மரண அறிவித்தல்



அமரர் மாணிக்கம் கங்காதரன்

மலர்வு: 08. 10. 1935        –       உதிர்வு: 29.05.2021

நீர்வேலி - யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சிட்னி - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட, மாணிக்கம் கங்காதரன் [Former General Manager, Agriculture Development Bank, (PNG)] அவர்கள், சனிக்கிழமை 29.05.2021 அன்று சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம் -  இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்துக்குமாரு - இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற கணேசமணி அவர்களின் அருமைக் கணவரும், ராம்சங்கர், பாரதிசங்கர், அனுஷா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,     நளாயினி, ஜெயந்தி, திலீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும், அஷ்வினி, கிருஷ்ணா, விஷ்ணு, ஷிவானி, ஹரி, ஷாலினி, அஞ்சலி, அஞ்சனா, தாமிரா, அபிரா மற்றும் சஞ்ஜெய் ஆகியோரின் பாசமிகு பெயரனாரும், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, இரகுநாதன், செல்வரத்தினம் மற்றும் குணரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, மகேஸ்வரி, பரமேஸ்வரி, மற்றும் சிவனேசமலர் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிட்னியைச் சார்ந்த நிஷாந்தி, வசந்தி ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல், பார்வைக்காகப் புதன்கிழமை, 02.06.2021 அன்று காலை 10:15 மணி முதல் - மதியம் 12:00 மணிவரை  Palm chapel, Macquarie Park Crematorium (Cnr Plassey & Delhi Rd North Ryde NSW 2113.) இல் வைக்கப்படும் என்பதையும்,  காலை 11:15 மணி முதல் மதியம் 12:30 மணிவரை நிறைவுக் கிரியைகள் நடைபெறும் என்பதனையும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்: பாரதி: | ஜெயந்தி: 02 9642 3009 [bkangath@gmail.com]  

உன் கடவுளும் என் கடவுளும்! (கவிதை) - ராஜ் குணநாயகம்

 .


உன் கடவுள்

உண்மையென்றால்

என் கடவுளும் உண்மைதான்

என் கடவுள்

பொய்யென்றால்

உன் கடவுளும்

பொய்தான்.

நம்பிக்கை

உண்டென்பதுவும்

இல்லையென்பதுவும்

அவரவர் நம்பிக்கை.

நிற்க!

மாநிலத்தார் மனமெண்ண வாழ்ந்துமே காட்டிடுவோம் !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா   மெல்பேண் ...... அவுஸ்திரேலியா 




வம்புதனை விலத்திடுவோம் 

மனந்திறந்து பேசிடுவோம்
குறைகண்டு பார்க்காமல்
குணமெண்ணி மகிழ்ந்திடுவோம் 

உளமுடைய வைப்பதனை
உளமிருந்து அகற்றிடுவோம்
உணர்வுடனே செயற்பட்டு
உளமகிழச் செய்திடுவோம் 

பணமதனை தேடிடினும்
பகிர்ந்தளித்து உதவிடுவோம்
தனியுடமை தனையுடைத்து
தார்மீகம் காட்டிடுவோம் 

தென்னாசியாவின் மிகப்பெரும் நூலகம் யாழ் நூலகம் எரிந்து 40 ஆண்டுகள்


கானா பிரபா 


 

அந்த விசாலமான மண்டபத்தின் தரை முழுவதுமே சாந்தும் சாம்பலுமின்றி, வேறெதுவும்


காணப்படவில்லை. ஓர் இடுகாட்டின் மத்தியில் நிற்பது போன்ற உணர்ச்சி பரவியது.


"எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார்கள்?"

கலங்கிய கண்களோடு யாழ் பொது நூலகர் திருமதி நடராஜா அப்போது கேட்கின்றார்.

முதல் நாள் இரவு யூன் 1, 1981 

"பொலிஸ்மா அதிபரும், பிரிகேடியர் வீரதுங்காவும் யாழ்ப்பாணத்தில் இருக்கத்தக்கதாக, யூன் 1 ஆம் திகதி 1981 இரவு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் வியப்பானவையாகும். அதே பொலிசார் அன்று இரவு யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்குத் தீயிட்டனர்.

ஏறத்தாழ 97000 பெறுமதி மிக்க நூல்கள் எரிந்து கருகிப் போயின. உலகில் எங்கிருந்தும் இனிமேல் பெறுவதற்ககரிய நூல்கள் பல எரிந்து போயின.

உசாத்துணைப் பிரிவின் சிறப்பு நூற் தொகுதிகளில் அழிந்தவைகளில் கீழ்க்கண்டவையும் அடங்கும்:

1) கலாநிதி ஆனந்த குமாரசுவாமி நூற்தொகுதி
2) திரு.சி.வன்னியசிங்கம் நூற்தொகுதி (சுமார் 100 நூல்கள்)
3) திரு ஐசாக் தம்பையா நூற்தொகுதி (சமயம், தத்துவம் பற்றிய நூல்கள் சுமார் 850)
4) திரு.கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி (சுமார் 600 நூல்கள்)
5) ஏட்டுச் சுவடித் தொகுதி
6) அமெரிக்க நூலகத்திலிருந்து அன்பளிப்பு செய்யப்பட்ட உசாத்துணை நூற் தொகுதி

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு எதிரே 700 யார் தூரத்தில் யாழ் பொதுசன நூலகம் அமைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகத் தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த விஷேஷ பொலிசார் தங்கியிருந்த துரையப்பா விளையாட்டு அரங்கும் யாழ் நூலகத்திற்கு எதிரே தான் இருந்தது. இவ்வளவு "பாதுகாப்பு" இருந்தும் திங்கள் இரவு பொது சன நூலகம் தீப்பிடித்து எரிந்தது.

மணி விழா நாயகர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன்


கானா பிரபா 



தாயகத்துக்குச் செல்லும் போதெல்லாம் நமது செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்களது அறப் பணிகளைக் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன்.

கடந்த  தாயகப் பயணத்தில் தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்துக்குப் போன போது இங்கு வாழ்ந்து மறைந்த முதியோர்களின் புகைப்படங்கள் இருந்தன. அவற்றில் தேதி வாரியாக அவர்களின் இறப்புச் செய்தியோடு ஒரு தகவல் என் கண்ணில் குத்திட்டது. இந்த முதியோர்களில் பெரும்பாலானோருக்கு திரு ஆறு திருமுகன் அவர்களே பிள்ளையின் ஸ்தானத்தில் இருந்து இறுதிக் கிரியைகளைச் செய்து கொள்ளிக் கடன் செய்து முடித்திருக்கிறார். தீவிர இறை பக்தர், விரதங்களை அனுட்டிப்பவர் ஆனால் இப்படியான திடீர் இழப்புகள் வரும் போது துடக்கைப் புறந்தள்ளி அவர் செய்யும் இந்தப் பணியை இன்றும் நினைத்து உணர்ச்சி வசப்படுவேன்.

மன வளர்ச்சி குறைந்த பிள்ளைகளுக்கான மன வளர்ச்சிப் பாடசாலை, சிவபூமி முதியோர் இல்லம், கீரிமலை சிவபூமி மடம், நல்லூர் துர்க்கா மணி மண்டபம், தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் பரிபாலனம் இதில் துர்காபுரம் மகளிர் இல்லம் உள்ளடங்கல், 2018 இல் நிறுவிய திருவாசக இல்லம் இவை முழு நேரப் பணிகள் என்றால் இவற்றைத் தாண்டி தன்னுடைய ஆன்மிக, அறப்பணிகளை இன்னும் நீளத்தில் சொல்லி விட முடியும்.

தன் வாழ்வைச் சைவத்துக்கும் அறப் பணிகளுக்காகவும் அவரை நினைக்கும் போதெல்லாம் வியப்பும், பெருமையும் எழும். 

நம்மால் ஒரு சிறு துரும்பை எடுக்கக் கூட ஆயிரம் சாட்டுச் சொல்லும் வாழ்வியலில் அவரின் பன்முகப்பட்ட அறப்பணிகள் நம் ஈழச் சமூகத்துக்குக் கிட்டிய பெரும் பேறு.
தாயகத்துக்குப் போகும் தோறும் என்னை அவரின் வாகனத்தில் இருத்தித் தன் சமூக ஸ்தாபனங்களின் இயக்கத்தைக் காட்டி வருவார்.
ஆறு திருமுருகனின் “சிவபூமி” அறச் செயற்பாடுகளை அவுஸ்திரேலிய மக்களின் பார்வைக்கு எட்டும் வண்ணம் ஒரு ஆவணப்படத்தை எடுக்க வேண்டும் என்று நான்கு வருடங்களுக்கு முன்னர் நான் நினைத்த போது அதற்குச் செயல் வடிவம் தந்தவர் சகோதரன் ஜெரா. 

எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 43 கொழும்பிலிருக்கும் சிலோனிலிருந்து, திருச்சி சென்ற பயணம் !!!!!! அநுராதபுரம் ரயில் நிலையத்தில் மாத்திரமா தமிழர்களை தட்டி எழுப்பினார்கள்…? 1983 கலவரத்திலும்தான் ….! முருகபூபதி


நண்பர் காவலூர் ஜெகநாதன் சொன்னவாறு முதலில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தேன்.  அது கிடைத்ததும் வீரகேசரி அலுவலகத்தில் லீவுக்கு விண்ணப்பித்தேன்.

1983 கலவரத்தையடுத்து எமது அப்பாவும் காலமானதால்,  நாம் குடும்பத்துடன் தமிழகம் சென்று , அங்கே வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இருக்கிறதா..? என்பதை அறிவதற்குத்தான்  நூல் விட்டுப்பார்க்க நான் செல்வதாக சில நண்பர்களும் குடும்ப உறவுகளும் நினைத்தார்கள்.

இந்த நூல்விட்டுப் பார்த்தல் என்பது ஒரு விடயத்தில் ஆழம்பார்ப்பதாகும். 

கலவர காலத்தில் எனக்கு அடைக்கலம் கொடுத்த சில உறவினர்கள் திருச்சிக்கு சென்றுவிட்டனர். அத்துடன் சில கலைஞர்கள், எழுத்தாளர்களும் ராமானுஜம் கப்பல், மற்றும் விமானம் மூலம் சென்றுவிட்டனர்.

மெல்பன் 3 C R தமிழ்க்குரல் வானொலி ஊடகவியலாளர் சண்முகம் சபேசன் ( 1954 – 2020 ) மே 29 நினைவு தினம் சபேசனின் மறைவுக்குப்பின்னர் வெளியாகும் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் நூல் ! முருகபூபதி


லங்கை வடபுலத்தில்  யாழ்ப்பாணம்,  நீராவியடியில் 1954 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி சண்முகம் – பர்வதலக்‌ஷ்மி தம்பதியரின்  மூத்த புதல்வனாகப்பிறந்த சபேசன், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி அவுஸ்திரேலியா மெல்பனில்  மறைந்தார்.

யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர்,  1989 ஆம் ஆண்டு நடுப்பகுதியில்  மெல்பனுக்கு புலம்பெயர்ந்து வந்த காலத்தில்  எனக்கு ஒரு இலக்கிய வாசகராகவே அறிமுகமானவர்.

அவரது  இரத்த உறவினர்தான்   எழுத்தாளர் வண்ணை சிவராஜா  என்பதையும்  அக்காலப்பகுதியிலேயே அறிந்துகொண்டேன்.  அவ்வாறு அறிமுகமான காலத்திலிருந்து கடந்த ஆண்டு  அவர் மறையும் வரையில், அவரது அரசியல் கருத்துக்களுடன் மாறுபட்டிருந்தாலும், எந்தவொரு விக்கினமும் இல்லாமல், என்னுடன் உறவாடிய இலக்கிய நேசர்.

எப்பொழுதும் எதனையும்  வாசிக்கமறவாத சபேசன்,  கடந்த ஆண்டு இதே திகதியில் சுவாசிக்க மறந்துபோனது எனக்கு நெடுந்துயரே !

அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளர் மு. பஷீர் அவர்களுக்கான நினைவேந்தல் அரங்கு -

 இலங்கையில் அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளர் மு. பஷீர் அவர்களின்  இலக்கியப்பணிகளை நினைவுகூரும் வகையில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள இணையவெளி அரங்கு  எதிர்வரும் 06 ஆம் திகதி ( 06-06 -2021 ) ஞாயிறு மாலை இலங்கை நேரம் மாலை 5-00 மணி  ஒன்றிணைப்பு : மேமன்கவி          முகநூல் நேரலையில் 

                                    


பதினைந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் ” வானமுதம் “ தமிழ் ஒலிபரப்புச் சேவை. என் பார்வையில் வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை - நவரத்தினம் அல்லமதேவன், மெல்பேண்.




அவுஸ்திரேலியா மெல்பேணில் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தினால் (Whittlesea Tamil Association) ஆரம்பிக்கப்பட்ட சமூக வானொலியான வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை தனது தினைந்து ஆண்டு கால சேவையைப் பூர்த்தி செய்து பதினாறாவது ஆண்டில் காலடி பதிக்கின்றது.  சமூக வானொலி வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் பதினைந்து ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் இந்த வேளையில் வானமுதம் தமிழ் வானொலியின் கடந்த காலத்தை நிணைத்துப் பார்க்கின்றேன். மெல்பேண் வடபகுதியில் விற்றில்சீ தமிழ்ச் சங்கம் தனது முதல் செய்ற்பாடாக வானமுதம் தமிழ் ஒலிபரப்பினை ஆரம்பித்தது. . 2006ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி பண்பலை வரிசை PVFM 88.6 ஊடாகத் தனது ஒலிபரப்பினை ஆரம்பித்திருந்தது அன்று முதல் இன்று வரை தரம்மிக்க, பல தரமான சுவை மிக்க, தமிழ் மணம் வீசும் வண்ணம், காற்றில் அலை அலையாக வான் அலையில் தெவிட்டாத தித்திக்கும், தேன் தமிழை, எத்திக்கும் பரப்பி வருகின்றது.

அரைநூற்றாண்டுக்கு முன்பிருந்தே நீளும் கரங்கள் அவதானி


லங்கையில் உருவாக்கப்பட்டிருக்கும் போர்ட் சிட்டி என்ற துறைமுக நகரம்,  சமகால கொரோனோவுக்கு மத்தியில் பரவலாக பேசுபொருளாகியிருக்கிறது.

மக்களும் அரசும் அக்கறையோடு சிந்தித்து செயலாற்றினால், கொரோனோ கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். அல்லது காலப்போக்கில் மறைந்துவிடும்.

ஆனால், போர்ட்சிட்டியை கட்டுப்படுத்தவும் முடியாது. காலப்போக்கில் அது எத்தகைய விளைவுகளை உருவாக்கும் என்பதையும் சொல்லமுடியாது.

நாடாளுமன்றத்திலும்  விவாதப்பொருளாகி வாக்கெடுப்பில்


அரசு வெற்றிபெற்றுள்ளது.

குறிப்பிட்ட   துறைமுக நகர  ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அரசின் அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியிருந்தாலும், உச்சநீதிமன்றம் விதந்துரைத்துள்ள திருத்தங்களை ஏற்றுக்கொள்வதற்கும் அமைச்சரவை இணங்கியிருக்கிறது.

இடையில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஒரு செய்தியை சொன்னார்.  போர்ட் சிட்டியில் இலங்கையர்களுக்கு 75 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்குவதற்கு சீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்பதுதான் அச்செய்தி.

ஏற்கனவே அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கும் பின்னணியிலிருந்து மட்டுமல்ல,  சுமார் அரைநூற்றாண்டு காலத்திற்கு முன்பிருந்தே, சீனாவின் கரங்கள் இலங்கையில் நீண்டு வந்திருக்கும் வரலாற்றிலிருந்தும்  புதிய துறை முகநகரத்தை நாம் அவதானிக்க முடியும்.

நம்மவர் பேசுகிறார் இணையவழி காணொளி சந்திப்பு 05 – 06 – 2021



ஈழத்தின் மூத்த எழுத்தாளர்

 எஸ். எல். எம். ஹனிபா அவர்களுடன் உரையாடல்

        2021 ஆனி மாதம் 05 ஆம் திகதி சனிக்கிழமை


          

பேராசிரியர்.கா.சிவத்தம்பி: ஒரு நண்பராக.... - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

 .



சிவத்தம்பி - ஆமாம். Prof. சிவத்தம்பி, Dr. சிவத்தம்பி, அறிஞர். சிவத்தம்பி. தமிழ் வளர்ச்சிக்கு உதவிய பெருந்தகை சிவத்தம்பி..... இவ்வாறு சிவத்தம்பியைப் பார்த்தவர்கள் பலர். அந்தச் சிவத்தம்பியை நண்பனாக; நல்ல கலாஇரசிகனாக நான் கண்ட சிவத்தம்பியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எமது திருமனம் நடந்த நாள் தொட்டு எனது கணவரின் இனிய நண்பராக சிவத்தம்பியை நான் அறிவேன். ஏன் எமது திருமனம் எப்படி நடக்க வேண்டும் என்பதை எனது கணவருக்கு உனர்த்திய இனிய நண்பரும் அவரே. எனது கணவர் திருமணமாகப் போகும் இளைஞர், முற்போக்குக் கருத்துக்கள் எனப் பலதைக் கொண்டிருந்த காலம் அது. எமது திருமணம் வைதீக முறையில் நடைபெற வேண்டாம்; சென்னையில் இருந்து அன்று எழுத்தாள அறிஞராகக் கொள்ளப்பட்ட Dr. வரதராசன் அவர்களை வருவித்து அவர் ஆசியுடன் மாலை மாற்றினால் போதும் என எனது பெற்றோரிடம் என் கனவர் கூறினார்.

வீட்டிற்கு மூத்த பெண் திருமணத்தை விமர்சையாக நடத்த விரும்பிய தந்தைக்கு இது ஒரு பிரச்சினையாகி விட்டது. மறுமுறை எனது தந்தையைக் காணும் போது எமது திருமணம் வைதீக முறையில் நடைபெறுவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என எனது கணவர் கூறி விட்டார். இதற்குக் காரணமாக இருந்தவர் சிவத்தம்பி தான். எனது கணவர் தனது கருத்தை தன் நண்பரான திரு. சிவத்தம்பியிடம் கூறிய போது அவர்,’ அடேய் மச்சான், எமது திருமணமே மிக மிக அழகாக ஒழுங்கமைக்கப்பட்ட நாடகம். அப்படி ஒரு Drama வைக் குழப்பலாமாஎன கூறி அவரது எண்ணத்தை மாற்றியவர் அவரே!

எங்கெல்லாம் கலையழகு உண்டோ அதை வாழ்க்கையில் இரசிக்கும் சிவத்தம்பி எமது சம்பிருதாய திருமணம் எத்துணை அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதென்பதை எவ்வாறு ரசித்திருக்கிறார்!!
இதனை நான் பலரிடமும் கூறி மகிழ்ந்ததுண்டு. அத்துடன் எமது திருமணச் சடங்குகளின் அழகையும் பலரை ரசிக்க வைத்தும் உள்ளேன். சென்னையில் வாழ்ந்த போது பலதரப்பட்ட திருமணங்களைக் கண்ட போதெல்லாம் திரு. சிவத்தம்பியின் திருமணத்தைப் பற்றிய கருத்து என் மனதிலே வந்து போவதுண்டு.