மகாகவி பாரதியின் ஞானகுரு அல்வாய் அருளம்பலம் சாமி அவர்கள் தோன்றிய இலங்கையின் வடபுலத்தில் அல்வாய் பிரதேசம், பல கலை, இலக்கியவாதிகளையும் தமிழ் அறிஞர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
அவ்வூரிலிருந்து 2007 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதல் வெளிவரத்தொடங்கிய ஜீவநதி கலை, இலக்கிய மாத இதழ் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தனது 136 ஆவது இதழை ஆண்டுமலராக வெளிக்கொணர்ந்துள்ளது.
இதன் ஆசிரியர் கலாமணி பரணீதரன் ஈழத்து இலக்கிய உலகில் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்.
யாழ்குடா நாட்டிலிருந்து மறுமலர்ச்சி முதல் மல்லிகை வரையில் பல இதழ்கள் தோன்றி காலப்போக்கில் மறைந்துவிட்ட சூழலில் அங்கு ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஜீவநதியாக ஊற்றெடுத்து வந்தது இந்த இதழ்.
இலங்கையில் நீடித்த போர்க்காலம் முடிவுறாத காலப்பகுதியில் வடக்கிலிருந்து வெளிவரத்தொடங்கிய ஜீவநதி, ஈழத்து சிற்றிதழ் இலக்கிய வரலாற்றில் கூடுதலான சிறப்பிதழ்களை வெளியிட்டிருக்கும் பெருமையும் பெற்றது. கடந்த பதின்மூன்று ஆண்டுகளுக்குள் இருபது சிறப்பிதழ்களையாவது ஜீவநதி வெளியிட்டிருக்கும் என்பது எமது கணிப்பு.
ஜீவநதி அவுஸ்திரேலியா – கனடா சிறப்பிதழ்களையும் முன்னர் வெளியிட்டு இந்த நாடுகளிலிருந்து எழுதிவரும் படைப்பாளிகளையும் ஊக்கிவித்துள்ளது. அத்துடன் சில ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் வரிசையில் எழுத்தாளர்கள் கே.எஸ். சிவகுமாரன், க. சட்டநாதன், செங்கைஆழியான், தெணியான், குழந்தை சண்முகலிங்கம் ஆகியோரை கௌரவிக்கும் வகையிலும் சிறப்பிதழ்களையும் வெளியிட்டிருக்கிறது.
இவை தவிர, பெண்கள் சிறப்பிதழ் , கவிதைச் சிறப்பிதழ் , உளவியல் சிறப்பிதழ் , இளம் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் , சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் , மலையக சிறப்பிதழ் , திருகோணமலை சிறப்பிதழ் , ஈழம்- கவிதை சிறப்பிதழ் , ஈழத்து பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ், சிறுவர் இலக்கிய சிறப்பிதழ், ஈழம் ஹைக்கூ கவிதைச் சிறப்பிதழ் முதலானவற்றையும் வெளியிட்டுள்ளது.
அத்துடன் ஜீவநதி வெளியீடாக இதுவரையில் 90 இற்கும் மேற்பட்ட நூல்களும் வெளிவந்துள்ளன. ஜீவநதியின் ஆசிரியர் கலாமணி பரணீதரனும் படைப்பிலக்கியவாதி. இவரது தந்தையார் கலாமணியும் மூத்த எழுத்தாளர். கலாமணியின் தந்தையார் தம்பிஐயா வடபுலத்தில் கிராமங்கள்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தடவை இசைநாடகங்களை அரங்கேற்றியிருப்பவர்.
பரணீதரனின் மனைவி விஷ்ணுவர்த்தினியும் படைப்பிலக்கியவாதியாவார். இவ்வாறு ஒரு கலை இலக்கியப் பாரம்பரியத்திலிருந்து ஜீவநதியை தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் பரணீதரனுடைய சில இலக்கிய நூல்களும் வரவாகியுள்ளன.