இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010

.


அன்பான தமிழ் முரசு வாசர்களுக்கு எம் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.



2010ம் ஆண்டு தமிழ்வருசமான விகுர்தி வருசம் 14ம் திகதி புதன் கிழமை காலை அவுஸ்ரேலிய நேரப்படி சரியாக 9 மணிக்கு பிறக்கின்றது.பிறக்கின்ற இந்த விகுர்தி வருடத்தில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக நோய் நொடியின்றி சந்தோசமாக வாழ தமிழ் முரசு பிரார்த்திக்கின்றது.
 

ஆட்சியில் புதிதாக குடியேறுபவர்கள் தொகை படிப்படியாகக் குறைக்கப்படும் எதிர் கட்சித் தலைவர் ரோனி அபேட்

.


எதிர் கட்சித் தலைவர் ரோனி அபேட் லிபரல் கட்சியின் ஆட்சியில் புதிதாக குடியேறுபவர்கள் தொகை படிப்படியாகக் குறைக்கப்படும் என்று அறிவித்தார். அவரின் இந்த  அறிவிற்பிற்கு கட்சியின் முக்கிய உறுப்பினர்களிடம் இருந்து  பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. எதிர் கட்சியின் குடிவரவுத் துறை பேச்சாளர் Scott Morrison, ரோணி அபேட் வெளியிட்டுள்ள குடிவரவுக் கொள்கை தனிப்பட்ட முறையில் அவரால் மேற்கொள்ளப்பட்ட முடிவு எனவும் இது  தொடர்பாக கட்சியில் கலந்து ரையாடப்படவோ அல்லது கட்சியில் முடிவெடுக்கவோ இல்லை எனத் தெரிவித்துள்ளார். முன்னாள் எதிர்கட்சித் தலைவர் மல்கம் ரேண்புல் முக்கிய விடயங்களில் கட்சியுடன் கலந்துரையாடாமல் முடிவுகளை மேற்கொண்டமையாலேயே கட்சித் தலைமையை இழந்தார் அதே போன்ற செயல்பாட்டினை ரோனி அபேட்டும் மேற்கொள்கின்றார் என கட்சியில் மற்றுமொரு முக்கியமானவர்  கருத்துத் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான வாக்களிப்பு

சிட்னியில் என்னை கவர்ந்த இனிய இசை நிகழ்வு

.
                              நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்






சென்றமாதம் தமிழர்களாகிய நாம் வழமைக்கு மாறான ஒரு இசை நிகழ்ச்சியை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஐங்கரன் கந்தராஐhவால் நடாத்தப்பட்ட தபேலா நிகழ்ச்சியே அது.
வழமையாக தமிழரது என கர்நாடக இசையையும் மெல்லிசையையும் கேட்டு பழகிய காதுகளுக்கு இந்த கச்சேரி ஒரு புதிய உணர்வை ஊட்டியது. ஆமாம் அன்று நாம் கேட்டது முற்று முழுக்க வட இந்திய இசையான ஹிந்துஸ்தானி இசையே.






எப்படி இருக்குமோ என கேள்விக்குறியுடன் போனவர்களை இசை என்னும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார்கள். அன்றைய கலைஞர்கள் Kuring-Gai Campusல் அமைந்த Greenhalgh Theatre நிறைந்த ஐனதிரள் கச்சேரியின் நாயகனான ஐங்கரன் கந்தராஜாவின் தனி தபேலா நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது. அவருக்கு துணையாக Sandeep Mishra சாரங்கி என்ற நரம்பு வாத்தியத்தை இசைத்தார். இவை எல்லாம் எம்மவருக்கு புதிதுதான்.

இதை உணர்ந்த ஐங்கரன் பார்வையாளருக்காக வாத்தியம் பற்றிய சிறு விளக்கத்தை தந்து எம்மை உசுப்பிவிட்டார். நிமிர்ந்து ஆசனத்தில் அமர்ந்தோம். கச்சேரி சூடு பிடிக்கத் தொடங்கியது. மக்கள் இயற்கையாக இசையிலே லயித்து போயினர். ஐங்கரனோ தான் தனியாக தபேலாவில் வாசிப்பவற்றை மக்கள் இரசிக்கவேண்டும் என்பதற்காக சிறு சம்பவங்களை விளக்கினார். குறிப்பாக மான் ஓடுவது மேலும் காலையிலே தாயார் எழுப்பும்போது புரண்டு படுத்து முனகும் பையன் என தனது வாசிப்பை உருவகப்படுத்தினார். இசையில் இணையாதவரையும் இணையவைக்கமுடியும் யாவரையும் என் இசையால் கவருவேன் என்பது போன்று இருந்தது இந்த வாசிப்பு.






 ஐங்கரனுக்கு இணையாக Sarangi  வாசித்த கலைஞர் Sandeep Mishra மிக பிரபலமான கலைஞர் Bhimsen Jushi  மற்றும் Ustart Vilayat Khan போன்றவருக்கு வாசிப்பர். இவர் ஐங்கரனுடன் இணைந்ததே ஐங்கரனுக்கு மட்டும் பெருமையல்ல தமிழ் சமூகமே இதையிட்டு பெருமைப்படலாம்.






சந்தேகம் இல்லாமல் இசை ரசிகர்களும் விற்பன்னர்களும் Dr  ஐங்கரன் கந்தராஜா ஒரு சிறந்த கலைஞராக உருவாகி இருப்பதை பாராட்டினார்கள். ஐங்கரன் சிட்னியிலே Ram Chandra Suman  டம் கற்க தொடங்கியவர். தனது ஆர்வத்தில் கலையை மேலும் விருத்தி செய்யும் ஆர்வத்தில் Mumbai சென்று Yogesh Sumsi டம் கற்றார். Yogesh Sumsi இசையுலகில் கோலோச்சும் Zahir Hussain ன் தந்தையான Allah Rakka யின் சிஸ்யராவார். நமது ஐங்கரனும் Zahir Hussain டமும் தபேலா கற்றுள்ளார். சிறந்த உயர்ந்த பாரம்பரியத்தின் வாரிசுதான் ஐங்கரன்.






கலை உலகிலே யாரது சிஸ்யன் யார் என்பதே முக்கியம். குருவின் பரிபூர்ண ஆசியும் அன்பும் அபிமானமும் ஐங்கரனுக்கு உண்டு. ஐங்கரனின் முழுநீள கச்சேரியை கண்டு இரசிப்பதற்கு குருவான Yogesh Sumsi யே மும்பையில் இருந்து வருகை தந்திருந்தார். ஆரம்பகால குருவான Ram Chandra Suman ம் Yogesh Sumsi யும் ஐங்கரனை மனதார வாழ்த்தினார்கள்.

இடைவேளையின்பின் கச்சேரி எதிர்பாராத ஒரு திருப்பத்தை தந்தது. திருமதி கலா றாம்னாத்தின் வயலின் இசைக்கு ஒத்திசையாக தபேலா வாசித்தார் ஐங்கரன். இங்கு ஐங்கரன் தான் ஒரு சிறந்த கலைஞன் என்பதை நிரூபித்தார். எப்போதுமே ஒத்திசையாக தாளவாத்தியத்தை வாசிக்கும்போது இசையை உணர்ந்து, இசையின் அழகு குறைந்துவிடாது அதை மேலும் மெருகூட்டுவதாக அமையவேண்டும் பக்கவாத்தியம். தனது பங்கை நன்றாகவே உணர்ந்து வாசித்தமை அவரது இசை ஞானத்தையும் ஈடுபாட்டையும் எமக்கு உணர்த்தியது.
வயலின் மேற்கத்திய வாத்தியமாக இருந்தபோதும் கர்நாடாக இசை கலைஞர்கள் மனித குரலுடன் இணைந்து வாசிக்கக்கூடிய அருமையான வாத்தியம் என்பதை உணர்ந்து வயலினை 200 வருடங்களுக்கு மேலாக நமதாக்கி கொண்டனர். ஆனால் இன்றோ மேற்கத்தியவரும் வியக்கும் வண்ணம் கர்நாடக கலைஞர்கள் வயலினை வாசித்து வருகின்றார்கள். புரவலாக கர்நாடக சங்கீத கச்சேரியில் ஒத்திசையாக வாசிக்கப்பட்டபோதும் அதில் தேர்ந்த வித்தகர் வயலினை தனிவாத்திய கச்சேரியாக வாசித்து புகழ்பெற்று வருகிறார்கள். வு T N Krishnan, T N Rajam  குன்னைக்குடி வைத்தியநாதன் போன்றோர் பிரபலமானவர்கள். இவர்கள் வரிசையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட இளம் கலைஞரே கலா றாம்நாத். இவர் தனது வாசிப்பால் யாவரையும் கவர்ந்தார். கச்சேரியின் ஆரம்பத்திலேயே கர்நாடக சங்கீதத்திற்கும் ஹிந்துஸ்தானி இசைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தி கச்சேரியை ஆரம்பித்தார். ஹிந்துஸ்தானி இசைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தி கச்சேரியை ஆரம்பித்தார். ஹிந்துஸ்தானி இசைக்கு வயலின் புதிய வாத்தியமே. இசையிலே இணைந்த விதூசகி இசை பிரவாகமாக இரசிகர்களை வர்சித்தார். ஐங்கரன் ஸ்ரீபன் கந்தராஜா

சளைக்காமல் அதற்கு ஈடு செய்தார்.
மொத்தத்திலே ஒரு அருமையான கச்சேரியை கேட்ட திருப்தியுடன் வீடு திரும்பினோம்.
வசீகர தோற்றமுடைய ஐங்கரன் இன்றைய இளைஞருக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஐங்கரன் டாக்டர் மட்டுமல்ல சிறந்த கலைஞனும்கூட. சளைக்காத உழைப்பும் தீராத தாகமும் இருக்குமானால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ஐங்கரன் ஒரு எடுத்துக்காட்டு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

18 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இதமான ராகங்கள்

.


ஈழத் தமிழர் கழகம் ஆண்டு தோறும் ஏப்பிரல் மாதத்தில் கலை நிகழ்வு ஒன்றினை நடாத்தி அதன் மூலம் திரட்டப்படும் நிதியை இலங்கையின் வட கிழக்குப் பிரதேசங்களில் வாழும் நம் தமிழ் உறவுகளின் நல்வாழ்வுக்குப் பயன் படுத்தி வருகின்றது. இவ் ஆண்டு ஏப்பிரல் மாதம் 18 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இதமான ராகங்கள் என்ற இசை நிகழ்சியை நாடாத்த உள்ளது. இந் நிகழ்வில் சகானா நாடகத் தொடரில் பல பாடல்களைப் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தவரான டாக்டர் நாராயணன், இளம் இளையராஜா எனப் போற்றப்டும் சதீஸ் மற்றும் உள்ளுர் கலைஞரான திருமதி மீனாட்சி வெங்கடேஸ் ஆகியோருடன் மற்றும் பல உள்ளுர் கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந் நிகழ்வில் தமிழிசை மெல்லிசை திரை இசை ஆகிய அம்சங்கள் இடம் பெற உள்ளதாக அறியப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் திரட்டப்படும் நிதி வவுனியாவில் உருவாகிவரும் ஆனந்த நிலைத்துக்கு வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். வன்னியில் இடைத் தங்கல் முகாமில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 முதியவர்களுக்கு புது வாழ்வு அளிக்கும் பாரிய பணியில் ஆனந்த நிலையம் ஈடுபட்டுள்ளதாகவும், இம் முதியவர்களுக்கு உதவ உறவினர் எவரும் இல்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது. இவர்களுக்கான குடியிருப்பு வசதிகளை மேற்கொள்வதற்கு வவுனியா அரச அதிபர் 10 ஏக்கர் அரச நிலத்தினை வழங்கியுள்ளார். இந் நிலத்தில் இவர்கள் குடியேறுவதற்கும், அங்கு வாழ்வதற்கும் அத்தியாவசியமான உள்கட்டுமாணப் பணியினை ஆனந்த இல்லம் அறக் கட்டளை நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நற்பணிக்கு உதவும் நோக்குடன் கழகம் ஏற்கனவே 4 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கியுள்ளதாகவும் இப் பணம் ஆனந்த இல்லம் மேற்கொள்ளும் பாரிய பணிக்குப் போதுமானதல்ல என்றும், எனவே தேவையான பணத்தின் ஒரு பகுதியையேனும் சேகரிக்கும் நோக்குடன் கழகம் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதென்றும், இந்நற்பணியில் ஒஸ்ரேலிய மக்களும் பங்கு கொண்டு வாழ்வாதாரத்துக்கு ஏங்கும் எம் உடன் பிறப்புகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றார்கள் ஈழத்தமிழர் கழகத்தினர்.

ஆனந்த இல்லத்தின் கட்டுமானப் பணிகளைக் காட்டும் படங்கள் சில:


நம்மைக் கவர்ந்த நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி

.
                                                                                    மதுரா மகாதேவ்

தாயகத்தில் இருந்து சிட்னி முருகனின் திருவிழாவை சிறப்பிக்க வந்திருந்த தவில் நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி சிட்னி முருகன் ஆலயத்தின் கலை கலாச்சார மண்டபத்தில் 04.04.2010 அன்று நடை பெற்றது. நுழைவுச் சீட்டுகள் பத்து வெள்ளிகள் என விற்கப்பட்டன. நிகழ்ச்சி சரியாக ஐந்து மணிக்கு மண்டபம் நிறைந்த கூட்டத்துடன் ஆரம்பமானது. . முதலில் கீர்த்தனைகளை வாசித்தார்கள். நாதஸ்வரத்தின் இனிமைக்கு ஏற்றாற்போல் தவில் வித்வான்களாகிய சுதாகரும் நர்மதனும் மிகவும் திறம்பட தாளத்திற்கேற்ப  வாசித்தார்கள்.




நாதஸ்வர வித்வான்களான நாகேந்திரமும் பாலமுருகனும் மிகவும் இனிமையாக பல தமிழ்த் திரை இசை பாடல்களை இடைவேளையின் பின்பு வாசித்தார்கள். 1940 களில் இருந்து 2009 ஆம் ஆண்டு வெளியான பட பாடல்களை வாசித்தது மிகவும் வியக்கத்தக்க ஒன்றாக இருந்தது. புதிய பாடல்களில் குத்து பாடல்களையும் அவர்களின் நாதஸ்வரம் விட்டுவைக்கவில்லை. அவற்றில் ஒன்று வாழை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம். இதைவிட வில்லு படத்திலிருந்து டாடி மம்மி வீட்டிலில்லை தடை போட யாருமில்லை, வாடா மாப்பிள்ளே வாழைப்பழ தோப்பிலே என்னும் இளையவர்களை மட்டுமல்லாமல் வயதுவந்தவர்களையும் கவரந்த பாடல்களாகும்.
படிக்காத மேதை திரைப் படத்திலிருந்து பெண் ஒன்று கண்டேன் பொன் அங்கு இல்லை, அபூர்வ ராகங்களில்ருந்து அதிசய ராகம் ஆனந்த ராகம், சிவாஜியிலிருந்து ரா ரா, என்னும் பாடல்களை மிகவும் இனிமையாக வாசித்தார்கள். பொம்பே திரை படத்திலிருந்து உயிரே என்னும் பாடலை பாலமுருகன் வாசித்தது அனைவரையும் கொள்ளை கொண்டுவிட்டது. இவர் ஒரு இளம் தலை முறையை சேர்ந்த கலைஞர் இவருக்கு எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று நம்பலாம்.



இந்த நிகழ்ச்சியின் மூலம் சேர்ந்த பணத்தை வழமைபோல் சைவமன்றத்தினர் அவர்களுக்கே கொடுத்து கௌரவித்தார்கள். இசை நிகழ்ச்சி இரவு ஒன்பது நாற்பந்தைந்திற்கு நிறைவு பெற்றது. எமது தாய் நாட்டிலிருந்தும் கனடாவில் இருந்தும் வருகை தந்து எங்களை நாதஸ்வர தவில் இசையில் நனைய செய்த இந்த நால்வரும் நீண்ட நாள் வாழ எல்லாம் வல்ல சிட்னி முருகப்பெருமான் அருள் புரிய வேண்டும். ஒரு சிறந்த நிகழ்சியை சிறந்த முறையில் நடாத்தி முடித்த சைவமன்றத்தினரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

துர்க்கா தேவி தேவஸ்தான சமய அறிவுப்போட்டி 2010



துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2010

இப் போட்டிகள் ஏப்ரல் மாதம் 18ம் திகதி சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் பிற்பகல் 1 மணியிலிருந்து மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது.

வர்ணம் தீட்டுதல் (பாலர் பிரிவுக்கு மட்டும்), சமய அறிவுப் போட்டி, பேச்சுப் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (பேச்சுப் போட்டிக்கான பேச்சுக்களும் வழங்கப்படும்)

அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் வழங்கும் இசை வேள்வி 2010

.

அவுஸ்திரேலியக் கம்பன் கழகம்  இவ்வருடச் செயற்பாடுகளில் ஒன்றாக, ஏப்பிரல் மாதம் 18ம் நாள், உலகப்புகழ் வீணையிசை வித்தகர் இராஜேஷ் வைத்தியாவினுடைய இன்னிசை நிகழ்வு ஒன்றை இசை வேள்வி 2010 என்ற பெயரில் மிக சிறப்பாய் சிட்னியில் அரங்கேற்றவிருக்கின்றது. பல இசைக் கலைஞர்களால் போற்றப்படுபவரும் சிறந்த வீணையிசை இறுவட்டுக்களை இசையமைத்து வெளியிட்டு வருபவருமான பிரபல இசையமைப்பாளர் திரு. இராஜேஷ் வைத்தியா அவர்கள் இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்கின்றார். ஏப்பிரல் மாதம் 18ம் திகதி மாலை 5 மணிக்கு Sydney Baha’i Centre 107 Derby St Silverwater என்ற இடத்தில் இடம்பெறுகின்றது. முத்தமிழும் காட்டும் கம்ப காவியம், மற்றும் கவிச்சக்கரவர்த்தி கம்பன் மீது கொண்ட காதலினால், அவன் பெயராலே ஒரு கழகம் அமைத்து தமிழை புலம்பெயர்ந்த நாடான ஒஸ்ரேலியாவில் மெருகூட்டிவருகின்றார்கள் இந்த அமைப்பினர்,



எந்த நாடும் எனக்குச் சொந்தமில்லை

.



                                   - -நடராஜா முரளிதரன் -






எந்த நாடும் எனக்குச் சொந்தமில்லை

அந்த அவாவினை

என் நினைவின் இடுக்கிலிருந்து

பிடுங்கியெறிவதையே

என் எதிரிகளும்

என்னவர்களும்

இடைவிடாது புரியும்

தொழிலாகக் கொண்டுள்ளார்கள்

எனது கனவுகளின் போதே

சாத்தியமாகியுள்ள

அந்த நினைவுப்படலத்தை

எனது அன்புக்குரியவளே

நீயும் சிதைத்து விடாதே

மூடுண்ட பனியில்

அமிழ்ந்து போய்

சுவாசம் இழந்துபோய்

நான் தவிப்பதுவாய்

நேற்றும் ஓர் கனாக் கண்டேன்
கோடை தெறித்த வெய்யிலில்

கருகும் உயிரினத்துக்கான

உஷ்ணவெளியில்

பிறந்த நான்

கனவுகளில்

உயிர் பிழைப்பதாய்

நீ நம்புவாய்

ஆனால்
எனது மண்ணிலிருந்து

நான் இடம்பெயர்க்கப்பட்டபோது

எனது மண்ணின் சில துணிக்கைகளும்

என்னோடு ஒட்டிக்கொண்டு

விலக மறுத்து

சகவாசம் புரிவதை

யாருக்கு நான் உணர்த்துவேன்





##### பெண் ####

.
             
                                xxxxxx சௌந்தரி xxxxxx




பெண் என்பது அவளது பெயர்

அவள் ஒரு இனம்

அவளுக்கு பலகோடி முகம்

அவளது உடலும் உள்ளமும் தனித்தனியாக

தவணைமுறையில் தாக்கப்படும்

பிறக்கமுதல் சிசுக்கொலை

பிறர் இறக்கும்போது உடன்கட்டை

இடையில் கற்பழிப்புஇ வன்முறை

உள்ளச்சுமைகளின் ஓயாதவலி

இவை பட்டியலிட்டு மாளாது

மெல்ல மெல்ல தடைகள் தாண்டி

முட்டிமோதி ஓட்டை உடைத்து

வெளியேவந்து தடம் பதித்தால்

எழுதப்பட்ட சட்டங்கள் பாதுகாக்காது

எழுதப்படாத விதிகளால் ஆளப்பட்டாள்

தனிமைச் சிறைக்குள் அவஸ்தைப்பட்டாள்

ஆண்டாண்டு காலமாய்

தொடர்கின்ற பெண்ணின்கதையிது



ஊடகங்களின் குறியீடு பெண்

சாமி தொடங்கி சாமானியன் வரை

தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் பெண்

கல்லோ புல்லோ கட்டிக்கொண்டு

அழுகின்ற பேதை பெண்

ஆணும் பெண்ணும் வேறுபட்ட இனம்

இரு வேறுபாடு கொண்ட மனம்

பெண்மை என்பது வெறும் நளினமல்ல

அவளிடம் கம்பீரம் உண்டு

நேர்மையுண்டு வீரமுண்டு

ஆண்மை என்பது வெறும் ஆதிக்கமல்ல

அவனிடம் கோழையுண்டு

மூடருண்டு முரடனுண்டு

பெண்ணியம் என்பது வீறாப்பல்ல விவேகம்

பெண்களின் மொழி

உரிமைக்கான ஓர் குரல்

பெண்களின் கருத்து

கைதட்டலுக்கு மட்டுமல்ல

கண்களைத் திறப்பதற்கே!

விபத்துக்குள்ளாகும் வாகனங்களை மீள் பதிவு செய்தல் ஒளிக்கப்படும்

.




நியூ சவுத்வேல்சில் விபத்துக்கள்ளாகும் வாகனங்களை காப்புறுதி ஸ்தாபனங்கள் பாவனைக்கு உகந்தவையல்ல என்று பதிவளிக்கப்பட்ட வாகனங்களை குறைந்த விலையில் வாங்கி மீழவும் பதிவு செய்யும் முறையை இனிமேல் இல்லாது ஒழிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது பதிவளிக்கப்பட்ட வானங்கள் பழுது பார்க்கப்பட்டு மீழவும் பதிவு செய்யப்படுகின்றன. ஆண்டு தோறும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 36 ஆறாயிரம் வாகனங்கள் பதிவளிக்கப்படுகின்றன எனவும் அவற்றில் சராசரி 14 ஆயிரம் வாகனங்கள் பழுது பார்க்கப்பட்டு மீழவும் பதிவு செய்யப்பட்டு வீதிக்கு வருகின்றது எனத் தரவுகள் காட்டுகின்றன. போக்குவரத்து அமைச்சர் David Campbell இம் முறை ஒழிக்கப்படுவது பழுது பார்பதற்கு தேவையான உதிரிப்பாகங்களைப் பெற வாகனங்கள் கழவாடப்படுவதைக் குறைப்பதுடன் பாதுகாப்பற்ற வாகனங்கள் ஓட்டப்படுவதையும் அதனால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கவும் வகை செய்யும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.