் புதுக்கவிதையை      ஏற்காமல் எதிர்வினையாற்றினார்கள்.     வானம்பாடிகள்     இதழ்     சில       வருடங்கள் அழகான    வடிவமைப்புடன்    வெளிவந்தது. இலங்கையில்    1970 இற்குப்பின்னர் ஏராளமான  இளம்தலைமுறை    படைப்பாளிகள்     முதலில்         புதுக்கவிதை கவிஞர்களாகவே    அறிமுகமானார்கள்.
ஆங்கிலத்தில் New Poetry - Modern Poetry என அழைக்கப்பட்ட வடிவம் தமிழுக்கும் அறிமுகமானது. அத்துடன் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளும் தமிழ்க்கவிஞர்களுக்கு நெருக்கமாகின. சீர், தளை, அடி, தொடை முதலான வரையறைகளை கொண்டிராமல் புதுக்கவிதை நவீனத்துவம் பேசியது.

மஹாகவி உருத்திரமூர்த்தி புதியதொருவீடு, கோடை முதலான கவிதை நாடகங்களை எழுதியிருப்பவர். தற்போது அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் கவிஞர் அம்பியும், வேதாளம் சொன்ன கதை, யாழ்ப்பாடி, அன்னம் விடு தூது முதலான கவிதை நாடகங்களை வரவாக்கியிருப்பவர்.  கவிஞர்கள் கவியரங்குகளிலும் பங்குபற்றுவதனால், கவியரங்கப்பாடல்கள் தொகுதிகளும் வாசகர் பார்வைக்கு கிட்டியிருக்கின்றன. இலங்கையில் சில்லையூர் செல்வராசன் ஊரடங்குப்பாடல்கள் என்ற வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.

எங்கள் ராணி தங்கராஜாவுக்கு நேற்று 92 வயது ! ஆசுவி கல்லடி வேலனின் பேத்தி !! ஒரு சிறைக்கைதியின் கதையை எழுதிய எழுத்தாளர் !!! முருகபூபதி




சந்தர்ப்பவசமாக சிறைக்குச்சென்று  அங்கிருந்தும்  எழுதிய   எழுத்தாளர்களைப்பற்றியும் ,  சிறைச்சாலை வாழ்க்கை பற்றி நாவல் எழுதியவர்களைப்பற்றியும்   அறிந்திருப்பீர்கள்.
ஜெயகாந்தனின் காவல் தெய்வம், சி. ஏ. பாலனின் தூக்குமரநிழலில் முதலான நாவல்கள், கவிஞர் கண்ணதாசனின் மாங்கனி காவியம், சுப. வீரபாண்டியனின் அது ஒரு பொடா காலம் ,  பண்டிதர் ஜவஹர்லால் நேரு தமது மகள் இந்திராவுக்கு சிறையிலிருந்து  எழுதிய கடிதங்களின் தொகுப்பு உலகசரித்திரம்,  நெல்சன் மண்டேலா எழுதிய Long Walk to Freedom , இலங்கையில் புஸ்பராணி எழுதிய அகாலம், அஜித்போயாகொட புலிகளின் சிறையிலிருந்த அனுபவங்களை எழுதிய நீண்டகாத்திருப்பு உட்பட பல நூல்கள் சிறைபற்றி பேசியிருக்கிறது.
இந்தப்பதிவில்,  ஒரு சிறைக்கைதியின்  சரிதையையே கதையாக எழுதிய ஒரு பெண்மணி பற்றித்தான் உங்களுக்கு சொல்லப்போகின்றேன்.
அவர்தான் திருமதி புஸ்பராணி தங்கராஜா.  அவரை ராணி தங்கராஜா என்றுதான் அழைப்போம். நேற்று ஜூலை 28 ஆம் திகதி அவருக்கு 92 வயது.
அவர் தற்போது மெல்பனில் Burwood என்னுமிடத்தில் ஒரு முதியோர் காப்பகத்திலிருந்தவாறு கடந்த காலங்களை நனவிடைதோய்ந்து  பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இயங்கிவருகிறார்.
ஈழத்தின் மூத்த அறிஞரும் உடனுக்குடன் கவிபுனையும் ஆற்றல்  மிக்கவரும் யாழ்ப்பாண வைபவ  கௌமுதி ( History Of Jaffna ) எழுதியவருமான ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேத்தியுமான புஸ்பராணி அவர்கள் 1928 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் திகதி, வடபுலத்தில் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில், வயாவிளான் கிராமத்தில் பிறந்தவர்.
அமெரிக்க மிஷன் பாடசாலை, கல்லடி வேலுப்பிள்ளை வித்தியாசாலை, உரும்பராய் சந்திரோதயா வித்தியாலயம் ஆகியவற்றில் கற்று,  மேற்கல்வியை மருதனாமடம் இராமநாதன் மகளிர் கல்லூரியிலும் பெற்றவர்.  பின்னர் ஆசிரியையாகவும் பணியாற்றியவர்.