அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வழங்கும் சொற்திறன் அரங்கம்- 2018

.



போட்டியின் வெற்றியாளர்கள்  அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சி மற்றும் வணக்கம் மலேசியா  ஆகியவை உலகளாவிய ரீதியில்  நடாத்தும் பேச்சுப் போட்டியில் அவுஸ்ரேலிய போட்டியாளர்களாக பங்கேற்க வேண்டும்

இப்போட்டி மூன்று சுற்றுக்களாக  இடம்பெறும். மூன்றாம் சுற்றைத் தொடர்ந்து  இறுதி சுற்றான மெகா சுற்று   அவுஸ்ரேலிய தேசிய ரீதியில் இடம்பெறும் .

முதல்  சுற்று அவுஸ்ரேலியாவின்  மாநிலங்களில் தனித் தனியாக இடம்பெறும் . இதிலிருந்து  தேசிய ரீதியில்  வெற்றியாளர்கள்  சிலர் தெரிவு செய்யப்படுவார்கள் . இம் முதல் சுற்றில் தெரிவு செய்யப்படுபவர்கள்  இரண்டாம் சுற்றில் பங்கேற்பார்கள் .

 இரண்டாம் சுற்றில் இருந்து நான்கு அல்லது எட்டு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். போட்டியாளர்கள்  நான்கிற்கு மேல் இருந்தால் மூன்றாம் சுற்று இடம்பெறும். போட்டியாளர்கள்  நான்கிற்கு  கீழ் இருந்தால் இவர்களே இறுதி சுற்றான மெகா சுற்றில் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள் .

இறுதி சுற்றான மெகா சுற்றில் வெற்றி பெறும் மூன்று  வெற்றியாளர்கள்  அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சி மற்றும் வணக்கம் மலேசியா  ஆகியவை உலகளாவிய ரீதியில்  நடாத்தும் பேச்சுப் போட்டியில் அவுஸ்ரேலிய போட்டியாளர்களாக பங்கேற்க வேண்டும் .

மேலதிக விபரங்களுக்கும் விண்ணப்ப படிவங்களுக்கும்  

நாம்படிப்போம் வள்ளுவத்தை ! - ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )

                படைக்கின்ற இலக்கியங்கள் பயனளிக்கும் பாங்கினிலே 
                கிடைக்கின்ற போதுதான் படைப்பினுக்கு உயர்வாகும் 
image1.JPG                படைக்கின்றார் மனப்பாங்கும் படைப்பூடே வந்துநிற்கும் 
                படைப்பவர்கள் சமூகத்தை மனத்திருத்தல் அவசியமே  !

               நெறிபிறளும் வகையினிலே படைக்கின்ற இலக்கியங்கள்
               நீண்டகாலம் கொண்டதாய் நின்றுவிடல் அரிதாகும் 
               குறிக்கோளை மனமிருத்தி வருகின்ற இலக்கியங்கள்
               குவலயத்தால் என்னாளும் கொண்டாடி போற்றப்படும் ! 

               தனிப்பட்ட கருத்துக்களை தானுரமாய் கொண்டபடி 
               தரமற்ற படைப்புகளும் தரணிக்கு வருகிறது  
               நுனுப்புல்லை மேய்ந்தவராய் படைக்கின்றார் இருந்துவிடின் 
               வருகின்ற படைப்புகளும் வளமற்றே வந்துநிற்கும் ! 

               வாழுகின்ற வழிகூறும் வகையினிலே இலக்கியங்கியங்கள் 
               வருகின்ற போதிலேதான் வரட்சிநிலை அகன்றுநிற்கும் 
               மோதுகின்ற குணமதனை முன்னிறுத்தி இலக்கியங்கள் 
               சேதிசொல்லும் போதிலேதான் திசைகூடக் கெட்டுவிடும்  ! 

               வள்ளுவரின் படைப்பதனை வையகத்தார் வாழ்த்துகிறார் 
               இனங்கடந்து மொழிகடந்து எல்லோரும் விரும்புகிறார்
               சொல்லவரும் அத்தனையும் நல்லபடி சொல்லுகிறார்
               வெல்லுகின்ற இலக்கியமாய் வள்ளுவமும் இருக்கிறது ! 

சேக்கிழார் விழா

சிட்னி சைவ மன்றம் மே மாதம் 27ம் திகதி நடாத்திய சேக்கிழார் விழாவின் போது எடுக்கப்பட்ட படங்கள் :


வேறு யாருமில்லை லெனின் மொறயஸ் - பகுதி 2 - ச சுந்தரதாஸ்


சென்னையில் சில காலம் தங்கி ஒளிப்பதிவுத் துறையிலும் ஒப்பனையாளராகவும் பயிற்சி பெற்றிருந்த லெனின் இலங்கைத் திரும்பியதும் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மேடை நாடகங்களுக்கு மேக்கப் மேனாக பணியாற்றத் தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில் லெனின் கொட்டாஞ்சேனையில் வசித்து வந்தார். பல நாடகக் கலைஞர்கள் அந்த பிரதேசத்திலேயே வசித்து வந்தார்கள். அவர்களின் அறிமுகத்தை அடுத்து மாந்தருள் மாணிக்கம் என்ற நாடகத்தை இயற்றி மேடை ஏற்றினார் லெனின். இந்த நாடகம் வெற்றி பெற்றது.  

லெனின் ஒப்பனையாளராக பணியாற்றிய ஒரு நாடகம் கொழும்பு லயனல் வென்ற் அரங்கில் மேடையேறியது. இந்த நாடகத்தை பார்ப்பதற்காக நாடகத்தில் நடித்த நடிகர் ஏகாம்பரம் தன் நண்பர் ஒருவரை அழைத்திருந்தார். அவ்வாறு வந்தவர்தான் பின் நாட்களில் பிரபல ஒளிப்பதிவாளராகத் திகழ்ந்த வி வாமதேவன் ஆவர்.  கொம்பரத்தின் மூலம் லெனினுக்கு வாமதேவனின் அறிமுகம் அன்று கிட்டியது. லெனினின் ஆர்வத்தைக் கண்ட வாமதேவன் அவரை சிலோன் ஸ்டுடியோவிற்கு வரும்படி அழைத்தார். 

அப்போது சிலோன் ஸ்டுடியோவில் நிர்வாகியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் பிறேம்நாத் மொறயஸ் அவரின் நேரடி அறிமுகம் வாமதேவன் மூலம் லெனினுக்கு கிட்டியது. அதன் பலன் நாடகங்களுக்கு மேக்கப் மேனாக பணியாற்றிக் கொண்டிருந்த லெனினுக்கு திரைப்படமொன்றிற்கு மேக்கப் மேனாக பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது. 

படித்தோம் சொல்கின்றோம்: ஏ.கே. செட்டியார் (1911 - 1983) எழுதிய உலகம் சுற்றும் தமிழன் குறைந்த வளங்களுடன் பயணித்து அரிய தகவல்களுடன் திரும்பிய ஊர் சுற்றியின் அனுபவங்கள் - முருகபூபதி


பயண இலக்கியம், அனைத்து மொழிகளிலும் இடம்பெறும் இலக்கியவகைகளில் ஒன்று. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, விமர்சனம் முதலான துறைகளைப்போன்று பயண இலக்கியமும் வாசகர்களினால் விரும்பிப்படிக்கப்படுகிறது.
சமகாலத்தில் மேலும் சில வகை இலக்கியங்கள் அறிமுகமாகிவிட்டன. அதில் ஒன்று புனைவுசாராத இலக்கியம். அனைத்து இலக்கியவகைகளிலுமே பயணம்தான் பெரிதும் தங்கியிருக்கிறது.
வாழ்க்கைப்பயணத்தில் கற்றதையும் பெற்றதையும் அனுபவித்ததையுமே இலக்கிய வகைகளும் பிரதிபலிக்கின்றன.
பிரத்தியேகமான ஓர் வடிவமாக " பயண இலக்கியம்" தனது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு முக்கிய காரணங்கள் எவை என்பதை பார்த்தால், வாசகன் தான் என்றைக்குமே பார்த்தறியாத நாடுகள் பற்றியும் அந்நாடுகளின் வரலாறு , மொழி, சமூகம், அரசியல் , பண்பாடு, பொருளாதாரம், அதன் வளங்கள், குறைபாடுகள், முன்னேற்றங்கள் முதலான இன்னபிற விடயங்களையும் அறிந்துகொள்வதற்கு இந்த இலக்கியவடிவம் உகந்தது என்ற முடிவுக்கு நாம் வரலாம்.
வெளிநாடுகளுக்கு சென்று திரும்பித்தான் பயண இலக்கியம் எழுதவேண்டுமென்பதில்லை. உள்ளுருக்குள்ள பயணித்தும், தான் வாழும் நாட்டின் பிரதேசங்களுக்கு சென்றும் பயண இலக்கியம் படைக்கமுடியும். சமகாலத்தில் பலரதும் பத்தி எழுத்துக்களும் இந்தகைய வடிவத்திற்குள்தான் வருகின்றன.
நவீன விஞ்ஞானம் முழு உலகையும் இன்று எங்கள் கைவிரல்களுக்குள் அடக்கிவிட்டிருக்கிறது. இருந்த இடத்திலிருந்து கணினியை தட்டி, அல்லது ஸ்மார்ட் போனைத்தட்டி அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்த வாய்ப்பு வசதியற்றவர்களுக்கு மற்வர்கள் எழுதும் பயண இலக்கியங்கள் துணை புரிகின்றன. இதழ்கள், பத்திரிகைகளும் பயண இலக்கியத்திற்கு களம் தருவதன் காரணத்தையும் இந்தப்பின்னணிகளிலிருந்தும் பார்க்க முடிகிறது.
பல வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஆனந்தவிகடன் ஆசிரியராகவிருந்த மணியன் பற்றி அறிவீர்கள். அவர் உலகம் சுற்றிவந்து தொடர்ச்சியாக ஆனந்தவிகடனில் பயண இலக்கியம் படைத்தவர். அதற்கு அவர் சூட்டியபெயர் " இதயம் பேசுகிறது" அதனால் அவரை இதயம் பேசுகிறது மணியன் என்றும் அழைக்கத்தொடங்கினார்கள்.
அந்தப்பெயர் புகழ்பெற்றதனால், ஆனந்தவிகடனை விட்டு அவர் வெளியேறியதன் பின்னர் தாமாகவே தொடங்கிய வார இதழுக்கு ' இதயம் பேசுகிறது என்றும் பெயரிட்டார்.
                        இவர் எமது இலங்கைக்கும் வந்திருக்கிறார். இலங்கைப்பயணம் பற்றியும் எழுதியவர். யாழ்ப்பாணத்திற்கு இவர் வந்தபோது ஒருவர் இவரிடம் ஆறுமுகநாவலர் பற்றித்தெரியுமா? எனக்கேட்டதற்கு " தனக்கு நாவலர் நெடுஞ்செழியனைத்தான் தெரியும்" எனச்சொன்னவர்.

நடந்தாய் வாழி களனி கங்கையே - அங்கம் -03 களனி தொகுதி பிரதிநிதி மற்றும் ஒரு "நாயகன்" " நீங்கள் நல்லவரா..? கெட்டவரா...? - ரஸஞானி



" ஆத்தோரம் மணல் எடுத்து அழகழகாய் வீடு கட்டி, தோட்டம் இட்டு செடிவளர்த்து, ஜோராக குடியிருப்போம்" என்ற திரைப்படப் பாடல் உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அரைநூற்றாண்டுக்கு முன்னர் ( 1964 இல்) வெளிவந்த வாழ்க்கை வாழ்வதற்கே என்ற திரைப்படத்தில் இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் வாயசைக்கும் இந்தப்பாடலை கவியரசு கண்ணதாசன் இயற்றியிருந்தார்.
இக்காலத்தில் இத்தகைய பாடல்கள் வெளியாவது அபூர்வம். இயற்கையையும் அதனோடு இணைந்த வாழ்க்கையையும் அழகியலோடு சித்திரித்தன அக்காலத் திரைப்படப்பாடல்கள்.
இன்று பெண்ணின் உடலை ஆணும்,  ஆணின் உடலை பெண்ணும் வர்ணிக்கும் காதல் களியாட்ட பாடல்களும் குத்தாட்டப் பாடல்களும்தான் திரைப்படம் முதல் சுப்பர் சிங்கர் வரையில் நீட்சி பெற்றுள்ளன.
ஆற்று மணல்தான் வீடு கட்டுவதற்கும் இதர கட்டுமான வேலைகளுக்கும்  உகந்தது. கடற்கரையோர மணல் பொன்னிறமாகத்தான் இருக்கும். ஆனால், அது உகந்தது அல்ல! சிறுவயதில் எங்கள் வீட்டருகிலிருந்த கடற்கரையிலிருந்து மணல் அள்ளிவந்து எங்கள் வீட்டு முற்றத்தில் தூவிவிடுவோம். சில நாட்களில் அந்த மணல் கறுத்துப்போகும். காரணம் அதன் உவர்ப்புத்தன்மைதான்.
அதேசமயம் வீட்டருகிலிருந்த புத்தளம் வெட்டு வாய்க்காலின் ( மகா ஓயா நதியின் கிளை) அருகிலிருந்து களிமண் எடுத்துவந்து எங்கள் வீட்டு சமையல் கூடத்தில் எங்கள் பாட்டி, அழகான அடுப்படி அமைப்பார்கள். விறாந்தாவுடன் சேர்த்து அழகான திண்ணையும் உருவாக்குவார்கள்.
களனி கங்கையிலிருந்து மணல் அள்ளி,  பெரிய படகுகளில் ஏற்றி கரைக்கு எடுத்துவந்து விற்பனை செய்யும் காட்சிகளை பார்த்திருப்பீர்கள்.
இந்தத்தொழில் இலங்கையில் மாத்திரமின்றி அயல் நாடுகளிலும் நடைபெறுகிறது. தமிழக எழுத்தாளர் ஆ. மாதவன் மணலும் புனலும் என்ற நாவலில்  நதிகளில் மணல் எடுக்கும் தொழிலாளர்களின் வாழ்வை சித்திரித்துள்ளார்.
சுரங்கத்தொழிலாளர்களின் வாழ்வில் வரும் சோதனைகள் வேதனைகள் ஆற்று மணல் அள்ளும் தொழிலாளர்களுக்கும்  இருக்கின்றன. களனி கங்கையில் மூங்கில்களை பிணைத்துக்கட்டி எடுத்துச்செல்வதையும் அவதானித்திருப்பீர்கள்.
மூங்கில்களும் கட்டுமானப்பணிகளுக்கும் குடிசை வீடுகளுக்கும் உதவும். மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே என்றும் ஒரு பாடல் இருக்கிறது. கங்கைக்கரைகளில் செழித்து வளரும் தாவரம்தான் மூங்கில். புல்லாங்குழல் இசைக்கருவியின் தாயும் இந்த கங்கைகரைகளில் வளரும் மூங்கில்தான். குடிசைக்கைத்தொழிலுக்கு பெரிதும் உதவும் மூங்கிலை நம்பி வாழும் ஏழைக்குடும்பங்களை பார்த்திருப்பீர்கள். கங்கைக்கரைகளில் வளரும் மூங்கில்கள் பற்றியே விரிவாக எழுதுவதற்கு ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.
இவ்வாறு எங்கள் களனி கங்கை எமது தேசத்திற்கும் மக்களுக்கும் பலவழிகளில் உதவி வந்தாலும், களனி என்ற பெயரில் இந்த கங்கையின் அருகிலிருக்கும் பிரதேசம் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தத் தொகுதிக்கு ஒரு முக்கியமான இலட்சணமும் உண்டு. அங்கிருந்து  நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகும் வேட்பாளர்கள் ஏதோ ஒருவகையில் விவகாரத்திற்குரியவர்கள்தான்.

மக்களின் போராட்டமும் ஸ்டெர்லைட்டும்.. (கட்டுரை) வித்யாசாகர்!


ரு மக்களின் போராட்டத்தை எதிர்ப்போர் முதலில் அதன் துவக்கத்தை அல்லது காரணத்தை சரிவர அலசிப் பார்த்ததுண்டா?
நல்லது கெட்டது இரண்டிலும் நசுக்கப்படுவது நாட்டு மக்களே எனில் அம்மக்களை ஆளும் அரசோ அவ்விடத்து அரசுசார் அதிகாரிகளோ தலைவர்களோ நெறியற்று இருப்பதை, எங்கோ தனது கடமையை மீறியுள்ளதை, நேர்வழி பிசகியிருப்பதை அறமறிந்தோர் ஏற்பர்.
உரிமைகள் பலருக்கு மறுக்கப்படுகையிலோ, ஒரு பொதுவான சமூகநீதியை மேலோர் அவமதிக்கையிலோ அல்லது தட்டிக் கழிக்கையிலோ மட்டுமே ஒரு மண்ணில் போராட்டம் எழுகிறது. அல்லாது ஏதும் வாய்ச்சண்டையாகவே முடிகிறது.
தற்போது நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு பெரிய காரணமெல்லாம் கேட்டு முழுதாக ஆராயவெல்லாம் அவசியம் கூட இல்லை, ஏனெனில் அது வாழ்தலின் நிலைத்தலின் சுவாசித்தலின் மூலஅடிப்படையைக் கொண்டு அம்மண்ணின் மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஒன்று. அதை மறுக்கவோ அவமதிக்கவோ எவருக்குமிங்கே உரிமையில்லை.
என் அப்பன் ஆத்தா வாழ்ந்த வீடு, பாட்டன் முப்பாட்டங் கணக்கா என் சனங்க வாழ்ந்த ஊரையும் தெருக்களையும் அழிச்சிட்டுத்தான் நீ கோபுரம் கட்றன்னு சொன்னா, அது கோவிலென்றாலும் மறுக்கும் சுய உரிமை எனக்குண்டு.
ஒரு வீட்டில் வாழ்ந்தவங்களோட நினைவும் அவர்களின் உயிர்சுமந்தக் காற்றும் அந்த வீட்டின் கல்லுமண்ணெல்லாம் கலந்திருக்கும்; ஆமாவா இல்லையா? எத்தனைப்பேருக்கு யார்வீட்டிலோ போய் படுத்தால் தூக்கம் வரும்? வராது? ஒரு வீடு தெரு ஊரென்பது வாழ்க்கையோடு முதன்மையாகச் சேர்ந்த சிலவாகும். அத்தகு வாழ்க்கையை பிடுங்கினா, வாழுமிடத்தை சிதைத்தால், உங்களுக்கு கோபம் வராதா?

இலங்கைச் செய்திகள்

சிறுபான்மை மதத்தினர் மீது தொடரும் தாக்குதல்கள் - அமெரிக்கா

 "பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக்குவதற்கு 750 ஏக்கர் காணி போதுமானது"

யாழில் பத்திரிகை விநியோகஸ்தர் மீது வாள்வெட்டு

வடக்கு அபிவிருத்தி தொடர்பில் ஆராய யாழில் பிரதமர்

யாழில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - நெதர்லாந்து தூதுவர்




சிறுபான்மை மதத்தினர் மீது தொடரும் தாக்குதல்கள் - அமெரிக்கா

30/05/2018 இலங்கையில் சிறுபான்மை மதப்பிரிவினர் மீது தொடர்ந்தும் தாக்குதல்கள் இடம்பெறுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
2017 இல் உலகநாடுகளில் காணப்பட்ட மதசுதந்திரம் குறித்த அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் மீது வருடாந்த அறிக்கையிலேயே இந்த குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் தேசிய கிறிஸ்தவ எவாஞ்செலிகள்  என்ற அமைப்பு கடந்த வருடம் 97 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக பதிவு செய்துள்ளது என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
கிறிஸ்தவ மதகுருமார் மீதான தாக்குதல்களும் தேவாலயங்கள் மீதான தாக்குதல்களும் இடம்பெற்றதாகவும் மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் காணப்பட்டதாகவும் அமெரிக்கா குறிப்பிட்ட அமைப்பை மேற்கோள்காட்டி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகச் செய்திகள்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு

102 போதைவஸ்து கடத்தற்காரர்கள் சுட்டுக்கொலை

பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல் - மூவர் பலி

காதல் திருமணம் செய்த இளைஞர் கொலை ; 6 பேர் கைது

நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் வெளியேற்றப்பட்டார் ஸ்பெயின் பிரதமர்!!!

12ஆம் திகதி சிங்கப்பூரில் பெரிய விஷயம் நடைபெறும் : ட்ரம்ப்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு

28/05/2018 தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை இன்று மாலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமா - காளி திரை விமர்சனம்


காளி சூப்பர் ஸ்டார் டைட்டிலில் பல வருடங்களுக்கு முன்பு வந்த படம். தற்போது அதே டைட்டிலில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்துள்ள படம் தான் காளி. விஜய் ஆண்டனி மீதுள்ள நம்பிக்கையை மீண்டும் நிலை நிறுத்தினாரா? பார்ப்போம்.

கதைக்களம்

விஜய் ஆண்டனி படங்கள் என்றாலே ஒரு சைக்கோ கதாபாத்திரம், அம்மா செண்டிமெண்ட் இது இரண்டும் தான் பெரும்பாலும் இருக்கும். அந்த வகையில் விஜய் ஆண்டனிக்கு எப்போதும் தன் கனவில் ஒரு பாம்பு, மாடு தெரிகின்றது. அமெரிக்காவில் முன்னணி டாக்டராக இருக்கும் இவருக்கு ஒரு கட்டத்தில் நாம் வளர்ப்பு மகன் தான் என தெரிய வருகின்றது.
பிறகு தன் வளர்ப்பு பெற்றோர்கள் அனுமதியுடன் இந்தியா வர அங்கு தன் தாய் இறந்துவிட்டார் என தெரிகின்றது. அதே நேரத்தில் தன் தந்தை உயிருடன் இருப்பதை அறிந்த விஜய் ஆண்டனி தன் அப்பா யார் என்று தேடி செல்கின்றார். தன் தந்தை யார் தன் அம்மா ஏன் இப்படி ஆனார் என்பதை விஜய் ஆண்டனி கண்டுப்பிடிப்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விஜய் ஆண்டனிக்கே அளந்து எடுத்த கதாபாத்திரம், தனக்கு என்ன வருமோ அதை அறிந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், ஆனால், பல பேட்டிகளில் எனக்கு நடிக்க தெரியாது என்று சொல்லி தப்பித்துக்கொள்கிறார்.
கொஞ்சம் எக்ஸ்பிரஷேன் காட்ட முயற்சி செய்யுங்கள் விஜய் ஆண்டனி, இன்னும் எத்தனை நாளைக்கு ஒரு Safe Zone ல் இருப்பீர்கள். அம்மா செண்டிமெண்டும், சைக்கோ செண்டிமென்டும் விஜய் ஆண்டனியின் முந்தய படத்தில் இருக்கும். தற்போது கூடுதலாக அவர் அப்பா செண்டிமெண்டை இதில் சேர்த்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதியை தாங்கி பிடிப்பதே யோகி பாபு தான், தன் ஒன் லைன் கவுண்டரில் கலக்கியுள்ளார், அதிலும் விஜய் ஆண்டனி அப்பாவை கண்டிப்பிடிக்க அவர் கொடுக்கும் ஐடியாக்கள், ஊர் தலைவர் வீட்டில் திருடப்போவது, அவருக்கே சரக்கு வாங்கி கொடுத்து அவர் கதையை கேட்டு கலாய்ப்பது என ஒன் மேன் ஷோ. சூப்பர் யோகி பாபு.
படத்தில் மூன்று கதை பயணிக்கின்றது, மூன்று பேரிடம் தன் அப்பாவை பற்றி விஜய் ஆண்டனி விசாரிக்கையில் அந்த கதையின் நாயகனாக விஜய் ஆண்டனி வருகின்றார். வித்தியாசமான முயற்சி தான்.
ஆனால், மூன்றாவதாக வரும் கதையை தவிர மற்ற இரண்டு கதையிலும் சுவாரஸ்யம் இல்லை. மூன்றாவது கதை தொடங்கும் போதே மக்களிடம் அட இன்னொன்றா என்ற சோர்வு தெரிகின்றது.
மூன்று கதையிலும் ஒரு எமோஷ்னல் விஷயத்துடன் முடிவடைந்தாலும் அது எந்த விதத்தில் ஆடியன்ஸுடன் கனெக்ட் ஆனது என்றால் கேள்விக்குறி தான்.
படத்திற்கு இசையே விஜய் ஆண்டனி என்பதால் பாடல்களில் கவர்கின்றார், அதிலும் குறிப்பாக அரும்பே பாடலில் செம்ம ஸ்கோர் செய்துள்ளார்.

க்ளாப்ஸ்

யோகி பாபு முதல் பாதியை தாங்கிபிடிப்பதே அவர் தான்.
மூன்றாவது கதை அதில் சொன்ன விஷயம் கவர்கின்றது.
விஜய் ஆண்டனியின் இசை.

பல்ப்ஸ்

சோர்வாக செல்லும் திரைக்கதை.
எந்த கதையிலும் நாசர் தாடியை போலவே ஒட்டாத காதல் காட்சிகள்.
மொத்தத்தில் விஜய் ஆண்டனியின் தேடல் பெரிது என்றாலும் சுவாரஸ்யம் குறைவு.
நன்றி CineUlagam