இலங்கையில் முஸ்லிம்கள் என்றாலே – அவர்கள் ‘ வர்த்தக சமூகத்தினர் ‘ என்ற கணிப்பு பொதுவானதாக
நிலைபெற்றிருந்த காலமொன்றிருந்தது. அக்கணிப்பு பின்னாளில் பொய்யானது.
அவ்வாறான மாற்றத்திற்கு அச்சமூகம் கல்வி மீது கொண்டிருந்த நாட்டம்தான்
அடிப்படைக்காரணம். அவர்கள் மத்தியிலிருந்து ஆசிரியர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள்,
கலைஞர்கள், படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்கள்
தோன்றினார்கள்.
இலங்கையில் பெரும்பான்மையினத்து பௌத்த சிங்கள மக்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசங்களில் அவர்கள்
தமிழில் பேசினார்கள். எழுதினார்கள். அத்துடன் சிங்களம் பேசுவதற்கும் எழுதுவதற்கும்
தெரிந்துகொண்டார்கள்.
அதனால் எமது ஈழத்து தமிழ் இலக்கியவளர்ச்சியில் அவர்களும் உந்துசக்திகளாக
மாறினார்கள். தென்னிலங்கையில் மாத்தறைக்கு சமீபமாக இருக்கும் திக்குவல்லை என்ற
ஊரின் பெயரை தமிழ் இலக்கிய உலகிற்கு பிரசித்தம் செய்த முன்னோடியாக எம்மத்தியில் திகழ்ந்துகொண்டிருப்பவர்தான் இலக்கிய நண்பர் திக்குவல்லை கமால்.
ஒரு கடலோரக்கிராமம் தமிழ் இலக்கியத்தில் தனது பெயரை தக்கவைத்துக்கொண்டதற்கு
அங்கு பிறந்து ஆசிரியராகவும் இலக்கிய கர்த்தாவாகவும் அறிமுகமான நண்பர் எம். எச்.
எம். ஷம்ஸ் எமக்கு அறிமுகப்படுத்திய
திக்குவல்லை கமாலின் ஆசிரியர்களும் எழுத்தாளர்கள்தான் என்பதும் ஆச்சரியமானது.
ஏ. இக்பால், சந்திரசேகரன் ஆகியோரிடம் கல்வி கற்றிருக்கும் திக்குவல்லை
கமாலின் இயற்பெயர் முகம்மது ஜலால்தீன் முகம்மது
கமால். 1950 ஆம் ஆண்டு, திக்குவல்லையில் பிறந்திருக்கும் கமால், அவ்வூர் மக்களின்
பேச்சுத்தமிழை இலக்கியத்திற்கு வரவாக்கியவர்.
1970 களில் தமிழகத்திலும் இலங்கையிலும் புதுக்கவிதைத் துறை பெரும்
வீச்சாக வளர்ந்தது. புதுக்கவிதையை ஏற்கலாமா? நிராகரிக்கலாமா? என்ற சர்ச்சைகளும் எழுந்தன.
அதனை குளியலறை முணுமுணுப்புகள் என்றும், ஆற்றுவெள்ளம் எனவும்
சிலர் எதிர்வினையாற்றினார்கள். ஆனால் புதுக்கவிதை
புற்றீசல்போன்று பரவியது.
இரண்டு வரிகளில் பல அர்த்தங்கள் தரக்கூடிய புதுக்கவிதைகளும்
வந்தன.
வல்லிக்கண்ணன், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
என்ற தொடரையும் எழுதினார். பின்னர் அத்தொடரும் நூலாகியது. தமிழகத்தில் வானம்பாடிகள் இந்தத் துறையில்
சிறகடித்துப்பறந்தனர். புதுக்கவிதைகளுக்காகவும்
சிற்றேடுகள் மலர்ந்தன.
மல்லிகையில் நான் எழுதத்தொடங்கிய காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து
பல படைப்பாளிகளும் அறிமுகமாகியிருந்தனர். இலங்கையில்
அவ்வேளையில் எனக்கு படிக்கக்கிடைத்த முதலாவது
புதுக்கவிதை நூல் எலிக்கூடு. அதனை நூல் எனச்சொல்வதிலும் பார்க்க சிறிய பிரசுரம்
என்றுசொல்வதுதான் பொருத்தம்.
சின்னச்சின்ன கவிதைகளுக்கு அத்தகைய சிறு பிரசுரங்கள் போதுமானதாகவுமிருந்தது.
இந்திய சுதந்திரம் என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் ஒருவர் எழுதிய
புதுக்கவிதை இவ்வாறிருந்தது: