-->
" பூரணி காலாண்டிதழ் தற்பொழுதுதான் வெளியாகத்தொடங்கியிருக்கிறது.
ஒரு சில இதழ்களே வெளியாகியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அதன் குறைகளை சுட்டிக்காட்டும் அதேவேளையில், அதன்
வளர்ச்சிக்காக உழைக்கும் பூரணி குழுவினருக்கு அதில் உள்ள
நிறைவுகளை எடுத்துக்கூறி ஊக்குவிக்கவேண்டியது நம்போன்ற
வாசகர்களது கடமையாகும். அதற்கு இப்படியான விமர்சன அரங்குகள் சந்தர்ப்பம் அளிப்பது மகிழ்ச்சிதரக்கூடிய
விஷயமாகும். சஞ்சிகைகள் எல்லோருக்கும் புரியக்கூடிய மாதிரி வெளிவருவது சிரமசாத்தியமாகும்.
வாசகர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இலக்கியம் மக்களிடம் ஒரு சாதனமாக அறிவிக்கப்படவேண்டும்.
பூரணியில் ஒரு சில அசட்டுத்தனமான கவிதைகள் இடம்பெற்றது கண்டிப்புக்குரிய விடயம். அதுபோன்றவை
இனிமேலும் வெளிவந்து விமர்சகர்களின் கண்டனத்திற்கு ஆளாகக்கூடாது. "
இவ்வாறு 25-06-1973 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு கொழும்பு சட்டக்கல்லூரி தமிழ்மன்றத்தில் நடந்த " பூரணி" காலாண்டிதழ் விமர்சன அரங்கில்
உரையாற்றிய ஒரு மாணவர் பேசினார்.
அந்த நிகழ்ச்சிக்கு தலைமைதாங்கியவர் அங்கு சட்டம்
படித்துக்கொண்டிருந்த குமாரசாமி விநோதன். அவர்தான் அச்சமயத்தில் தமிழ் மன்றத்தின் தலைவர்.
அவர் தலைமையுரையாற்றத்தொடங்கியதுமே அடிக்கடி
குறுக்கிட்டு இடையூறு செய்துகொண்டிருந்தார் ஶ்ரீகாந்தா
என்ற மற்றும் ஒரு மாணவர். இவர் குதர்க்கம் பேசி
தலைவருக்கு சினமூட்டிக்கொண்டிருந்தார்.
எனினும் சினம்கொள்ளாமல் பவ்வியமாக நிகழ்ச்சியை
விநோதன் நடத்தினார். இந்த விமர்சன அரங்கிற்கு பூரணி இணை ஆசிரியர் என்.கே.மகாலிங்கம்
அவர்களுடன் சென்றிருந்தேன். சட்டக்கல்லூரி
மாணவர்கள் பலரும் வந்திருந்தார்கள்.
எழுத்தாளர்கள் இளம்பிறை எம். ஏ. ரஹ்மான், எச்.எம்.பி.
மொஹிதீன் ஆகியோருடன் சட்டக்கல்லூரி மாணவர்கள் எம்.எச்.எம் அஷ்ரப், பெரி. சுந்தரலிங்கம்,
மனோகரன், வரதராஜா, சிவராஜா ஆகியோரும் உரையாற்றினர்.
பின்னாளில் சிறந்த மேடைப்பேச்சாளராக வளர்ந்த
செல்வி சகுந்தலா சிவசுப்பிரமணியமும் சபையில் அமர்ந்திருந்தார். அவரும் அங்கு சட்டம்
படித்துக்கொண்டிருந்தவர்.
ஏறக்குறைய நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்குப்பின்னர்
அந்த விமர்சன அரங்கை நினைத்துப்பார்க்கின்றேன். அவ்வாறு நினைக்கத்தூண்டியவர்தான் எம்.எச். எம் அஷ்ரப். இந்தப்பதிவின் தொடக்கத்தில் நான் எழுதியிருக்கும் அந்தவரிகளைப்பேசியவர்தான்
அஷ்ரப்.
இவர் சட்டக்கல்லூரி மாணவராக அன்று எனக்கு அறிமுகமான இலக்கியவாதி. கவிஞர். பேச்சாளர்.
1983 மார்ச் வரையில் இந்த இலக்கியத்தளத்தில்தான் எனக்கு இவர் நெருக்கமானவர்.
1972 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பூரணி காலாண்டிதழ்
கொழும்பில் வெளியாகத்தொடங்கியது. அதன் வெளியீட்டுவிழா கொழும்பு விவேகானந்தா வித்தியாலய
மண்டபத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் தலைமையில் நடந்தவேளையில் அங்குசென்றதனால்
பல இலக்கியவாதிகளின் அறிமுகம் கிடைத்தது.
பூரணியிலும் எழுதுவதற்கு களம் கிடைத்தது. இணை
ஆசிரியர்கள் என்.கே. மகாலிங்கம் - க.சட்டநாதன், பூரணி குழுவினர் மு.நேமிநாதன், த. தங்கவேல்,
இமையவன், இரா. சிவச்சந்திரன், கே.எஸ். பாலச்சந்திரன் ஆகியோரும் அறிமுகமாகி இலக்கிய
நண்பர்களானார்கள்.
சட்டக்கல்லூரி தமிழ் மன்றம் பூரணிக்காக ஒரு விமர்சன
அரங்கை நடத்தும் செய்தியறிந்து, அங்கு சென்றதனால்
சில மாதங்களுக்கு முன்னர் சிறையிலிருந்து விடுதலை பெற்று வந்திருந்த எச்.எம்.பி. மொஹிதீனையும்
பூரணி விமர்சன அரங்கில் சந்தித்தேன். பூரணி
அந்த அரங்குவரையில் மூன்று இதழ்களைத்தான் வெளியிட்டிருந்தது.