மலையாள சினிமாவின் லாலேட்டான் என்று செல்லமாக அழைக்கப்படும் மோகன் லால் சரிவில் இருந்த போது அவரை தூக்கி நிறுத்திய படம் தான் த்ரிஷயம். வசூலில் மாபெரும் சாதனை படைத்த இந்த படம் தெலுங்கு சினிமாவிலும் வசூல் சாதனை படைக்க, கோலிவுட் சும்மா இருக்குமா?
உலக நாயகன் கண்ணீல் இப்படம் பட, இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப்பையே தமிழிலும் இயக்க வைத்து, தன் ஆஸ்தான இசையமப்பாளரான ஜிப்ரானுடன் கைக்கோர்த்து பாபநாசமாக வெளிகொண்டு வந்துள்ளார் கமல்ஹாசன்.
கதைக்களம்
மலையாளத்தில் பார்க்காதவர்களுக்கு மட்டும் தான், ஏனெனில் அப்படத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமல், இருந்தாலும் ப்ரஷ்ஷாக வந்திருக்கிறது பாபநாசம்.
அம்மா, அப்பா யாரும் இல்லாமல் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்தவர் சுயம்பு லிங்கம்(கமல்ஹாசன்). அதனால், ஒரு பைசா வரதட்சனை வாங்காமல் ராணியை(கௌதமி) திருமணம் செய்து கொண்டு, அன்பான 2 பெண் குழந்தை, அழகான் குடும்பம் என அரசாங்க விளம்பர அட்டையில் வருவது போல் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால், இவர்கள் வாழ்க்கையில் செல்போன் என்ற டெக்னாலஜி விளையாடுகிறது, கமலின் மூத்த மகள்(நிவேதா தாமஸ்) பள்ளியிலிருந்து ஒரு ட்ரீப் செல்ல, அங்கு ஒருவன் நிவேதா தாமஸ் குளிப்பதை படப்பிடித்து, என்னுடன் நீ வர வேண்டும் என மிரட்ட, கௌதமியும், நிவேதாவும் ஒரு கட்டத்திம் அவனை கொன்று புதைக்கிறார்கள். அந்த பையன் IG மகன் என்பதால் பிரச்சனை பெரிதாகின்றது.
இந்த விஷயம் கமலுக்கு தெரிய, இந்த கொலையை எப்படியெல்லாம் மூடி மறைக்கிறார், காவல்துறை இதை கண்டுப்பிடித்ததா? கமலுக்கு தண்டனை கிடைத்ததா? இல்லை தப்பித்தாரா? என நகத்தை கடித்து கொள்ளும் அளவிற்கு த்ரில்லாக செல்வது தான் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
கமல்ஹாசன் கண்டிப்பாக இவருடைய நடிப்பை மோகன் லாலுடன் ஒப்பிடுவார்கள், ஆனால், கமலை தவிர வேறு யாரும் இந்த கதாபாத்திரத்தை 100% கொடுத்திருக்க முடியாது. அதிலும் நெல்லை தமிழ் சார் எப்பவும் நீங்க தான் நடிப்பின் குரு என்று சொல்ல தோன்றுகின்றது.
கௌதமி பற்றி அனைவரும் படம் வருவதற்கு முன்பே மீனா அளவிற்கு இல்லை என்பது தான், ஆனால், உண்மையாக குறை சொல்லும் படி இல்லை, அதே நேரத்தில் மீனா அளவிற்கு இல்லை என்பது தான் நிதர்சனம். அதிலும் ரியல் லைப் ஜோடி என்பதால் கணவன், மனைவி காதல் காட்சிகள் படு யதார்த்தம்.
எம்.எஸ். பாஸ்கர், போலிஸாக வரும் கலாபவன் மணி என அனைவரும் தேர்ந்த நடிகர்கள் என்பதால் நேர்த்தியான நடிப்பை கொடுத்துள்ளனர்.
க்ளாப்ஸ்
நீண்ட இடைவேளைக்கு பிறகு வேஷ்டி, சட்டை நெல்லை தமிழ் என கமல் மனதை கொள்ளை கொள்கிறார். அதிலும் சந்தோஷம், துக்கம், பயம் என அவர் காட்டும் முக பாவனைகள் you are always great sir சொல்ல வைக்கின்றது.
இரண்டாம் பாதியில் வரும் அடுத்தடுத்த டுவிஸ்ட், அடுத்து என்ன நடக்கும் (மலையாளத்தில் பார்க்கதாவர்கள்) என சீட்டின் நுணிக்கு வரவைக்கின்றது.
பல்ப்ஸ்
படத்தில் நீளம் 3 மணி நேரம் என்பது மட்டும் தான், ஆனாலும் அதுவும் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.
மொத்தத்தில் தன் பாப்பா வாழ்க்கை நாசம் ஆக கூடாது என்று கமல் மட்டும் பதட்டமாகவில்லை, படம் பார்க்கும் அனைவரையும் நகம் கடிக்கும் அளவிற்கு பதட்டத்தை ஏற்படுத்துகின்றது இந்த பாபநாசம்.
ரேட்டிங்- 3.5/5 நன்றி cineulagam