தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

படித்ததில் பிடித்த கவிதை " சிதறும் நிறங்கள்"

 .

சிதறும் நிறங்கள்


தவறுகள் செய்வது
உயிர் இன்னும்
இயங்குகிறதென்பதற்கான
அடையாளம்
விழும்
ஒவ்வொரு முறையும்
புதிய நடையைக்
கற்றுக் கொள்கிறேன்
சரியான நிறம்
கண்டுபிடிக்குமுன் நிறங்கள்
சிதறட்டும்
அதில் தான் தெளிவாகிறது
உண்மை
வாழ்க்கை
என்பது
நிறைவே அல்ல
மெதுவாக
முழுமையைக் கற்றுக்கொள்ளும்
பயிற்சி.
பிரியா பாஸ்கரன் I 11.6.25.

தி.ஞானசேகரன் எழுதிய `அவுஸ்திரேலியப் பயணக்கதை’ - கே.எஸ்.சுதாகர்

 .

பயணங்கள் போவது பலருக்கும் பிடித்தமானது. புதிய இடங்களைத் தரிசிப்பதிலும், அங்கு வாழும் மனிதர்களின் கலை, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்வதிலும், அவற்றிற்குப் பின்னால் உள்ள வரலாறுகளைத் தெரிந்து கொள்வதிலும் பலருக்கும் ஆர்வம் உண்டு. ஆனால் அவற்றை ஏனையவர்களும் அறிந்து கொள்ளும் வகையில், மிகவும் சுவையாகப் பதிவு செய்து கொள்பவர்கள் மிகவும் குறைவு. அந்த வகையில் தி.ஞானசேகரன் அவர்கள் - இலண்டன் பயண அனுபவங்கள், ஐரோப்பிய பயண அனுபவங்கள், கனடா பயண அனுபவங்கள், வட இந்திய பயண அனுபவங்கள், அவுஸ்திரேலியப் பயணக்கதை என ஐந்து பயண அனுபவப் புத்தகங்களை வரவாக்கியிருக்கின்றார். இந்தச் சந்தர்ப்பத்தில், நான் வியந்து வாசித்த `அவுஸ்திரேலிய பயணக்கதைஎன்னும் நூல் பற்றிப் பார்க்கலாம்.


இந்த நூல் 1999 ஆம் ஆண்டு ஞானம் பதிப்பகத்தில் இருந்து வெளிவந்திருக்கின்றது. நூலின் அணிந்துரையை பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்களும், முன்னுரையை திரு லெ.முருகபூபதி அவர்களும் எழுதியிருக்கின்றார்கள்.

நூலின் ஆரம்பக் கட்டுரைகளில் அவுஸ்திரேலியா பற்றிய புள்ளிவிபரங்களைக் காணக்கூடியதாக இருந்தது. இவை 1999 ஆம் ஆண்டுக்குரிய தகவல்கள் என்பதால், தற்போதையை தகவல்களை இங்கே பதிவு செய்வது சாலவும் பொருத்தமாக இருக்கும்.

அவுஸ்திரேலியாவில் பூர்வீக மக்கள் சுமார் 60,000 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றார்கள். அதன் பின்னர் பிரித்தானியாவில் இருந்து, 1788 ஆம் ஆண்டளவில் வந்த கைதிகள் மற்றும் அவர்களுடன் கூட வந்தவர்களினால் உருவாக்கப்பட்ட நாடே இன்றைய நவீன அவுஸ்திரேலியா ஆகும். இன்று அவர்களின் பரம்பரையினர் சீரும் சிறப்புமாக வாழ்ந்துகொண்டு, புதிதாகக் குடியேறியவர்களையும் வாழ வைத்திருக்கின்றார்கள். அவுஸ்திரேலியா 270 இற்கும் மேற்பட்ட இனக் குழுமங்கள் இணங்கி வாழும் ஒரு பல்லின நாடாக மிளிர்வதுடன், அதன் வளர்ச்சி ஏனைய நாடுகளைக் காட்டிலும் பல மடங்கு முன்னேற்றத்தையும் கொண்டிருப்பதைக் காணலாம்.

இந்நூலாசிரியர், சுமார் 225 ஆண்டுகளைக் கொண்ட நவீன அவுஸ்திரேலியாவை, இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வு முறைகளுடன் ஒப்பிட்டு முடிச்சுப் போடுவதைப் பார்த்து நான் வியந்து நிற்கின்றேன். இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் வருகையும் ஏறக்குறைய 225 ஆண்டுகளைக் கொண்டதுதான். ஆனால் அவர்களின் கடும் உழைப்பும், சிந்திய இரத்தமும் அவர்களின் வாழ்வை உயர்த்தப் பயன்படவில்லை, நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரவே பயன்பட்டிருக்கின்றது என்பதை அறியும்போது ஏதோ ஒரு நெருடல் மனதில் வந்து போகின்றது.

அவுஸ்திரேலியா, இலங்கையை விட 120 மடங்கு பெரிதானது. ஆனால் சனத்தொகையில் இலங்கையை விட சிறிதளவே (அவுஸ்திரேலியா - 27 மில்லியன்கள், இலங்கை – 22 மில்லியன்கள்) கூடுதலாகவுள்ளது. மேலும் அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ட்ஸ்மேனியா என்னும் தீவு, இலங்கையின் பரப்பளவைக் கொண்டது என்பதும் ஆச்சரியமான தகவல் ஆகும். தற்போது அவுஸ்திரேலியாவின் சனத்தொகையில் 57% ஐரோப்பியர்கள் வாழ்கின்றார்கள். அதில் 33% ஆங்கிலம் பேசும் வெள்ளையர்கள். இந்த நாட்டிற்கு சொந்தமான பூர்வீக குடிகள் 3.8%. இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து குடியேற்றம் எவ்வளவு வேகமாக நடைபெற்றுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.


நினைப்பினின்று அகற்றிவிடு !

 .


   மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
     மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 

 

நிலைபெறுமா றெண்ணிநிற்க

நீள்பிவியில் நீவிரும்பு
அலைபாயும் மனமதனை
அடக்குதற்கு துணிந்துவிடு

நிலையில்லா பொருளையெலாம்  


நினைப்பினின்று அகற்றிவிடு
நெஞ்சமதில் இறைநினைப்பை
நிரந்தரமாய் இருத்திவிடு ! 

துன்பமெனும் நினைப்பதனைத் 

துரத்தியே அடித்துவிடு
சூழ்நிலையை தூய்மையாய்
ஆக்குதற்கு விரும்பிவிடு

அன்புடனே அணைத்துவிட 

ஆவலுடன் இருந்துவிடு
ஆண்டவனும் ஆசியினை
அள்ளியே அளித்திடுவான்   

ஆத்திரத்தை மூட்டைக்கட்டி 

அப்பாலே எறிந்துவிடு
ஆணவமாம் நினைப்பதனை
அகமிருந்து அகற்றிவிடு

கூசுகின்ற வார்த்தைகளை

பேசுவதைத் தவிர்த்துவிடு
குறையில்லா பரம்பொருளும்
நிறைவாக வழங்கிடுவான் !

உன்விருப்பைத் திணித்துவிட

ஒருபோதும் நினைக்காதே
ஒழுக்கநெறிப் பாதையிலே
உன்பயணம் அமையட்டும்

தாமரையின் இலைமீது

தண்ணீரும் இருப்பதுபோல்
வாழ்ந்துவிட விரும்பிவிடு
வரந்தருவான் இறைவனுமே !

தோழர் அநுரகுமார திஸ்ஸநாயக்காக்கு ஓர் திறந்த மடல்! - நடராஜா குருபரன்

 .

நண்பர் நடராஜா குருபரன் அவர்கள் தனது முகப்பு புத்தகத்தில் பிரசுரித்ததை இங்கு தருகின்றேன் . 


“உங்களை மக்கள் தெய்வமாக்குவார்கள் நீங்கள் தெய்வமாகிவிடாதீர்கள்”
தோழர் அநுரகுமார திஸ்ஸநாயக்கா அவர்களே, 2026 ஆம் அண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தை சமர்பித்த களைப்பில் இருப்பீர்கள்.
ஏறத்தாள நான்கரை மணிநேரம் இடைவிடாது கேள்வி பதில்களோடு அசத்தியிருந்தீர்கள்.
வடக்கு, கிழக்கு மலையக பகுதிகளின் நலனுக்காக பல முன்மொழிவுகளையும், நிதிஒதுக்கீடுகளையும் அறிவித்துள்ளீர்கள் வாழ்துகள்.
“எங்கள் நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டுவிட்டது என எதிர்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பின் ரவூவ்ஹக்கீம் சான்றளித்துள்ளார்.”
“இந்த அரசு முழுப்பொருளாதாரத்தையும் நிலைப்படுத்திவிட்டது அதனை நாம் ஏற்றுக்கொள்கிறுாம். நாம் அறிந்த வரலாற்றில் திறைசேரி அதிகமான நிதியுடன் இருக்கிறது. மக்களுக்கு சொந்தமான அரச வங்கிகளில் ஒரு டிரில்லயனுக்கு அதிகமான பணம் உள்ளது.” என எதிர்கட்சிகளின் பொருளாதார நிபுனர் ஹார்சாடி சில்வாவும் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்.
அந்த மயக்கத்தில் என் நெஞ்சை உறுத்திய விடயங்கள் பற்றி உங்களுடன் பேசாதிருக்க முடியவில்லை பேசியே ஆகவேண்டும்.
எப்பொழுதும் முப்பொழுதும் உங்களையும், NPP அரசாங்கத்தையும் வாழத்திப் பாடும் அரசவைப் புலவர் என்ற குற்றச்சாட்டுகள் எனை பின்தொடர்வதை நீங்கள் அறிவீர்களோ தெரியாது.
ஆனால் நல்லதை நல்லவாறு சொல்லவேண்டும் என்பதில் இருக்கும் தெளிவு, தவறை தவறு என விமர்சிப்பதிலும் இருக்கிறது. ஒரு ஊடகவியலாளனாக அந்தத் துணிவு என்னிடம் எப்பொழும் இருந்தது - இருக்கிறது என்பதனை, கொழும்பில் நான் வாழ்ந்த காலங்கள் தெளிவுபடுத்தியிருக்கும் என நம்புகிறேன்.
மலையகத்தின் ஹற்றன் நகரில் உங்களின் படத்திற்கு வழிபாடு செய்திருக்கிறார்கள். எனது தெய்வம் (“மகே தெய்யோ” ) என ஒருவர் சாஸ்டாங்கமாக விழுந்து உங்களை கும்பிட்டிருக்கிறார். அங்கு பலர் வெடிகொழுத்தி மகிழ்ந்திருக்கிறார்கள்.
2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஹற்றன் நகர அபிவிருத்திக்கு நீங்களும், உங்களின் அரசாங்கமும் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறது.
மலையக தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1750.00 ரூபாவாக நிர்ணயித்துள்ளீர்கள். மலையக தோட்டத்தொழிலாளரின் சம்பள உயர்வு குறித்த வரலாற்றில் இது ஓரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவே இந்தக் கொண்டாட்டங்களும். தனிநபர் வழிபாடும் அமைந்திருக்கிறது.
சுதந்திரத்திற்கு பின்னரான கடந்த 75 வருட கால வரலாற்றில் இடதுசாரித்துவம் என சொல்லப்பட்டாலும், JVPயின் வழி நடத்தலில் இடது மைய அரசியலில் நீங்களும் NPPயின் ஆட்சியாளர்களும் பயணிக்கிறீர்கள்.
அதனால் இந்த தனிநபர் வழிபாட்டில் நீங்களோ ஆட்சியாளர்களோ மயங்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.
காரணம் எமது அரை நூற்றாண்டு கால அகிம்சை போராட்டம் உள்ளிட்ட ஆயுதப் போராட்ட காலங்களில், விமர்சனங்களை கடந்து, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு நம் தலைவரைகளை தந்தையென, தாயுமானவர் என, பெரியவர், பெரிஐயா என, மேதகு, சூரியக்கடவுள் என்றெல்லாம் விழித்து வண்ங்கி வீழ்ந்து போனோம் இன்னுமே எழமுடியவில்லை.
மறுபுறம் புலிகளும், தலைமையும், தமிழ்த்தேசியமும், தமிழ் மக்களின் விடுதலையும் ஒன்றாகிப் போனது. அதனால் புலிகளையும், தலைமையையும் விமர்சிப்பது, அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவது துரோகமாக்கப்பட்டது.
அந்த விமசர்னங்கள், எதிப்புகள் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானதாக, ஈழவிடுதலைக்கு எதிரானதாக சித்தரிக்கப்பட்டன. விமர்சனம் சுயவிமர்னங்களுக்கு அப்பாற்பட்ட தனிமனித வழிபாடும், தெங்வங்கள் தவறுவிடமாட்டாது என கட்டமைக்கப்பட்ட கருத்தியலும் எமது விடுதலையை விடுதலை இயக்கங்களை நிர்மூலமாக்கின.

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

26-10-2025 Sun: ஈழத் தமிழர் கழகம் கலைக்கதம்பம் 2025 நிகழ்வு 6.00 PM at Redgum Centre, Wentworthville

29-11- 2025  Sat: Australian Medical Aid Foundation proudly presents முத்தமிழ் மாலை

30-11-2025  Sunமாத்தளைசோமுவின்  100 சிறுகதைகள் நூல் வெளியீடு   ANTHONY CATHOLIC CHURCH-TOONGABBIE-4-00 pm to 6-30 pm.

பல்லாண்டு வாழ்க - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 .

தமிழ் சினிமா உலகில் ஆண்டாண்டு காலமாக உழன்று கொண்டிருக்கும் படத் தயாரிப் பாளர்களுக்கு இல்லாத அதிர்ஷ்டம் திடிரென்று முளைத்த தயாரிப்பாளர்களுக்கு கிட்டி விடுவதுண்டு. அவர்களுள் இருவர் தான் இதயம் பேசுகிறது மணியன், வித்துவான் வே. லஷ்மணன். இவர்கள் இருவரும் எம் ஜி ஆர் எனும் நட்சத்திர நடிகரின் முழு ஆசியினால் படத் தயாரிப்பாளர்களாகி வெற்றி கண்டவர்களாவர். மூன்று வருடங்களுக்குள் மூன்று படங்களை எம் ஜி ஆர் நடிப்பில் தயாரித்த பெருமை இவர்களுக்குண்டு. 


எம் ஜி ஆர் நடிப்பில் இதய வீணை, சிரித்து வாழ வேண்டும், படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக இவர்கள் எடுத்த படம் பல்லாண்டு வாழ்க. அதாவது எம் ஜி ஆர் பல்லாண்டு வாழ்க. டய்டிலில் அப்படித்தான் காட்டப் படுகிறது. நியாயம்தானே. எம் ஜி ஆரின் கால்ஷீட்டுக்காக பலர் காத்திருக்க மணியனும், லஷ்மணனும் அனாயசியமாக மூன்றாவது படத்தையும் வெளிட்டார்கள் 1975ம் ஆண்டு. 


ஹிந்தியில் புகழ் பூத்த இயக்குநரான கே. சாந்தாராம் இயக்கி வரவேற்பை பெற்ற தோ ஆங்கேன் பாரா ஹாத் படத்தின் கதைக் கருவை ஏற்று அதன் அடிப்படையில் எம் ஜி ஆர் படமாக உருவாகியிருந்தார்கள். ஒரு சிறைச்சாலை அதிகாரி. கொடூர குற்றவாளிகள் அறுவரை திருத்தி , நல்லவர்கள் ஆக்க முடியும் என்ற இலட்சியத்தில் திறந்த வெளி சிறைச்சாலைக்கு அவர்களை அழைத்துச் செல்கிறார். அங்கே அவர் எதிர் நோக்கும் சவால்கள், ஆபத்துக்கள் , துன்பங்கள் இவற்றை எல்லாம் சமாளித்து எவ்வாறு தன் இலட்சியத்தை அவர் அடைந்தார் என்பதே படத்தின் கதை. 


கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இம் மூன்றையும் கொள்கையாக கொண்டு இயங்கும் அதிகாரியாக வரும் எம் ஜி ஆர் அப் பாத்திரமாகவே மாறி விட்டார் எனலாம். முரடர்களிடம் அவர் காட்டும் பரிவு, அவர்களின் வெறித்தனத்தை அமைதியாக , பொறுமையாக எதிர் கொள்வது, அகிம்சையை நாடுவது என்று கதா பாத்திரத்துக்கு நியாயம் செய்கிறார் எம் ஜி ஆர். அந்த வகையில் அவர் வாத்தியார் தான். ஆனாலும் படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லாமல் இல்லை. ஆனால் அதன் காரணம் வேறு. 


மாத்தளை சோமுவின் நூல் வெளியீட்டு விழா 30.11.2025

 .



தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்-1…..சங்கர சுப்பிரமணியன்.

.

எதையும் தொடங்க ஒரு தொடக்கப்புள்ளி வேண்டுமல்லவா? தொடக்கப்புள்ளி என்றால் பிள்ளையார் சுழியோ ஶ்ரீராமஜெயமோ அல்ல. எனது தொடக்கப்புள்ளி சாயனாரா சிங்கப்பூரா என்று சிங்கப்பூரில் இருந்து தொடங்கியது.


இளமைக் காலம் இந்தியாவில் இருந்தபோது பிரபலமான சாயனாரா சிங்கப்பூரா என்ற நான் கேட்ட திரைப்படப் பாடலின் வரிகள் எப்படியாவது சிங்கப்பூர் செல்லவேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது. ஆனால் இப்போது சிங்கப்பூர் எனக்கு புழக்கடை போல் ஆகிவிட அதுவே எனது சீனப் பயணத்துக்கு தொடக்கப்புள்ளியாகவும் ஆனது.

உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக நானும் மனைவியும் சிங்ஙப்பூர் சென்றபோது ஐந்து நாட்கள் தங்கியிருந்து பின் சீனப் பயணத்தை தொடங்கினோம். உறவினர் திருமணத்துக்கு சிங்கப்பூரில் ஐந்து நாட்கள் தங்க வேண்டுமா என்று எண்ணாதீர்கள். முதல்நாள் வரவேற்பு, மறுநாள் திருமணம் அடுத்த நாள் எங்களுக்கு விருந்து உபசரிப்பு என்று மூன்று நாட்கள் ஓடின.

அவர்கள் திருமணத்துக்கு சிங்கப்பூர் வந்ததற்காக சிங்கப்பூரை எங்களுக்கு சுற்றிக்காட்ட விரும்பினார்கள். அவர்களிடம் நாங்கள் சிங்கப்பூரை எத்தனையோ முறை நன்றாக சுற்றிப் பார்தத்துவிட்டோம் என்று கூறினோம். அதற்கு இப்போது சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் உருவாக்கிய “க்ளௌவுட் ஃபாரஸ்ட்” மற்றும் “கார்டன்ஸ் பை தி பே”போன்ற சுற்றுலாத் தளங்களை பார்த்திருக்க மாட்டீர்கள் என்று அழைத்துச் சென்றார்கள்.

உண்மையிலேயே நாங்கள் அந்த இடங்களைப் பார்க்கவில்லை. க்ளௌவுட் ஃபாரஸ்ட் என்ற இடத்தில் சில குறிப்பிட்ட நாடுகளிலுள்ள மரம் செடிகள் மற்றும் மலர்ச்செடிகளை வைத்து அழகு படுத்தி இருக்கிறார்கள். அவற்றில் ஆஸ்திரேலியா கார்டனும் அடங்கும். இதனால் பத்து நாட்கள் செல்லவேண்டிய சீனப்பயணம் ஓரு வாரத்துக்குள் முடிந்தது.

இருப்பினும் ஒருசில இடங்கள் தவிர பார்க்க வேண்டிய எல்லா இடங்களையும் பார்த்து முடித்தோம். எல்லா இடங்களையும் பார்த்துவிடவும் முடியாது. ஆஸ்திரேலியாவிலேயே இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. ஆசைதீர குடித்தவரும் இல்லை அழுக்கு போக குளித்தவரும் இல்லை என்று யாரோ எங்கோ சொல்லக் கேட்டிருக்கிறேன்.