-->
ஒவ்வொரு வருடமும் முடிவடையும் டிசம்பர் மாதமும், புதிய வருடம்
தொடங்கும் ஜனவரி மாதமும் எனக்கு சற்று மனக்கலக்கமாக இருக்கும்.
கடந்த சில வருடங்களாகவே இந்தக்கலக்கம் தொடருவதற்கு காரணம்
சிலரது இழப்புகள்!!! அவர்களில் எனக்கு நன்கு தெரிந்தவர்கள், அல்லது நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்கள்
இருப்பார்கள்.
கடந்த 2017 டிசம்பர் மாதத்திலும் புதிய ஆண்டின் (2018) தொடக்கத்தில் ஜனவரி மாதத்திலும் எதிர்பார்த்தவாறே
மனக்கலக்கம் வந்தது. இலங்கையில் தெய்வநாயகம் பிள்ளை ஈஸ்வரனும் சென்னையில் பரீக்ஷா ஞாநியும் மெல்பனில் துரைராஜா ஸ்கந்தகுமாரும்
அடுத்தடுத்து மறைந்துவிட்டார்கள்.
அண்மையில் மெல்பனில் மறைந்த துரைரராஜா ஸ்கந்தகுமார் அவர்களை
நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த 1987 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே நன்கறிவேன். சுமார்
முப்பது ஆண்டுகளுக்கும் மேலான பழக்கம். அவர் 1985 இல் இங்கு வந்திருக்கிறார்.
முதல் சந்திப்பிலேயே அவர் எனது அன்புக்குரியவராகவும் மரியாதைக்குரியவராகவும்
திகழ்ந்தமைக்கு அவருடைய தந்தையார் யாழ்ப்பாணம் முன்னாள் மேயர் (அமரர்) துரைராஜாதான்
காரணம்.
மல்லிகைஜீவா, டொமினிக்ஜீவா என அறியப்பட்ட
காலத்தில் இலங்கையில் தமிழில் முதல் முதலில் சிறுகதை ( தண்ணீரும் கண்ணீரும் ) இலக்கியத்திற்காக தேசிய சாகித்திய விருதுபெற்று,
அதனை கொழும்பில் வாங்கிக்கொண்டு யாழ்ப்பாணம்
ரயில் நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில் ஊர்மக்களுடன் சேர்ந்து அவருக்கு சிறந்த வரவேற்பு
மரியாதை வழங்கியவர் மேயர் துரைராஜா.
டொமினிக்ஜீவா இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்தவர். அந்த
இயக்கம் வடபகுதியில் நடத்திய பல போராட்டங்களில் முன்னின்றவர். மாற்றுக்கருத்துள்ள அரசியலைச்
சார்ந்திருந்த துரைராஜா அவர்கள். தங்கள் ஊர் எழுத்தாளனுக்கு இலக்கிய விருது கிடைத்ததை
பாராட்டி வரவேற்பு வழங்கியதை ஜீவா இன்றும் நினைவில் வைத்து அகம் மகிழ்கின்றார். தனது
சில பதிவுகளிலும் இதனை அவர் குறிப்பிட்டு நான் வாசித்திருப்பதனால், அத்தகைய நல்லியல்புகள்
கொண்டிருந்தவரின் புதல்வரான ஸ்கந்தகுமாரும் தமது நல்லியல்புகளினால் என்னை கவர்ந்திருந்தார்.
மாற்றுச்சிந்தனைகளை
வரவேற்பவர்கள் அரிதாகியிருந்த காலகட்டத்தில் (இன்றும் இந்த நிலைதான் நீடிக்கிறது)
நான் 1987 இல் முதல் முதலில் மெல்பனில் சந்தித்த நாமெல்லோரும்
"ஸ்கந்தா" என அழைக்கும் ஸ்கந்தகுமாரும்
தமது தந்தையின் இயல்புகளுடனேயே எனக்கு அறிமுகமானவர்.
விக்ரோரியா இலங்கைத்தமிழ்ச்சங்கம்
என்றபெயருடன் அக்காலப்பகுதியில் இயங்கிய இன்றைய ஈழத்தமிழ்ச்சங்கத்தில் ஸ்கந்தா பொருளாளராகவும்
"சோமா அண்ணர்" சோமசுந்தரம் தலைவராகவும் "டொன்காஸ்டர்" மகேஸ்ரன்
செயலாளராகவும் பதவியிலிருந்த 1988 - 1989 காலப்பகுதியில் ஸ்கந்தா எம்முடன்
நட்புறவோடு பழகியவர்.
அக்காலப்பகுதியில் இங்கிருந்த நண்பர்கள் சிலர் இணைந்து மக்கள் குரல் என்ற கையெழுத்து இதழைத் தொடங்கியிருந்தார்கள்.
மக்கள் குரல் மாற்று அரசியல் சிந்தனையை முன்வைத்த விமர்சன ஏடு.