அந்த நாள் ஞாபகம் ......... .......... சொல்லத்தான் நினைக்கிறேன்! பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி


பனையோலை கொண்டுவேய்ந்த பதிவான கூரைவீடு!

    பசுஞ்சாணத் தால்அம்மா மெழுகிவிட்ட பசுந்திண்ணை!

மனைமுழுதும் தெளித்ததனால் மணம்பரப்பும் மஞ்சள்நீர்! 

    மல்லிகையும் முல்லையொடு மலர்ந்தளித்த பூப்பந்தல்!

எனையன்று மகிழ்வித்த 'இளவல்கள்' சிரிப்பினொலி!

    என்றுமெனைக் கண்டவுடன் துள்ளும்'பப்பி'வாலாட்டம்!

நினைத்தவுடன் முகர்வதெலாம் சொந்தமண்ணின் வாசனையே!

    நெஞ்சிலின்பம் தந்தநாளை நினைந்தின்று மகிழ்கின்றேன்!


நாற்றிசையும் அருள்சுரக்கும்  நல்லதிருக் கோவிற்கெலாம்

   நற்றமிழாற் பதிகங்கள் நனிசிறக்கப் பாடிநின்று

ஏற்றம்பெற் றுயர்ந்திட்ட ஈடில்லாப் பெரும்புலவர்!

   எனக்கெழுத்தை அறிவித்த சோமசுந்தரத் தாத்தாவைப்

போற்றித் தொழுகின்றேன்! புலமைமிகு அறிவாளர்

   பொலிந்திலங்க இயற்கைதரும் பொற்பெல்லாம் அணிகூட்ட

ஊற்றின்றி நிறைந்தோடும் ஒழுகலாறு புகழ்சேர்க்கும்

   ஓரரிய ஒப்பில்லா நவாலிநகர் என்னூரே!


அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்

Wednesday, August 12, 2020 - 12:03pm

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020

மாவட்ட இணைப்புகுழு தலைவர்கள் 23 பேர் நியமனம்

அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வு இன்று (12), வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் 28 அமைச்சுகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட 25 அமைச்சர்களுக்கும் 39 இராஜாங்க அமைச்சுகளுக்குமான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, உரிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

தியாகிகளின் அர்ப்பணிப்பினால் வென்றெடுத்த இந்திய சுதந்திரம்

Saturday, August 15, 2020 - 6:00am

இந்தியாவின் 74 -வது ஆண்டு சுதந்திர தினம் ஓகஸ்ட் 15-ம் திகதியான இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் கொடியேற்றி, மறைந்த சுதந்திர வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. தலைநகர் டில்லியில் பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகளும், முப்படையினரின் அணிவகுப்பும் நடைபெறுகின்றன.

1947 ஓகஸ்ட் 15இல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி சுதந்திர நாடாகியதைக் குறிக்கும் இந்த நாள் இந்தியாவில் அரசாங்க விடுமுறையாகும். இன்றைய நாளில் இந்தியா முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு உரையாற்றுகிறார். இவ்விழாவில் முப்படை அணிவகுப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் மரியாதை செலுத்தப்படுகிறது.

தோற்கடிக்கப்பட முடியாத தமிழர் பிரதிநிதி டக்ளஸ்

 Friday, August 14, 2020 - 6:00am

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பாராளுமன்றத்துக்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் கடற்றொழில் அமைச்சராகவும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராகவும் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றைய தினம் பதவியேற்றதைத் தொடர்ந்து வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சிக் கொண்டாட்டம் நடத்தியுள்ளனர்.

1957ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த டக்ளஸ் தேவானந்தா தனது கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கற்றிருந்தார்.

தமிழர் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த ஆரம்ப கால போராளிகளில் முக்கிய ஒருவராக அவர் திகழ்ந்ததுடன் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு தளபதியாகவும் விளங்கினார்.

நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் 2020 - 22 ம் நாள் 15 August




தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீண்டெழ முடியாத வீழ்ச்சி


பாராளுமன்றப் பொதுத் தேர்தல் பரபரப்புகள் ஓரளவு தணிந்து விட்டன. இத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றி வாகை சூடியுள்ளது. நாட்டு மக்களில் பெரும்பாலானோர் அக்கட்சியின் மீது வைத்திருந்த உறுதியான நம்பிக்கை இன்னுமே சற்றும் குறையவில்லை என்பதை பொதுத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுக் கொண்டுள்ளார். புதிய அமைச்சரவையும் பதவியேற்றுள்ளது. பொதுஜன பெரமுனவுக்குக் கிடைத்திருப்பது மாபெரும் வெற்றியென்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது. உறுதியான நிலையான ஆட்சியொன்றை நெருக்கடி எதுவுமின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான பலத்தைப் பெற்றுள்ளது அரசாங்கம்.

அறுதிப் பெரும்பான்மைக்காக வேறு கட்சிகளின் துணையைப் பெற வேண்டிய அவசியம் அரசுக்கு அறவே கிடையாது. குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் ஈட்டப்பட்டுள்ள மாபெரும் செல்வாக்கு இதுவாகும்.

அது ஒருபுறமிருக்க, அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி மீண்டெழுந்து வருவதென்பது இலகுவான காரியமல்ல. ஐ.தே.கவுக்குள் உருவெடுத்த தலைமைத்துவப் போட்டியும், கட்சியின் ஆளுமையற்ற தலைமைத்துவமுமே இவ்வீழ்ச்சிக்கான பிரதான காரணங்களாகும். அதேசமயம், முன்னைய நல்லாட்சி அரசாங்கம் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு இன்னுமே தணியவில்லை என்பதையும் பொதுத் தேர்தல் முடிவு புலப்படுத்துகின்றது.

புவி மெச்சிடும் வகையிலே வாழ்ந்திடுவோம் ! கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ...மெல்பேண் .. அவுஸ்திரேலியா

        விவாதங்கள் செய்வதை விட்டிடுவோம் - என்றும்
         விரும்பாத சொற்களைக் கழைந்திடுவோம்
         குறைகூறும் பழக்கத்தை ஒழித்திடுவோம் - நாளும்
         குன்றாத நட்புடன் வாழ்ந்திடுவோம் 


         பேராசை கொள்வதை விட்டிடுவோம்  - நிதம்
         பெரும்பொருள் சேர்ப்பதைத் தவிர்த்திடுவோம் 
         யாருக்கும் உதவாத பொறாமதனை  - நாங்கள்
         வாழ்வினில் இருந்துமே எறிந்திடுவோம் 


        மன்னிக்கும் இயல்பினை வளர்த்திடுவோம்  - என்றும்
        மற்றவர் மகிழ்ந்திடச் செய்திடுவோம்
        வெறுப்பினை வெறுப்புடன் பார்த்திடுவோம்  - நிதம்
        விருப்புடன் யாவர்க்கும் உதவிநிற்போம் 

சிறுபான்மையின அரசியல்வாதிகள் பலருக்கு பொதுத் தேர்தலில் மக்கள் புகட்டிய பாடம்

 

பாராளுமன்றத் தேர்தல் முடிவானது நாட்டின் அரசியல் வரலாற்றில் புதுமையை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றுத் திருப்பத்தை அது ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறலாம்.

விகிதாசாரத் தேர்தல் வரலாற்றில் ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை முதற் தடவையாகப் பெற்றுள்ளதுடன் பழம் பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மிக மோசமான தோல்வி கண்டுள்ளது. அதேசமயம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆதிக்கம் செலுத்திய தமிழ், முஸ்லிம் அரசியற் கட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளன. எதிர்பார்த்த வேட்பாளர்கள் பலர் வெற்றி பெறவில்லை. எதிர்பார்த்திருக்காத வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.இவையெல்லாம் வரலாற்றில் திருப்பங்களாகும்.

பொதுஜன பெரமுன 145 ஆசனங்களுடன் அமோக வெற்றியீட்டியுள்ளது, ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது, தமிழரசுக் கட்சி 10 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 03 ஆசனங்களையும், தமிழ் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. என்பன தலா இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி, எமது மக்கள் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டுள்ளன
.

மெல்பன் கேசி தமிழ்மன்றத்தின் வாராந்த முற்றம் காணொளி சந்திப்பு அமரர் கலைவளன் சிசு. நாகேந்திரனின் பிறந்த தின நினைவு அரங்கு நவரத்தினம் வைத்திலிங்கம்

மெல்பன் கேசி தமிழ் மன்றத்தின்  வாராந்த முற்றம் காணொளி  ஒன்றுகூடல், வழமை போன்று  கடந்த ஞாயிற்றுக்கிழமை  09 ஆம் திகதி மாலை மூன்று மணிக்கு ஆரம்பமானது.

 

                                   

மன்றத்தின் மூத்த அங்கத்தவர்கள் ஒவ்வொருவராக முற்றத்தில் ஒன்று சேர்ந்து ஒருவரோடொருவர் தங்கள் சுக நலன்களை விசாரித்து உரையாடல்களை   மிகவும் உற்சாகமாக   ஆரம்பித்த வேளையில்,  நான்கு மணியானபோது திரு ஆவூரான் சந்திரன் அவர்களும் தன் பங்களிப்பில் முன்தோன்றி அனைவருக்கும் வணக்கம் கூறி வானொலியின் ஆரம்ப நிகழ்வாக பிறந்தநாள் வாழ்த்துகளுடன் நிகழ்ச்சியை  ஆரம்பித்தார்.

 

1921 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி பிறந்தவர்தான் கலைவளன் சிசு. நாகேந்திரன். அன்னார் மறைந்த பின்னர் அவருடை 99 ஆவது பிறந்த தினம் அதே ஓகஸ்ட் 09 ஆம் திகதி மன்றத்தின் காணொளி முற்றம் நிகழ்ச்சியில் நினைவுகூரப்பட்டது.

பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 13 - காதல் ஜோதி - சுந்தரதாஸ்


தமிழ் திரை உலகில் தனது கதை வசனங்களால் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் அறிஞர் அண்ணா . இவர் எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு , ரங்கூன் ராதா சொர்க்கவாசல் போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை உருவாக்கி திரை உலகில் புரட்சி செய்த அண்ணா பின்னர் அரசியலிலும் சாதனை புரிந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக 1967 ஆம் ஆண்டு பதவி ஏற்றார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே முதல்வராக இருந்த அண்ணா 1969 ஆம் ஆண்டு மறைந்தார். அதற்கு அடுத்த ஆண்டு அவர் கதைவசனம் எழுதிய காதல் ஜோதி படம் வெளிவந்தது .

அண்ணாவின் பாணியிலேயே சமூகநீதி சாதிக்கு எதிரான போராட்டம் கலப்புத்திருமணம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் கால மாற்றத்தை கருத்தில் கொண்டு அண்ணாவின் அடுக்குமொழி வசனங்கள் படத்தில் இடம் பெறவில்லை.ஆனாலும் வசனங்கள் கவரும் வகையிலேயே அமைந்திருந்தன.

கடவுளுக்கு நாய்களிடமிருந்து ஒரு கோரிக்கை – ஒரு பக்க கதை - முனைவர் க.லெனின்

 

அந்த இடத்தில்தான் நாய்கள் எல்லாம் ஒன்று கூடின. எங்கெங்கிருந்தோ நாய்களெல்லாம் வந்த வண்ணம் இருந்தன. பணக்கார நாய்களிலிருந்து தெருநாய்கள் வரையும் சில வெளிநாட்டு நாய்களும் வௌவ் வௌவ் என்று குலைத்துக் கொண்டும் வாலை ஆட்டிக்கொண்டும் இங்கிட்டும் அங்கிட்டும் நடப்பதுமாய் போவதுமாய் இருந்தன. கூட்டத்தில் வந்திருந்த நாய்கள் அனைத்தும் தன்னுடைய சாதி நாய்களுடன் சேர்ந்து நின்று கொண்டன.

போர் வீரனுக்கு இணையான ஆற்றலைப் படைத்த ராஜபாளையம் நாய், வேகமாக ஓடுவதும் புத்திசாலிதனமான சிப்பி பாறை என்கிற நாய், அலங்கு, கோம்பை, மலையேறி, கன்னி, டாபர்மேன், ராட்வீலர், லாப்ரடோர் போன்ற நாய்களும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டன.

ராஜபாளையம் நாய்தான் அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தது. முக்கியமாக வரவேண்டிய நாய் இனங்கள் அனைத்தும் வந்து விட்டனவா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டு பேச ஆரமித்தது,

”நாம இங்கு எதற்கு கூடி இருக்கின்றோம் தெரியுமா? ”

”தலைவரே, நீங்களே சொல்லி விடுங்கள்” என்றது மலையேறி

“இந்த உலகத்துல ஆட்டுக்குச் சந்தை இருக்கு. மாட்டுக்குச் சந்தை இருக்கு. அதைபோல நமக்கும் இந்த மக்கள் சந்தைகள் வைக்கனும். அப்பதான் நம்முடைய மதிப்பு இந்த மனுச பயலுக்கெல்லாம் தெரியும்”

அஞ்சலி நிகழ்வு - பத்மா சோமகாந்தன் - 19-08-2020

 

ஞானம் கலை இலக்கியப் பண்ணை இணையவழி நடாத்தும் அஞ்சலி நிகழ்வு
அமரர் - திருமதி பத்மா சோமகாந்தன் காலம் - ஆகஸ்ட் 19ஆம் திகதி, 2020


நுழைய முடியாத நகரம் - ரமேஷ்

 


நுழைய முடியாத
இந்த நகரத்தின் மழைச் சாலையில்
ஒரு பறவை கத்திக் கொண்டிருக்கிறது.

தனித்து விடப்பட்டிருக்கும்
இந்தப் பறவையின் சிறகுகளை அமைதிப் படுத்த
பூச்சிகளின் கொடுக்குகளால் தைக்கப்பட்ட பூவிதழ்கள்
தன முனகல்களை மறந்தபடி
வீசத்துவங்குகிறது தன் வாசத்தை.

வேதனைகளால் நிரம்பிய
ஒரு பைத்தியக்காரனின் நகர்வலம்
அங்கு மௌனத்தின் அடர்த்தியைக் குறைக்கிறது.

சோடியம் விளக்கொன்றின் கீழ் நிற்கும் சிறு மிருகம்
சொல்லப்படாத கதையொன்றை...
தன் வாலை அசைத்துச் சொல்லிச் செல்கிறது.

தனித்துக் கிடந்த ஒற்றைப் புல் ஒன்று
ஒளிர்கிறது ஈரத்துளியில்...
எதிரொலிக்கும் பிம்பங்களுடன்
இரவை உடைக்கும் பிரயாசையோடு.

விடையில்லாத புதிர்களால் நிறைந்த
இந் நகரத்தின் இரவை...
குளத்து நிலவை வெறித்தபடி...
துரத்திக் கொண்டிருக்கிறது சிறு மீன் ஒன்று.

உதிரும் சூரியனையும்...
உதிரும் நிலவையும் ...
எல்லாத் திசைகளிலும் பொறுக்கியபடி...

இந்தக் கணத்தில் நுழைகிறேன்
யாரும் வெறுக்கும் அந்த நகரத்திற்குள்.


https://eluthu.com/

அகிலத்தைக் காத்துவிட அனுப்பிடுவாய் நற்தூதுவனை ! கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் ...... அவுஸ்திரேலியா

 

வெள்ளப் பெருக்காலே வேதனைகள் ஒருபக்கம்

வெந்தணலால் பலவுயிர்கள் கருகுகிறார் ஒருபக்கம்

நொந்திடுவார் நிவாரணத்தில் சுகம்காண்பார் மறுபக்கம்

சந்ததும் துன்பமாய் விளைகிறதே பலபக்கம்  !

 

பேயெனவே வெறியாடும் பெருநோயோ ஒருபக்கம்

பெரிதாக மனமெண்ணா வர்க்கமோ மறுபக்கம்

நோயெதிர்ப்பு திட்டத்தில் நயம்காண்பார் ஒருபக்கம்

தாறுமாறாய் பிரச்சினைகள் சமூகத்தைக் கலக்கிறதே !

 

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 27 – முரசு/நகரா – சரவண பிரபு ராமமூர்த்தி

முரசு/நகரா – தோற்கருவி

அமைப்பு

பிரம்மாண்டமான கோப்பை அல்லது அரைக்கோள வடிவ மரப்பாண்டத்தில் எருமை அல்லது மாட்டுத்தோலால் வார்க்கப்படுவது நகரா. இப்போது புழக்கத்தில் உள்ள சில நகராக்கள் பித்தளை அல்லது இரும்பால் உருவாக்கப்பட்டவை. தோலைச் சுற்றி வார்கொண்டு இழுத்து, கீழ்ப்பகுதியில் உள்ள கயிற்றோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும்.

 

குறிப்பு

தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பாசறைக் கருவியாகத் திகழ்ந்தது முரசு. வீரத்தின் அடையாளமாக, வெற்றியின் சின்னமாக, எதிர்ப்பின் குரலாக, எச்சரிக்கை உணர்வாக, மகிழ்ச்சியின் ஒலியாக முழங்கி, தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றிய தோற் கருவி முரசு. ஒரு தலைவனுக்கு உரிய சிறப்புகள் என்று குறிக்கப்படும் மலை, ஆறு, நாடு, ஊர், யானை, குதிரை, மாலை, கொடி, முரசு, ஆணை ஆகிய பத்தில் ஒன்றாக இடம் பெற்றது முரசு.

 

பண்டை இலக்கியங்களில் நகரா, முரசு என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மிகப்பெரிய தோற்கருவி என்பதும் மன்னர் காலங்களில் போரில் பயன்படுத்தப்பட்டது என்பதும் தகவல். தொடக்கத்தில் முரசு அரசர்களுக்கு உரிதாகவே இருந்தது(முரசுடைத் தானை மன்னர் – பெரியபு). பகைவர்களின் காவல் மரத்தை வெட்டி செய்யப்பட்டது வெற்றிமுரசு. முரசு இசைத்து பூசைகள் செய்து குருதி பலியிடப்பட்ட செய்திகள் நமக்கு இலக்கியங்களில் காணக் கிடைக்கிறது. “மயிர்க்கண் முரசோடு வான் பலியூட்டி என்பது சிலப்பதிகாரம்.

போர்க்கால இலக்கியம் -- ஈழப்போருக்கு முன்பும் பின்னரும் ! அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கடந்த 15 ஆம் திகதி நடத்திய இணையவழி காணொளி அரங்கில் சமர்ப்பித்த உரை ! முருகபூபதி

 

போர்க்கால இலக்கியம்பற்றி பேசுவதற்கும் நாம் மற்றும் ஒரு கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போராடும் காலத்திலும் தயாராகியிருக்கின்றோம்.

 

இனி கொரோனா கால இலக்கியம் என்பதும்  பேசுபொருளாகிவிடும். சமகால போராட்டத்தில் எம்மை பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளி தேவைப்பட்டிருந்தமைபோன்று,  ஈழவிடுதலைப்போரில் எமது மக்களின் பாதுகாப்பிற்கு  பதுங்கு குழிகள்தான் தேவைப்பட்டன. அப்படியிருந்தும் பதுங்கு குழிகளை நோக்கியும் எறிகணை வீச்சுக்கள் நிகழ்ந்தன. குண்டுகள் பொழியப்பட்டன.

 



இலங்கைச் செய்திகள்

தமிழர் பகுதிகளில் மீளவும் துரித கதியில் அபிவிருத்திகள் ஆரம்பம் 

தேசியப் பட்டியல் விவகாரம் குறித்து மனோ FBயில் கவலை

இது படமல்ல; உண்மை

25 புதிய அமைச்சுகள் மற்றும் அமைச்சரவை செயலாளர் நியமனம்

ஜீவன் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்பு

இந்தியாவின் சுதந்திர தினம்; பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

ரணிலுடன் முறுகல்; செயற்குழு கூட்டத்தை தவிர்த்தார் அகில



தமிழர் பகுதிகளில் மீளவும் துரித கதியில் அபிவிருத்திகள் ஆரம்பம் 

இந்திய புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு பிரதமர் பேட்டி

வடக்கு, கிழக்கு உட்பட தமிழர் பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த சஞ்சிகைக்கு அவர் மேலும் கூறுகையில்,

உலகச் செய்திகள்

ஹொங்கொங் பாதுகாப்பு சட்டம்: பத்திரிகை உரிமையாளர் கைது

ஆப்கான் அரசுடனான அமைதி பேச்சுக்கு தலிபான்கள் தயார்

உலகில் முதல் நாடாக கொரோனா தடுப்பு மருந்துக்கு ரஷ்யா ஒப்புதல்

மதநிந்தனைக் குற்றச்சாட்டில் பாடகருக்கு மரண தண்டனை

பெய்ரூட் வெடிப்புச் சம்பவம்: லெபனான் அரசு இராஜினாமா

530,000 வெளிநாட்டு ஊழியரை வெளியேற்ற குவைட் திட்டம்

பைடனின் துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளி பெண் தேர்வு

லெபனான் இராணுவத்திற்கு அதிகாரம் வழங்க ஒப்புதல்

சிவிலியன், இராணுவத்திற்கு இடையே தென் சூடானில் மோதல்: 127 பேர் பலி

உணவில் வைரஸ் பரவல்: சுகாதார அமைப்பு மறுப்பு

இஸ்ரேல் - ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையில் இராஜதந்திர உறவை ஏற்படுத்த வரலாற்று உடன்பாடு

எண்ணெய் கப்பலை கைப்பற்றிய ஈரான்: அமெரிக்கா குற்றச்சாட்டு


ஹொங்கொங் பாதுகாப்பு சட்டம்: பத்திரிகை உரிமையாளர் கைது

ஹொங்கொங்கின் பெரும் தொழில் அதிபரான ஜிம்மி லாய், அவரது பத்திரிகை அலுவலகங்களில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் - அங்கம் 26 “ இங்கிவரை நான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் ! “

இலங்கையில் வடக்கு – கிழக்கு பிரதேசங்கள் எங்கும் சென்று, கவியரங்குகள், தமிழ் விழாக்கள், ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகளில் எல்லாம் கலந்துகொண்டிருக்கின்றேன்.

                                               

அவ்வாறு சென்றதனால் எனக்கு பல புதிய புதிய நண்பர்கள் கிடைத்தார்கள்.  அந்த நண்பர்களில் பலர் என்னோடு தொடர்ந்தும் உறவாடிவருகிறார்கள்.  சிலர் இந்த தொடர்பயணத்தில் மறைந்து விடைபெற்றுவிட்டார்கள்.

முக்கியமாக நாவற்குழியூர் நடராசன்,  இரசிகமணி கனகசெந்திநாதன், கலைப்பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரை,  மஹாகவி உருத்திரமூர்த்தி, நீலாவணன், சில்லையூர் செல்வராசன், எஃப். எக்.ஸி . நடராசா, எஸ்.பொன்னுத்துரை, இ. இரத்தினம், சு.வேலுப்பிள்ளை, இ.முருகையன், சுகேர் மீட், ஏ. ரகுநாதன்,  

இவர்கள் அனைவரும் இலங்கையின் வடபகுதியை அல்லது கிழக்குப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.

ஆனால், மேற்குப்பகுதியைச்சேர்ந்தவர்களும் எனது வாழ்வில் மிகவும் முக்கியமானவர்கள்.  அவர்கள் பற்றியும் நான் சொல்லாவிட்டால், இந்த சொல்லாத கதைகள் முற்றுப்பெறல்மாட்டாது என கருதுகிறேன்.

நான் கொழும்பில் கல்வி வெளியீட்டுத்திணைக்களத்தில் பணியிலிருந்தபோது,  மேற்குப்பிரதேச தமிழ் ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகளில் உரையாற்றுவதற்கும் செல்வது வழக்கம்.

அவ்வேளையில் தலைநகரத்திலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பாதையில் வரும் நீர்கொழும்பு பிரதேசத்திற்கும் பல தடவைகள்  சென்றிருக்கின்றேன்.

மழைக்காற்று ( தொடர்கதை ) - அங்கம் 48 முருகபூபதி


 வீடு வெறிச்சோடிப்போயிருந்தது.  கலகலப்பாகவிருந்த வீடு.    ஆளரவமில்லாமல்  சுவரில் நகரும் பல்லியின் மெல்லிய குரலோடும்  தனது பெருமூச்சுக்காற்றுடனும்தான் சஞ்சரித்திருக்கிறதோ..! 

அபிதா நடைப்பிணமாக வீட்டுக்குள் அலைந்துகொண்டிருந்தாள்.

அனைவரும் வீட்டிலிருந்தபோதும் வேலைகளுக்கு குறைவில்லை. ஒவ்வொருவராக அகன்ற பின்னரும் குறைவில்லை.

அவர்களில் யாராவது ஒருவருடன்  பேசிக்கொண்டு வேலையில் மூழ்கும்போது களைப்புத் தெரியாது .  ஆனால், இப்போது எவரும் இல்லாமல் நான் மட்டும்தான் சுவரில் நகரும் பல்லியோடு பேசவேண்டியிருக்கிறது.


இந்திய-சீன எல்லையில் உருவான இரு தரப்பு மோதலின் பின்னணி

 Saturday, August 15, 2020 - 6:00am

இருபது வீரர்கள் கொல்லப்பட்டமை மோடிக்கு ஏற்பட்ட பின்னடைவு

இந்தியாவின் வடக்கில் உள்ள லடாக் பிரதேசத்தில் இந்திய- சீன எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள இந்தியாவின் கல்வான பள்ளத்தாக்கில் இந்திய- சீனப் படைகளுக்கு இடையே கடந்த மே 5 ஆம் திகதி ஆரம்பித்த மோதல் கடந்த ஜூன் 15ம் திகதி உச்சக் கட்டத்தை அடைந்தது.

கல்வான் பள்ளத்தாக்கில் முன்னேறிய சீனப் படையினரை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியப் படைகள் ஜூன் 15 மற்றும் 16 ஆகிய தினங்களில் சீனப்படையினருடன் கைகலப்பில் ஈடுபட்டன.

எல்லைக் கோட்டுக்கு 2 கிலோ மீற்றர் தூரத்தினுள் துப்பாக்கி மற்றும் குண்டுகளை பாவிக்கக் கூடாது என்று 1996 இல் இரு நாடுகளும் ஒப்பந்தத்தை செய்துகொண்டிருந்ததால் இரு நாட்டுப் படையினரும் கற்கள், தடிகள் மற்றும் இரும்பு கம்பிகளைக் கொண்டு தாக்கிக் கொண்டனர்.

இந்த இரு நாள் மோதலில் இந்திய தரப்பில் ஒரு இராணுவ அதிகாரி உள்ளிட்ட 20 வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு அறிக்கை வெளியிட்டது. சீனாவின் தரப்பில் ஒரு இராணுவ அதிகாரி உள்ளிட்ட 43 வீரர்கள் காயமடைந்தோ அல்லது கொல்லப்பட்டோ இருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறின. மோதலின் போது சீனப் படையினர் பிடித்து வைத்திருந்த 10 இந்திய வீரர்கள் மற்றும் 4 அதிகாரிகளை சீன இராணுவம் ஜுன் 17 ஆம் திகதி விடுவித்தது.

தொற்றுக்குள்ளான பாடகர் S.P.Bக்கு தமிழக அரசு உதவி

 

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மருத்துவ உதவிகளைச் செய்ய தயாராகவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அச்சப்படும் நிலை இல்லை என்றும் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார். 

எஸ்.பி.பி உடல்நிலை பூரண நலம்பெறப் பிரார்த்தனை செய்வதாக இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மருத்துவ உதவி வழங்கப்படுமென்று தமிழக அரசும் அறிவித்துள்ளது. 

இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் (15) இரவு வெளியிட்ட டுவிட்டர் பதிவில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது என்றும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் மற்றும் எம்.ஜி.எம் மருத்துவமனையின் எம்.டி.யிடம் விசாரித்ததாகவும், அவர் விரைவாக குணமடைய வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.    நன்றி தினகரன்