தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

அன்றும் இன்றும் (சென்றவாரத் தொடர்ச்சி - 3)

 


 

           

                         

                                   சிவஞானச்சுடர்

                                                     பல்வைத்திய கலாநிதி

                                        பாரதி இளமுருகனார்

                                                   (வாழ்நாட் சாதனையாளர்)

 




இன்று கூட்டுக் குடும்ப வாழ்க்கை விட்டுத் தனிமை நாடுவோர் அதிகம்!

 

நாட்டைவிட்டுப் புலம்பெயர் தமிழர் இன்று

    நடைமுறைக்கு ஒவ்வாது என்றோ அன்றி

ஏட்டுச்சுரைக் காயென்றா கூட்டுக் குடும்ப

    எண்ணத்தைக் கைவிட்ட எண்ணிக்கை யதிகம்!

வீட்டினிலே போதியவிடம் இல்லையென் றாலும்

    விழுமியத்தை ஓம்பிவாழுஞ் சிலரோ குறையைக்

காட்டிடாது மகிழ்வுடனே கூடிவாழ் கின்றார்!

    கண்டிப்பாய் அவர்செயலைப் போற்ற வேண்டும்!.

 

 

 சிதைக்கப்படும்  செந்தமிழ்!

 

பைந்தமிழின் பழம்நூல்கள் அழியா தென்றும்

    பாரினிலே தமிழ்மொழியே சிறந்த தென்றும்

செந்தமிழின் சுவைதேனின் இனிமை என்றம்

    தெரிந்திருந்தும் சுயநலத்தின் தேவைக் காக

விந்தையம்மா! வேண்டுமட்டும் ஆங்கிலங் கலந்து

    விழலெழுதித் தமிழ்க்கொலையைச் செய்கின் றாரே!

இந்தநிலை மாற்றிடவே துணிவு மிக்க

    இனியுமொரு மறைமலையார் பிறந்திடு வாரோ?

 

 

வீறுடனே சிறுகதைகள் எழுதுஞ் சிலரோ

    வேற்றுமொழி கலந்தாற்றான் கதைக்கு ‘மவுசு’என

ஆறுபக்கக் கதையொன்றை எழுதும் போது

    அறுபதுக்குமேற்; பிறமொழியாம் ஆங்கிலச் சொற்களைப்

பேறிதனாற் பெற்றோமே எனம கிழ்ந்து

    பெருமையுடன் எழுதுகின்றர்! வெட்கக் கேடு!

கூறுகிறேன் கண்டனத்தாற் பயனோ வராது!

    கொடுமையிது! நாய்வாலை நிமிர்த்த லாமோ?

 

 

வீட்டிலோ அல்லது பள்ளியிலோ  தமிழைப் பேசி எழுதிப் படிக்க வசதி இருப்பின் பிள்ளைகளை ஊக்குவிப்பது பெற்றோரின் கடமையே!

அழகை ரசிப்போம் ஆனந்த மடைவோம் !




      





















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா 





காயும் அழகு கனியும் அழகு
பூவும் அழகு மொட்டும் அழகு
ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு அழகு
அழகை ரசிப்போம் ஆனந்த மடைவோம்

மழலை அழகு பிள்ளை அழகு
தவழும் நிலையில் அதுவும் அழகு
பல்லே இல்லா வாயும் அழகு
முளைக்கும் பல்லு இன்னும் அழகு

கொஞ்சும் போது கடிப்பதும் அழகு
கெஞ்சும் வேளை துப்புதல் அழகு
அஞ்சாப் பாம்பை பிடிப்பதும் அழகு
ஒவ்வொரு வேளை ஒவ்வொரு அழகு

`மிஸ்டர் பீன், தேங்காய், கத்தி’ – சிறுகதை - கே.எஸ்.சுதாகர்

தணிகாசலத்திற்கு சார்லி சப்பிளினுக்கு அடுத்ததாக மிஸ்டர் பீனைத்தான் அதிகம் பிடிக்கும். மிஸ்டர் பீனின் நகைச்சுவைக் காட்சிகளை இரசித்துக் கொண்டிருந்தவர் திடீரென்று விழித்துக் கொண்டார். மிஸ்டர் பீன் ஒரு அங்காடிக்குச் செல்கின்றார். திடீரென்று தனது மேலங்கிக்குள் இருந்து ஒரு முழு மீனை எடுத்துக் கொண்டார். ஒரு பாத்திரம் ஒன்றினுள் போட்டு, அப்பிடி ஒரு சுழட்டு இப்பிடி ஒரு சுழட்டு விட்டு, மீனைத் தூக்கித் தூக்கிப் போட்டார். திருப்தி வந்தவுடன் சட்டியை எடுத்துக் கொண்டார். பின்னர் தனது பொக்கற்றுக்குள் இருந்து ஒரு உருளைக்கிழங்கை எடுத்தார். `பீலர்’ ஒன்றை எடுத்து உருளைக்கிழங்கின் மேல்புறத் தோலை சீவிப்பார்த்து, திருப்தி வந்தவுடன் அதையும் எடுத்துக் கொண்டார்.

அத்துடன் தணிகாசலம் படத்தை இடையில் நிறுத்திக் கொண்டார்.

“இஞ்சாரும்… எங்கடை தேங்காய் உடைக்கிற கத்தியையும், பழங்கள் வெட்டுற கத்தியையும் எடுத்துக் கொண்டு என்னோடை ஒருக்கா கடைக்கு வரமாட்டீரோ?”

சற்று நேரத்தில் தணிகாசலமும் சிவகாமியும், ஒரு பெரிய கத்தி, இன்னொரு சின்னக் கத்தி சகிதம் காரில் ஏறினார்கள்.

இலங்கையை விட்டு வெளிநாட்டுக்கு வந்த இந்த முப்பது வருடங்களில் அவர்கள் இருவரும் ஒரு ஆமான தேங்காயைக் காணவில்லை. முதல் பத்து வருடங்களில் எந்தவொரு கடையிலும் தேங்காயே  இருக்கவில்லை. அப்புறம் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கடைகளில் தேங்காய்கள் முளைத்தன. ஆனால் தேங்காய் என்று சொல்வதற்கில்லை. ஏதோ ஒரு காய். இரண்டு தேங்காய்கள் வாங்கினால், இரண்டும் அழுகிப் போயிருக்கும், அல்லது ஒன்று தேறியிருக்கும். ஒரு போதும் இரண்டுமே நன்றாக இருந்ததில்லை. ஒரு முறை நான்கு தேங்காய்கள் வாங்கி, தான் பள்ளிகூடத்தில் படிப்பித்த நிகழ்தகவைச் சோதித்துப் பார்த்தார். அவரால் அதை நம்ப முடியவில்லை. நிகழ்தகவு தோற்றுப் போயிருந்தது. நான்கில் மூன்று பாழ்.

தேங்காய்களை வாங்கி வந்து வீட்டில் உடைத்துப் பார்த்து, சரியில்லாவிடில் திருப்பிக் கொண்டுபோய் ரசீதுடன் குடுத்தால் தேங்காய்க்குப் பதில் தேங்காய் கிடைக்கும். பணத்தை ஒருவரும் திருப்பிக் குடுத்தது கிடையாது. பின்பு மீண்டும் முதலில் இருந்து வில்லங்கம் முளைக்கும். வீட்டில் கொண்டுவந்து உடைச்சுப் பார்த்து நல்லதோ கெட்டதோ நமக்கு இதுதான் விதி என்று நொந்து கொள்வார்கள்.

இப்பொழுது அப்பிடியில்லை. தேங்காய்க்கான ரசீதுடன் உடைத்த தேங்காய்ப் பாதிகளையும் கொண்டு போக வேண்டும். தேங்காய்களும் இரட்டி மடங்கு விலை. பெற்றோல் செலவு கூடி, அதையும் நட்டத்துடன் சேர்க்க வேண்டும். கடைக்கும் வீட்டுக்கும் மாறி மாறி ஓடிப்போவதில் சீவன் போய்விடும்.

சிவகாமியின் நண்பி ஒருவர், “எடியேய் காமி…. இப்ப வூல்வேர்த் சொப்பிங் சென்ரரிலை தேங்காயை பாதி பாதியா உடைச்சுக் குடுக்கிறாங்களாமடீ” என்று சொல்லியைதைக் கேட்டு, சொப்பிங் சென்ரருக்குப் போன சிவகாமி அங்குள்ளவர்களைச் சிரிக்க வைத்து தானும் சிரித்துவிட்டு வந்தாள். “நாங்கள் என்ன கவுண்டரிலை கத்தி வைச்சுக் கொண்டா இருக்கிறம்” என்று தேங்காய்ப்பாதி போல வாயை விரித்துக் கத்திய பெண்மணியை நினைத்து நடுச்சாமத்திலும் சிவகாமி சிரித்துக் கொள்வாள். அதன் பிறகு ஒரு குஜராத்காரனின் கடையில் நல்ல தேங்காய்கள் இருக்கின்றன என்று கேள்விப்பட்டு அங்கே போனார்கள். “நாங்கள் கோயில் தேவைகளுக்காக விற்கின்றோம்” என்றபடியே தேங்காய்கள் இருக்குமிடத்துக்கு கூட்டிச் சென்றார் கடைக்காரர். அங்கே ஒரு குளிரூட்டியில் தேங்காய்கள் குடுமியுடன் வீற்றிருந்தன. மற்றக் கடைகளைவிட விலை மூன்று மடங்கு அதிகம். `எக்காரணம் கொண்டும் வாங்கிய தேங்காய்களை நாங்கள் மீளப் பெற்றுக் கொள்ள மாட்டோம். பணமும் திருப்பித் தரப்பட மாட்டாது’ என்றொரு வாசகம் குளிரூட்டியில் ஒட்டிக் கிடந்தது. சலமும் காமியும் விழுந்தடித்துக் கொண்டு கடைக்கு வெளியே ஓடி வந்துவிட்டார்கள்.

“ஏனுங்கோ… உந்தக் கோயிலிலை அரிச்சனைக்கு வைச்சிருக்கிற தேங்காயளெல்லாம் நல்லாத்தானே இருக்கு” என்று சிவகாமி சொல்ல, “அவையளுக்கு தேங்காய் எல்லாம் பிறிஸ்பேர்ணிலிருந்து அல்லது பிஜித் தீவிலிருந்து நேரடியா வருகுது.” என்றார் தணிகாசலம்.

“அப்ப கோயில் நிர்வாகமே, கோயிலுக்குப் பக்கத்திலை ஒரு தேங்காய்க்கடை போட்டா நல்ல யாவாரமா இருக்குமல்லோ?”

“இனி அதுக்கு ஒரு கடை போட்டு, ஒரு ஆளை வைச்சு வியாபாரம் செய்யிறதைவிட அரிச்சனையாலை அவைக்குக் கூட வரும். அது சரியப்பா… உதுகளை விட்டிட்டு நாங்கள் வந்த வேலையைப் பாப்பம். பழையபடி நாங்கள் எங்கடை கடையிலையே நாலு தேங்காயள் வாங்குவம். இப்பதானே கத்தி இருக்கல்லோ… வீட்டை போய் திரும்பி வாற வேலையும் இல்லை. நேரமும் மிச்சம், பெற்றோல் செலவும் மிச்சம்”

கடைக்குள் இருவரும் புகுந்தார்கள். நான்கு தேங்காய்கள் வாங்கிக் கொண்டார்கள்.

“ஏனுங்கோ… மாம்பழம் படு ஜோரா, மாசு மறுவில்லாமக் இருக்கு… ஒரு கிலோ வாங்குவோமா…”

“போனமுறை வாங்கி, வெளியிலை நல்ல சிவப்பாக் கிடந்தது, உள்ளுக்கை வெய்யிலிலை வெம்பி, நரம்பு நரம்பா கறுத்தக் கோடுகளோடை கிடந்ததல்லே… இந்தமுறை மாம்பழம் வேண்டாம். அங்கை பாரும் கொய்யாப்பழங்களை… சாம்பிளுக்கு வெட்டி குவியலுக்கு மேலை கொஞ்சம் வைச்சிருக்கிறான். நல்ல இளந்தாரிப் பெம்பிளயள் சொண்டுக்குப் பூசினது போல சிரிச்சுக்கொண்டு சிவப்புச் சிவப்பாக் கிடக்கு… இரண்டு கிலோ வாங்குவம்.”

“முதன்முதல் கொய்யாப்பழத்தை பெம்பிளப்பிள்ளையளின்ர சொண்டுக்கு வர்ணிச்சது நீங்கள்தான். பதின்மூண்டு டொலர் எண்டு போட்டிருக்கிறான். விலை கொஞ்சம் கூடவாக் கிடக்கு…”

“இப்பதானே கத்தி கிடக்கல்லே…”

நாலு தேங்காய்களுடனும், இரண்டு கிலோ கொய்யாப்பழங்களுடனும் இருவரும் கார் நிற்குமிடம் விரைந்தார்கள்.

மறைவாக கார் நிற்பாட்டியிருந்த இடத்திற்குச் சென்று, பின் பூற்லிட்டைத் திறந்தார்கள். எக்ஸ்ரா டயரை மிதத்தி, அதற்குள் ஒளித்து வைத்திருந்த கத்திகளை எடுத்துக் கொண்டார்கள். தேங்காய்கள் நாலில் மூன்று நாசம். கொய்யாப்பழம் சாப்பிட ஆசையாக இருக்கு என்று காமி சொன்னதில், இரண்டு கொய்யாப் பழங்களை சின்னக் கத்தியால் நறுக்கினார் தணிகாசலம். உள்ளுக்குள் எல்லாமே வெள்ளையாகக் கிடந்த அதிர்ச்சியில் கொய்யாப்பழங்களைக் கீழே நிலத்தில் போட்டுவிட்டார். மேலும் இரண்டை நறுக்கினார். அதுவும் வெள்ளை.

“படுபாவி… மேலுக்கு சிவப்பை வெட்டி வைச்சு ஏமாத்திப் போட்டான்.” எல்லாவற்றையும் மீண்டும் பையிற்குள் போட்டுக்கொண்ட தணிகாசலம், “நீர் இந்தக் கத்தியளை ரிசூவாலை வடிவாத் துடைச்சு பின்னுக்கு வையும். நான் ஒருக்கா போட்டு வாறன்” சொல்லிக்கொண்டே கோபத்துடன் மீண்டும் கடைக்கு விரைந்தார்.

போனவர், போன வேகத்தில் திரும்ப வந்தார்.

“தேங்காயளுக்கும் கொய்யாப்பழங்களுக்கும் பதிலா இரண்டு மூட்டையள் அரிசி வாங்கி வந்தனான். இனி எங்கட மகள் சுருதியின்ரை கலியாண வீட்டுக்கும் ஆக்கள் நிறையப்பேர் வருவினம் தானே. தேவைப்படும்.”

தணிகாசலமும் சிவகாமியும் காரில் ஏறி, வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் காருக்குப் பின்னால் ஒரு பொலிஸ் வாகனம் லைற்றைப் போட்டபடி துரத்தியபடி இருந்தது. தணிகாசலம் அதைக் கவனிக்கவில்லை. பத்து நமிடங்களாகத் துரத்திய பொலிஸ் திடீரென்று கோபம் கொண்டு எச்சரிக்கை ஒலியை எழுப்பியபோது சிவகாமி உசாரானார்.

முரணாகத் தெரிவதேன் குதம்பாய்?

 


-சங்கர சுப்பிரமணியன்.





ஆக்கிய சோற்றின் பயன் என்னவென்றால்
பசிக்குப் புசிக்க என்று சொல்வது முறையா
அல்ல அவ்வுணவின் பயன் என்னவென்றால்
அதை கடலில் போடுவது என்பது முறையா

போர்பயிற்சி எடுத்து நிற்கும் வீரரெல்லாம்
போர் வந்தால் நாட்டைப் பாதுகாப்பதற்கா
அல்லது அது வித்தைகாட்டி நாட்டு மக்களை
மகிழ்விக்கத்தான் என்றால் சரியாயிருக்குமா

ஏற்பது இகழ்ச்சி என்று சொன்ன ஔவையும்
பிச்சை புகினும் கற்கை நன்று என்றுரைத்தார்
கல்லாதாரை முகத்திரண்டு புண்ணுடையார்
என்று வள்ளுவனும் வழிமொழிந்தே சென்றார்

கேடில் விழுச்செல்வம் கல்வி என்றவர்தான்
மாடல்ல மற்றவை என்று சொல்லிச் சென்றார்
கால்லாதாரை எலாம் முதுகாட்டில் காக்கை 
உகக்கும் பிணம் என்றார் ஔவைபிராட்டியும்

மேல் நாட்டு மருமகள் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 தமிழில் பக்திப் படங்களையும், புராணப் படங்களையும் இயக்கி


புகழ் பெற்றவர் ஏ. பி. நாகராஜன். சிவாஜியின் நடிப்பில் இவர் அடுத்தடுத்து தயாரித்து இடக்கிய பக்திப் படங்கள் காலத்தால் மறக்க முடியாதவை ஆகும். ஆனாலும் சிவாஜிக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட மனத்தாங்களாலும் , பின்னர் ராஜா ராஜா சோழன் படத்தின் தோல்வியினாலும் நாகராஜன் தன் கவனத்தை சமூகப் படங்களின் பக்கமும் திருப்பினார். அப்படி 1975ம் வருடம் அவர் உருவாக்கிய படம்தான் மேல் நாட்டு மருமகள் . 


 படத்தின் பேரே படத்தின் கதையை சொல்வது போல் அமைந்தது.

கல்வி கற்க பிரான்ஸ் நாட்டுக்கு செல்லும் மோகன் திரும்பி வரும் போது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து அழைத்து வந்து குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை அளிக்கிறான். தந்தை தாயின் எதிர்ப்பின் காரணமாக இருவரும் தனிக் குடித்தனம் போகிறார்கள். இதனிடையே மோகனுக்கு என்று தீர்மானிக்கப் பட்ட சுதா தன் காதலை மோகனின் தம்பி ராஜா பக்கம் திருப்ப , பெற்றோரின் சம்மதம் இன்றி அவர்களுக்கு திருமணமும் நடக்கிறது. இரண்டு மகன்களும் இப்படி செய்து விட்டார்களேயே என்று பெற்றோர்கள் குமுறுகிறார்கள். ஆனால் மேல்நாட்டு மருமகளாக வந்து மீனா என்று பேர் சூட்டிக் கொண்டவள் தமிழ் காலசாரப்படி வாழ முனைகிறாள் . 

 சீனியர் நடிகர்களையே நம்பி படம் எடுத்துக் கொண்டிருந்த ஏ .பி .என் . இந்த படத்தில் இரண்டு இளம் நடிகர்களை இயக்கியிருந்தார். சிவகுமார் , கமல்ஹாசன் என்று இரண்டு ஹீரோக்கள். சிவகுமார் அடக்கமாகவும், கமல் அட்டகாசமாக நடித்து அசத்தி இருந்தார்கள். குறிப்பாக கமலின் ஆட்டம், பாட்டம் , அலட்சியம் எல்லாம் ஜோர். 

 கூடவே ஜூனியர் பாலையாவும் தன் பங்குக்கு சிரிப்புக்கு உதவுகிறார். பூர்ணம் விஸ்வநாதன், காந்திமதி, கே . டி . சந்தானம், அச்சச்சோ சித்ரா எஸ். வி. ராமதாஸ் ,சிவதணு , வி. கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர். இவர்களுடன் சோ, மனோரமா இருவரும் ஒரு காட்சியில் தேவை இன்றி வருகிறார்கள். 

இலங்கைச் செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கைப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை!

மன்னார் காற்றாலைத் திட்ட ஆய்வுக்காக சென்ற குழுவினரை விரட்டியடித்த பொதுமக்கள்!

ஷானி அபேசேகர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி

அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் திட்டத்தை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்!

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை  



வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கைப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை!

08 Oct, 2025 | 03:49 PM

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கைப் பிரஜைகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கைப் பிரஜைகள் இணையவழி ஊடாக வாகனங்களை வாடகைக்கு எடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இணையவழி ஊடாக வாகனங்களை வாடகைக்கு வழங்கும் போர்வையில் பல நிதி மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உலகச் செய்திகள்

 காசாவில் இன்றுமுதல் தற்காலிக போர் நிறுத்தம்; இஸ்ரேல் இணக்கம்

காசா அமைதி திட்டம் : இஸ்ரேல் - ஹமாஸ் இணக்கம் ; ஐ.நா பொதுச்செயலாளர் வரவேற்பு

முடங்கியது அமெரிக்க அரச நிர்வாகம் : இலட்சக்கணக்கானோர் பாதிப்பு!


காசாவில் இன்றுமுதல் தற்காலிக போர் நிறுத்தம்; இஸ்ரேல் இணக்கம்

Published By: Digital Desk 3

10 Oct, 2025 | 10:24 AM

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், இராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.

வராஹி அம்மன் கும்பாபிஷேகம்

 


தமிழ் மொழி /யாப்பு இலக்கண வகுப்புகள் (29/10/2025 முதல்)

 


முத்தமிழ் மாலை 29/11/2025