மரண அறிவித்தல்




தமிழ்த்தேசியப்பற்றாளர் திரு. சபேசன் சண்முகம் அவர்களின் புகழுடலுக்கான இறுதிவணக்க நிகழ்வினை, நேரடியாக இணையவழியூடாக காண கீழே உள்ள இணைப்பின் ஊடாக ஜுன் மாதம் 1ம் திகதி, திங்கள் காலை 10.30am முதல் 12pm வரை பார்வையிடலாம்.
Please find the link below to view the streaming of the service,

“ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் மறைந்தார் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் இரங்கல் - முருகபூபதி



அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில்  மெல்பனை தளமாகக்கொண்டிருந்து இயங்கிய தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு,  தமிழர் புனர் வாழ்வுக்கழகம், மற்றும் 3 CR வானொலி தமிழ்க்குரல் ஒலிபரப்புச்சேவை முதலானவற்றில் நீண்டகாலமாக  ஈடுபட்டுழைத்திருக்கும் சண்முகம் சபேசன்  கடந்த  29 -05 – 2020  ஆம் திகதி அதிகாலை மெல்பனில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை பகிர்ந்துகொள்கின்றோம்.
சபேசனின் வாழ்வும் பணிகளும் பற்றிய குறிப்புகளை அண்மையில்தான் பதிவேற்றியிருந்தோம்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ள தகவல் குறித்து,    சபேசனின் நீண்டகால நண்பரும் தமிழ்நாடு திராவிட இயக்கப்பேரவையின் தலைவருமான பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களுக்கும் தகவல் தெரிவித்தோம். அவரும் மிகவும்  வருந்தியதுடன் மேலதிக தகவலை கேட்டறிந்து சொல்லுமாறு தெரிவித்தார்.
எனினும்,  அதனையடுத்து மறுநாள்  அதிகாலை சபேசன் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியைத்தான் அவருக்கு வழங்கமுடிந்தது.
பேராசிரியர் சுப. வீரபாண்டியன், தமது இரங்கல் செய்தியில்,                  “ அரியதோர் நண்பனை இழந்துவிட்டோம். கண்கள் கலங்குகின்றன. எங்கோ பிறந்து, எங்கோ வாழ்ந்து, எப்படியோ முடிந்துபோனது எமது நண்பரின் வாழ்க்கை. மெல்பனுக்கு என்னை முன்னர் அழைத்திருக்கும் அவர்,  தமது இல்லத்தில் தங்கவைத்து அன்போடு உபசரித்து பல நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அழைத்துச்சென்று பேசவைத்த தமிழ் உணர்வாளர்.  அவரைப்பற்றிய நினைவுகள்தான் நெஞ்சில் நிழலாடுகின்றன. ஆழ்ந்த வேதனையினால்  கலங்கியிருக்கின்றேன். நண்பர் சபேசனது குடும்ப உறவுகளுக்கும்  அவரை நேசித்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றேன் “  எனக் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனிலிருந்து ஐ.பி. சி.  ஊடகவியலாளர் எஸ்.கே. ராஜென் இரங்கல்

மலையக வரலாற்றில் என்றும் அழியாத நாமம்




இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவானது மலையகத் தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையகம் சோகத்தில் ஆழ்ந்து போயுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் துயரத்தின் சாயல் படிந்துள்ளது. தங்களது தலைவரை இழந்த துயரத்தில் அம்மக்கள் உள்ளனர்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு இலங்கையில் இருந்து மாத்திரமன்றி இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவற்றில் இருந்து அனுதாபச் செய்திகள் வந்து குவிந்த வண்ணமுள்ளன.
அமரர் ஆறுமுகன் தொண்டமான் 1990ஆம் ஆண்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்தவர். அன்று தொடக்கம் தனது மரணத் தறுவாய் வரை மலையக மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டு வந்தார்.
1993 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராக கடமையாற்றிய அவர்  1994ஆம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.
1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்த அவர், தொடர்ச்சியாக பாராளுமன்றத் தேர்தல்களின் வெற்றியீட்டி வந்தார்.

கடந்த காலத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த அவர் மலையக மக்களுக்காகவும் இந்திய வம்சாவளி மக்களுக்காகவும் ஆற்றிய பணிகள் ஏராளம்.
1964ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகன் தொண்டமான் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி  பயின்றுள்ளார். இன்றைய அரசில் செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதியாக அவர் திகழ்ந்தார்.

தங்களின் நலன்களுக்காக காலமெல்லாம் பாடுபட்ட ஒரு இளம் தலைவரை இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி  தமிழர்கள் இழந்த சோகத்தில் மூழ்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.அன்னார் மறைந்த இன்றைய காலகட்டம் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் நிறைந்த காலகட்டமாக உள்ளது.

மீள் வாசிப்பு அனுபவம் 1 - தூக்குமேடைக் குறிப்பு - செ .பாஸ்கரன்

.


வாசிப்பு  என்பது மிகவும் பிடித்தமான ஒன்று, புதிய கதைகள், நாவல்கள் கட்டுரைகள் என்று வாசித்துக் கொண்டு போகின்ற இந்த வேளையில் பல காலங்களுக்கு முன்பு வந்த எழுத்துக்களை எல்லாம் மறந்து கொண்டே போகின்றோம், அல்லது அவற்றை  பார்க்காமல் விட்டு விடுகின்ற சந்தர்ப்பம்  அமைகின்றது.  சில தினங்களுக்கு முன்பு நண்பன் கானா பிரபாவிடம்  இருந்து ஒரு அழைப்பு வந்தது அதிலே ஒரு சிறு கதையை தன்னுடைய வீடியோஸ்பதி                தளத்துக்காக குரல் வடிவில் செய்து தர முடியுமா என்று கேட்டார்,  ஏற்கெனவே பல சிறுகதைகளை குரல் வடிவிலேயே தந்திருக்கின்றார்.  பலருடைய குரல்களில் அந்த சிறுகதைகள் வெளியிடப்பட்டுக்  கொண்டிருக்கிறது. பெரும்பாலானவை  நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதியவை இவற்றிலே வலம் வந்து கொண்டிருக்கின்றன. கேட்டவுடன் எனக்கு முதலிலேயே நினைவில் வந்தவர் திரு மு .தலையசிங்கம் அவர்கள்.  அவருடைய பெரும்பாலான எழுத்துக்களையும் நான் வாசித்திருக்கிறேன்,  அதிலே எந்த ஒரு கதையை வாசிக்கலாம் என்ற சிந்தனையோடு என்னுடைய  Library அறையை நோக்கி நடந்தேன். 

 இந்த வாசிப்பு அறையை ஒழுங்கு படுத்த வேண்டும் என்று பலமுறை எனது மனைவி சாந்தியோடு பேசி இருக்கின்றேன்,  என்னுடைய வாசிப்பு அறையில்  முன்பு புத்தகங்கள் மிக அழகாக அடுக்கி வைக்கப்பட்டு,  கவிதைகள் சிறுகதைகள்,  நாவல்கள், கட்டுரைகள் என்று இருக்கும். இப்படி எல்லாம் மிக அழகாக அடுக்கி வைத்து அதை  எல்லாம் வாசித்துக்கொண்டிருந்தபோது என்னுடைய மகளின்  வாசிக்கின்ற ஆர்வம்  அதிகமாக உள்ளதால் என்னுடையவை  இருந்த பல இடங்கள் அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. என்னுடைய இடம் குறைந்து புத்தகங்கள் குவிக்கப்பட்டுள்ளது. பலமுறை இவைகளுக்கு இன்னும் அலமாரிகள் போட்டு அதை முறைப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் கூட, இயந்திர மயமான ஓட்டம்,  வேலைப்பழு,  சமூக வேலைகள் இப்படி தொடர்ந்த நேரமின்மை காரணமாக அவை இன்னும் அப்படியேதான் கிடக்கின்றது.  அதற்குள் துளாவியபோது  அண்ணன் திரு பொன்னம்பலம் அவர்கள் தொகுத்த பிரபல எழுத்தாளர் மு .தளையசிங்கம் அவர்களுடைய எழுத்துக்கள் பலவற்றையும் உள்ளடக்கிய அந்த தொகுப்பு என் கையிலே கிடைத்தது,  அதை எடுத்து அதில் இருந்த ஒரு சிறுகதையான  புதுயுகம் பிறக்கிறது கதையை குரல் வடிவில் செய்து கானா பிரபாவிறகு அனுப்பி வைத்தேன். 

Library அறையில் இருந்த பல கதைகள்  மீண்டும் ஒருமுறை மீள் வாசிப்புக்கு உள்ளாக வேண்டும் .  எத்தனையோ புத்தகங்கள் அங்கேயே தூங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றை எல்லாம் வாசிக்க வேண்டும் என்ற அவா                  எப்போதுமே இருந்துகொண்டிருக்கும்,  ஆனால் இப்போது புதிய வரவுகள் மிக அதிகமாக வந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் இவைகளை வாசிப்பதற்கு நேரங்கள் காணாமல் இருக்கின்றது. ஒரு முறை அந்த புத்தக அறையை  நோட்டமிட்டு  எல்லாவற்றையும் கையில் எடுத்து பார்த்தேன், இத்தனை மிகப்பெரிய எழுத்தாளர்கள் உடைய எழுத்துக்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கின்றது, அதிலேயே குறிப்பாக ஒன்றை உருவி எடுக்கின்றேன் தூக்குமேடை குறிப்பு. 

யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! இன்று 39 வருட நினைவு


ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் புலமைச் சொத்தாக கருதப்பட்டு வந்த யாழ் நூலகம் எரித்துச் சாமபலாக்கப்பட்ட சம்பவம் வரலாற்றில் என்றுமே துடைக்க முடியாத கறையாக ஆகி விட்டிருக்கிறது.
தமது தமிழ் மரபையும், வரலாற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு தொல்பொருள் வைப்பகமாகவும் தான் பேணப்பட்டு வந்தது. மீளப் பெற முடியாத அரிய நூல்களையும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரான ஏடுகளும் கூட அங்கு பாதுகாககப்பட்டு வந்தன. அந்த நூலகம் அரசு கொடுத்தத்தல்ல. அன்றைய தமிழ் புலமையாளர்கள் சேர்ந்து உருவாக்கியது. பின்னர் தான் அது மாநகர சபை கையேற்று நடத்தியது.
70களின் இறுதியில் வடக்கு கிழக்கெங்கும் தொல்பொருள் ஆய்வுகள் என்கிற பேரில் கண்டு பிடிக்கப்பட்டவற்றைக் கொண்டு ஆதலால் வடக்குகிழக்கு முழுவதும் சிங்களவர்களின் பிரதேசங்கள் என்று நிறுவும் வேலைத்திட்டம் தொடங்கப்பட்டிருந்தது. தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை மறுத்தொதுக்குவதற்கான இந்த வேலைத்திட்டத்தில் அரசின் உதவியுடன் பல்வேறு இனவாத அமைப்புகள் பல முனைகளில் திட்டமிட்டு மேற்கொண்டிருந்தன. 77 இனக் கலவரத்தை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் கூட சாட்சியமளித்த பல இனவாத சக்திகள் கலவரத்தைப் பற்றி பேசுவதை இந்த தொல்பொருள் ஆதாரங்களைப் பற்றியே அதிகம் பேசின என்பது அந்த சாட்சியங்களில் இருந்து காண முடியும். மடிகே பஞ்ஞாசீல தேரர், ஹரிச்சந்திர விஜேதுங்க, எச்.எம்.சிறிசோம போன்றோர் அங்கு பெரிய அறிக்கைகளையே சமர்ப்பித்தனர். அவை சிறு கை நூல்கலாவும் கூட சிங்களத்தில் வெளியிடப்பட்டன.

அஞ்சலிக்குறிப்பு: அமரர் நாகராஜா மாஸ்டர் ( 1926 – 2020 ) நினைவாற்றல் மிக்கவர் பற்றிய நினைவுகள் ! முருகபூபதி


பொதுமக்கள் நிரம்பிய மண்டபங்களில் தனது கணீர் குரலினால் பேசிவந்தவரும், தேவாரம், திருவாசகம் முதலானவற்றையும் ,  பழைய திரைப்படப் பாடல்களையும் பாடி வந்திருப்பவரும்   மெல்பன் வாழ் தமிழ் அன்பர்களின்  நல்லபிமானம் பெற்றவருமான  எமது அன்பிற்கினிய நாகராஜா மாஸ்டர் அவர்கள்,  தனது குரலை நிறுத்திக்கொண்டு நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார்.
1926 ஆம் ஆண்டில் இலங்கையின் வடபுலத்தில் கொக்குவிலில்  பிறந்திருக்கும் அவர்,   தனது இறுதிமூச்சினை புகலிட நாட்டில்  நிறுத்திக்கொண்டுவிட்டார்.
அவரை 1990 ஆம் ஆண்டு முதல் நன்கு அறிவேன். அவரை எமக்கு அறிமுகப்படுத்தியவர் எமது இலக்கியக்குடும்பத்தைச்சேர்ந்த சகோதரி ( அமரர் ) அருண். விஜயராணி.
அக்காலப்பகுதியில் நாம் உருவாக்கியிருந்த அவுஸ்திரேலியத்தமிழர் ஒன்றியத்தின் பாரதி விழா மெல்பனில் பார்க்வில் பல்கலைக்கழக உயர்தரக்கல்லூரி மண்டபத்தில் நடந்தது.
பாரதியாரின் பாடல்களை உள்ளுர் கலைஞர்களின் மெல்லிசையுடன் சில பாடகர்களைக்கொண்டு பாடவைத்த நிகழ்ச்சி ஒன்றையும் அந்த விழாவில் இணைத்திருந்தோம்.  அதற்கான ஒத்திகைகளுக்கு கிரமமாக அவர் வந்தவிடத்தில்தான் அவருடன் அறிமுகமாகி பேசிப்பழகுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த பாரதி விழாவில் அவரும் சில பாரதி பாடல்களைப்பாடினார்.
அவ்வாறு 1990 ஆம் ஆண்டு தொடக்கம் எம்முடன் நல்லுறவுபேணிவந்தவர், தொடர்ந்தும் நாம் ஒழுங்குசெய்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்.
உள்ளூர் அன்பர்கள் எவரேனும் மறைந்துவிட்டால்,  மறைந்தவரின் ஆத்ம சாந்திக்காக நடத்தப்படும் பிரார்த்தனைக்காக முதல் அழைப்பு நாகராஜா மாஸ்டர் அவர்களுக்குத்தான் செல்லும்.
அவரும் தாமதியாமல் வந்து,  துயரத்தில் பங்குகொண்டு இறைவணக்கப்பாடல்களை மெய்யுருக இராகத்துடன் பாடுவார். வருகை தந்திருப்பவர்களும் மெய்மறந்து கேட்பார்கள்.
அவ்வாறு தமிழர் பொது நிகழ்ச்சிகளில் பெருந்தொகையானவர்கள் கூடியிருக்கும் இடத்தில் பெருங்குரல் எடுத்து பாடியவரின் இறுதி நிகழ்வுகள்,  சமகால நெருக்கடியின் இடைவெளிபேணல் விதிமுறையினால், சொற்ப எண்ணிக்கையினர் மத்தியிலிருந்து  இடம்பெற்றதும்  காலத்தின் துயராகும் !

செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் - “சிவபூமி” வழி பன்முகப்பட்ட அறப்பணிகள் - கானா பிரபா


செஞ்சொற் செல்வர் கலாநிதி  ஆறு திருமுகன் அவர்கள்  தெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராகவும், சிவபூமி என்ற சிறுவர் மன வளர்ச்சிப் பாடசாலைகள், சிவ பூமி முதியோர் இல்லம், கீரிமலைச் சிவபூமி யாத்திரிகர் மடம், நாவற்குழியில் திருவாசக அரண்மனை, ஆதரவற்ற நாய்களைப் பேணும் காப்பகம் போன்ற அற நிலையங்களை நிறுவி அவற்றைக் கொண்டு நடத்துபவராகவும் இயங்கி வருகிறார். தன் வாழ்வைச் சைவத்துக்கும் அறப் பணிகளுக்காகவும் அவரை நினைக்கும் போதெல்லாம் வியப்பும், பெருமையும் எழும். 

நம்மால் ஒரு சிறு துரும்பை எடுக்கக் கூட ஆயிரம் சாட்டுச் சொல்லும் வாழ்வியலில் அவரின் பன்முகப்பட்ட அறப்பணிகள் நம் ஈழச் சமூகத்துக்குக் கிட்டிய பெரும் பேறு.
தாயகத்துக்குப் போகும் தோறும் என்னை அவரின் வாகனத்தில் இருத்தித் தன் சமூக ஸ்தாபனங்களின் இயக்கத்தைக் காட்டி வருவார்.

ஆறு திருமுருகனின் “சிவபூமி” அறச் செயற்பாடுகளை அவுஸ்திரேலிய மக்களின் பார்வைக்கு எட்டும் வண்ணம் ஒரு ஆவணப்படத்தை எடுக்க வேண்டும் என்று நான்கு வருடங்களுக்கு முன்னர் நான் நினைத்த போது அதற்குச் செயல் வடிவம் தந்தவர் சகோதரன் ஜெரா.
இப்படியான பட வேலைகளுக்கு இரண்டு, மூன்று கமெராக்கள் தேவைப்படும் சூழலில் ஒரே கமராவை வைத்துக் கொண்டு, நான் கேட்டுக் கொண்டதற்கிணங்கத் தானே தன் குரலில் ஒலிச் சேர்க்கை செய்து திறமானதொரு ஆவணப்படத்தை ஆக்கியளித்தார். அவருக்கு உறுதுணையாக விளங்கிய சகோதரர்கள்
யோ ரவீந்திரன், காண்டீபன் இப்பட உருவாக்கத்தில் இணைந்துள்ளார்கள்.
இவ் ஆவணப்படம் சிட்னியில் ஆறு திருமுருகன் அவர்கள் கலந்து கொண்ட நிதி சேகரிப்பு ஒன்று கூடலிலும் திரையிடப்பட்டது.

இந்த ஆவணப் படம் சிவபூமி என்ற சமூக இயக்கத்தின் பன்முகச் செயற்பாடுகளை விரிவாகக் காண்பிக்கின்றது.

மலையகத் தமிழ் மக்களுக்கு முகவரி பெற்றுக் கொடுத்த மாபெரும் தலைவர்




ஆளுமை மிகு அரசியல் அடையாளம்!
இந்திய வம்சாவளி சமூகத்துக்கு மாத்திரமன்றி முழு நாட்டுக்குமே ஈடு செய்ய முடியாத இழப்பு
இ.தொ.கா தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவு மலையக அரசியலில் மாத்திரமன்றி இலங்கையின் ஒட்டுமொத்த அரசியலிலும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையக சமூகத்தை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் செல்லும் ஆளுமை நிறைந்த ஒரு துணிச்சல்மிக்க செயல் வீரரை இந்திய வம்சாவளியினரான தோட்டத் தொழிலாளர்கள் இழந்து நிற்கிறார்கள். அமைச்சர் ஆறுமுகனின் திடீர் மறைவு பேரதிர்ச்சிக்கு உரியதாகும்.
1964 ம் ஆண்டு பிறந்தவர் ஆறுமுகன் தொண்டமான். தனது கல்வியை கொழும்பில் தொடர்ந்தவர்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு குறித்து இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், இராஜதந்திரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மலையக மக்கள் தங்களது தலைவனை இழந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதவர்களாக உள்ளனர்.

மலையக மக்களுக்கு அளப்பெரும் சேவைகளை ஆற்றிய பெரும் அரசியல் தலைவரை அம்மக்கள் இழந்து நிற்கின்றனர். அவரது இழப்பு எவராலும் ஈடு செய்ய முடியாததாகும்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய தொழிற்சங்கம், மிகப் பழைமையான தொழிற்சங்கம் என்ற பெருமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கே உண்டு. ஆரம்ப காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களின் ஒரே சக்தியாக விளங்கியது. அந்த அமைப்பு ஒன்றுபட்ட மலையகத்தை கட்டியெழுப்பியது.
அடிமைத்தனத்தில் கட்டுண்டு கிடந்த மலையக மக்கள் மத்தியில் எழுச்சிக்கும், புரட்சிக்கும் வித்திட்டு இந்த மக்களுக்கு தலைமை கொடுக்கும் மாபெரும் பொறுப்பை ஏற்றவர் இ.தொ.காவின் ஸ்தாபகத் தலைவர் அமரர் எஸ்.தொண்டமான் ஆவார். அன்னாரின் மறைவுக்குப் பின்னர் இ.தொ.கா என்ற மாபெரும் அமைப்பை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் சென்ற ஆளுமை மிக்க தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆவார்.
ஆரம்ப காலங்களில் தொழிற்சங்க அரசியல் ரீதியில் இ.தொ.கா முன்னெடுத்த போராட்டங்களும் சாணக்கிய அணுகுமுறைகளும்தான் மலையக மக்களுக்கு இந்த தேசத்தில் ஒரு முகவரியை பெற்றுக் கொடுத்தது எனலாம்.

"புதுயுகம் பிறக்கிறது" (சிறுகதை) - மு.தளையசிங்கம் ஒலி வடிவில் : செ.பாஸ்கரன் #ஈழத்தவர்_கதை_கேட்போம் - கானா பிரபா

.

"புதுயுகம் பிறக்கிறது" (சிறுகதை) - மு.தளையசிங்கம் 
ஒலி வடிவில் : செ.பாஸ்கரன்
#ஈழத்தவர்_கதை_கேட்போம்

https://www.youtube.com/watch?v=Dtr3l--c5oQ



ஈழத்து எழுத்தாளர்களை அவர்களது சிறுகதைகளினூடே வெளிக் காட்டும் தொடரில் இம்முறை மு.தளையசிங்கம் அவர்களது “புதுயுகம் பிறக்கிறது” சிறுகதையின் ஒலிப் பகிர்வோடு வந்திருக்கிறோம்.

ஈழத்தின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான மு.தளையசிங்கம் அவர்கள் 1935 இல் பிறந்து 1973 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். எழுத்துப் பயணத்தில் 1956 ஆம் ஆண்டிலிருந்து வெறும் 17 ஆண்டுகால இவரது இயக்கத்தில் சிறுகதைகள்நாவல்கள்கவிதைகள்கட்டுரைகள் போன்றவற்றின் வழியாக இலக்கியப் பங்களிப்புச் செய்தவர்வெங்கட் சாமிநாதன்சுந்தரராமசாமி உள்ளிட்ட மூத்த தமிழகத்து இலக்கியவாதிகள் வரை ஈர்க்கும் அளவுக்கு முக்கியமானதொரு படைப்பாளி என்பது பதிவு செய்ய வேண்டியதொன்று.


இந்தியாவை விட்டு விலகி சீனாவுடன் நெருக்கத்தைக் காட்டும் நேபாளம்




கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையடுத்து இந்திய அரசு நாட்டின் புது வரைபடத்தை வெளியிட்டது. அந்த வரைபடத்தில் காலாபானி என்னும் பகுதி இருப்பதைக் கண்டு நேபாள மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதற்காக நேபாள மக்கள் தங்கள் நாட்டு அரசின் மேல் கோபத்தை வெளிப்படுத்தினர். அதனால் நேபாள அரசு இந்திய அரசு வெளியிட்ட இந்த வரைபடத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அப்போதிலிருந்து இந்திய அரசுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஓர் அழுத்தம் நேபாள அரசுக்கு வந்தது.
இந்தியாவிலிருந்து சீனா வரையிலான வீதி ஒன்றை லிபுலேக்கில் அமைக்கத் தொடங்கியது இந்தியா. இந்நிலையில் நேபாளமும் சிறிது நாள் கழித்து தங்கள் நாட்டு அதிகாரபூர்வ வரைப்படத்தை வெளியிட்ட போது அதில் தங்கள் நாட்டின் பகுதி என எவற்றையெல்லாம் நேபாளம் உரிமை கொண்டாடியதோ அந்தப் பகுதிகளும் உள்ளடங்கி இருந்தன. இதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே விவாதம் ஏற்பட்டது.

மலர் சொன்ன வார்த்தையால் மலைத்துமே விட்டேன் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ..... ஆஸ்திரேலியா


அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 16 – பீனாச்சி/கொகாலு


பீனாச்சிகாற்றுக்கருவி

பீனாச்சி என்பது தமிழர் பழங்குடி மக்களின் ஊதுகருவியாகும்ஒன்றரை அடி நீளத்தில் பார்ப்பதற்கு நாதஸ்வரம் போன்று இருக்கும் பீனாச்சி பல பாகங்களையுடையது. மூங்கில் குழலில் 6 துளைகள் போடப்பட்டு இருக்கும். பீனாச்சியில் வாய் வைத்து ஊதும் இடத்தில் மூங்கில் துளை அடைக்கப்பட்டு ஒரு சிறு குச்சி சொருகும் அளவுக்கு துளை இடப்பட்டு உள்ளது. அதில் ஒரு உலோக தகடு வைக்கப்பட்டு அதன் மீது பில்லுவை பொருத்துகிறார்கள். பில்லுவை ஒரு வகை புல்லில் பீனாச்சி இசைக்கலைஞர்களே தயார்செய்கிறார்கள். ஒரு பில்லு தயார் செய்துவிட்டால் அதை ஒரு இசைக் கலைஞர் தன் வாழ்நாள் முழுமைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். மறுபுறம் ஒரே மரத்துண்டில் குடைந்து உருவாக்கப்பட்ட புனல் வடிவ பகுதி உள்ளது. புனல் வடிவ பகுதி பலாமரத்து வேர், குமுளி மரத்து வேர், மூங்கில் வேர், எருக்கிலை வேர் இவற்றில் ஏதாவது ஒன்றில் செய்யப்படுகிறது. புனல் வடிவ பகுதி கோத்தர் இனமக்களிடத்தில், உலோகங்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. வாய் பகுதியில் வைக்கப்படும் உலோகத்தகடு இரும்பு, பித்தளை என்று அவரவர் விருப்பப்படி வைத்துக்கொள்கிறார்கள். மரத்தாலான, புனல் வடிவ பகுதியிலிருந்து வெளிப்படும் இசை, உலோகத்தாலான புனல் வடிவ பகுதியிலிருந்து வரும் இசையை விட சற்று வேறுபட்டுக் கேட்க, இனிமையாகவும் மென்மையாகவும் அமைகிறது. சில இடங்களில் புனல் வடிவ பகுதியும், குழல் பகுதியும், பிரித்துப் பொருத்த முடியா வண்ணம், ஒரே மரத்திலிருந்து, கடைந்து எடுக்கப்பட்டு அமைக்கப்பட்டு இருக்கும்.

மழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் – 38 முருகபூபதி


ளஞ்சிய அறையில்,  அபிதாவுக்கு கிடைத்த புதிய மடிக்கணினியை வைத்து பயிற்சிபெறுவதற்கென ஒரு சிறிய மேசையையும் ஜீவிகா ஒதுக்கிக்கொடுத்திருந்தாள்.
வழக்கமாக காலை ஐந்து மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளைத் தொடங்கும் அபிதா,   காலை நான்கு மணிக்கே  எழுந்து  தனக்கென சொந்தமாக வந்திருக்கும் புதிய உருவத்தின் முகத்தில் விழித்தாள்.
அதனைத் தொட்டு வணங்கத்தோன்றியது.   இந்த புதிய உறவு தனது எதிர்காலத்தில் எத்தகைய திருப்பங்களை ஏற்படுத்தப்போகிறதோ..?  நிகும்பலையூர் புதியது.  இந்த வீடு புதியது. இங்கே சந்தித்தவர்கள் புதியவர்கள்.  எதிர்கொண்ட அனுபவங்கள் புதியன.  எங்கிருந்தோ வந்திருக்கும் லண்டன்காரர் புதியவர். 
ஏற்கனவே வேர்ல்ட் கொமியூனிக்கேஷனில் பெற்ற பயிற்சியும் ஜீவிகாவும் மஞ்சுளாவும் சொல்லிக்கொடுத்த நுணுக்கங்களும் அபிதாவுக்கு பெரும் துணையாகியிருந்தன.
தமிழ் உருபுகளையும்  ஜீவிகா அதில் பதிவேற்றிக்கொடுத்திருந்தாள்.  சண்முகநாதன், தன்னையும் ஜீவிகாவையும் அழைத்துச்சென்று அந்தக்கணினியை வாங்கிக்கொடுத்தபோது,  அபிதா தனது கைபேக்கையும் எடுத்துச்சென்றிருந்தாள்.
அவர்களிருவரும்  அதனைத் தெரிவுசெய்து வாங்கியபின்னர், பணம் கொடுப்பதற்கு ஆயத்தமானபோது அபிதா, தனது கைபேக்கிலிருந்து  ஒரு மஞ்சள் நிறத்தினாலான கடித உறையை சண்முகநாதனிடம் நீட்டி,   “ அய்யா, இதில் ஒரு இலட்சம் ரூபா இருக்கிறது.  தேவையானதை எடுத்துக்கொள்ளுங்கள்  “ என்றாள்.
 அவருக்கும் ஜீவிகாவும் திகைப்பாகவிருந்தது.

பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 3 - தலைவன் - ச . சுந்தரதாஸ்

.

நவீன விஞ்ஞானம் இன்று உலகில் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்திய சித்தர்கள், முனிவர்கள் பல அரிய உண்மைகளை அற்புதங்களை மக்களின் அறிவுக்கு விருந்தாக படைத்துள்ளார்கள். அவற்றில் ஒன்றுதான் ஹிட யோகசித்தி கைவரப்பெற்றவர். நீரிலே நடக்கலாம் , நெருப்பிலே படுக்கலாம் உடலை பஞ்சைப் போல் லேசாக்கி கொண்டு காற்றில் பறக்கலாம் என்ற கண்டுபிடிப்பாகும். பதஞ்சலி முனிவர் அருளிய யோக சித்தாந்தங்கள் என்ற நூலில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன இந்நூலை சுவாமி விவேகானந்தர் மொழிபெயர்த்திருக்கிறார்.


இவற்றை அடிப்படையாக வைத்து நவீன ஜேம்ஸ்பாண்ட் பாணியில் தயாரான படம் தான் தலைவன். புரட்சித் தலைவராக அரசியலில் அடையாளம் காணப்பட்ட எம்ஜிஆர் அதற்கு முன்னரே திரையுலகில் தலைவன் ஆகிவிட்டார்.அதற்கமைய இப்படத்திற்கு தலைவன் என்று பெயரிடப்பட்டது. சில ஆண்டுகள் தயாரிப்பில் இழுபடட இப்படம் 1970 ஆண்டுதான் திரைக்கு வந்தது.

ஜமீன்தாரை சுட்டுக் கொன்றுவிடும் சங்கிலி அப்பழியை ஜமீன்தாரிணி மீது போட்டு விடுகிறான். ஜமீன்தாரணியோ தலைமறைவாகிவிட்ட அவளின் குழந்தை சித்த மருத்துவரிடம் வளர்ந்து துப்பறியும் நிபுணராக ஆகிறது. சங்கிலியை கண்டுபிடிப்பதுதான் அவனின் கடமையாகிறது, வழக்கம்போல் ஒரு பெண்ணின் காதலும் குறுக்கிடுகிறது. இப்படி அமைக்கப்பட்ட கதையில் சித்த வைத்தியத்தின் மகிமை அட யோக சித்தியின் மகான்மியம் காட்டு பெண்ணின் களங்கம் இல்லாத காதல், துப்புரவு பணியாளர்களின் பெருமை, என்று பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் சமாளிக்கத்தான் தலைவன் எம்ஜிஆர் இருக்கிறாரே.

இலங்கைச் செய்திகள்


அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

கைவிடப்பட்ட நிலையில் மொனராகலை தமிழர்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள்

மலையகத்தின் விடிவௌ்ளி

ஆறுமுகன் தொண்டமானுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் அனுதாபம்

ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியை மே 31இல்

மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு அரசியல் தலைவர்கள் அனுதாபம்

மலையகத்தில் வெள்ளைக்கொடிகள் பறக்கவிட்டு பெருந்துயரத்தை வெளிப்படுத்தும் மக்கள்

அமைச்சர் தொண்டமானின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை


ஆறுமுகன் தொண்டமானின் இடத்திற்கு மகன் ஜீவன் தொண்டமான்

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் சொந்த ஊருக்கு

கொட்டகலையில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்

சுகாதார விதிமுறை பேணி ஆறுமுகன் தொண்டமானின் நல்லடக்கம்

மனம் மாறினால் 99 பேருக்கும் கதவுகள் திறந்தே உள்ளன

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்



அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்



அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்-Arumugan Ramanathan Thondaman Passed Away
- திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் வைத்தியசாலையில் அனுமதி
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மாரடைப்பு காரணமாக காலமானார்.
இன்று (26) மாலை பத்தரமுல்லையிலுள்ள அவரின் இல்லத்தில் வைத்து திடீரென சுகவீனமுற்ற அவர், தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

உலகச் செய்திகள்


ஹொங்கொங் பாதுகாப்பு சட்டத்தை தாமதம் இன்றி நிறைவேற்ற உறுதி

கொவிட்-19 தொற்றின் மூலத்தை கண்டுபிடிக்க சீனா ஒத்துழைப்பு

ஜெரூசலத்தின் புனித செபல்கர் தேவாலயத்தை திறப்பதில் தாமதம்

நெதர்லாந்து இறைச்சி ஆலையில் 147 பேருக்கு கொரோனா தொற்று


ஹொங்கொங் மக்கள் அமைதிகாக்க நகரத் தலைவர் கேர்ரி லாம் கோரிக்கை

கழுத்தை இறுக்கிய கறுப்பினத்தவர் மரணம்: 4 பொலிஸார் பணி நீக்கம்

ஹொங்கொங்கில் தொடர்ந்து ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டம்

ஹொங்கொங்கிற்கான சலுகையை முற்றிலும் நீக்க அமெரிக்கா திட்டம்

ஹொங்கொங் பாதுகாப்பு சட்டம் சீன பாராளுமன்றத்தில் ஒப்புதல்

கறுப்பினத்தவரின் மரணத்தால் அமெரிக்காவில் தொடரும் போராட்டம்



ஹொங்கொங் பாதுகாப்பு சட்டத்தை தாமதம் இன்றி நிறைவேற்ற உறுதி




ஹொங்கொங்கில் வளர்ந்துவரும் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு சீனா அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய பாதுகாப்புச் சட்டம் அவசியமாக இருப்பதாக அந்த நகரின் பாதுகாப்புக்கான செயலாளர் ஜோன் லீ தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் - ருத்ரா

முள்ளிவாய்க்கால்
தமிழர்களின் செங்கடல்.
வழி பிளக்க மோசஸ்கள் இல்லை.
தமிழனுக்குள் ஒரு விசை உண்டு.
இன்று அது
சினிமாவுக்குள் இருக்கலாம்.
டாஸ்மாக்கில் இருக்கலாம்.
தேர்தல் கணிப்பொறி எனும்
அந்த ஓட்டைக்குடத்து
நீராகவும் இருக்கலாம்.
ஆனால் அது 
ஒரு பொங்குமாங்கடல்.
"கல் பொரு சிறு நுரைகளாய்"
எப்போதும் 
உடைந்து கொண்டிருக்கப்போவதில்லை.
ஓடப்பர் உடையப்பர் ஆகும்போது
தடைகள் தூளாகும்.
உலகொப்பர் ஆகும்போது
நம் தமிழின் கதிர்வீச்சு
ஒரு செம்புயல் மூச்சாகும்.

வெடிமணியமும் இடியன் துவக்கும் - குறும் படம் ஒரு பார்வை - கானா பிரபா

.



ஈழத்துக் குறும்பட இயக்கத்தில் மிக முக்கியமானதொரு படைப்பாக இன்று வெளியாகியிருக்கிறது.

ஈழத்துப் படைப்பாளிகளில் சகோதரன் மதிசுதா MaThi Sutha நடிகராக, இயக்குநராக முன்னரேயே அறியப்பட்ட ஆளுமை என்றாலும் இந்தப் படைப்பைச் சற்று முன்னர் பார்த்த போது நெகிழ்வும், பெருமிதமும் கலந்ததொரு உணர்வு எழுந்தது.

எமது ஈழத்தின் நிகரற்ற கலைஞன் முல்லை யேசுதாசன் Mullai Jesuthasan அண்ணரின் மறைவின் பின்னர் வெளிவரும் படைப்பாக இதைக் கண்ணுற்ற போது கலங்கிப் போனேன். இந்த அற்புதமான படைப்பாளி இன்னும் இருந்திருந்தால் இது போன்ற எவ்வளவு அற்புதமான படைப்புகளை அநாயசமாகச் செய்து விட்டுக் கடந்திருப்பார்.

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் - அங்கம் 15 தமிழில் விஞ்ஞானம் எழுத நேர்ந்து, அரசியல் பிரவேசம் தொடங்கிய காலம் ! அம்பிமாஸ்டர் - அம்பிகாபதியாகி, கவிஞர் அம்பியாகிய கதை !!


கல்விப்பணியிலிருந்தவாறு,  இலக்கியப்பிரவேசமும் செய்திருக்கும் நான், முதலில் எழுதிய சிறுகதை இலட்சியச்சோடி. அது தினகரனில்  வெளியானது.
எனது இளம்வயதிலேயே இச்சிறுகதை வெளியானது.  எனது கையெழுத்தில் அனுப்பப்பட்ட முதல் சிறுகதை தினகரனில் அச்சாகி வெளியானதைப் பார்த்து பேருவகைகொண்டேன்.
அந்தப் பெருமிதம்,   முதல் குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுத்த  தாய்க்கு வரும் அளவுகடந்த மகிழ்ச்சிக்கு ஒப்பானது.
எனது கன்னிப்படைப்புக்கு பத்திரிகையில் அங்கீகாரம் கிடைத்ததையடுத்து உற்சாகத்துடன் தொடர்ந்து இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கினேன்.
அக்காலப்பகுதியில் வெளியான ஈழகேசரி பத்திரிகையில் உறவு மலர்ச்சி என்ற குறுநாவல் ஒன்றையும் எழுதினேன். ஆசிரியர் இராஜ அரியரட்ணம் என்னை ஈழகேசரி காரியாலயத்திற்கு அழைத்து இலக்கியப்  புதினங்கள் பேசிக்கொண்டிருப்பார்.
என்னை இலக்கியத்துறையில் ஊக்குவித்தவர்களில் அவரும் முக்கியமானவர். அவரது மனைவியார் அண்மையில் கனடாவில் மறைந்துவிட்ட செய்தியையும் அறிந்தேன்.
ஈழகேசரியில் எனது எழுத்துக்கள் வெளிவந்த காலப்பகுதியில் பாடசாலைகளில் தாய்மொழி மூலம் விஞ்ஞானம் கற்பிக்கலாம் என்ற புதிய திட்டம் அறிமுகமானது.
அதுவரையில் ஆங்கில மூலம் கற்பிக்கப்பட்டு வந்த விஞ்ஞான பாடங்களை மாணவர்களுக்கு தமிழிலே அறிமுகப்படுத்தி கற்பிக்கவேண்டிய சூழல் உருவானது.
இவ்வேளையில் நண்பர் இராஜ. அரியரட்ணம் தக்க ஆலோசனைகளை எனக்கு வழங்கியதையும் மறந்துவிடமுடியாது.

தேவ தாசியர் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.




  இன்று தமிழரிடையே பிரபலமாக இருக்கும் பரத நாட்டியக்கலை முன்னோடியாய் இருந்து அதை ஆடியவர்கள் தேவ தாசி என்ற பெண்களே. இவர்கள் சமூகத்தில் உயர் அந்தஸ்தை பெற்றிருந்தனர். இவர்களுக்கு கோயில்களின் வீதியிலேயே வீடுகள் அமைக்கப்பட்டு மானியமும் வழங்கப்பட்டது. வரி விலக்கப்பட்ட விளைநிலங்களும் வழங்கப்பட்டன. இத்தகைய பெண்கள் இசை நடனம் போன்ற கலைகளில் சிறந்த பயிற்சி பெற்றது மட்டும் அல்லாது கல்வி அறிவிலும் சிறந்து விளங்கினர். இவர்களே அன்று கல்வி அறிவைப் பெற்றப் பெண்கள்.

  மறுபுறத்திலே குடும்பப் பெண்கள் என்போர் கல்வி அறிவோ, கலைகளிலோ பரிச்சயம் அற்றவராகவே இருந்தனர். அத்தகைய அறிவைப் பெறுவது இல்லாளுக்கு அழகல்ல எனக் கருதப்பட்டது. தேவ தாசி என்பவள், தேவன்இறைவன், தாசிஅடிமை. இவளோ இறைவனுக்கே அடிமையானவள். இவளுக்கும் இறைவனுக்கும் திருமணம் நடைபெறும். தேவதாசி சமூகத்தில் வயதான ஒருவர் இறைவனுக்காக அவரது கழுத்தில் தாலியைக் கட்டுவார். இவை யாவும் கோயிலில் இறை சன்னதியில் நடைபெறும். அன்றிலிருந்து அவள் இறைவனின் மனைவியாகிறாள். கடவுளை தனது கணவனாக வரித்துக் கொண்டதால், இவள் என்றுமே விதவை ஆவதில்லை. அவள் நித்திய சுமங்கலி. இவள் நித்திய சுமங்கலியாகத் திகழ்வதால், இவள் கையால் தாலிக்கு மணி கோப்பதை அன்றைய சமூகம் அதிஷ்டம் எனக் கருதியது. திருமண ஊர்வலத்தில் இவளை முன்னே செல்லும்படி செய்தனர். மொத்தத்திலே இவள் சமூகத்தில் மிக உயர் அந்தஸ்தில் வைத்து மதிக்கப்பட்டாள். இவள் இறந்தால் இறைவனுக்கு அணியப்படும் ஆடையை எடுத்துச் சென்று அவளது உடலில் போர்த்துவார்கள். அவளது இறந்த உடலை எரியூட்ட கோயில் அடுப்பிலிருந்தே கொள்ளி எடுத்துச் செல்லப்படும். இது இறைவனே அவளுக்கு கொள்ளி வைப்பதாக கொள்ளப்படும். அவளது உடல் தகனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்போது கோயில் வாசலிலே சில நிமிடங்கள் வைக்கப்படும். இது அவளது நாயகனான இறைவனிடம் இருந்து விடைபெறுவதாக கொள்ளப்பட்டது. அன்று இறைவனுக்கு துக்க நாளாக அனுட்டிக்கப்பட்டு கோயிலில் பூஜை நடைபெறாது.