திருவிளக் கேற்றிடும் கார்த்திகைக் காலம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா


மாலயன் மருளது போக்கிய காலம்

மலரடி திருமுடி உணர்த்திய காலம்
தேவரும் தெரிசனம் கண்டநற் காலம்
திருவிளக் கேற்றிடும் கார்த்திகைக் காலம் 

கந்தனை வந்தனை செய்திடு காலம்
கனற்பொறி குழந்தையாய் ஆகிய காலம்
நொந்திடு அடியவர் பவவினை போக்கிட
செந்திரு விளக்கதை ஏற்றிடும் காலம்

ஒளிர்வளர் விளக்காய் ஒளிர்ந்திடும் காலம்

தெளிவதைக் கருத்தி லமர்த்திடும் காலம்
பொலிவுடன் பேரொளி தோன்றிய காலம்
போற்றியே தீபத்தை ஏற்றுவோம் வாரீர்

 

ஆண்டவன் நினைப்பை அகற்றிய ஆணவம்
தாண்டவம் தகர்ந்த தகைவுடைக் காலம்
நீண்டிடும் மாயையை நிர்மல மாக்கிய
நிலைபெறு சக்தியை உணர்த்திய காலம்
 

நெறிபிறள் நினைப்பினை நீக்கிய காலம்

அறிவெனும் உண்மையை அமர்த்திய காலம்
பொறிபுலன் சிவனருள் புகுத்திய காலம்
போற்றிடும் கார்த்திகை பொன்னிகர் காலம்

ஆலயம் எங்கணும் தீபங்கள் ஒளிரும்

அனைவரும் தீபத்தை நாடியே நிற்பார்
வீதிகள் வீடுகள் ஒளியினை நல்கும்
விளக்குகள் ஏற்றிடும் சிறப்புடைக் காலம்

 

உதயனின் நினைவுகளில் இருந்து நித்தி அண்ணை ! உதயன் – மெல்பன்


நித்தி அண்ணையை  முதன் முதலாய் கண்டது 1993 ஆம் ஆண்டு மே மாசம்  clayton Hall இல்.  இந்த  ஆண்டு அவரது கொழும்பு மெயில்,  கண்டம் மாறியவர்கள் நிகழ்ச்சிகளில்   அவரை சந்தித்தேன்.

 அங்கே நானும் எனது வீடியோ தொழில் பார்ட்னர் மூர்த்தியும்  இணைந்து அந்த நிகழ்ச்சிகளை  மல்டி கெமரா முறையில் படம்பிடிக்க அழைக்கப்பட்டோம்.

 முந்திய காலகட்டத்தில எங்க ஒரு நிகழ்ச்சிக்கு போனாலும்,  அரை மணித்தியாலம் முக்கால் மணித்தியாலம் பிந்தித்தான்  நிகழ்ச்சிகள் தொடங்குறதையே வழக்கமாய் கொண்டிருந்தார்கள்.

 அன்றுதான்    நித்தி அண்ணையின்  நேரம் தவறாமையையும்


 நேர்த்தியாக  அவர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதையும் பார்த்தேன்.  அதுக்காகவே கடுமையாக  உழைக்கிற ஒருத்தர் அவர்  என்றதையும்  ஆச்சரியத்தோட பார்த்தேன். பார்த்த இடத்திலேயே இனம்புரியாத ஒரு இணைப்பு அவருடன் உருவாகியது  

  அந்தத்  தொடர்புகளுக்கு பிறகு அன்று எங்களில  அவருக்கு என்ன பிடிச்சுதோ   தெரியாது,  அவர்  தங்கட பிள்ளையளுக்கு தமிழ் நாடகம் படிப்பிக்க ஒரு வீடியோ செய்வமோ எண்டு கோல் அடிச்சார்.  நாங்கள் நாடகத்தைப்  பழக்கி  பிள்ளைகளை நடிக்க வைக்கிறோம்.     நீங்கள் ரெண்டுபேரும் நான் போடுற நாடகத்தை வீடியோ எடுத்து எடிட் பண்ணி தாருங்கோ எண்டு கேட்டார்.

   அந்தக்காலத்தில நடன அரங்கேற்றம் நடக்கிற மாதிரி எல்லாமே indoor படப்பிடிப்புத்தான் , அவருக்கோ யாரையும் கரைசச்சல்


படுத்தக்கூடாது என்ற எண்ணம்.  தாங்கள் அரங்கேத்திறதை  அப்பிடியே எடுத்து கெமராவுக்குள் படம் பிடிச்சால் போதும் என்றதோட  அவர் நிக்க,  எனக்கும் மூர்த்திக்கும் இதை எப்படி   பார்க்கிறவைக்கு பிடிக்கிறமாதிரி ஒரு commercial aspect ஆக மாத்த வேணும் என்ற நினைப்பு.

 நாங்க ஒவ்வொரு காட்சியையும்   திருப்பி திருப்பி படம் எடுக்க நித்தி அண்ணைக்கு மண்டை காஞ்சு போச்சுது.. இருந்தாலும்,  பெடியள் ஏதோ நல்லாத்தான் செய்யப்போறாங்கள் எண்டு நம்பி எங்களுக்கு அந்த space தந்தார்

 அந்த வீடியோ வெளியே வந்து, வரவேற்பு கொஞ்சம் கொஞ்சமாக கூட,  அண்ணை ஒருநாள் மீண்டும்  போன் அடிச்சார்.  “  உதயன் எப்பிடி ? என்ன நடக்குது  ? இங்க பிள்ளையள் எல்லாம் இந்த வீடியோவைத்தான் வீட்டில பாக்கினமாம் , பிள்ளயளுக்கு சாப்பாடு தீத்தேக்க  கூட இந்த வீடியோதான் ஓடுதாம் ….. அடுத்த பாகம் எடுப்பமே  “ என்று அவர் தொடங்க,  நான் சொன்ன ஒரே விசயம்,   “அண்ணை  இந்தமுறை outdoor ஷூட்டிங் தான் எடுக்கோணும் .   “ என்றேன்.

 அவருக்கோ இது எதிர்பாராத  தலையிடி.  ஆனாலும்  முதலாவது பாகத்திலையே எங்களில  அவருக்கு ஒரு அசையாத நம்பிக்கை.  வேற வழியில்லாமல் அண்ணை ஒத்துக்கொண்டது தான் பாப்பா பாரதியின்  2 ஆம் 3 ஆம் பாகத்துக்கான வெற்றி.

 நித்தி அண்ணை எப்பவுமே நாடக மேடையாக்கத்துக்கே பழக்கப்பட்டவர்.  திடீர் என அவர்  படங்கள் எடுக்கும் முறைக்கு மாறவேண்டிய தேவை ஏற்பட்டது.  ஏனெண்டால் இங்க ஒவ்வொரு பிரேம் மட்டுமே எடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் சேர்க்கப்படும்.  இந்த படப்பிடிப்புக்காக நாங்கள் சில வாரங்கள் Melbourne இல்  போகக்கூடிய இடங்கள் எல்லாம் போய் படமாக்கினோம்.  எனக்குத்  தேவை ஒவ்வொரு காட்சியிலும் Melbourne  க்குரிய தனித்துவம் தெரியவேணும் எண்டதுதான்.

கவிதை - புதிர்கள் - மெல்போர்ன் அறவேந்தன்

 


எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 42 “ பறவைகள் “ நாவலின் முன்கதைச் சுருக்கம் முருகபூபதி


இலங்கைக்கு  1999   ஆண்டு சென்று திரும்புகையில் அங்கே நேர்ந்திருந்த துரிதமான மாற்றங்களைப் பார்த்து வியப்படைந்தேன்.

அந்த வியப்பு 1997 ஆம் ஆண்டு சென்றிருந்தபோதே ஆரம்பமாகியிருந்தது.  இந்த இரண்டு ஆண்டு காலத்திலும் என்னால் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்குச் செல்ல முடியாமல்போனது மிகுந்த கவலையை தந்தது.

அங்கெல்லாம் போர் மேகங்கள் சூழ்ந்திருந்தன. எங்கள் ஊருக்கு வடக்கிலிருந்து தமிழர்கள் இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்த காலப்பகுதி அது.

அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த யாராவது ஒருவர்


அவுஸ்திரேலியா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளை சென்றடைந்திருப்பார்கள். அவ்வாறு புலம்பெயர்ந்து சென்றவர்கள் அனுப்பும் பணத்தை வைத்துக்கொண்டு,  வீடுகளுக்கு வாடகை முற்பணம் வழங்கி செலவுகளை சமாளித்துக்கொண்டிருந்த சில குடும்பங்களை இந்தப்பயணத்தில் சந்திக்க நேர்ந்தது.

1987 ஆம் ஆண்டு தாயகத்தை விட்டு புறப்பட்டு வந்த எனக்கு அந்த பன்னிரண்டு வருட  காலத்தில் ( 1987 – 1999 )   எங்கள் ஊரிலும் எங்கள் குடும்பத்திலும் நேர்ந்திருந்த மாற்றங்களும் வியப்பினைத்தந்தது.

எங்கள் குடும்பத்து வீடுகளில் தொலைபேசி இணைப்பு வந்திருந்தது.  இக்காலப்பகுதியில்   எங்கள் ஊரில்  தொலைபேசி இல்லாத வீடுகளையே காண்பது அரிது.


மத்திய கிழக்கில் பணியாற்றிக்கொண்டிருந்த எனது இளைய தம்பி ஶ்ரீதரன், நீர்கொழும்பில் ஒரு வீட்டைக் கட்டியிருந்தார்.

நானும் ஒரு வீட்டை 1990 களில் அங்கே வாங்கியிருந்தேன்.  1990 வரையில் எங்கள் குடும்பத்திற்கென இருந்தது ஒரே ஒரு வீடு மாத்திரம்தான்.

அந்த வீட்டின் முகவரி: இலக்கம் 20 , சூரிய வீதி, நீர்கொழும்பு. இந்த வீடு இலங்கை இலக்கிய உலகில் கொஞ்சம் பிரசித்தமானது.  இலங்கை – இந்திய எழுத்தாளர்கள் பலர் வந்து சென்ற வீடு.

இந்த வீட்டில்தான் 1972 காலப்பகுதியில் நாம் ஆரம்பித்த வளர்மதி நூலகம் இயங்கியது. வளர்மதி என்ற கையெழுத்து சஞ்சிகையும் நடத்தினோம். இங்கு சில இலக்கிய சந்திப்புகளும் நடந்திருக்கின்றன.

1997 ஆம் ஆண்டு சென்றபோது அன்றையதினம் திங்கட்கிழமை இரவு. அக்காவும் தங்கையும் என்னையும் மகன் முகுந்தனையும் வரவேற்பதற்காக விமான நிலையம் வந்திருந்தார்கள்.

அவர்கள் எம்மை நேரே அப்போது அக்காவின் குடும்பத்தினர் வசித்துக்கொண்டிருந்த எங்கள் பூர்வீக வீட்டுக்கு ( 20 – சூரியவீதி )  அழைத்துச்சென்றார்கள். அம்மா வாசலில் நின்று உச்சிமோந்து வரவேற்றார்.

மறுநாள் செவ்வாய்க்கிழமை.  நானும் மகனும் சற்று தொலைவில் இருக்கும் எனது தம்பி ஶ்ரீதரன் கட்டிய புதிய வீட்டுக்கு செல்லத் தயாரானோம்.

அம்மா நாள் – நட்சத்திரம் பார்க்கும் இயல்புள்ளவர்.                                        தம்பியின் வீடு புதியது. நீ… நீண்ட காலத்திற்கு பிறகு வந்திருக்கிறாய். இன்று செவ்வாய்க்கிழமை. வேண்டாம். நாளை அங்கே செல்லலாம்.  “ என்றார்கள்.

 “ என்னம்மா சொல்கிறீர்கள்…? உங்கள் கடவுள் படைத்த நாட்கள் எல்லாம் நல்ல நாட்கள்தானே..?  “ என்றேன்.

 “ விதண்டா வாதம் பேசாதே. நாளை புதன் கிழமை போகலாம். நீ… இன்று அயலில் இருக்கும் உனது நண்பர்களை பார்த்துவிட்டு வா.  “ என்றார் அம்மா.

அந்த செவ்வாய்க்கிழமை எனது பொழுது அம்மா சொன்னவாறே கழிந்தது.

மறுநாள் புதன் கிழமை.  தம்பியின் புதிய வீட்டுக்குச் செல்லத்தயாரானேன்.  எனது மகனையும் தயார்ப்படுத்தினேன்.

அம்மாவைக் காணவில்லை. அக்காவிடம் கேட்டேன். 

காட்சிகளுடன் கடந்து செல்லும் 2022 ! ? அவதானி


இலங்கை அரசியல் வழக்கம்போல்,  இந்த 2022 ஆம் ஆண்டிலும் பலதரப்பட்ட காட்சிகளுடன் கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

காட்சிகள் மாறியிருந்தாலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏதும்   மாற்றங்கள் நேர்ந்திருக்கிறதா.. ?  எனப்பார்த்தால், குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு ஏதும் இல்லை.

ஆனால்,  பாராளுமன்றத்தின் ஆசனங்களில் அமர்ந்திருக்கும் பிரதிநிதிகளின் சிந்தனையிலும் செயல்களிலும் மாற்றங்கள் நேர்ந்திருக்கின்றன.

இவர்கள் அனைவரும் அடுத்து வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத்


தேர்தல், மற்றும் பாராளுமன்றத் தேர்தலையொட்டி தங்களுக்குள்ளும் பொது வெளியிலும் மாற்றங்களை நாடி ஓடவேண்டியவர்களாகவே இருக்கின்றனர்.

உரிய காலத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று எதிரணிக்கட்சிகள் கூறிவந்தாலும்,  தமது கட்சி மக்களிடம் மீண்டும் ஆதரவைப் பெற்றுக்கொள்ளுமா..? என்ற சந்தேகத்தையும் மனதில் சுமந்துகொண்டுதான் வாய்ச்சவடால் பேசுகின்றன.

இவர்களின் நாடித்துடிப்பினை புரிந்துகொண்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா காய் நகர்த்துகிறார்.

அவருக்கு பல முனைகளிலிருந்தும் வரும் அழுத்தங்கள்தான்  அரசியல் காய் நகர்த்தலை உந்த வைக்கிறது.

கடந்த பொதுத்தேர்தலில்  படுதோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்கா,  பாராளுமன்றத்திற்குள் மீண்டும் பிரவேசிப்பதற்கு ராஜபக்‌ஷ குடும்பத்தினரின் அரசியல் வீழ்ச்சி மிகவும் பிரதானமான காரணமாக இருந்திருக்கிறது.

இவ்வேளையில்,  வாட்ஸ் அப்பில்  குசும்புத்தனங்களை பதிவேற்றும் ஒரு நபர் காட்சிப்படுத்திய செய்திதான் நினைவுக்கு வருகிறது.

கோத்தபாய ராஜபக்‌ஷ பதவியை துறந்து வெளிநாடுகளுக்கு பறந்து சென்ற  காலப்பகுதியில்  இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைந்துவிட்டார்.

அதனால், அவரது புதல்வன் சார்ள்ஸ் இங்கிலாந்தின் அரசரானார்.

இந்த இரண்டு காட்சிகளையும் ஒப்பிட்டு,

கோத்தா போனதால் இவர் வந்தார் என ரணிலின் படத்தையும், ஆத்தா போனதால் இவர் வந்தார் என சார்ள்ஸின் படத்தையும் பதிவேற்றி அந்த அன்பர் குசும்புத்தனம் செய்திருந்தார்.

கோத்தா போனதற்கு அரசியல் நெருக்கடி காரணம்.

மகாராணி போனதற்கு முதுமை காரணம்.

எதுகை மேனைக்கு இரண்டு பெயர்களும் உதவியிருக்கிறது.

சங்கே முழங்கு - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்


 தமிழ் திரையில் இயக்குனர் திலகம் என்ற சிறப்பு பட்டத்துடன் பல படங்களை இயக்கியவர் கே எஸ் கோபாலகிருஷ்ணன்.இவருடைய வசனங்களை பேசியும் இவர் இயக்கத்தில் நடித்தும் சிவாஜி,ஜெமினி,எஸ் எஸ் ஆர், என்று பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றன.ஆனால் எம் ஜி ஆரின் படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்போ,அல்லது அவரின் படத்தை இயக்கும் சந்தர்ப்பமோ கே எஸ் ஜி க்கு கிட்டவில்லை.பொதுவாக கே

எஸ் ஜியின் படம் என்றால் பக்கம் பக்கமாக வசனங்கள் இருக்கும்,படப்பிடிப்பின் போதே திடீர் தீடீர் என வசனங்கள் மாறும் . அது மட்டுமன்றி படப்பிடிப்பின் போது சிவாஜி உட்பட பல நடிகர்கள் தான் எதிர்பார்த்தது போல் நடிக்காவிட்டால் படப்பிடிப்பு தளத்திலேயே தன்னுடைய அதிருப்தியை வெளிப்படையாக காட்டும் சுபாவம் கொண்டவர் கே எஸ் ஜி . இவை எல்லாம் எம் ஜி ஆரின் படங்களுக்கு பொருந்தாதது.பணமா பாசமா படத்தின் வெற்றியை தொடர்ந்து எம் ஜி ஆரின் நடிப்பில் அவர் இயக்குவதாக தங்கத்தில் வைரம் என்ற படப் பெயருடன் ஓர் விளம்பரம் வெளிவந்தது.ஆனால் படம் வெளிவரவில்லை.


இந்த நிலையில் எம் ஜி ஆரின் நடிப்பில் வள்ளி பிலிம்ஸ் தயாரிப்பில் கலரில் 1972ல் சங்கே முழங்கு என்ற படம் தயாரானது.இந்தப் படத்துக்கு கே எஸ் கோபாலகிருஷ்ணன் வசனங்களை எழுத அவற்றை பேசி எம் ஜி ஆர் நடித்திருந்தார்.தனது வழமையான பாணியில் இருந்து மாறி எம் ஜிஆருக்கு அமைவது போல் அவர் வசனங்களை எழுதியிருந்தார்.பாணி மாறினாலும் கருத்துக்கள் மாறவில்லை.

வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் இருக்கலாம் ஆனால் இதயம் கூட அறியாமல் இருக்குமா, என் முதலாளி ஒரு பெரிய ஆலமரம் அதன் நிழல்ல இளைப்பாற முடியுமே தவிர வளர முடியாது .என்னம்மா சொல்லின் செல்வி இதுதானா நீங்க கற்ற கல்வி போன்ற வசனங்களில் கே எஸ் ஜியின் முத்திரை பளிச்சிட்டது .

அவளொரு வெளிச்சம் போன்றவள்... (வித்யாசாகர்) குவைத்!

 யிரே..  


யார் நீ? தெரியாது
தெரிய நான் முயலவில்லை

எனக்குப் பயணம்; இந்தக் காற்றைப்போல


வெளிச்சத்தைப் போல
கடல் பாயும் நதியாக நீள்கிறது.

இடையே கேள்வி இல்லை
நீ யாரென்று.
சிந்திக்கவேயில்லை
நீ யாரென்று.

எனக்கு நீ பெண்ணாக இருக்கிறாய்
ஆணாகவும் இருக்கிறாய்
உறவாக இருக்கிறாய்
நட்பாகவுமிருக்கிறாய்,
காதலூருகிறது; அன்பு நிறைகிறது;
உயிர் நிறைக்கிறாய் என்னுள்.

நான் தேடாமலே
காணுமிடமெல்லாம் காண்கிறேன் உன்னை
பிறகு, எங்கு நான்; நீ யாரென்று கேட்க ?

காற்றைச் சுவாசிக்கும்
லப்டப் போல
உள்ளே இசைக்கிறேன் உன்னை
உயிர்வரை தொடுகிறாய்
வீணையைப்போல மீட்டுகிறேன்
உள்ளே ஆனந்த ஒலி யெழுப்புகிறாய்
பரவசம் ஒளிர்கிறது எங்கும்
எல்லாம் நினைவில் நிகழ்கிறது
உணர்வில் தெரிகிறது
கனவு இல்லை
பொய் இல்லை
அப்பட்டமாய் நிகழ்கிறது; உன்மத்தம் கொள்கிறாய்
ஏதோவொன்று மறைந்து
ஏதோ ஒன்றாக மாறுகிறது
ஆனால் அது நீயில்லை, அவளில்லை, அவன் மட்டுமுமில்லை
எல்லோரிடமும் நிகழ்கிறது உனக்கான அன்பு;

மழை சோவென்று பெய்யும் குளுமை
கற்பூரம் எரிந்து சுவாலை அசையும் நளினம்
ஒரு சிநேகத்தோடு பூனை பார்க்கும் கனிவு
நாயொன்று வாள் குழைத்து
ம்ம்.. ம்ம்மென்று துள்ளும் நேசம்
காற்றசைந்து தரையுதிரும் பூவிதழின் தொடுதல்
வானம் வெளுக்கத்துவங்கும் காலையில்
இலையுதிர்க்கும் பனித்துளி ஈரம்
கடல் தள்ளும் நுரை வெடிக்கும் சத்தம்
கரையும் காகம்; பறக்கும் கிளிகள்; எங்கோ பேசிக்கொண்டேயிருக்கும்
ஊர்க்குருவியென எல்லாம்
நினவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது உன்னை

இலங்கைச் செய்திகள்

 யாழ் - சென்னை விமான சேவை 12 இல் ஆரம்பம்

சுற்றுலா தலமாகும் மட்டக்களப்பு மாவட்டம்

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நல்லாசி வேண்டி விசேட பூசை வழிபாடுகள்

விடுதலைப்புலிகள் என தெரிவிக்கப்படும் 3 வெவ்வேறு வயதுடையவர்களின் என்புக்கூடுகள் மீட்பு

 இலங்கையர் ஒருவர் 10,000 டொலர் இந்திய ரூபாவை வைத்திருக்க அனுமதி

ரணில் விக்ரமசிங்க சட்டத்தரணியாகி 50 வருடங்கள் பூர்த்தி; பாராட்டு விழா


யாழ் - சென்னை விமான சேவை 12 இல் ஆரம்பம்

பயணச்சீட்டு நேற்று முதல் வழங்கப்படுகிறது

யாழ். பலாலி சென்னை விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது விமானம் (12) காலை 10.15 மணிக்கு பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கும். இவ்விமானம், மீண்டும் பிற்பகல் ஒரு மணிக்கு  இங்கிருந்து சென்னை நோக்கிப் புறப்படும்.

உலகச் செய்திகள்

13,000 உக்ரைன் துருப்பினர் பலி

உக்ரைன் போர்: புட்டினுடன் பேசுவதற்கு பைடன் தயார்

குழப்பத்தை தவிர்க்க இம்ரான் கான் பேரணியை கைவிட முடிவு

அல்சைமர் நோய்க்கான மருந்தில் முன்னேற்றம்

சீன முன்னாள் ஜனாதிபதி ஜியாங் சமின் காலமானார்


13,000 உக்ரைன் துருப்பினர் பலி

ரஷ்ய ஆக்கிரமிப்பு ஆரம்பித்தது தொடக்கம் 13,000 வரையான உக்ரைனிய படையினர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மிண்டோ ஸ்ரீ ஷிவா கோவிலில் 06-12-2022 செவ்வாய்க்கிழமை மலை 06:30 மணிக்கு "சித்தாந்த கலாநிதி" "செந்தமிழரசு" திரு கி. சிவகுமார் M.E

 


சிட்னி மாநகரில் 04/12/2022 முதல் 11/12/2022 வரை "சித்தாந்த கலாநிதி" "செந்தமிழரசு" திரு கி. சிவகுமார் M.E. அவர்களது "சிவத்தமிழ் பேருரைகள்"




கார்த்திகை தீபம்