பெற்றவர்களிடம் கற்றதையும்
சமூகத்திடம் பெற்றதையும் வாழ்வியல் அனுபவமாக்கி,
ஊடகத்துறையின் நுட்பங்களை உள்வாங்கி செய்தியாளராக பரிமளிக்கும் தேர்ந்த இலக்கிய வாசகர் சிற்சபேசன் அவர்களை எமது வாசகர் முற்றத்திற்கு அழைத்து வருகின்றோம்.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், தன்னுடைய
தந்தையார் அதிபராகவிருந்த அனுராதபுரம் விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயத்திலும் கற்றவர்.
பின்னர் உயர்கல்வியை தமிழ்நாட்டில் தொடர்ந்தவர்.
யாழ்ப்பாணத்திலும் தமிழ்நாட்டிலும் பல்கலைக்கழகக்
கல்விவரையான
காலகட்டத்திலே வாழ்ந்தமையைப்
பெரும்
பாக்கியமாகவே கருதுகின்றார்.
“ யாழ்ப்பாணக்
கலாசாரம் கந்தபுராணக் கலாசாரம் “ என்பார்
பண்டிதமணி கணபதிப்பிள்ளை. அந்தவகையில், அங்கே பெற்றுக்கொண்ட சைவத்தமிழ்
விழுமியங்களிலான தன்னுடைய அத்திவாரத்தை, தமிழ்நாட்டின் மொழி, கலை, பண்பாட்டுச்சூழல்
பலப்படுத்தியதாக நம்புகின்றார். அந்தவாய்ப்பை
ஏற்படுத்திய தன்னுடைய பெற்றோரை நன்றியோடு நினைவுகூர்கின்றார் சிற்சபேசன்.
தற்போது நியூசிலாந்து அரசதுறையில் சிரேஷ்ட ஆலோசகராகப்
பணியாற்றுகிறார்.
நாம் தொடர்ந்து பதிவேற்றிவரும் வாசகர் முற்றம் பகுதிக்காக
சிற்சபேசனை தொடர்புகொண்டோம்.
அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு நாம் தமிழ்
எழுத்தாளர் விழா இயக்கத்தை ஆரம்பித்தபோது, இவரும் அதில் இணைந்து கருத்தரங்குகளில்
பங்கேற்றார்.
மெல்பனில் பல வருடங்களுக்கு முன்னர் நடந்த புதுவை
ரத்தினதுரையின் பூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சுகளும் நூல் வெளியீட்டில், இவரும்
உரையாற்றினார்.
கொழும்பில் 2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாம் சர்வதேச தமிழ் எழுத்தாளர்
மாநாட்டை நடத்துவதற்கு முன்னர், யாழ்.
நாவலர் மண்டபத்தில் நடத்திய தகவல் அமர்வு சந்திப்பில் இவரும் கலந்துகொண்டார். அவுஸ்திரேலியாவில் நாம் மேற்கொள்ளும்
தமிழ் எழுத்தாளர் விழா இயக்கம் பற்றி,
தனது கருத்துரையில் சிற்சபேசன் குறிப்பிட்டார்.
இனிய குரல்வளம் மிக்கவர். அதனால் அவுஸ்திரேலியா தமிழ் வானொலிகளும் இவரை நன்கு
பயன்படுத்திக்கொண்டன.