மரணஅறிவித்தல்

.                   
                                                                      ஸ்ரீமதி சற்குணம் துரைராஜசிங்கம் 

தோற்றம்- 06.02.2030 -    மறைவு  12.08.2019


யாழ்ப்பாணம் மானிப்பாயை பிறப்பிடமாகவும் சிட்னி அவுஸ்ரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி சற்குணம் துரைராஜசிங்கம் அவர்கள் 12.08.2019 திங்கட்கிழமை அன்று சிட்னி அவுஸ்ரேலியாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்ற ராசம்மா , மூத்ததம்பி ஆகியோரின் அன்பு புதல்வியும் , காலம் சென்ற ராசம்மா , துரையப்பா அவர்களின்  அன்பு மருமகளும் , காலம் சென்ற துரைராஜசிங்கம் துரையப்பா அவர்களின் அருமை மனைவியும் , குணராஜசிங்கம் - யாழ்ப்பாணம், சறோஜினி- சிட்னி , குமாரகுலசிங்கம் -சிட்னி,  றஞ்ஜினி -கன்பரா , சிற்றாஜினி- சிட்னி ஆகியோரின் பாசமிகு தாயாரும் , மகேந்திரன் , ஜெகதீஸ்வரி , சுபாஷினி , மோகன் , காலம் சென்ற ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ,
ஷாலினி- ரமேஷ் , ரஞ்சிவ்- நீரா , வேர்ணி -சோபன் ,  லக்ஷாஜினி  ராஜ்பிரகாஷ் , சிந்து , றிச்சி ரங்கன்- அனுஷா , நித்ய லக்ஷ்மி -  மௌனீற், ஆனந்த் ஆகியோரின் அருமைப் பேத்தியும் , ADYA, MONISHA  , AARENI, AHILA, MAYA ஆகியோரின் அருமைப் பூட்டியுமாவார் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 

அன்னாரின் பூதவுடல் 17.08.2019 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு பார்வைக்காக PINE GROVE CRIMATORIUM , WEST CHAPEL, KINGTON St, MINCHINBURY யில் வைக்கப்பட்டு 

தகனகிரிகைகள் மாலை 1.30 மணிக்கு PINE GROVE CRIMATORIUM , WEST CHAPEL, KINGTON St, MINCHINBURY யில் இடம்பெறும், 

தகவல் : றஞ்ஜினி மோகன் கன்பரா
தொடர்புகளுக்கு ; மகேந்திரன் ஆறுமுகம் 0422 345 008
                                              மோகன் கந்தசாமி 0416 249 545

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா கொடியேற்றம்..!


07/08/2019 யாழ் – நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவையொட்டி, கொடியேற்ற நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை(6.08.2019) வெகுவிமரிசையாக இடம்பெற்றுள்ளது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

ஆருயிர்த்தோழி தோழி - செ,பாஸ்கரன்

.

Image result for small girl walking
உன் வருகை கண்டு
காற்றும் விலகி வளிவிட்டது
உன் பெயர் கேட்டு
வசந்தம் மாறி மறைந்து கொண்டது
உன் வண்ண முகம் பார்த்து
நிலவுகூட கருமேகத்தைப் போர்த்திக்கொண்டது
எனக்கு மட்டும் எதிர் பார்ப்பு
உன் முகம் காணும் ஆவல்
வசந்தத்தின் வருகையை வரவேற்கிறேன்
வண்ண மலர் தூவியல்ல
உனைக் காணும் விழி மலர் திறந்துவைத்து
வீசும் காற்று விலகிக் கொள்ள
உன் சுவாசக் காற்று விரிகிறது
கூவும் குயில் கூட உனக்காய்
ஒருகணம் குரல் நிறுத்தி பார்த்திருக்கும்
அழகுத் தேவதையின் அசைவுகண்டு
மரத்தின் இலையசைவு நின்றிருக்கும்
தத்தி நடை போட்டு தாவிவரும் சின்னவளே
பிஞ்சுக் கரம் பற்ரி கொஞ்சம் நடக்கவைத்து
பார்த்து ரசிக்கின்றேன்
கண்மூடி தூங்கையிலே மூடாத விழியோடு
பார்த்திருந்த ஞாபகங்கள் நெஞ்சினிலே
தத்தி நடக்கையிலே தடுக்கி விளுவதுபோல்
ஏங்கி விடுகின்றேன்
காலச் சக்கரத்தின் நகர்வுகள்
எனக்கு மட்டுமல்ல உனக்கும்தான்
நீ இன்று சின்னவளல்ல
விளங்காத புதிருக்கு
விடை சொல்லும் என் மந்திரி
தோளின் மேல் வளர்ந்துவிட்ட
என் தோழி நீ .   

சிக்கெனப் பிடிப்போம் வாரீர் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


      கந்தனை நினைத்தால் நெஞ்சில் 
             கவலைகள் பறந்தே போகும்
image2.JPG     வந்திடும் வினைகள் யாவும் 
            வழியிலே மறைந்தே போகும் 
      அந்தமில் இன்பம் வந்து 
             ஆனந்தம் தந்தே நிற்கும் 
      கந்தவேள் பாதம் தன்னை
            கட்டியே அணைத்து நிற்போம் !

        சூரர்கள்  போல  எம்மை 
              சூழ்ந்திடும் பகைமை எல்லாம்
        வேலவன் பெயரைக் கேட்டால்
                விரைவிலே ஒழிந்து போகும் 
        வாழ்விலே வசந்தம் வீச
              வள்ளியின் மணாளன் தன்னை 
        நாளெலாம் தொழுது நிற்போம் 
               நம்வாழ்வு உய்யும் அன்றோ  ! 

         சேவலாய் மயிலும்  ஆக்கி
              சிந்தையை திருத்த வைத்த 
        வேலவன் முகத்தைக் கண்டால்
               விரைவிலே திருத்தம் காண்போம் 
        காலனும்  நாட  மாட்டான் 
               கடுநோயும் அணுக  மாட்டா 
        சீலமாம் கந்தன் பாதம் 
            சிக்கெனப் பிடிப்போம் வாரீர்  ! 




                 






நாகேஷ் - ருத்ரா

.

( நமக்கு எப்போதெல்லாம் சிரிக்கவேண்டும்
என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம்
நகைச்சுவை மன்னன் நாகேஷ் அவர்களை
மனப்படத்தில் மீள்பதிவு செய்துகொண்டு
சிரித்துக்கொண்டே இருக்கலாம். என் கவிதை
சிரித்துக்கொண்டே நினைவு கூர்வதற்காக இங்கு
பதிவிடப்படுகிறது)


நாகேஷ் 
_________________________________________________


"நீங்களும் ஒரு கோடி வெல்லலாம்"
என்ற நிகழ்ச்சிக்கு
மடி நிறைய ஒரு கோடியை
கனமான கனவாக்கி
சுமந்து சென்று அதில்
ஒரு ரூபாய் கூட வெல்லாத‌
"தருமி"யின் புலம்பல்
எப்படியிருக்கும்?
இன்றும் தமிழ் நாட்டு தியேட்டர்களில்
எல்லாம் எதிரொலிக்கிறது.
சிம்ம கர்ஜனையின் எதிரே
இந்த நகைச்சுவைப் பூனையின்
கணீர் கணீர் களில்
மியாவ் களை கேட்கவில்லை.
ஒரு டைகர் நாகேஷ்
அந்த மண்டபத்துத் தூண்கள்
கிடுகிடுக்க நம்மை சிரிக்கவைத்தார்.
"கேள்வியை நீ கேட்கக்கூடாது
நான் தான் கேட்பேன்"
என்ற வசனத்தில்
அந்த வெல வெலப்பு.
ஒரு பொய் மிடுக்கு
சிவ பெருமானையே
கடுப்பேற்றிப் பார்க்கும்
ஒரு துறு துறுப்பு...
இந்த நடிப்பெல்லாம்
சொல்லிக்கொடுக்க‌
கேம்பிரிட்ஜ் ஆக்ஸ்ஃபோர்டு
பல்கலைக்கழகங்கள் எல்லாம் பற்றாது.

நல்லூர் ஆலய கொடியேற்றத்திற்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு


05/08/2019 நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்ற நிகழ்வுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. 
நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த பெருந்திருவிழா நாளை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழா நடைபெறவுள்ளது. 
கொடியேற்ற நிகழ்வுக்காக கொடிசீலை கையளிக்கும் நிகழ்வை முன்னிட்டு சட்டநாதர் கோவிலை அண்மித்துள்ள வேல் மடம் முருகன் கோவிலில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, அங்கிருந்து சிறு தேரில் கொடிச்சீலை  நல்லூர் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது. 

யாழ்.நல்லூர்க் கந்தசுவாமிக் கோவில் திருவிழாவும் இலங்கைப் பொருளாதாரமும்


05/08/2019 உலகில் ஒவ்வொரு நாடும் தனது பொருளாதார மற்றும்நாட்டு மக்களின் நன்மைகளினை கருத்திற்கொண்டு பல்வேறு செயற்பாடுகளினை தொடர்தேர்ச்சியாக செய்துவருவதனை நாம் பார்த்து வருகின்றோம்.
உதாரணமாக, உலகக் கிண்ண கிரிக்கெட், உலகக் கிண்ண கால்பந்தாட்டம் மற்றும் ஒலிம்பிக் போன்ற பெரிய அளவிலான நிகழ்வினை ஒவ்வொரு நாடும் தனது நாட்டினில் நடத்துவதற்கு போட்டி போட்டுக்கொன்று முன்வருவதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அதற்கு மிகமுக்கியக்காரணமாக இருப்பது அவ்வாறு நடாத்தும் எந்தவொரு நாட்டிக்கும் ஏற்படும் நேரடியான மற்றும் மறைமுகமான பல்வேறு பொருளாதார நன்மைகள் சொல்லிலடங்கா. 
அதேபோல ஒரு சந்தர்ப்பத்தினை ஒவ்வொரு வருடமும் எமது சிறிய மற்றும் அழகிய இலங்கை நாட்டிற்கும் மக்களுக்கும் கடவுளாகவே அருள்பாலித்து கொடுத்திருக்கும் ஓர்சிறந்த வாய்ப்பே நல்லூர்கந்தசுவாமி கோவில் திருவிழா ஆகும். இதுவே முதலிடத்தினை பெறுகின்றது.
நாம் ஒவ்வொருவரும் கடந்த பல தசாப்தங்களாக ஏதோ ஒருவகையில் பல்வேறுபட்ட துன்பங்களினை அனுபவித்துவந்தே உள்ளோம். அப்படிப்பட்ட எங்களெல்லோரையும் தட்டிகொடுப்பதற்காகவே இந்த நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா அமைகின்றது. இப்படிப்பட்ட ஒரு மிகச்சிறந்த அருமையான சந்தர்ப்பத்தினை நாம் ஒவ்வொருவரும் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதன்வாயிலாக பல்வேறுபட்ட நன்மைகளினை நாம் நிச்சயமாகபெற்றுக்கொள்ளமுடியும்.
நல்லூர் கந்தனுக்கு திருவிழா நடைபெறும்போது நாம் இவ்வாறு அதனை ஒரு சிறந்த திருவிழாவாக எமக்கு அமைத்துக் கொள்ளமுடியும் என்பதனை இப்போது பார்ப்போம்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரது வகிபாகமும்


10/08/2019 தேசிய அர­சி­யலில் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக, சிறு­பான்மை தேசிய இன மக்­க­ளா­கிய தமிழ் மக்கள் திகழ்­கின்­றார்கள். நெருக்­க­டி­யான அர­சியல் சூழல்­களில் இது நிரூ­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. தேர்­தல்­க­ளிலும் பல சந்­தர்ப்­பங்­களில் அர­சாங்­கத்தை அல்­லது ஜனா­தி­ப­தியைத் தீர்­மா­னிக்­கின்ற சக்­தி­யாக தமிழ் மக்கள் திகழ்ந்­தி­ருக்­கின்­றார்கள். இந்த தீர்­மா­னிக்கும் சக்­தியில் முஸ்லிம் மக்­க­ளுக்கும் பெரும் பங்­குண்டு என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. 
பேரின அர­சி­யல்­வா­தி­களும், அர­சியல் கட்­சி­களும் தமது அர­சியல் பலத்­துக்­கா­கவும், அதி­கார பலத்­துக்­கா­கவும் சிறு­பான்மை இன மக்­க­ளா­கிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களில் தங்­கி­யி­ருக்க வேண்டியிருப்­பதை, ஒரு கசப்­பான அம்­ச­மா­கவே கரு­து­கின்­றார்கள். 
சிறு­பான்மை இன மக்­களின் ஆத­ரவில் தங்­கி­யி­ருக்க வேண்­டிய அர­சியல் நிலைமை காணப்­பட்ட போதிலும், அந்த மக்­களின் சமூக, பொரு­ளா­தார, அர­சியல் மற்றும் இன ரீதி­யான உரி­மைகள் சார்ந்த நன்­மை­களில் பேரின அர­சி­யல்­வா­தி­களும், பேரின அர­சியல் கட்­சி­களும் உரிய அக்­கறை செலுத்­து­வ­தில்லை. 

மழைக்காற்று ( தொடர்கதை) முருகபூபதி





அபிதா,  நிகும்பலையில் இறங்கும்போது அதிகாலையாகிவிட்டது. அந்த தனியார் துறை பஸ் உரியநேரத்திற்கு முன்பே வந்து, அவளை இறக்கிவிட்டு கடந்து சென்றது. அதன் சாரதியின் வேகம் அடிக்கடி நடக்கும் வீதி விபத்துக்களையும் நினைவூட்டியமையால் பதற்றத்துடனேயே பயணித்தாள். அந்தப்பதற்றம் இதர பயணிகளின் முகங்களிலும் படிந்திருந்தது.
கைத்தொலைபேசியில் நேரத்தைப்பார்த்தாள். காலை ஐந்து மணி கடந்துவிட்டிருந்தது.  குளிர்காற்று இதமாக வருடிச்சென்றது. பஸ்ஸின் நடத்துனரிடம் , தன்னை நிகும்பலையில்,  மாரிஸ்டலா கல்லூரிக்கு சமீபமாக இறக்கிவிடும்படி சொல்லியிருந்தாள்.
அந்த நடத்துனர் தமிழராக இருந்தமையால் அவளுக்கு சற்று நிம்மதி. சாரதி, வவுனியாவரையில் தமிழ் சினிமாப்பாடல்களையே ஓடவிட்டிருக்கவேண்டும். மதவாச்சி நெருங்கியதும் சிங்களப்பாடல்கள் சிறிது தூரம் ஒலித்தன. பின்னர் பயணிகளின் உறக்கம் கருதி அதனை அணைத்துவிட்டிருந்தான்.
அபிதாவுக்கு  உறக்கம் வரவில்லை. கண்ணை மூடிக்கொண்டு வந்தாலும், அடிக்கடி விழித்துப்பார்த்தாள்.
வவுனியாவில் முதல் நாள் இரவு அந்த பஸ்ஸில் ஏறியதுமுதல் அவள் கண்களை உறக்கம் தழுவவில்லை. புதிய ஊருக்குப்போகின்றோமென்ற பதற்றத்துடன் அடிக்கடி நேரத்தைத்தான் பார்த்தாள். சிறிய ட்ரவலிங் பேக்கை மடியிலேயே வைத்திருந்தாள்.
அதற்குள் இரண்டு சேலைகள், அதற்குபொருத்தமான ரவிக்கைகள், உள்ளாடைகள், ஒரு துவாய், ஒரு சோப் கேஸ், அதனுள் லக்ஸ்சோப். பத்திரப்படுத்திவைத்திருந்த பாடசாலை சான்றிதழ்கள். கணவன் பார்த்திபன், குழந்தை தமிழ்மலருடன் எடுத்துக்கொண்ட எஞ்சியிருக்கும் ஒரே ஒரு குடும்பப்படம்.
கைப்பேர்சில் இருந்த , நிகும்பலையில் தான் செல்லவேண்டிய வீட்டு முகவரியையும் அதிலிருக்கும் கைத்தொலைபேசி இலக்கங்களையும் அந்த இரவுநேரப்பயணத்தில் பல தடவை மீண்டும் மீண்டும் பார்த்து மனதிலிருத்திக்கொண்டாள்.
அது தவறிவிடும் என்ற தயக்கத்தில் முன்னெச்சரிக்கையாக குடும்ப படத்தின் பின்புறமும் எழுதிவைத்திருந்தாள்.
அவளிடம் இருப்பது அந்த உடைமைகள் மாத்திரமே. காதுகளில் சிறிய கம்மல். கழுத்திலோ கையிலோ ஏதுமில்லை.
வீட்டு வேலைகளுக்கும் சமையல் பணிகளுக்கும் பெண் தேவை என்ற பத்திரிகை விளம்பரத்தை பார்த்துவிட்டே இந்த நெடும்பயணத்தை அவள் தொடர்ந்திருந்தாள்.
வேலைக்குச்செல்லும் பெண்கள் வதியும் இல்லத்தில், வீட்டுப்பணிகளுக்கும் சமையலுக்கும்  குடும்பப்பொறுப்புகள் அற்ற இளம்பெண் தேவை. சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும்.
அதனைப்படித்தவுடன் அபிதாவுக்கு சிரிப்பும் வந்தது.

கந்தபுராண கலாசாரத்தை கருத்தில் இருத்துவோம் - மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... முன்னாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர் மெல்பேண் .... அவுஸ்திரேலியா



இந்தியாவில் வேதங்கள் தோன்றின. திருமுறைகள் தோன்றின. இலக்கியம் இலக்கணம்பலவித கலாசாரம்பண்பாடு என்று சொல்லிப் பெருமைப் பட்டுக்கொண்டே  போகலாம். இராமாயணம்மகாபாரதம்கந்தபுராணம்பெரியபுராணம்திருவிளையாடற்புராணம்,இவையாவுமே இந்தியாவின் சொத்துக்கள்தான். பகவத்கீதை போற்றப்படும் நிலையில்  இருப்பதும் உண்மைதான்.
   ஆனால் இந்த வகையில் எந்தவொரு பெருமைக்கு உரியதாக விளங்கா விடினும் " கந்தபுராண கலாசாரம் " என்பதை உருவாக்கி அதன் வழியில் வாழ்க்கை முறையினை அமைத்த பெருமையினை ஈழத்தில் யாழ்ப்பாணத்துக்கு மட்டுமே உரித்தாகி இருக்கிறது என்பதை கருத்தில் வைப்பது மிகவும் முக்கியமாகும். 
   இந்தியாவில் தோன்றியதுதான் கந்தபுராணம். ஆனால் அதன் பெயரால் ஒரு கலாசாரம் யாழ்மண்ணில் உருப்பெற்றது என்பது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா புராணத்தின் பெயரால் கலாசாரம் உருவாக முடியுமா அதுவும் கந்தபுராணம் என்னும் சமய நூலின் பெயரால் என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா! 
    " புன்னெறி யதனிற் செல்லும் போக்கினை விலக்கி நன்னெறி காட்டும் " பாங்கினை கந்தபுராணம் கொண்டு விளங்கியது. யாழ்மண்ணில் தோவில்கள் தோறும் கந்தபுராணம் படிப்பதும் அதற்கு பயன் ( விளக்கம் ) சொல்லுவதும் இடம்பெற்று வந்தது. யாழ்மண்ணில் கலியின் சதியாலும் காலத்தின் கோலத் தாலும் கந்தபுராணம் படித்த சைவச்சூழல் குழம்பும் நிலை ஏற்பட்டது. அவ்வேளை ஆண்டவனது அனுக்கிரகத்தால் நல்லூரில் ஒரு குழந்தை பிறந்தது. " வேதநெறி தளைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க " சீர்காழியில் ஒரு குழந்தை பிறந்தது போலவே யாழ்மண்ணிலும் அக் குழந்தை பிறந்தது. 
   அதன் உணர்வில் சைவமும் சைவசித்தாந்தமும் இயற்கையிலே ஊறியே நின்றது. வளர்ந்த அக்குழந்தை இளைஞனாக தமிழ்நாடு சென்று ஆதீனத்தில் பிரசங்கம் செய்து " நாவலர் " என்னும் விருதுடன் யாழ்வந்தது. நாவலர் விருது பெற்ற அந்த இளைஞன் " நல்லைநகர்தந்த ஆறுமுகநாவலர் " என்று போற்று தலுக்கு உரியவராகிறார்.
     இவரால் சைவசமயம் வளர்ந்தது. தமிழ் வளர்ந்தது. ஒழுக்கும் உணர்த்தப் பட்டது. இலக்கியம் இதயங்களில் அமர்த்தப்பட்டது. இவரின் வருகையால் யாழ்ப்பாணத்தின் கலாசாரமே எழுச்சிபெற்றது. இந்தக் கலாசாரத்தை இவரின் வழியில்வந்த பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் 
  " கந்தபுராண கலாசாரம் " என்று மகிடம் இட்டுப் பெருமைப்படுத்தினார்.
இதனால் யாழ்ப்பாணக் கலாசாரம் இந்திய கலாசாரத்திலிருந்தும் தமிழ்நாட்டுக் கலாசாரத்திலிருந்தும் வேறான தனித்துவமான கலாசாரத்தில் மிளிர்ந்தது மிளிர்கிறது எனலாம். கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் கந்தப் பெருமான். அவரே எங்கள் சொந்தப் பெருமான் என்று எண்ணும் அளவுக்கு யாழ்மண்ணும் அங்குவாழும் மக்களும் ஆகிவிட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். 
   

இலங்கைச் செய்திகள்


முன்னாள் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

நல்லூர் ஆலய சுற்றாடல் முழு இராணுவ, பொலிஸ் பாதுகாப்பில் !

நல்லூர் வளாகத்திற்குள் இராணுவத்தை சப்பாத்து, துப்பாக்கிகளுடன் அனுமதிக்க முடியாது - ஸ்ரீதரன் 

ஜனாதிபதி தலைமையில்.இலங்கை கம்போடியா வர்த்தக மாநாடு

சுஷ்மா சுவராஜின் மறைவிற்கு ஜனாதிபதி , பிரதமர் அனுதாபம்


சர்வதேச இணக்கத் தீர்வுக்கான ஐ.நா. சாசனத்தில் இலங்கை கைச்சாத்து

மாணவர்களின் ஆங்கில மொழி விருத்திக்காக அமெரிக்க தன்னார்வ ஆசிரிய சேவை

அறநெறி பாடசாலையை திறந்து வைத்த சஜித்

வடக்கு ஆளுநரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழு

6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி -  விக்கி அழைப்பு !

 கோத்தபாயவே ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்- அறிவித்தார் மகிந்த



முன்னாள் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு


05/08/2019 வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சீ.வீ.விக்னேஷ்வரனுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
சி.வி. விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் வட மாகாண அமைச்சர் பதவியில் இருந்து டெனீஸ்வரனை நீக்கியமை தவறானது எனவும் டெனீஷ்வரனின் வழக்கு செலவினங்களை விக்னேஷ்வரனே வழங்க வேண்டும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.   நன்றி வீரகேசரி 

உலகச் செய்திகள்


இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது - மோடி இரங்கல்

இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ள காஸ்மீர்

காஸ்மீர் விவகாரத்தில் எந்தளவிற்கும் செல்ல தயார்- பாக்கிஸ்தானின் இராணுவ தளபதி

இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை குறைத்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் வைத்தியர்களை வெளியேற சவூதி அரேபியா உத்தரவு

 நான் ஜம்மு - காஷ்மீர் மக்களுடன் இருக்கின்றேன் - மோடி அதிரடி உரை

நியூ­ஸி­லாந்து பள்ளிவா­சல் மீதான தாக்­கு­தல்­களால் பாதிக்­கப்­பட்ட 200 பேருக்கு ஹஜ் யாத்­திரை வாய்ப்பு

 ஹொங்கொங் விமானநிலையத்திற்குள் நுழைந்தனர் ஜனநாயக ஆர்ப்பாட்டக்காரர்கள்



இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது - மோடி இரங்கல்

07/08/2019 இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.
உடல் நலக்குறைவு காரணமாக சுஷ்மா சுவராஜ் 2019 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. 
அவர் இறுதியாக நேற்றுப் பகிர்ந்திருந்த டுவிட்டர் பதிவில், "நன்றி பிரதமர். மிகவும் நன்றி. என் வாழ்நாளில் இந்த நாளுக்காகதான் காத்திருந்தேன்" என்று காஷ்மீர் விவகாரம் தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தார். 
1952ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது. சட்டத்தரணியான சுஷ்மா சுவராஜ் பா.ஜ.கவின் டில்லி முதல்வராக 1998ஆம் ஆண்டு சிறிது காலம் பதவி வகித்து இருக்கின்றார். 

எமது அறப்பணிக்கு ஆதரவு நல்குவீர் !



பொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்தரதாஸ் பகுதி 6


சாந்திநிலையம்

இந்திய மொழிகளில் பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்தவர் ஜெமினிஸ்டு டியோஸ் அதிபர் எஸ் எஸ் வாசன். அவர் தனது மருமகன் ஜி எஸ் மணியை தயாரிப்பாளராக்கியும் டைரக்டராக்கியும் பார்க்க ஆசைப்பட்டார். அதன் விளைவு ஜெம் மூவீஸ் என்ற படநிறுவனம் உருவானது. அந்த நிறுவனம் தயாரித்த வண்ணப்படம்தான் சாந்திநிலையம். 

ஆங்கிலத்தில் வெளிவந்த மாபெரும் வெற்றி கண்ட சவுண்ட் ஒப் மியூசிக் படத்தின் கதையை அடிப்படையாக கொண்டு சாந்திநிலையம் படத்தின் கதை உருவாக்கப்பட்டது.

பிரபல கதை வசனகர்த்தா கோபு இந்தப் படத்திற்கு கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் மணியினால் அமர்த்தப்பட்டார். படத்தின் கதையை வாசனிடம் சொல்வதற்கு கோபுவை மணி  வாசனிடம் அழைத்துச் சென்றார்.

திரையுலக மேதை வாசன் முன்னிலையில் சென்று நடுக்கத்துடன் அமர்ந்தேன். அவருடன் அவரின் மனைவி, மகள், மருமகன் மணி எல்லாரும் அமர்ந்திருந்தார்கள். எடுத்த எடுப்பிலேயே கதையை சொல்லுங்கள் என்று வாசன் உத்தரவிட்டார். அச்சத்துடன் ஒருவழியாக கதையை காட்சி வாரியாக சொல்லி முடித்தேன். அதன் பிறகு வாசன் என்னிடம் கேட்டாரே ஒரு கேள்வி. நான் சாதாரண பாமர ரசிகன். இந்த கதை உயர்தரமாக இருக்கிறது. சாதாரண ரசிகனைன எனக்கு என்ன இருக்கிறது? என்று ஒரு கேள்வியை முன்வைத்தார்.

ஸ்ரீ காயத்ரி குழு சிட்னி - Gayatri Mahayagna 17/08/2019













இனிய இலக்கிய சந்திப்பு 18/08/2019










தமிழ் சினமா - நேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்


மாஸ் கமர்ஷியல் வெற்றி கொடுத்து சென்றுவிடலாம் என்று நினைக்காமல் ஒரு இடத்திற்கு வந்துவிட்டோம் என அஜித் சமூக அக்கறையோடு படம் நடிக்கிறார். அப்படி முக்கிய பிரச்சனையை பேசும் படமாக அவர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. படம் எப்படி வந்துள்ளது பார்ப்போம்.

கதைக்களம்

ஷ்ரத்தா, அபிராமி, ஆண்ட்ரியா சுதந்திரமாக தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அப்படி ஒரு நாள் நண்பர்களுடன் ரூமில் இருக்கும் போது ஒரு ஆண் நண்பர் எல்லை மீறுகிறார் ஷ்ரத்தாவிடம்.
அப்போது ஷ்ரத்தா அவரை பாட்டில் வைத்து அடித்துவிட்டு அங்கிருந்து வெளியே வருகின்றனர். அடிபட்டவர்கள் மிகவும் பெரிய இடத்து பிள்ளைகள்.
அதனால் அந்த பெண்களுக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுக்க, அந்த நிகழ்வை அஜித் துல்லியமாக கவனித்து வருகிறார்.
அப்படி கவனித்து வரும் போது ஒரு நாள் அந்த வழக்கை அஜித்தே எடுக்கும் நிலை வர, அதன் பின் அந்த பெண்களுக்கு எப்படி அஜித் நீதி வாங்கி தந்தார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

அஜித் முதலில் அவரை ஒரு பூங்கொத்து கொடுத்து பாராட்ட வேண்டும். இன்னும் ஹீரோயின்களுக்கு அட்வைஸ் செய்து பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வர ஹீரோக்கள் மத்தியில் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காகவே பாராட்ட வேண்டும்.
ஷ்ரத்தா டாப்ஸி அளவிற்கு ஈகுவலாக செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் தனக்காக யாராவது உதவி செய்வார்களா, இந்த பிரச்சனையில் இருந்து வெளிவர முடியுமா? என்று அவரின் பதட்டம் பார்க்கும் ரசிகர்களுக்கும் இருக்கிறது.
படத்தின் ரியல் ஹீரோ வினோத்தின் வசனங்கள் தான், பிங்க் படத்தில் வரும் வசனங்கள் என்றாலும் அதை தமிழுக்கு ஏற்றது போல் மாற்றி அனைவருக்கும் புரியும்படி சொன்னது சூப்பர்.
அதிலும் அஜித்திற்கு என்று ஒரு ஆக்‌ஷன், அவருக்கு என்று ஒரு காதல் கதை என்று வந்தாலும் அதை கதையுடன் கொண்டு வந்த விதம் வினோத் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர் என சொல்ல தோன்றுகின்றது.
படத்தின் இரண்டாம் பாதி முழுவதுமே கோர்ட் ரூம் ட்ராமா என்றாலும் முடிந்த அளவிற்கு அதை போர் அடிக்காமல் வினோத் கொண்டு சென்றுள்ளார். ஆனால், கண்டிப்பாக தெறிக்க விடலாமா என்று அஜித்திடம் மாஸ் எதிர்ப்பார்க்கும் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் வரலாம்.
படத்தில் பெண்களுக்கான முக்கியத்துவம் குறித்த வசனங்களால் மிக அழுத்தமாக கூறியுள்ளனர், போகிற போக்கில் நார்த் ஈஸ்ட் பெண்கள் சென்னையில் படும் கஷ்டத்தை வசனத்தில் சொன்னது பாராடத்தக்கது.
நோ மீன்ஸ் நோ என்ற ஒரு தாரக மந்திரத்தை மையமாக கொண்டு அதுகுறித்து கிளைமேக்ஸில் அஜித் கொடுக்கும் விளக்கம் கண்டிப்பாக விவாதத்தை ஏற்படுத்தும்.
யுவனின் இசையில் பாடல்கள் கவரவில்லை என்றாலும் பின்னணியில் படத்தை தாங்கி நிற்கின்றார், அதேபோல் நீரோவ்ஷா ஒளிப்பதிவு, கோர்ட் ரூமையே சுற்றினாலும் அலுப்பு தட்டவில்லை.

க்ளாப்ஸ்

அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு தன் முழு நடிப்பை காட்டியுள்ளார்.
படத்தின் அனைத்து டெக்னிக்கல் விஷயங்கள்.
ஷ்ரத்தா, அபிராமி நடிப்பு.
படத்தின் வசனங்கள்.

பல்ப்ஸ்

ரங்கராஜ் பாண்டே கதாபாத்திரம் மட்டும் கொஞ்சம் செயற்கை.
இரண்டாம் பாதி மாஸ் படங்களை விரும்புவோர்களுக்கானது இல்லை.
மொத்தத்தில் இந்த நேர்கொண்ட பார்வை, அனைவரின் கண்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பார்வை.  நன்றி  CineUlagam