மரண அறிவித்தல்


இளைப்பாறிய ஆசிரியை செல்லம்மா இரத்தினம்




யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, சிட்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட  பெருவாழ்வு பெற்ற சீமாட்டி, இளைப்பாறிய ஆசிரியை செல்லம்மா இரத்தினம் அவர்கள் 05-03-2020  வியாழக்கிழமை அன்று தனது 100வது வயதில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செட்டியார் செல்லப்பா இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், ரவீந்திரன்,  மகேந்திரன்(தலைவர்- துர்க்கை அம்மன் கோவில்),  ரஜனி, காலஞ்சென்ற ராதா ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான இராசம்மா,  அன்னம்மா, நடராஜா, தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும், குமாரநாயகம்(லண்டன்),  விஜயகுமாரி, நிரஞ்சனா, மகேஸ்வரன் ஆகியோரின்  அன்பு மாமியும், Dr. கிருஷ்னி(லண்டன்),  சஞ்சீவ்(லண்டன்), Dr. வித்யா, Dr. அபிலாஷ்,  Dr. தர்சினி(லண்டன்), ராகுலன், Mitta, வினாயக், வைஷ்ணவி, சரவணன், சரண்யா, சாரங்கன், Dr. Sanjay, Dr. அகல்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஆரியன்(லண்டன்),  லஷ்மன்(லண்டன்), ஆரி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
  • Friday, 13 Mar 2020 9:00 AM - 12:00 PM
  • Residence 21 Francis Street, Strathfield, NSW2135
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு 


ரவீந்திரன் மகன்  61 411 647 824
மகேந்திரன் மகன்  61 297 429 746, 61 450 209 724 
மகேஸ்வரன் ரஜனி  61 280 210 545

சிட்னி துர்க்கா கோவில் - பூங்காவனம்


படப்பிடிப்பு: ஞானி    



யாழ் மத்திய கல்லூரியின் மதுரகானம் 14.03.2020

.


Innisai Malai 2020 - Forest Lake QLD குயீன்ஸ்லாந்தில் இன்னிசை மாலை 2020-15 03

.

நாத சங்கமம் - சிட்னி துர்கா கோவில் - 14/03/2020



உலக பிரசித்தி பெற்ற ஈழத்து இசைக்கலைஞர்களின்   
நாத சங்கமம்

இணுவில் தவில் வித்வான் திரு தட் ச ணா மூர்த்தி உதயசங்கர் 
நாதஸ்வர சக்ரவர்த்தி  இணுவில் திரு குமரன் பஞ்சமூர்த்தி 
யாழ் நாதஸ்வர கலைஞர்  திரு நாகதீபன் குமரதாஸ் 
யாழ் தவில் கலைஞர் நடராசா பிரசன்னா 

சிட்னி துர்கை அம்மன் கலாச்சார மண்டபம் 
14/03/2020 மாலை 6 மணி 


அனைவரும் வருக!!!   இசை அமுதம் பெருக !!!    






வானவில் 2020 - 28/03/2020

.

சிட்னி துர்க்கா கோவில் - தேர்த் திருவிழா


படப்பிடிப்பு: ஞானி 






சிட்னி துர்க்கா கோவில் - சப்பரத் திருவிழா


படப்பிடிப்பு: ஞானி 



.               .                



புகழேந்தி மேடை நாடக விமர்சனம் - ஈழன் இளங்கோ

29.02 2020 அன்று சிட்னிவாழ் இளைஞர்களினால் நடாத்தப்பட்ட "புகழேந்தி" என்ற தமிழ் இலக்கிய நடையிலானஏறக்குறைய அறுபது பெருக்குமேல் பாங்குபற்றிய, ஒரு வரலாற்று மேடை நாடகத்தை கண்டுகளித்தேன். கண்டேன்களித்தேன்சிரித்தேன் அழுதேன் ஆனந்தமடைந்தேன். எமக்கென்றோரு வலுவான தளம் இல்லையே என்ற கவைலையோடும் அக்கறையோடும் திரைத்துறையில் பயணிக்க முயன்றஆரம்பித்த எனக்குஇதுவரை பயணம் செய்து பெரியதொரு வெற்றியடையாமல்ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் வலுவான தளத்தை உருவாக்க முடியாமல் மறைந்த பலர்போல் எனது முயற்சியும் வாழ்க்கையும் முடிந்து விடுமோ என்ற ஐயத்தோடு இருந்த எனக்குஇல்லை நாம் இருக்கிறோம்எங்களால் முடியும்நாம் நிறைவேற்றுவோம் என்று கூறியது போல் இருந்தது இந்த இளைஞர்களின் படைப்பு. இந்நிகழ்ச்சியில் பங்குபற்றிய பெரும்பாலான இளைஞர்களும் குழந்தைகளும் ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர்கள்  என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இளைஞர்களின் கலைப்பயணம் என்பது அவர்களுடைய கல்விபுரியும் காலங்களில் அந்தந்த கல்விக்கூடங்களுக்குரிய குழுக்களால் ஆண்டுக்கொருமுறை  நடாத்தப்படும் கலைநிகழ்ச்சிகளோடு முடிந்துவிடும்ஆனால் கல்வியை முடித்துவிட்டு வாழ்க்கையை ஆரம்பிக்கும் தருணத்தில் கடினங்களையும் கடமைகளையும் தாண்டிகலை ஆர்வத்தை தாண்டி ஒரு சமுதாய உணர்வுடன்தமிழ் மொழிமீது உள்ள பற்றை இலக்கியதமிழில் ஒரு சரித்திர நாடகத்தைகுறிப்பிடத்தக்ககுறிப்பிட முடியாத பல இன்னல்களைத்தாண்டிபலத்த கடினத்தோடுபல மாதங்கள் கடின பயிற்சி எடுத்துஅதில் பெரியவர்களையும் சேர்த்துஅவர்களை தகுந்த வகையில் உரிய இடத்தில்  உபயோகித்துபல ஆயிரம் பணத்தை செலவுசெய்துஒரு நெருக்கடியான சனிக்கிழமைஅரங்குநிறைந்த  நிகழ்வாக வெற்றிகரமாக மேடையேற்றிவெற்றியும் அடைந்திருக்கிறார்கள் என்றால் அது வெறும் பாராட்டுக்குரிய ஒரு விடயம் அல்ல. இந்த இளைஞர்கள் தமிழ் மொழியையும்கலை கலாச்சாரத்தையும் எதிர்கால சந்ததியினருக்கு கொண்டுசெல்வார்கள் என்பதில் ஐயமில்லை. இவர்களை உற்சாகப்படுத்தி இவர்கள் மேலும் மேலும் படைப்புகளை படைக்கவும்சாதனைகளை புரியவும் உதவியாகவும் உறுதுணையாகவும் இருக்கவேண்டியது சமுதாயத்தில் ஒவ்வொருவருடைய கடமை ஆகும்.

கொடுத்து வரும் தண்டனையே கொரோ நோவாய் வந்திருக்கு ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


                           இயற்கை யெனும் பெருமரணை
                           நொருக்கி நிற்கும் வகையினிலே
                            எடுத்து வரும் பொருத்தமிலா
                            முயற்சி யெலாம் பெருகுவதால்
                            இயற்கை அது சீற்றமுற்று
                            எல்லை இலா வகையினிலே
                            கொடுத்து வரும் தண்டனையே
                            கொரோ நோவாய் வந்திருக்கு   !

                            இயற்கை யெனும் பெருவரத்தை
                            புறக்கணிக்க பல வகையில் 
                            செயற்கை எனும் வழியினிலே
                            இறக்கை கட்டி பறந்ததனால்
                            பயன் உடைய அத்தனையும்
                            பயன் அற்ற தெனும்மாயை
                            உலகினிலே வந் வந்தமைந்து 
                            உலகை இப்போ உலுக்கிறதே  !


                            விஞ்ஞானம் எனும் பெயரால்
                            விந்தை பல விளைந்ததுவே 
                            அளவுக்கு மிஞ்சி விடில்
                            அவை அனைத்தும் ஆபத்தே 
                            எஞ் ஞான்றும் விஞ்ஞானம்
                            உதவிவிடும் எனும் எண்ணம்
                            மண்ணுள்ளார் மன மேறி
                            மரண வாசல் பார்க்கின்றார் !

                            

படித்தோம் சொல்கின்றோம்: பிரான்ஸ் ராணிமலர் எழுதிய நூல் அமரர் சின்னத்தம்பி சின்னையா செல்லையா வாழ்வும் பணிகளும் ரஸஞானி



எமது தமிழ் சமூகத்தில் அதிலும் வசதி படைத்தவர்கள் மத்தியில் ஒருவர் மறைந்துவிட்டால், பிள்ளைகள் அந்தியேட்டி வரும் சமயத்தில் மண்டபம் ஒழுங்கு செய்து உறவினர், நண்பர்களை அழைத்து மறைந்தவர் பற்றிய நினைவு மலரையும் வெளியிட்டு விருந்துபசாரம் நடத்துவார்கள்.
ஈழத் தமிழர் புகலிட  நாடுகளில் இந்த நிகழ்வுகளை பார்த்திருப்பீர்கள். குறிப்பிட்ட நினைவு மலருக்கு கல்வெட்டு என்றும் ஒரு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
அதில் மறைந்தவரின் சுருக்கமான வாழ்க்கைச்சரிதமும்,  மக்கள், பேரப்பிள்ளைகள் எழுதும்  நினைவுக் குறிப்புகளும் குடும்ப பின்னணி பற்றிய  Family Tree உம் பதிவுசெய்யப்பட்டிருக்கும்.
மறைந்தவர் சைவத்தமிழராயின், கல்வெட்டின் இறுதிப்பக்கங்களில்  தேவாரம், சிவபுராணம், திருப்பல்லாண்டு, திருவிசைப்பா, திருப்புகழ் என்பனவும்  அச்சிடப்பட்டிருக்கும்.  இது வழக்கமான சம்பிரதாயமாகியிருக்கும் புகலிடச்சூழலில், ஒரு மகள் தனது அருமைத்தந்தையாரை நினைவுகூர்ந்து ஒரு சிறிய நூலை எழுதியுள்ளார்.
இந்த நினைவேட்டில் நாம் எதிர்பார்க்கும் கல்வெட்டு உள்ளடக்க சமாச்சாரங்களை பார்க்கமுடியவில்லை! அதனால் முற்றிலும் வித்தியாசமானது.
இந்த நூலை எழுதியிருப்பவர் கடந்த பலவருடங்களாக பிரான்ஸ் நாட்டில்  வாழ்ந்துவரும்  ஈழத்தவரான ராணிமலர் செல்லையா.  இவர் இலங்கையில் நீர்கொழும்பு பிரதேசத்தில் வாழ்ந்த பிரபல வர்த்தகரும் சமூகப்பணியாளருமான ( அமரர் ) சின்னத்தம்பி சின்னையா செல்லையாவின் இளைய மகள்.
தனது நெடுநாள் கனவை நனவாக்கும் பொருட்டு, தனது தந்தையார் பற்றிய தகவல்களை தேடித்திரட்டி இந்த நூலை படைத்துள்ளார்.
ஒரு காலகட்டத்தில் காசுப்பயிராக விளங்கிய புகையிலை வர்த்தகம் சார்ந்த சுருட்டுத் தொழிலகத்தை நடத்தியவாறு, சமூகச்சிந்தனையுடன் இயங்கியிருப்பவர்தான் நீர்கொழும்பு பிரதேசத்தில் செல்லையா முதலாளி என்ற பெயருடன் வாழ்ந்திருக்கும் ராணிமலரின் தந்தையார்.
தமது தொழிலாளர்கள் சமூக மற்றும் நாட்டு நடப்புகளையும் உலக விவகாரங்களையும் தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்பதற்காக தான்  நடத்திவந்த தொழிலகத்தில் வித்தியாசமான வாசிப்பு அனுபவப்பயிற்சியையும் நடைமுறைப்படுத்தியவர்.

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் - அங்கம் -03


கோயில் விழாக்கள்

மது கோயிலிலே திருவிழாக்களுக்குக் குறைவில்லை. கொடியேற்றிச் செய்யும் திருவிழாக்களும் தேர் தீர்த்தமும் இல்லை என்ற குறைதவிர, வேறு திருவிழாப் பல தாராளமாக இருந்தன. மாதந்தோறும் நிகழ்ந்தன. அவை எமதூர் மக்களின் ஒற்றுமையையும் சமய உணர்ச்சியையும் வௌிப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களாக அமைந்தன.
அவற்றை எல்லாம் இங்கு விபரித்தல் பொருந்தாது எனினும், இரண்டொரு விழாக்கள் பற்றிக் குறிப்பிட்டாற்றான் ஊர் மக்கள் ஒற்றுமையும் உணர்ச்சியும் புலனாகும். எனவே, கந்தசஷ்டி காலத்தில் இறுதி இரண்டு நாள்களும் நடைபெறும். சூரன்போர் விழா, திருக்கல்யாண விழா ஆகியன பற்றியும் கார்த்திகை மாதத்தில் நிகழும் திருக்கார்த்திகை விழா பற்றியும் சிறப்பாகக் குறிப்பிட்டு மனநிறைவு பெறுகிறேன்.
சூரன்போர் விழா கந்தசஷ்டி விரதகாலக் கடைசி நாள் திருவிழா. சூரன் கதையும் தாரகாசுரன் சிங்காசுரன் ஆகியோரை அவன் பலிகொடுத்த சுயநலன் பற்றியும் முருகன் வேல் எய்யும் வேளை அவன் தப்பிக் கொள்ளச் செய்த சாலங்கள்பற்றியும் கந்தசஷ்டி விரதகாலப் புராணப் படிப்பின்போது அறிந்துகொள்வோம். அது முழுக்க முழுக்க செவிப்புலனாற் பெறும் அறிவு.
செவிப்புலனாகப் பெறும் அறிவிலும் பார்க்கக் கட்புலன் மூலமாகப்பெறும் அறிவு காலத்தை வென்று நிலைக்கும் என்பது கல்வியியல் தரும் தகவல். காதாற் கேட்ட கதைகளை நாம் விரைவில் மறப்பது வழக்கம். ஆனாற் கண்ணாற் கண்ட காட்சிகள் அப்படியல்ல. பலநாள் அவை நினைவில் நிற்கும். அதானாலேதான் பாடசாலைக்கற்றல் அனுபவம் பலவற்றைச் செவிப்புலனாற் பெற்றாலும் கட்புல அனுபவத்தின் மூலம் உறுதிப்படுத்துதல் நற்பயன்தருமென்பர்.
அந்த வகையில், கோயிற் புராணப்படிப்பின் போது கேட்டுச்சுவைத்த  சூரன் கதைகளை சுவைத்து மனதில் நிறுத்த உதவியது சூரன்போர்த் திருவிழா.
சூரன்போர்த் திருவிழா கந்தசஷ்டி விரதகாலக் கடைசிநாள் நடைபெறும். விழாவுக்கான ஆயத்தங்கள் முற்பகல் ஒன்பது மணிக்கே துவங்கிவிடும். பகல் ஒரு மணியளவில், சூரனை வண்டி ஒன்றில் வைத்துத் தள்ளியவாறு கோயிலில் இருந்து ஒருமைல் தூரத்திலுள்ள நாவற்குழிச் சந்திக்குக் கொண்டு செல்வார்கள். அச்சந்தியை யாவகர்கோட்டை என்று ஊரவர் குறிப்பிடுவர். சாவங்கோட்டை என்று பேச்சுவழக்கிற் கூறுவதும் உண்டு. அச்சந்தியில் வைத்து, அலங்கரித்த சூரனை ஊர்வலத்துக்குத் தயாராக்குவர்.

( அமரர் ) சிசு. நாகேந்திரன் அய்யாவின் நினைவரங்கு நிகழ்ச்சி 15/03/2020









மெல்பனில் நடந்த கலைவளன் சிசு.நாகேந்திரன் நினைப்பகிர்வு நிகழ்வு: தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் இரங்கலுரை நவரட்ணம் வைத்திலிங்கம்


 “  அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்ற காலம் முதல் தமிழ் சமூகப்பணியாளராகவும், தாயகத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்களுக்காகவும் பாடுபட்டவரான எழுத்தாளரும், நாடகக் கலைஞரும், மொழிபெயர்ப்பாளரும், நூலாசிரியருமான கலைவளன் சிசு. நாகேந்திரன் அவர்கள் அண்மையில் சிட்னியில் மறைந்துவிட்டாலும், அவரைப்பற்றிய பசுமையான நினைவுகள் என்றென்றும் எம்முடனேயே வாழ்ந்துகொண்டிருக்கும். “   என்று மெல்பனில் கடந்த சனிக்கிழமை 22 ஆம் திகதி நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஏகமனதாக தெரிவித்தனர்.
 
இந்நிகழ்வினை அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தின் மெல்பன் கேசி தமிழ்மன்றத்தின் மூத்த பிரசைகள்  அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது.

இவ்வமைப்பின் தலைவர் திரு. சிவசுப்பிரமணியம்  அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமரர் சிசு. நாகேந்திரன் அய்யாவின் உருவப்படத்திற்கு  மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலியும் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

சிசு. நாகேந்திரன் அவர்கள்,  கேசி தமிழ்மன்றத்தையும் அதனோடிணைந்த தமிழ் மூத்த பிரசைகள் ஒன்று கூடல் என்ற மூத்தோருக்கான ஒரு அமைப்பையும் உருவாக்க உறுதுணையாகவும், ஆலோசகராகவும் செயற்பட்டு, அதன் வளர்ச்சியில் தள்ளாத வயதிலும் தன்னால் முடிந்தவரை அயராது உழைத்து, இதற்குமேல் இயங்க முடியாது எனும் நிலை வந்தபோதும்,   பிள்ளைகளின் வற்புறுத்தலினால் இடம் பெயர்ந்து சிட்னி மாநகரின்   ஒரு முதியோர் காப்பகத்தில் தங்கியிருந்தவர்.

மலையகத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வு


அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 32 வருடகாலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின்  ஏற்பாட்டில்  இவ்வருடம் இலங்கை மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில்  தெரிசெய்யப்பட்ட வறுமைக்கோட்டில்  வாழும்  ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான முதல் கட்ட நிதிக்கொடுப்பனவு கடந்த 04 ஆம் திகதி  வழங்கப்பட்டது.
நுவரேலியா மாவட்டத்தில் முதல்கட்டமாக  நானுஓயா நாவலர் கல்லூரி,  டெஸ்ஃபோர்ட் தமிழ் மகா வித்தியாலயம், கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரி மற்றும் மகளிர் பாடசாலை (Our Lady’ School ) , ஆரம்ப பாடசாலை  முதலானவற்றைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
மலையக சமூக அபிவிருத்தி நிறுவனம் (Plantation Community Development Organization) அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பாக இயங்கிவருகிறது.
இந்த அமைப்பு, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், மலையக தாய்மாருக்கான விழிப்புணர்வு , பாடசாலை மாணவர்களுக்கான ஊக்கப்படுத்தல், முன்பள்ளி உதவிகள், பொதுப்பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான மாதிரி பரீட்சை வினாத்தாள் வழங்குதல், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான கள ஆய்வுகள் முதலான வேலைத்திட்டங்களில் ஆக்கபூர்வமாக இயங்கிவருகின்றது.

மழைக்காற்று – தொடர்கதை – அங்கம் 26 - முருகபூபதி

பிதா, வழக்கம்போன்று காலை ஐந்து மணிக்கே துயில் களைந்து எழுந்துவிட்டாள். வீட்டில் நிசப்தம் இழையோடியிருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக கூடத்தில் இருக்கும் நீண்ட சோபாவில் யாரோ உறங்குவது தெரிந்தது.
மெதுவாக நகர்ந்து வந்து பார்த்தாள். போர்வைக்கு வெளியே நீண்ட கூந்தல் தெரிந்தது. அது ஜீவிகாதான் என்பதை சட்டென புரிந்துகொண்டாள். இரவு நெடுநேரம், ஜீவிகா, லண்டனிலிருந்து வந்திருந்த பெரியப்பா சண்முகநாதனுடன் பேசிக்கொண்டிருந்தது அபிதாவுக்குத் தெரியும்.
முதல் நாள் இரவுக்காட்சிகள் அவளது மனதில் விரிந்தன. குளியலறை சென்று வந்து, தனக்கென தேநீர் தயாரித்து அருந்தினாள்.
ஜீவிகா, முதல்நாள் வேலைமுடிந்ததும் நேரே விமான நிலையம் சென்றிருக்கிறாள். அவளை அழைத்து வரும் பத்திரிகை நிறுவனத்தின் வாகனம், விமான நிலையத்தில் விட்டுச்சென்றிருக்கிறது.
லண்டனிலிருந்து புறப்படுமுன்னர் பெரியப்பா சண்முகநாதன், ஜீவிகாவுக்கு தனது பயண நிகழ்ச்சிகளை சொல்லத்தவறியிருக்கிறார். லண்டனிலிருந்து சிங்கப்பூர் வந்து அங்கு இரண்டு நாட்கள் நின்றுவிட்டு, அங்கிருந்துதான் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு புறப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து ஜீவிகாவுக்கு தகவல் தந்துள்ளார்.
அவரது பயண ஒழுங்குகளில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றங்களினால், வேலை முடிந்து வரும் வழியில் பெரியப்பாவை அழைத்து வந்திருக்கிறாள்.
அவர் சரியான திட்டமிடலுடன் செயல்படுபவர் இல்லை. சிலவேளை விமான நிலையத்திலிருந்து நேரே யாழ்ப்பாணம் போய்விடுவார் என்ற எண்ணத்தில்தான் ஜீவிகா வந்திருக்கிறாள். முதலில் அப்படித்தான் சொன்னாராம். பின்னர் எண்ணத்தை மாற்றிக்கொண்டாராம்.
அதனால்  ஜீவிகா எதுவித முன்னேற்பாடும் இன்றி நேரே வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டாளாம்.
தனது கைத்தொலைபேசிக்காவது தெரிவித்திருக்கலாமே என்றுதான் அபிதா முதலில் நினைத்தாள். ஜீவிகா ஏன் இதுவிடயத்தில் அலட்சியமாக இருந்தாள்…?!
நல்லவேளை இரவு உணவு போதியளவு இருந்தது. பெரியப்பாவுக்கு மஞ்சுளாவையும் சுபாஷினியையும் அவள் அறிமுகப்படுத்தியபோது, அவர்கள் இருவரும் ஏக குரலில் . “அங்கிள் வணக்கம்  “  என்றனர்.
அபிதாவை அறிமுகப்படுத்தும்போது,   “ பெரியப்பா,  இது அபிதா. இவதான் இப்போது இங்கே வேலைக்கு இருக்கிறா. வவுனியா பக்கம்.  “ என்றாள்.
 “ இல்லை… இல்லை  அய்யா. என்ர ஊர் முல்லைத்தீவு உடையார்கட்டு.  “ என்று சொல்லியவாறு  அபிதா இருகைகளும் கூப்பி வணங்கினாள்.
பெரியப்பா பதிலுக்கு வணக்கம் சொல்லாமல், முகத்தை திருப்பிக்கொண்டு,  சுவரிலிருந்த தனது மனைவியின் படத்தைப்பார்த்தார்.  முதல் நாள் அபிதா அதற்கு அணிவித்த பூச்சரம் சருகாகிக்கொண்டிருந்தது.
 “  குளிக்கவேணும்.  ஷவரில் சுடு தண்ணீர் வருமா..?  “ எனக்கேட்டார்.

செய்தி: “மலைகளைப் பேசவிடுங்கள்" வெளியீடும் - மூன்று நூல்களின் அறிமுகமும்


எழுத்தாளரும் அரசியலாளருமான மல்லியப்புசந்தி திலகர்  எழுதிய “மலைகளைப் பேசவிடுங்கள்"  நூல் வெளியீடும்,

‘வண்ணச் சிறகு' அரு.சிவானந்தனின் , “சென்று வருகிறேன் ஜென்ம பூமியே"  கவிதை நூல்
தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘இலங்கையின் சிறுகதை மூலவர்களில் ஒருவரான இலங்கையர் கோன்’ - அறிமுகம்           ( குமரன் வெளியீடு) கனடாவில் இருந்து வெளிவரும் "காலம்"  கலை இலக்கிய சிற்றிதழின்  "தெளிவத்தை ஜோசப்"  சிறப்பிதழ்
ஆகியவற்றின்  அறிமுகமும்  இம்மாதம்  
9 ஆம் திகதி பௌர்ணமி திங்களன்று மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கம்   சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சாஹித்யரத்னா தெளிவத்தை ஜோசப் தலைமையிலும் பிரபல தொழில் முனைவரும் சமூக செயற்பாட்டாளருமான சந்த்ரா ஷாப்டர் முன்னிலையிலும் இடம்பெறவுள்ளது.

முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  மனோ கணேசன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ள இந்நிகழ்வில், மூத்த எழுத்தாளர் அந்தனி ஜீவா, குமரன் பதிப்பக உரிமையாளர் க. குமரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.

நிகழ்வில்,   கல்வியாளரும் விமர்சகருமான எம். வாமதேவன் அறிமுகவுரையையும் , விமர்சன உரையை திருமதி வசந்தி தயாபரன், சிராஜ் மஷ்ஷூர் ஆகியோரும் நிகழ்த்தவுள்ளனர். நூலாசிரியர் மல்லியப்புசந்தி திலகர் ஏற்புரை நிகழ்த்துவார்.
பாக்யா பதிப்பகத்தின் ஏற்பாட்டில், இடம்பெறவுள்ள இந்நிகழ்வை பிரதாஸ்  எஸ். ஆக்ஞயா  தொகுத்து வழங்குவார்.
---0---






எம் மக்களின் வாழ்வைச் சொல்லும் ‘சினம் கொள்’ - தாமரைச்செல்வி


.


‘சினம் கொள்’ திரைப்படம் பற்றிய அறிவிப்பு வந்த போதே அதைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் எழுந்திருந்தது. எமது மண்ணின் சினிமா என்ற ஆர்வம் தந்த எதிர்பார்ப்பு அது.
ஒரு மணிநேரம் பயணம் செய்து பிரிஸ்பேன் பல்கலைக்கழக திரையரங்குக்கு சென்றால் முன் மண்டபம் ஆட்களினால் நிறைந்து போயிருந்தது. அரங்கின் கதவு திறப்பதற்காய் காத்திருந்த கூட்டத்தினுள் ஐந்தாறு வெள்ளைக்காரர் நின்றது ஆச்சரியம். அதில் ஒருவர் கையில் புகைப்படக் கருவியும் காணப்பட்டது.
அரங்கில் நாலைந்து இருக்கைகள் தவிர மற்றவை நிரம்பியிருந்தன. இரண்டு மணி நேரம் போனது தெரியவில்லை. படம் முடிந்த போது இறுதிக் காட்சி தந்த அதிர்வில் ஒரு கணம் உறைந்து போயிருந்த அரங்கு மறுகணம் ஒன்று இரண்டு என்று ஆரம்பித்து எழுந்த கைதட்டலில் சுவரெல்லாம் அதிர்ந்தது. அப்போதே இது கொண்டாடக் கூடிய சினிமா என்பதை உணர முடிந்தது.
இலங்கையில் சிங்கள சினிமா முன்னேறிய அளவுக்கு தமிழ் சினிமா முன்னேறவில்லை என்ற கருத்தைப் பலர் தொடர்ச்சியாக ஆதங்கத்தோடு சொல்லி வந்திருக்கிறார்கள். சில தமிழ்ப் படங்கள் ஓரளவு பரவாயில்லை என்ற நிலையில் இருந்தாலும் இந்தியப் படங்களுடன் ஒப்பிடும் போது அவை நலிந்த நிலையிலேயே இருந்திருக்கின்றன. போர்க்கால நாட்களில் திரைப்பட தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சில படங்கள் உருவாக்கப்பட்;டன. அவற்றில் சில குறும்படங்கள் தரமானவையாகவும் இருந்திருக்கின்றன. குறைந்த அளவு வளங்களை வைத்து உருவாக்கப்பட்ட அந்த குறும்படங்களில் சில இன்றளவும் பேசப்படுகின்றன. சில போதாமைகள் இருந்தாலும் எங்கள் சினிமா என்று அவற்றையும் நாம் கொண்டாடியிருக்கிறோம்.

இலங்கைச் செய்திகள்


கொரோனா; சந்தேகத்தில் இதுவரை 19 பேர் அனுமதி

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும்

கதிர்காமம் ஆலயத்தை ஒப்படைக்க கோரி மூவர் வழக்கு தாக்கல்

தென்மராட்சியில் 896 ஹெக். நிலத்தை அபகரிக்க வனவளத் திணைக்களம் முயற்சி

பாராளுமன்றம் இன்று கலைப்பு: ஏப்ரல் 25 இல் தேர்தல் நடைபெறும் சாத்தியம்



கொரோனா; சந்தேகத்தில் இதுவரை 19 பேர் அனுமதி



பதுளையில் மூவர் கண்காணிப்பில் 
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நாடு முழுவதும் அடையாளப் படுத்தப்பட்டுள்ள வைத்தியசாலைகளில் 19 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகவும் நேற்றையதினம் இரண்டு பேர் மேலதிகமாக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.