கங்கை வெள்ளத்தைக் கமண்டலத்தில் அடக்க முடியுமா? ஆனால், அதன் இயல்பையாவது ஒரு பாத்திரத்தில் அள்ளியெடுத்துத் தந்து உணரவைக்க முடியும் அல்லவா? எல்லைகளற்றுப் பணியாற்றும் ரஸஞானி முருகபூபதி லெட்சுமணனின், ஏறக்குறைய ஐம்பதாண்டு கால வாழ்வும் பணியும் பற்றிய தகவல்களை ஒரு மணிநேர ஆவணப்படத்தினுள் உள்ளடக்கி அளித்திருக்கிறார்கள். இந்த எண்ணத்தை உளம் கொண்டு எழுதி, செயற்படுத்திய திரு. எஸ் கிருஸ்ணமூர்த்திக்கும், ஒளி, ஒலி, படத்தொகுப்பு, ஒலிச்சேர்க்கை செய்த திரு. மூர்த்திக்கும் நன்றிகளும், வாழ்த்துகளும்.
எனக்கு முருகபூபதி அவர்களுடன் அண்மைய நாட்களில் நெருக்கமான பிணைப்பு உருவாகி இருக்கிறது. கிழமைக்கு ஒரு தடவையாவது தொலைபேசியில் குடும்பம், இலக்கியம், அரசியல் என மிகச் சுவாரசியமாக என்னுடன் அளவளாவுவார். மிக ஆர்வமாக இருக்கும். அதே வேளையில், இந்தத் தகவல் களஞ்சியத்தின் நாட்கள் பற்றிய ஒரு ஒழுங்குமுறையான தொடர்பை மனதில் காட்சிப்படுத்த முடியாமல் நான் தடுமாறுவேன். ரஸஞானி பற்றிய ஆவணப்படம் எனக்குக் கோப்பு ஒன்றை உருவாக்கித் தந்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சி. திரு. நவரத்தினம் அல்லமதேவன் அளவான வேகம், இடைவெளி, அத்துடன் தெளிவான உச்சரிப்புடன் பின்னணிக்குரல் கொடுத்திருக்கிறார். மிகச்சிறு வயதிலேயே பாரதியார் ஏற்படுத்திய பாதிப்பால் நேர்மை நோக்கும், பாரதியை என்றும் மனதில் பதித்து வைத்துக்கொண்டு, ‘இலங்கையில் பாரதி' என்ற மிகத் தேவையான ஆய்வு நூலை உருவாக்கியவருமான

முருகபூபதி பற்றிய படத்தின் பின்னணி இசையாக 'சின்னஞ்சிறு கிளியே' வீணை நாதம் பொருத்தமாக இருந்தது. இங்கு திருமதி மாலதி முருகபூபதி, எழுத்தாளர் வைத்தியர். நடேசன், திரு லயனல் கோப்பகே, கவிஞர் கருணாகரன், ஞானம் ஆசிரியர் திரு ஞானசேகரன், எழுத்தாளர் ஜேகே, சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன், திருமதிகள் சாந்தி சிவகுமார், வித்தியா ஶ்ரீஸ்கந்தராஜா, கலாநிதி கௌசல்யா அந்தோனிப்பிள்ளை, கலைஞர் மாவை நித்தியானந்தன், திருவாளர்கள் இராஜரட்ணம் சிவநாதன், ஆவூரான் சந்திரன், விமல் அரவிந்தன், கொர்னேலியஸ் இவ்வளவு பேரிடமும் தகவல்கள் சேகரித்து, குறுகிய நேரத் தொகுப்பாக ஆக்கியது சாதனையே. இரண்டு விடயங்கள் படத்தைத் தொய்வில்லாமல் பார்ப்பதற்கும், தொடர்புபடுத்தி அறிந்து கொள்வதற்கும் உபயோகமாக அமைந்தன. ஒன்று, தகவல்களுக்குப் பொருத்தமான படங்கள், காணொளிகளை ரஸஞானி பற்றி ஒவ்வொருவரும் கருத்துக்கூறும் காணொளியின் பின்னணியில் இணைத்தது. இரண்டாவது, தனித்தனிப் பகுதியாகப் பிரிக்காமல் முருகபூபதி அவர்கள் தன்னைப்பற்றிக் கூறுவதையும், இடையிடையே மற்றவர்கள் கருத்தையும் கலந்து தொகுத்தது.