எங்குமே அச்சமே எழுகிறதே இருளாய் !



மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா 


        
    தும்மலொடு இருமல் தொடர்ந்து வரும்வேளை
    எம்மருகே இருப்பார் எமைவெறுத்துப் பார்ப்பார் 
    கைபேசி எடுத்து காவல்துறை அழைத்து
    கொரனாவின் காவி அருகிருப்பார் என்பார்  !

   சாதாரண தும்மல் வந்தாலும் துன்பம் 
   சளிகாய்ச்சல் சேர்ந்து வந்தாலும் துன்பம் 
   பக்கத்து நின்று கதைத்தாலும் துன்பம் 
   பார்க்கவே பயமே பரந்திருக்கு எங்கும்   !

   விருந்துண்ண வந்தாலும் விலகிநிற்ற வேண்டும்
   விழாவனைத்தும் இப்போ இணையவழி ஆச்சு
   வருவிருந்தும் உள்ளே வரவச்சம் கொண்டு
   வாசல்வரை என்று வரையறையும் ஆச்சு   ! 

'தூயதமிழ் பரப்பிடுவோர் பெருக வேண்டும்.'


................. பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி



       தாயகத்தில் தனித்தமிழை வளர்த்தவென் முன்னோர்

              தந்திட்ட ஆசிகளும் தொடர்ந்தருள் கூட்டத்

       தூயதமிழ் வளர்த்துவந்தோர் தோன்றல் நானும்

              சொந்தத்திற் செந்தமிழைப் பேணி வந்தேன்!

       தேயாத  நல்லாக்கம் தமிழிற் செய்யும்

              திறன்மிக்கோர் நட்பினையும் சிட்னியிற் பெற்றேன்!

      ஓயாது பிறமொழியின் கலப்பால் தமிழை

              உருக்குலைப்போர் செயல்கண்டு உள்ளம் நொந்தேன்!.

    

       மெல்பேர்ணில் வசிக்குமென்றன் இனிய நண்பன்

              மின்னஞ்ச லோடிணைப்பு ஒன்றை அனுப்பி

        நல்லதொரு கதையிதடா  மறவாது நீயும்

              நன்றாக வாசிப்பாய்! பின்னர் எனக்குத்

       தொல்லையெனக் கருதாது கதையிற் கண்டு

              சுவைத்ததெல்லாம் எழுதிடுவாய்! புலம்பெயர் நாட்டில்

       சொல்லிஎண்ணக் கூடியதோர் கதைஎழுத் தாளருள்

              சோடிச்சு எழுதுவதில் 'விண்ணி' என்றார்.

பவா செல்லத்துரை கதை சொல்லல் ஜெயகாந்தன் - ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்

பவா செல்லத்துரையை  அறியாதவர்கள்   மிகச் சிலர்தான் இருப்பார்கள் . இவரைப்பற்றி  சொல்வதாக இருந்தால் இவர் ஒரு சிறுகதை எழுத்தாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர்,நடிகர், கதைசொல்லி. இன்று தமிழ் நாட்டில் மிக அழகாக கதை சொல்லும் அறிஞர் இவரின் கதை சொல்லலைப் பார்ப்போம் 


<iframe width="1127" height="634" src="https://www.youtube.com/embed/iZuiK19ciCo" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

கடைத்தேறும் வழிநடந்தால் காலமெமை வாழ்த்திநிற்கும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா 


           
          ஓடியோடி உழைத்தாலும் 
               ஒன்றைப்பத் தாக்கினாலும் 
          உறங்கி யெழுந்திடுதல்
                ஒருவருக்குந் தெரியாது 
          உறங்கினார் உறங்கிவிடின்
                  உழைத்தவைகள் வாராது
           விளங்காமல் வீண்கனவு 
                    மேலோங்கி எழுகிறதே   !


          கறந்தபால் மறுபடியும் 
              மடியேற  மாட்டாது 
        பிறந்திடலும் இறந்திடலும்
              பெரும் புதிராயாகிறது 
        வருந்தியே அழைத்தாலும்
               மரணம் வந்தமையாது
        வருகின்ற வேளைதனை
               மண்ணுலகில் யாரறிவார்   !

எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 16 எழுத்தாளர் சச்சரவுகளின் ரிஷிமூலம் ! மறைந்த படைப்பாளி மா.பாலசிங்கம் நினைவுகள் !! முருகபூபதி


நான் எழுதிவரும் இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடரை படித்துவரும்  கனடாவில் வதியும் நண்பர் சட்டத்தரணி  முத்தையா பாலச்சந்திரன், எனக்கு எழுதிய மின்னஞ்சலில்,                  “ ஏன் எழுத்தாளர்கள் அடிக்கடி முரண்பட்டு சண்டை பிடிக்கிறார்கள்..?  “ எனக்கேட்டிருந்தார். அவரும் நான் வீரகேசரி பணியாற்றிய காலத்தில் அங்கு அலுவலக நிருபராக பணியாற்றிய பத்திரிகையாளர்.  சட்டக்கல்லூரியில் படித்துவிட்டு வந்து அங்கே இணைந்துகொண்டவர். பின்னாளில் அவரும் கனடாவுக்கு புலம்பெயர்ந்தார்.  

அவருக்கு நான் அனுப்பிய பதிலில்,  “ எழுத்தாளர்களுக்குள் முரண்பாடுகள், சச்சரவு, சண்டை வந்துகொண்டுதானிருக்கும்.  இந்த கலாசாரம் சிவபெருமான் – நக்கீரர் அதன்பின்னர் கம்பர் – ஒட்டக்கூத்தர் காலத்திலிருந்தே வளர்ந்திருக்கிறது. அதனால் ஆச்சரியப்படாதீர்கள் என்று எழுதியிருந்தேன். இந்த 16 ஆவது அங்கத்தை எழுதும்வேளையில் கொழும்பில் இலக்கிய நண்பர் மா பாலசிங்கம் அவர்களும் மறைந்துவிட்டார். 

2020 ஆம் ஆண்டு பிறந்ததுமுதல்,  உலகடங்கிலும் எனக்குத் தெரிந்த சில  கலை, இலக்கியவாதிகள் அடுத்தடுத்து மறைந்துவிட்டனர்.  அந்த வரிசையில் தற்போது  பாலசிங்கமும் இணைந்து விடைபெற்றுவிட்டார். பாலசிங்கம், கொழும்பில் தமிழ் கதைஞர் ( தகவம் )  வட்டத்தில் இணைந்திருந்தவர். அத்துடன் மல்லிகை கொழும்பிலிருந்து வெளிவரத்தொடங்கிய பின்னர் அதன் ஆசிரியர் மல்லிகைஜீவாவுக்கு பக்கத்துணையாக இருந்தவர்.   பாலசிங்கம் எழுதிய கதைகளின் தொகுப்பு இப்படியும் ஒருவன் மல்லிகைப்பந்தல் வெளியீடாக

வந்துள்ளது.  இலங்கையில் நடக்கும்  இலக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் இலக்கிய புதினங்களை தொடர்ந்து எழுதிய சிலரில் பாலசிங்கமும் ஒருவர். 

முன்னர் தமிழ்நாட்டிலிருந்து வெளியான நா. பார்த்தசாரதியின் தீபம் மாத இதழில்  யாழ்ப்பாணத்திலிருந்து எழுத்தாளர் சிற்பி சரவணபவன் (1933 – 2015 ) இலங்கை கடிதம் என்ற தலைப்பில் இலங்கை கலை, இலக்கிய புதினங்களை யாழ்வாசி என்ற புனைபெயரில் எழுதிவந்தார். 

பின்னாளில் எழுத்தாளர் நெல்லை . க. பேரன்  ( 1946 – 1991 ) தொடர்ந்து மல்லிகை இதழிலும் பத்திரிகைகளிலும் அந்தப்பணியை தொடர்ந்தார்.  அவரும் 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் திகதி இலங்கை  வடபுலத்தில் நிலைகொண்டிருந்த ஆயுதப் படை ஏவிய  ஷெல்வீச்சில்  குடும்பத்துடன்  கொல்லப்பட்டார்.  நான் வீரகேசரியிலும் நண்பர் எஸ். திருச்செல்வம் ( எஸ்தி) தினகரனிலும் எஸ். டி. சிவநாயகம் சிந்தாமணியிலும் இலக்கிய புதினங்கள் எழுதிவந்தோம். 

சிந்தாமணியையடுத்து சிவநாயகமும் மறைந்தார். நான் அவுஸ்திரேலியாவுக்கும் எஸ். திருச்செல்வம் கனடாவுக்கும் புலம்பெயர்ந்தோம்.  நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர் இங்கு நடக்கும் கலை, இலக்கிய நிகழ்வுகள் பற்றி அவ்வப்போது வீரகேசரியில் எழுதிவந்தேன். மா. பாலசிங்கம் கொழும்பிலிருந்து தினக்குரல் ஞாயிறு இதழில் தொடர்ந்து எழுதிவந்த பத்திகளிலிருந்து அங்கு நடக்கும் புதினங்களை வெளிநாட்டிலிருந்தும் நாம் வாசிக்கக்கூடியதாக இருந்தது. 

கொழும்பில் நடக்கும் இலக்கிய நிகழ்ச்சிக்கு  கையில் ஒரு குறிப்பு புத்தகத்தடன் அவர் வந்தால் , குனிந்த தலை நிமிராமல் எழுதிக்கொண்டே இருப்பார். அவரது கரம் எழுதிக்கொண்டிருக்கும், செவிகள் கூர்மையுடன் கேட்டுக்கொண்டிருக்கும்.  அந்த நிகழ்ச்சி  உரைகளுடன் வார  இறுதியில் விரிவாக தினக்குரலில் பதிவாகியிருக்கும்.    பத்திரிகை நிருபர்கள் செய்யவேண்டிய இந்த வேலையை இலக்கியத்தின் மீதிருந்த பற்றுதலினால் அயர்ச்சியின்றி தொடர்ந்து செய்துவந்தவர் பாலசிங்கம். 

வயலின் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 .

இசை என்பது இசைய வைப்பது எனப் பொருள் படும்.’இசைக்கு இசையாதவன் மனிதனே அல்லஎன  சோக்கிரட்டீஸ் சொன்னார். ஒருவன் இசைக்கு இசையவில்லை எனில் அவன் கொலையும் செய்யக்கூடிய பாதகனாக இருப்பான் என்பது அதன் கருத்து.

 

பாமரன் முதல் பல்மொழிப்பண்டிதன் வரை எவரையும் தன் வசப்படுத்துவது இசை. இந்த இசையானது தன்னையே மறக்கச் செய்வது. இது மொழி,பிரதேசம் அத்தனையையும் கடந்து உயர்ந்து நிற்பது.

 

இவ்வாறு மொழியைக் கடந்து நிற்பது வாத்திய இசைக்கும் பொருந்தும். அருமையான இசையைக் கேட்கும் போது எமது உள்ளம் அதில் லயிக்கிறது.சாதாரண மனிதனையே இசை இவ்வாறு கவர்ந்தால் அதில் மேதைகளாக இருப்பவர்கள் பற்றிக் கூறவும் வேண்டுமா?

 

இந்தியப் பெரும் கண்டத்தை ஐரோப்பியர் ஆண்டு வந்த காலத்திலே அவர்களது நாகரிகமும் இந்தியாவிற்கு வந்தது.அவர்களது Band வாத்திய இசை நிகழ்ச்சிகள் நடந்தன.இசைப்பிரியர்களான மன்னர்களின் சமஸ்தானங்களிலே மேலைத்தேயக் கலைஞர்கள் வந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். வயலின் அல்லது பிடில் என அழைக்கப்படும் வாத்தியம் இவ்வாறே இந்தியாவை வந்தடைந்தது.

 

இன்று கர்நாடக இசைக்கச்சேரிகள் எதுவுமே வயலின் பக்கவாத்தியம் இல்லாமல் நடைபெறுவது கிடையாது. இசை மேதை முத்துசுவாமி தீட்சிதரின் சகோதரர் பாலுச்சாமி தீட்சிதர் ஓர் ஆங்கிலேயரிடம் இருந்து வயலினைக் கற்றார் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு. அதே காலகட்டத்தில் திருவாங்கூர் சமஸ்தான வித்துவானாக இருந்தவர் வடிவேலுப்பிள்ள. அவரும் வயலினைக் கற்றுக் கொண்டார்.

 

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 39 – பெரியமேளம் – சரவண பிரபு ராமமூர்த்தி பெரியமேளம் – தோற்கருவி


பெரியமேளம் பெயருக்கு தகுந்தாற்போல் அளவில் மிகப்பெரியது. இரு புறமும் மாட்டுத்தோல் அல்லது எருமைத்தோல் கட்டப்பட்ட,  மரத்தாலான நடுப்பகுதி கொண்ட உருளை வடிவ இசைக்கருவி. இப்பொழுது பித்தளை உருளைக்கு மாறிவிட்டார்கள். சுமார் 2 அடி உயரம் இருக்கும் உருளை. ஒதியன் மரத்தின் குச்சியை வளைத்து மண்ணில் புதைத்து வைத்து பிறகு அதை தோல் வைத்துக் கட்டி தட்டும் முகமாக பயன்படுத்துவார்கள். முகங்கள் குச்சியால் வாசிக்கப்படும். பெரியமேளம் சுமார் 10 முதல் 12 கிலோ எடைகொண்டதாக இருக்கும்.

சென்ற நூற்றாண்டு வரை நாதசுரம், தவில், ஒத்து, தாளம் ஆகியவற்றை


இசைக்கும் குழுவிற்கு பெரிய மேளம் என்றும், தேவதாதியர், அவரைச் சார்ந்த நட்டு,முட்டு, மத்தளம், முகவீணை ஆகியவை சின்ன மேளம் என்றும் அழைக்கபட்டு வந்தது.  இன்று நாம் பார்க்கப் போகும் பெரிய மேளம் அதுவன்று. இது முழுவதும் நாட்டார் தன்மை கொண்டது. விளிம்பு நிலை மனிதர்களுடையது.     

 பெரியமேளக் குழுவில் பெரிய மேளம், சின்ன மேளம், பறை, தமரு, சட்டி, தமுக்கு, ஜால்ரா ஆகிய கருவிகள் இடம்பெறும். பெரியமேளக் குழுவை ஜமா என்றும் சொல்கிறார்கள். பெரியமேளத்தில் ஒவ்வோர் அடி முறையையும் பாகம் என்கிறார்கள். மொத்தம் பத்துவிதமான பாகம் உண்டு. முதல் பாகம் கோவில் பாகம், இரண்டாவது பாகம் என்பது காத்தவராயன் பாகம்,  மூன்றாவது பாகம் திருமண விழாக்களின்போதும், நான்காவது பாகம் கங்கையம்மனுக்குக் கூழ் ஊற்றும்போதும், ஐந்தாவது பாகம் வேகமான திரைப்படப் பாடலுக்கும், ஆறாம் பாகம் மாரியம்மனுக்குக் கூழ்வார்க்கும்போதும், பொங்கலின்போது ஏழாம் பாகமும் ,புலியாட்டத்திற்கு எட்டாம் பாகமும், ஒன்பதாம் பாகமும் வாசிக்கப்படுகிறது. துக்க நிகழ்ச்சியிலும் தனிமனித துதியிலும் பத்தாம் பாகமும் வாசிக்கப்படுகிறது

பெரியமேளம் ஆட்டத்துடன் கூடிய இசைவடிவம். துவக்கம் முதல் முடிவு வரை ஆடிக்கொண்டே நிகழ்த்தப்படும். ஏழு விதமான ஆட்டங்கள் உண்டு. மேடை நிகழ்வுகள், நாட்டார் கோவில் திருவிழாக்கள், திருமணம், இறப்பு ஆகிய நிகழ்வுகளில் பெரியமேளம் இசைக்கப்படுகிறது. பெரியமேளத்தை கள ஆய்வு செய்துள்ள முனைவர் அ.கா.பெருமாள் அவர்கள் இந்த பாக முறைகளை மக்கள் மிகத் தெளிவாக புரிந்துகொள்ளப்படுவதாகக் கூறுகிறார். இவரது கள ஆய்வில் ஒரு பாட்டியிடம் “அம்மா அங்கே என்ன மேள சத்தம். என்ன நடக்கிறது?” என்று கேட்க அந்த பாட்டி அடி தெரியலையா உனக்கு. கங்கையம்மனுக்கு கூழ் ஊத்தற அடி. கூழ் ஊத்தறாங்க வா போவலாம்”  என்றாராம்.

பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 22 - தரிசனம்- சுந்தரதாஸ்

.



இது இது மாலை நேரத்து மயக்கம், பூ மாலை போல் உடல் மணக்கும் இந்தப் பாடலை இன்றும் ஆயிரக்கணக்கானோர் ரசித்து வருகிறார்கள். சிற்றின்பத்துக்காக விரகத்துடன் ஏங்கும் பெண்ணுக்கு மோகத்தை துறந்துவிடு உடலின் பந்தத்தை மறந்துவிடு என்று ஆண் கூறுவதாக அமைந்த இந்தப் பாடல் படம் வெளிவந்த காலம் முதல் 50 ஆண்டுகள் கடந்தும் ரசிகர்களை வசீகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடல் இடம்பெற்ற படம் தரிசனம். படத்தை ரசிகர்கள் மறந்து விட்டாலும் பாடல் மட்டும் நினைவில் நிறைந்துள்ளது.

சஷ்டி பிலிம்ஸ் சார்பில் வி டி அரசு தரிசனம் படத்தை தயாரித்து டைரக்ட் செய்திருந்தார் இவர் உருவாக்கிய படங்களில் அடுத்தடுத்து ஏவிஎம் ராஜன் புஷ்பலதா இருவருமே கதாநாயகன் நாயகியாக நடித்தார்கள் அதே போல் இதிலும் இவர்கள் இருவருமே நடித்தார்கள். ஏராளமான படங்களில் நடித்திருந்த ராஜனுக்கு இப்படத்தில் தான் இரட்டை வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் மட்டுமே அவர் இரட்டை வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடக்கூடியது.


பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் முப்பது ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களின் தண்டனையை ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. அவர்கள் முப்பது ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தியும் இன்று வரையிலும் இவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அமைச்சரைவயும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால் இரண்டு ஆண்டுகளாக அந்த பரிந்துரையின் பேரில் ஆளுநர் எவ்வித முடிவையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். அண்மையில் உச்சநீதிமன்றத்தில் இவர்களின் விடுதலை தொடர்பான மனு  விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் எம்.டி.எம்.ஏ., (பல்முனை கண்காணிப்பு முகமை) ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்த இறுதி அறிக்கையை இன்னமும் சமர்ப்பிக்காததால் தான் ஆளுநர் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்படுள்ளதாக நீதிமன்றத்தில் ஒரு காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

இலங்கைச் செய்திகள்

செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடுகிறேன் 

மட்டக்களப்பிற்கு வருவோர், செல்வோரின் விபரம் திரட்ட நடவடிக்கை

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க பிள்ளையானுக்கு அனுமதி

பிள்ளையார் சிலை இனந்தெரியாதோரால் சேதம்   

அனைத்தையும் அவதானித்து திங்கட்கிழமை ஊரடங்கு நீக்கப்படும்

கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலையில் உள்ளது

நிதி நிறுவன மோசடி; சந்தேகநபர் குடும்பத்துடன் இந்தியாவில் கைது

ஜோ பைடனுக்கு ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த வாழ்த்து


செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடுகிறேன் 

விரைவில் விடுதலையாவேன் என நம்பிக்கை

எந்த ஒரு குற்றமும் செய்யாமல் என்னை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்கு அனுமதிப்பது தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் நிதியமைச்சராக இருந்த மங்கள சமரவீரவிற்கும் கடிதம் எழுதியது தவிர நான் எந்த தவறும் செய்யவில்லை என ரிசாத் பதியுதீன் எம்.பி தெரிவித்தார்.

நீதி நியாயத்தால் விடுதலையடைவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.

மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிக்க வசதி அளித்துக் கொடுத்ததற்காக எந்த ஒரு குற்றமும் செய்யாமல் என்னை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.1990 இல் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்து வருகின்றனர்.

உலகச் செய்திகள்

 அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு

"தேர்தலில் மோசடி; உச்ச நீதிமன்றம் செல்லவுள்ளேன்"

  “முஸ்லிம்களின் கோபத்தை புரிந்துகொள்ள முடிகின்றது”

அமெரிக்க தேர்தல் முடிவுகளில் டிரம்ப் - பைடன் இடையே கத்திமுனை போட்டி

பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து உத்தியோகபூர்வமாக அமெ. விலகல்

இந்திய-நேபாள எல்லையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிக்கும் பாகிஸ்தான்


அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு-US Presidential Election 2020-Joe Biden Wins

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின், தற்போது வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைய ஊடகத்துறையில் இணைந்திருக்கும் தோழர் ஜெமினி தோழர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் ! முருகபூபதி


 எனது   எழுத்துலக வாழ்வு  வெள்ளீயத்தில் தயாரிக்கப்பட்ட    அச்சு ஊடகங்களில்   ஆரம்பமாகி,  பின்னாளில் இணைய ஊடகத்தை நோக்கி வளர்ந்தது. 

 1970 களில் எனது எழுத்துக்கள் வீரகேசரி, தினகரன் முதலான நாளேடுகளிலும் மல்லிகை, பூரணி, புதுயுகம், கதம்பம், மாணிக்கம் முதலான சிற்றிதழ்களிலும்தான் வெளிவந்தன. அவுஸ்திரேலியாவுக்கு வரும்வரையில் ஒவ்வொரு  வெள்ளீய அச்சு எழுத்துக்களினால் கோர்க்கப்பட்டு  அச்சாகிய எனது படைப்புகள், 2000 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கணினியில் பதிவாகி இணைய ஊடகங்களிலும் பரவத்தொடங்கியது. 

இணையத்தின் வருகையுடன்,  தமிழ் எழுத்து உருபுகளும் அறிமுகமானதும்  அதுவரை காலமும் நடைமுறையிலிருந்த பேனையை எடுத்து, காகிதத்தில் எழுதி, தபாலில் அனுப்பும் வழக்கம் முற்றாக மறைந்தது. முதலில் பாமினி உருபுகளில் கணினியில் எழுதத்தொடங்கியதும்,  எனது மனைவி வழி உறவினரான  திருமதி பாமினி  என்பவர் , தனது  அண்ணாதான்   அந்த தமிழ் உருபை கண்டுபிடித்து,


அதற்கு தனது பெயரையும் சூட்டினார் என்று சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதன்பின்னர் யூனிகோட்டில் எழுதிப்பழகினேன்.  

இவ்வாறு எழுதிக்கொண்டிருந்தபோதுதான் மெல்பன் நண்பர் எழுத்தாளர் நடேசன், எனக்கு தேனீ இணைய இதழை அறிமுகப்படுத்தினார்.  முதலில் அவர் ஊடாகவே எனது ஆக்கங்களை ஜெர்மனியிலிருந்து வெளிவந்த தேனீ இணைய இதழுக்கு அனுப்பினேன்.  அவற்றை ஏற்று தொடர்ச்சியாக பிரசுரித்த தேனீ இணையத்தளத்தை நடத்தும் ஜெமினி கங்காதரன்,  என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தோழமை பூண்டார். அதன்பிறகு நானே நேரடியாக அவருக்கு எனது ஆக்கங்களை அனுப்பத்தொடங்கினேன்.  

இவ்வாறு தொடங்கிய எமது தோழமையினால், எனது இலக்கிய மற்றும் அரசியல் ஆய்வாளர்களான நண்பர்களின் ஆக்கங்களையும் தேனீக்கு அறிமுகப்படுத்தினேன்.  அவற்றையும் தேனீ ஆசிரியர் ஜெமினி கங்காதரன் மனமுவந்து ஏற்று பதிவேற்றினனார். 

தமிழ்நாட்டில் வெளியான யுகமாயினி இதழில் வெளியான எனது சொல்ல மறந்த கதைகள் தொடர்,  நடேசனின் வலைப்பூவிலும்,   அதேசமயம் , தேனீயிலும்  தொடர்ந்து வெளியானது.  அதற்கு நல்ல வரவேற்பிருந்தமையால், அதனை நூலாகத் தொகுத்து வெளியிடுமாறு கிளிநொச்சியிலிருந்து இலக்கிய நண்பர் கருணாகரன் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். 

பின்னர்  அவரது ஏற்பாட்டிலேயே சொல்லமறந்த கதைகள் தமிழ்நாடு மலைகள் பதிப்பகத்தினால்  2014 ஆம் ஆண்டில் வெளியானது.  அதன் வெளியீட்டு அரங்கு  மெல்பனில் நடந்தபோது,  தொலைபேசியில் என்னை வாழ்த்தியதோடு, அது போன்ற தொடர்களை தொடர்ந்தும் எழுதுமாறு தோழர் ஜெமினி கங்காதரன் உற்சாகமூட்டினார். அவரது ஊக்கமூட்டும் வார்த்தைகளினால்தான் எனது சொல்லவேண்டிய கதைகள், சொல்லத்தவறிய கதைகள் என்பனவும் அடுத்தடுத்து வெளியாகின. 

சொல்லவேண்டிய கதைகள் யாழ்ப்பாணம் ஜீவநதி மாத இதழிலும் சொல்லத்தவறிய கதைகள் யாழ்ப்பாணம்  காலைக்கதிர் வார இதழிலும் வெளியாகி, பின்னர் நூலுருப்பெற்றன. அவற்றில் வெளியான பல ஆக்கங்கள்  அவுஸ்திரேலியா தமிழ் முரசு, அக்கினிக்குஞ்சு, கனடா பதிவுகள், தமிழ்நாடு திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் கொழும்பில் தினக்குரல் வார இதழிலும் நடேசனின் வலைப்பூவிலும் மறுபிரசுரமாகியிருக்கின்றன. 

கந்த சஷ்டி விரதம்

முருகனுக்கு உரிய கந்த சஷ்டி கவசத்தை பாடி நம் வல்வினைகளை போக்கி வாழ்வில் வளமும், நலமும் பெற்று பெறுவாழ்வு வாழ்வோம். கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா...


நம்மை காக்கும் தெய்வமான முருக பெருமானை நோக்கி பால தேவராயன சுவாமிகள் பாடியது தான் “ கந்த சஷ்டி கவசம் ”.

இந்த கந்த சஷ்டி கவசம் பாடினால் மனதில் இருக்கும் பயம் அகலும், எதிரிகள் விலகுவர், வெற்றியை தேடித் தரும். இந்த பாடலை தினமும் பாடலாம். சஷ்டி விரதம் தினங்களில் பாடுவது மேலும் விசேஷமானது. சூலமங்கலம் சகோதரிகளான ராஜலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோர் இந்த பாடலைப் பாடியுள்ளனர். கந்த சஷ்டி கவசம் என்றாலே அவர்களின் குரலும் சேர்ந்தே நம் மனதில் வந்து போகும்.