அனுமான் வால் தீ - - எச். ஏ. அஸீஸ்

.

நேற்று  எங்கோ  கிளர்ந்த  தீப்பிழம்பு 
மிக  நெடு  தூரம்
நெருங்கி  வந்து
நம்மை  எரிக்கும்  நேரம்  இதுவோ
நின்று  நிதானிக்க  நிம்மதி  மூச்சுவிட
கொஞ்சம்  இடம்  எங்கே
நேற்று   நடந்ததென  மறந்துவிட்டு
நிகழ்ந்த   துயரங்களை   புறம்தள்ளி
மெல்ல  முன்செல்ல  நினைத்தாலும்
என்ன  கெதி  நாளை யென
எண்ணுவது  நியதி  அன்றோ
இன்று  எரிவது  எதிர்காலம்  இல்லையென
எங்கு  எவர்  தருவர்  உறுதி  நண்பா
அனுமான்  வால்  தீ
அகன்ற   பிழம்பாகி
நடந்த  இதிகாசம்   நிகழ்கிறதா   மீண்டும்
நிஜத்தில்  தீ  யாகம்  நின்று  குளித்தாடும்
நிமிடம்   வருகிறதா  நெருங்கி
எல்லோர்  உயிரும்  நாளை
மெல்லக்  கொள்ளும்  காவு
எரிந்து  தீவதுவா   தீவு 
எவர்  பொறுப்பு  இதற்கெல்லாம்  கூறு
நெருப்பென்றால்  இந்நெருப்பே
அழகானது  என  வியந்து 
வாழ்த்துவரோ  மெய் உணர்ந்தோர்  யாரும்
கரங்களிலே  இரத்தக்கறை
படியாத   இலங்கையரை 
காண  முடியாத காலம் வருகிறதா
விடியாத  இரவுகளைத் தேடும்
முடியாத முற்றுகையா இது
எதிர்காலம்  இருப்பு  எல்லாம்
எரிந்து  போக  அப்பொழுது
பெரும்பான்மை   சிறுபான்மை
இல்லை  இங்கு  எனச் சொல்லி
வியப்பாரோ   மானுடர்கள்  வெளியே
என்ன  விதி ஆள்கிறது  இன்று
எரிமலையின்  உச்சியிலே  நின்று
-----0-------







No comments: