“ முழங்காலைப் பிடித்துக் கொண்டு படிகளில் ஏறிவந்த
ரங்கையாக்
கிழவன், கடைசிப் படியில் நின்று
வாயால் ஊதிக் கொண்டான். பத்துப் பதினைந்து படிகள் அவன் எறியதில், அவனுடைய கிழட்டுக்
கால்கள் ‘வெட வெட’ வென்று நடுங்கின. தன் லயத்து வாசலை நோக்கி நடந்தவன், சூழ்நிலையில் ஒரு மாற்றம் தெரிவது உணர்ந்து நின்று
நிதானித்துப் பார்த்தான்.
அவனுடைய வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளியிருக்கும்
சிவசாமியின் வீட்டிற்குள்ளிருந்து ஒளி வெள்ளம் வெளியே பாய்ந்து கொண்டிருந்தது.
அந்த லயத்தின் ஒன்பது வீடுகளிலும் சிணுங்கிக் கொண்டிருந்த லாந்தர்
வெளிச்சத்திலும், சின்னப் போத்தல் விளக்குகளின் மங்கிய ஒளிக்கும் மத்தியில் அந்த
ஒரு வீட்டு வெளிச்சம் மட்டும் வாசலை நோக்கி வைரச் சுடரை அள்ளி வீசிக்
கொண்டிருந்தது.
ஒளியின் சக்தி மகத்தானதுதான்.
“
இவ்வாறு தொடங்குகிறது ,
எம்மத்தியில் வாழ்ந்து மறைந்துவிட்ட
மலையக படைப்பாளி என். எஸ். எம்.
ராமையாவின் வேட்கை என்ற சிறுகதை.
1967 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இச்சிறுதை வெளியான காலத்தில் பெற்றோ மக்ஸின்
விலை நூற்றி இருபது ரூபாதான் என்பதை இக்கதையின் மூலம் தெரிந்துகொள்கின்றோம்.
மலையகம் 200 பேசுபொருளாகியிருக்கும் இக்காலப்பகுதியில், இன்றைய தலைமுறை எழுத்தாளர்களும், வாசகர்களும், மலையக மக்களின்
ஆத்மாவை இலக்கியத்தில் பதிவுசெய்த இந்த மூத்த எழுத்தாளரைபற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்.
பதுளையில் ரொக்கில் தோட்டத்தில் 27-01- 1931 ஆம் திகதி மலையக
தோட்டத் தொழிலாளரின் குடும்பத்தில் பிறந்திருக்கும், ராமையா, அங்கு கணக்காளராகவும்
பணியாற்றியவர்.
இந்தத் தோட்டத்தின் துரையாக இருந்தவர்தான் பின்னாளில் இலங்கை
அரசில் பாதுகாப்பு அமைச்சராகவிருந்த ரஞ்சன் விஜேரத்தின.
தோட்டத்துரையின் அழுத்தங்களை தாங்கமுடியாமல் கொழும்புக்கு
வந்து, ஒரு இரும்புக்கடையில்
பணியாற்றினார்.
நான் எழுத்துலகில் பிரவேசித்த 1970 இற்குப்பின்னரே அவரை
அந்தக்கடையில் முதல் முதலில் சந்தித்தேன்.
“ இயற்கைச் சூழலின் மத்தியில் ஏகாந்தமாயிருந்து
கலையம்சம் மிக்க கலை, இலக்கியங்களைப்
படைக்க வேண்டிய மணிக்கரங்கள் இரும்புக்கடையின் மத்தியில் கணக்கு ஏட்டுடன் சதா
கருமமாற்றும் நிலை என்றுதான் மாறுமோ ? “ என்று
வீரகேசரியில் பணியாற்றிய நண்பர் மூர்த்தி,
என்.எஸ்.எம். ராமையாவைப் பற்றி மல்லிகையில் எழுதியிருந்தார். பின்னாளில் கனடாவுக்கு புலம்பெயர்ந்த மூர்த்தி, அங்கிருந்து
வீரகேசரி மூர்த்தி என்ற பெயரில் எழுதினார். தற்போது அவரும் எழுதுவதை
நிறுத்திக்கொண்டார்.
என். எஸ். எம். ராமையா, 1990 ஆம் ஆண்டு தமது 59 ஆவது வயதில் தனது
மூச்சை நிறுத்திக்கொண்டார்.
நானும் முதல்முதலில் என்.எஸ்.எம்.
அவர்களை அந்த இரும்புக்கடையில்தான் சந்தித்தேன்.