"சாட்சிகள் சொர்க்கத்தில்" திரைப்பட இசை வெளியீட்டு விழா விமர்சனம்


விதையாக விழுந்து மரமாக முளைப்பான் தமிழன்!  உண்மைதான்!,  கடந்த ஞாயிற்றுக்கிழமை,  25 ஆம் திகதி,  மாசி மாதம்,  அவுஸ்திரேலியாவில், சிட்னியில், யாழ்   மண்டபத்தில், ஈழன் இளங்கோவின்,  "சாட்சிகள் சொர்க்கத்தில் "  திரைப்படத்தின்  இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அன்று  சிட்னியில், காலையில் இருந்தே அடைமழை, இருந்தும், மண்டபம் நிறைந்த மக்கள், ஒவ்வொருவர் முகத்திலும் ஏதோவொரு எதிர்பார்ப்பு, ஏக்கம், அதோடு, ஆனந்தம். அந்த மழையிலும் அதுகவும் ஞாயிற்றுக்கிழமை மாலை அவரவருக்கு இருந்த வேலையை ஒதுக்கிவைத்துவிட்டு திரைப்பட இசை விழாவிற்கு  வந்திருந்தனர் என்றால்  அது  திரைப்படத்தின் தலைப்பிற்காகவா?, கதைக்காகவா?, விளம்பரத்தில் வந்திருந்த புகைப்படத்திற்காகவா?  அல்லது இயக்குனர்  ஈழன் இளங்கோவிற்காகவா? எதுவாக இருந்தாலும் வந்தவர்கள் நிறைந்த மனதோடு, வாழ்த்தியதோடு அவர்கள் ஆதரவையும் தெரிவித்தார்கள். படத்தைப்பற்றியும்,  ஈழன் இளங்கோவை பற்றியும் பலர் கூறிய கருத்துக்கள், பலருக்கு இப்படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரிக்க வைத்திருக்கிறது என்பதில் சற்றும் சந்தேகமில்லை.
இருதய சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மனமோஹன் அவர்கள் பேசுகையில், இந்தப்படத்தைப்பற்றி முதலில் கேள்விப்பட்ட போது, இந்தப்படத்தையோ அல்லது இந்தப்படம் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளையோ எதிர்நோக்கும் மனநிலை தனக்கு இருக்குமோ இல்லையோ என்று குழப்பத்தில் இருந்ததாகவும் பின்னர் ஈழன் இளங்கோ தொடர்புகொண்டு, ஈழத்தில் நடந்த எந்தக்கட்சிகளும் இப்படத்தில் சித்தரிக்கப்படவில்லை என்று கூறியதில் இருந்தும், அப்படி நாம் பயந்து இருந்துவிட முடியாது, இதுபோன்ற படங்கள் எதிர்காலத்தில் ஆவணங்களாக சரித்திரத்தில்  இருக்கப்போகின்றன ஆகையால் நாம் நமது பங்களிப்பையும் ஆதரவையும் தருவது எமது கடமை என்று கூறினார்.

சிட்னி துர்க்கை அம்மன் ஆலய திருவிழா 2018




மார்ச் 03 ம் திகதி சிட்னி துர்க்கா தேவி ஆலயத்தில் மேடை ஏறிய நாத சங்கமம்






சொல்லத்தவறிய கதைகள் மறைந்தவர்களின் தொலைபேசி இலக்கங்கள்! துன்பியல் புன்னகையுடன் எனது மேசையில் வீற்றிருக்கும் அந்த கறுப்பு டயறி! - முருகபூபதி



இந்தப்பதிவுக்கு "கொல்லப்பட்டவர்களின் தொலைபேசி இலக்கங்கள்" என்றுதான் முதலில் தலைப்பிடுவதற்கு யோசித்தேன். எனினும் எம்மத்தியில்  கொல்லப்பட்டர்களதும்,  காணாமலாக்கப்பட்டவர்களதும்  இயற்கை மரணத்தை தழுவியவர்களினதும் தொலைபேசி இலக்கங்கள் இன்றளவும் என்னிடம் இருப்பதனால், பொதுத்தலைப்பினை வைப்பதற்கு தீர்மானித்தேன்.
அந்த இலக்கங்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல்  அமைதி காக்கின்றன!
டயறி எழுதுவது நல்ல பழக்கம்தான். ஆனால், அதில் எழுதப்படும் விடயங்களைப்பொறுத்து சமூகத்திலும் உலக அரங்கிலும் முக்கியத்துவம் பெற்றுவிடும். நடிகர், நடிகைகள், அரசியல்  தலைவர்கள், எழுத்தாளர்களின், பாதுகாப்புத்துறை சார்ந்தவர்களின் டயறிக்குறிப்புகள் அவர்கள் வாழும் காலத்திலும் - மறைவுக்குப்பின்னரும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன.
நான் இலங்கையில் நன்கறிந்த ஒரு மூத்த எழுத்தாளரின் டயறியொன்று அவரது மறைவின் பின்னர் வெள்ளவத்தையில்  ஒரு பழையபேப்பர் கடையிலிருந்து, அப்பகுதியிலிருந்த சைவஹோட்டலுக்கு கைதுடைப்பதற்கும் சென்றிருக்கிறது!
நானும் நீண்டகாலம் டயறி எழுதிக்கொண்டிருந்தேன். அவுஸ்திரேலியாவுக்கு வந்ததும் அந்தப்பழக்கத்தை விட்டுவிட்டேன். தற்பொழுது எனது நாளாந்த டயறி,  வீட்டுச்சுவரில் மாட்டியிருக்கும் நாட்காட்டிதான். அதில் நான் அங்கம் வகிக்கும் அமைப்புகளின் கூட்டங்கள், நிகழ்ச்சிகள், மற்றும் மருத்துவரிடமும், மருத்துவ பரிசோதனைகளுக்கும் செல்லும் தினங்கள்தான் பதிவாகிவருகின்றன.
வீரகேசரியில் பணியாற்றியவேளையில் எமது பிரதம ஆசிரியர் ஆ.சிவநேசச்செல்வன் என்னிடம் தந்த கறுப்பு நிற அட்டையிலமைந்த  தொலைபேசி எண்களை பதிவுசெய்யும் சிறிய டயறிக்குள் இருக்கும் எண்கள் பல சொல்லத்தவறிய  திகில் கதைகளையும் உள்ளடக்கியிருக்கின்றன.
அதில் அமைச்சர்கள் , தொழிற்சங்கவாதிகள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், ஆயர்கள், அரச அதிபர்கள், ரயில் நிலைய அதிபர்கள், தபாலதிபர்கள், கல்வி அதிகாரிகள், மரணவிசாரணை அதிகாரிகள், வர்த்தகப்பிரமுகர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட பலரதும் தொலைபேசி இலக்கங்கள்  காலத்துக்கு காலம் பதிவாகியிருக்கின்றன. அந்த இலக்கங்கள் கறுப்பு, சிவப்பு, நீலம் ஆகிய நிறங்களிலும் காணப்படுகின்றமையால் வேறு வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டிருக்கவேண்டும்.
அதற்கு 35 வயதாகிறது!
அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட தருணத்தில் அதுவும் எனது பொதிகளுடன் எப்படியோ  சேர்ந்து வந்துவிட்டது. இன்றும் எனது மேசையிலிருந்து என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறது.
எமது பத்திரிகை ஆசிரியர் எனக்கு கறுப்பு நிறத்தில் அட்டை அமைந்த அந்தச்சிறிய டயறியை தந்தது தற்செயல்தான். துக்கத்தின் அடையாளம்தான் கறுப்பு என்பதனால், மரணத்தின் மூலம் துயரத்தையும் நினைவுகளையும்  தந்துவிட்டு சென்றுவிட்டவர்களின் தொலைபேசி இலக்கங்கள் எனது பயன்பாட்டுக்கே அவசியமற்றவகையில்   நனவிடை தோயவைத்துக்கொண்டிருக்கிறது.
A  முதல் Z வரையில் அந்த எழுத்துக்களுக்குரிய பல முக்கியஸ்தர்களின் தொலைபேசி இலக்கங்கள்  இலங்கையில்  பத்திரிகைப்பணியில் எனக்கு மிகவும் அவசியமாகியிருந்தது.
காலையில் 8.30 மணிக்கே வீரகேசரி அலுவலகம் வரவேண்டிய தேவை இருந்தமைக்கு அங்கு முதலில் மித்திரனும் பின்னர் வீரகேசரியும் அச்சிடப்படுவதும் ஒரு முக்கிய காரணம்.
முன்னாள் பிரதம ஆசிரியர் (அமரர்) க. சிவப்பிரகாசம் அவர்களால் சூட்டப்பட்ட பெயர் மித்திரன்.  1960 களில் அதனை மாலைத்தினசரியாகத்தான் வெளியிட்டார்கள்.  அதன் உள்ளடக்கம் பரபரப்புத்தான்.  "ரஜனி "- கே.வி. எஸ். வாஸின் மர்மத் தொடர்கதைகளுக்கும்  ஜி.நேசனின் ஜமேலா, பட்லி, பூலான் தேவி பற்றிய கலகலப்பூட்டும் தொடர்களுக்காகவும் முன்னர் பிரசித்திபெற்று பரபரப்பாகப்பேசப்பட்ட கொலை வழக்குகள் பற்றிய செய்திக்கதைகளுக்காகவும் மித்திரன் வெளிவந்தாலும், காலப்போக்கில் அவைபோன்ற தொடர்களும் உள்ளடக்கிய செய்தி ஏடாகவும் சாதாரண வாசகர்களை கவரும் எளிய தமிழிலும் மித்திரன் காலைத்தினசரியாகியது.
அச்சு இயந்திரத்தின் தேவை கருதி நிருவாகம் முதலில் மதியம் மித்திரனையும் மாலை 5 மணிக்குப்பின்னர் வீரகேசரியையும் அச்சிட்டது.

இலங்கை வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்த தங்கேஸ்வரி கிழக்கிலங்கையில் பறிபோகும் தமிழ்ப்பெயர்கள் - முருகபூபதி


                                    " தமிழ்மக்களுக்குப் பல குறைகள் உண்டு என்பதனை பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த சகல அரசியல் தலைவர்களும் ( கட்சிகளும் இயக்கங்களும்) ஏற்றுக்கொண்டு நீண்டகாலமாகிட்டது. அதனால் பல ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட்டன. மாநாடுகள் கூட்டப்பட்டன என்பது கண்கூடு.
ஆனால், ஒரு பெரும்பான்மை மொழி மற்றுமொரு சிறுபான்மை மொழியினை ஆக்கிரமித்து, அமிழ்த்தி சாகடித்துவிட்டு, தான் மட்டும் மேலெழும்பி உலகைப்பார்ப்பதானது நியாயமற்ற செயல் என்பது இங்கு கவனிக்கப்படுவதில்லை. படிப்படியாக வாழை மரத்தில் ஊசி ஏற்றுமாப்போல் அக்கைங்கரியம் நடைபெற்று வந்துள்ளது. அரச திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் அவற்றின் வெளியீட்டு பிரசுரங்கள் அரசுக்கு நிதி தேடித்தரும் அதிர்ஷ்ட லாபச்சீட்டுக்கள் என்பவற்றில் எல்லாம் அக்கைங்கரியம்  சாதுரியமாகவே மேற்கொள்ளப்படுவது குறித்து பொதுவாக எவரும் சிரத்தைகொள்ளாமல் இருப்பதுதான் கவலைக்குரியது"
இந்த வரிகள் அடங்கிய ஒரு நீண்ட கட்டுரையை சுமார் 32 வருடங்களுக்கு  முன்னரே (27-04-1985) வீரகேசரியில் ரிஷ்யசிருங்கர் என்ற புனைபெயரில் எழுதியிருக்கின்றேன். எனக்கு இந்தப்புனைபெயரைச்சூட்டியவர் அச்சமயம் வீரகேசரி பிரதம ஆசிரியராகவிருந்த ஆ. சிவநேசச்செல்வன்.
மூன்று தசாப்தங்கள் கடந்துவிட்டன!!??
இலங்கையில் தமிழ்மொழி அமுலாக்கலுக்கென அமைச்சும் இயங்குகின்றதா...?1977 இற்குப்பின்னர் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்  செல்லையா இராசதுரை, தாம் அங்கம் வகித்த தமிழரசுக்கட்சிக்கு "கையசைத்துவிட்டு" ,  அன்றைய ஜே. ஆரின். ஐ.தே.க. அரசுடன் "கைகுலுக்க" வந்தபோது  அவருக்காக உருவாக்கப்பட்டது தமிழ் மொழி அமுலாக்கல், இந்துகலாசார பிரதேச அபிவிருத்தி அமைச்சு. அதன்பின்னர் இந்த அமைச்சு, பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசுகளினாலும் யாராவது ஒரு தமிழருக்கு - (அவ்வேளையில் ) அரசு ஆதரவாளருக்கு தரப்படும். இது தொடர்கதை.
ஆனால், தமிழ் மொழி அமுலாக்கலிலும் இதுதான் தொடர்கதை!?
எனது  கட்டுரையில் வீதிகள், ஒழுங்கைகள்,  தெருக்கள் யாவும் " மாவத்தைகளா"கிவிட்டதையும், கிராம எழுச்சி, கிராமோதயவாகிவிட்டிருப்பதையும், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் சதொசவாகிவிட்டதையும், கிராம எழுச்சிச்சபை, "கிராமோதய மண்டலய" என மாறியிருப்பதையும் இவ்வாறு மொழிக்கபளீகரம் செய்யப்பட்ட  இதர தமிழ் வார்த்தைகளையும் சுட்டிக்காட்டி எழுதியிருந்தேன்.
இன்றும் இலங்கையில் நிலைமை அப்படியேதான் இருக்கிறது!!!
அரசின் அதிர்ஷ்ட லாபச்சீட்டுக்களின் பெயர்களைப்பாருங்கள்:
ஜாதிக சம்பத, சம்பத்ரேகா, செவன, கொவிசெத, அத கோடிபதி, நியத்த ஜய, கோடிபதி சனிதா, சுபிரி தெலக்‌ஷபதி.
இலங்கையில் மூவின மக்களும் ( இதில் இரண்டு தமிழ்ப்பேசும் சிறுபான்மை இனத்தவர்கள்)  இந்த அதிர்ஷ்டத்திற்காக பணம் கொடுத்துவருகிறார்கள். இலங்கை நாளிதழ்களிலும் தினமும் வரும் அதிர்ஷ்ட லாப விளம்பரங்களில்  தமிழைத்தேடவேண்டும்.
சில மாதங்களுக்கு முன்னர் 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு இலங்கை வங்கியின் கௌரவிப்பு விளம்பரத்திற்கும் "ரண் கெகுளு" என பெயர் சூட்டப்பட்டிருந்ததை அவதானிக்கமுடிந்தது.
இந்தப்பின்னணிகளுடன் மட்டக்களப்பில் வதியும் எழுத்தாளரும் சமூக ஆய்வாளரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான  செல்வி கதிர்காமன் தங்கேஸ்வரி அவர்கள் நாம் 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்திய மாநாட்டில் வெளியிட்ட கட்டுரைக்கோவையில்  எழுதியிருக்கும், " கிழக்கிலங்கையில் தொலையும் தொன்மைகளும் தொன்மைக்கிராமங்களும்" என்ற ஆய்வை பார்க்கலாம்.
அதிலிருந்து ஒரு பந்தி: எமது பண்டைய " வன்னிமைகள்" சிங்களத்தில் "ரட்ட" எனவாகிவிட்டன. குளம் " வெவ" எனவும் - உதாரணம்: கலாவெவ.   மாதுறை என்பது" மாத்தற" ,தேவேந்திரமுனை என்பது "தெவினுவர",மாயவனாறு என்பது, "தெதுறு ஓயா",  காளி தேசம் என்பது " காலி", கடம்ப நதி என்பது " மல்வத்து ஓயா", பட்டிப்பளையாறு என்பது "கல்லோயா", முதலிக்குளம் என்பது "மொரவெவ" , மணலாறு என்பது " வெலிஓயா", பார்வதி கிராமம் என்பது " பதவியா",  திருகோணமலை என்பது "திருக்கிணாமலை", அரிப்புச்சந்தி என்பது " அலியொலுவ" , யாழ்ப்பாணம் என்பது " யாப்பனே" , எனவும் நாடுமுழுவதுமே தமிழ்ப்பெயர்கள் மாற்றப்பட்டுவருகின்றன.
(மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) இன்றைய பதவியா முன்னர் வண்ணாத்திக்குளம் என அழைக்கப்பட்டதாக சொல்லியிருக்கிறார்.)
"இப்படி தொலைந்துபோகும் தொன்மையையும் தொலைந்துபோன கிராமங்களைத் தேடுவதும்  தமது கட்டுரையின் நோக்கமாகும்"- என்று பதிவுசெய்துள்ள தங்கேஸ்வரி, விரிவஞ்சி, கிழக்கே மாத்திரம் நிகழ்ந்துள்ள அதிர்ச்சிகரமான மாற்றங்களை அந்த ஆய்வில் விரிவாக எழுதியிருந்தார்.
இன்றும் இலங்கையில் பிரதேசம் பறிபோவது பற்றி யாராவது எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும்தான் இருக்கிறார்கள். இந்நிலையை மாற்றுவதற்கான செயல்தான் இல்லை.
" நாட்டை விட்டே ஓடிவிட்டீர்கள், நிலம் பறிபோவது பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?, ஊரின் பெயர் தொலைந்துவிட்டதே என்று ஏன் கலங்குகிறீர்கள்?" என்று இந்தப்பதிவைப்பார்க்கும் எவரும் எனக்கு எதிர்வினையாற்றலாம்!!!
எங்கிருந்தாலும் எங்கள் தாயகம் என்ற உணர்வுடன் வாழ்வதனால், எமது தேசத்தின் கோலம் பற்றி அங்கிருந்தே ஆய்வுசெய்தவர் பற்றி நான் எழுதிவரும் " பெண்ணிய ஆளுமைகள்" தொடரில் இங்கு எழுதவிரும்புகின்றேன்.

மெல்பன் வாசகர் வட்டத்தில் Mary Mcleod Bethune வாழ்க்ககைச்சரிதம்






"மனிதர்களிடையே பரஸ்பரம் நிலவும் வெறுப்பிற்கு எதிராக பணியாற்றியே தீர வேண்டும் " --  மேரி மெக்லாய்ட் பெத்யூன் 

 

கருப்பையா ராஜா




அமெரிக்காவின்  அடிமைத்தளையிலிருந்து மீண்ட ஆபிரிக்க கருப்பினத்தவரின்  வாழ்க்கை உயர்வுக்கு கல்வி மட்டுமே சரியான தீர்வாக இருக்கும் என அசைக்க முடியாத கனவுகளுடன் தன் இன மக்களின் கல்வி உயர்விற்காக  தன் வாழ்வில் எதிர் நோக்கிய தடைகளை தகர்த்து தன் கனவுகளை சாத்யமாக்கியும் இயங்கிய  இரும்புப் பெண் மேரி பெத்யூன்.

கமலாலயன் எழுத்துக்களில் மேரி பெத்யூனின் வாழ்க்கை சரிதம் குறித்து மெல்பன் வாசகர் வட்ட உரையாடலில் பேசிக்கொண்டு இருந்த வேளையில்,  சிரியாவில் இரசாயன குண்டு மழை பொழிந்து எண்ணற்ற  இளம் தாய்களும் நம் குழந்தைகளின் சாயல் கொண்ட  பள்ளி சென்று திரும்பாத குழந்தைகளும் ரத்தச் சகதியில் ....

பதினெட்டாம் நூற்றாண்டில் தங்கள் நாட்டை உருவாக்க ஒன்றறைக்கோடி ஆபிரிக்கர்களை அடித்து சங்கிலியால் பூட்டி அடிமைகளாக்கி அமெரிக்கா கொண்டு வருவதற்காக  அதை விட பல மடங்கு ஆபிரிக்கர்களை கொன்றனர் அமெரிக்க வெள்ளையர்.

மேரி பெத்யூன் சொல்கிறார்:-

1900களில்  இன மோதல்களை அன்றைய ஊடகங்கள் சரியான முறையில் வெளிக்கொண்டு வராமல் பார பட்சமாகவே நடந்து கொண்டனவாம் .  இன்றுவரையில்  அதே நிலையைத்தான் நாம் பார்க்கின்றோம்.

ஆணவம், வெறுப்பு  ஆகிய இரண்டின் சாட்சியாக இரண்டு உலகப்போர்களை கடந்து வந்து விட்டோம்.
ஜப்பான்மீதான அணுகுண்டு சோதனையை அது தந்த அழிவை மறந்து விட்டோம்

கடந்த சில வருடங்களில் வளைகுடா நாடுகளில்  ஏற்பட்ட போர்களையும் அழிவுகளையும் மறந்தே போய்விட்டோம், இத்தனைக்கும் மேல் நம் இன மக்களின் மேல் கொண்ட வெறுப்பால் இலங்கை இன படுகொலையையும் அதற்கு துணை நின்ற பேரினவாதங்களையும் மறந்தே போனோம்,...!?
இதோ இன்றைய தினத்தில்  சிரியா....!?
இந்தப்பின்னணிகளிலிருந்துதான் கமலாலயனின் எழுத்தில் " "உனக்குப்படிக்கத்தெரியாது" என்ற நூலை மெல்பன் வாசகர் வட்டம் அண்மையில் ஆய்வுசெய்தது.

இலங்கைச் செய்திகள்


ஆண்டொன்று கடந்த நிலையில் விடையின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்.!

வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன்னர் கைது!!!

பிரிகேடியர் பிரியங்கவின் நிலை என்ன ? மீண்டும் லண்டனுக்கு அனுப்பப்படமாட்டாராம் 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த ஜப்பான் பௌத்த துறவிகள்

ஜனாதிபதி, பிரதமருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

முல்லைத்தீவில் முன்னாள் போராளி உட்பட 10 பேர் கைது..!




ஆண்டொன்று கடந்த நிலையில் விடையின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்.!

01/03/2018


உலகச் செய்திகள்


ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டுவரப்பட்டது : நாளை இறுதிக் கிரியை

ஸ்ரீதேவியின் உடல் எம்போமிங் செய்வதில் தாமதம் : போனி கபூரிடம் துபாய் பொலிஸார் விசாரணை!!!

வெளியானது ! ஸ்ரீதேவியின் மரணத்திற்கான காரணம்!!!

ஐரோப்பாவில் கடும் குளிர் : இதுவரை 55 பேர் பலி




ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டுவரப்பட்டது : நாளை இறுதிக் கிரியை

28/02/2018 டுபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் இறுதிச்சடங்குகள் நிறைவடைந்த பின்னர் தகனம் செய்யப்பட உள்ளது.
நடிகை ஸ்ரீதேவி, டுபாயில் உள்ள ஹோட்டல் அறையின் குளியலறையிலுள்ள குளியல் தொட்டியில் மூழ்கியதால் உயிரிழந்ததாக தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அவரது கணவர் போனி கபூரிடம் டுபாய் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சவரக்கத்தி – திரை விமர்சனம்


பார்பர் ஷாப் வைத்திருக்கிறார் ராம். அவரது மனைவி பூர்ணா, கர்ப்பிணி பெண்ணான அவருக்கு காது கேட்காது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ராமின் கடைக்கு அவசரமாக வரும் பூர்ணா, தனது தம்பியும், அவன் காதலித்த பெண்ணும், பெண்ணின் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்னப் போவதாக கூறுகிறாள். அந்த திருமணத்தை ராம் நடத்திவைக்க வேண்டும் என்று பூர்ணாவின் தம்பி விருப்பப்படுவதாக கூறி அவரை அழைத்துச் செல்கிறார்.

அதேநேரத்தில் ஜெயிலில் இருக்கும் மிஷ்கின் ஒருநாள் பரோலில் வெளியே வருக்கிறார். இருவருக்கும் சாலையில் வைத்து மோதல் ஏற்படுகிறது. அப்போது மிஷ்கின் மீது கோபப்பட்டு பேசுகிறார் ராம். அதேநேரத்தில் பின்னால் வரும் கார் ஒன்று மிஷ்கின் கார் மீது மோதுகிறது.
இந்நிலையில், மிஷ்கின் வாயிலிருந்து ரத்தம் வர, அந்த காரில் இருந்தவர்களில் அனைவரும் கையை ஓங்கிய ராம் தான், மிஷ்கினை அடித்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் மிஷ்கினின் மாமா மட்டும் ராம் அடிக்கவில்லை, பின்னால் வந்த கார் மோதியதால் தான் இடித்துக் கொண்டதாக கூறுகிறார்.
ஒருகட்டத்தில் ராம் தான் அடித்துவிட்டார் என்ற முடிவுக்கும் வந்துவிடுகிறார் மிஷ்கின். இதையடுத்து ராமை தேடிக் கண்டுபிடித்து, ராமின் கையை வெட்ட வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதற்காக தனது ஆட்களை ஏவிவிடுகிறார். ஒருகட்டத்தில் மிஷ்கினிடம் சிக்கும் ராம் தான் அடிக்கவில்லை என்று கூறுகிறார்.
ராமின் பேச்சை மிஷ்கின் கேட்காததால், மிஷ்கினை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பித்துவிடுகிறார் ராம். இந்நிலையில், தன்னை தேடி வரும் தனது மனைவி பூர்ணாவை அழைத்துக் கொண்டு அந்த திருமணத்திற்கு செல்ல முடிவு செய்கிறார்.
இறுதியில் மிஷ்கின், ராமை வெட்டினாரா? ராம் மிஷ்கினிடம் இருந்து தப்பித்தாரா? அந்த திருமணம் நடந்ததா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
ராம், மிஷ்கின், பூர்ணா என அனைவருமே கடுமையாக நடித்திருக்கிறார்கள். ராம் ஒரு சாதாரண மனிதனாக எந்தவித அலட்டலும் இன்றி சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல் மிஷ்கின் அவரது வழக்கமான நடிப்புடன், வில்லத்தனத்தை கலந்து கவர்கிறார்.
படத்தில் பூர்ணாவுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக பூர்த்தி செய்திருக்கிறார். பல நடிகைகள் வேண்டாம் என்று ஒதுக்கிய கதையில், ஒப்புக்கொண்டு நடித்ததற்காகவே அவருக்கு பாராட்டுக்கள். காது கேட்காத, கர்ப்பிணி பெண்ணாக வித்தியாசமான கதாபாத்திரத்தில், எந்த நடிகையும் ஒப்புக் கொள்ள தயங்கும் கதையில் மனதில் பதியும்படியாக நடித்து அசத்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.
சாதாரண மனிதனின் வாழ்க்கையில் திடீரென நடக்கும் சம்பவங்கள் அவனது வாழ்க்கையில் எந்தவித மாற்றத்தை உருவாக்குகிறது என்பதை ஒரு வித்தியாசமான கோணத்தில் உருவாக்கியிருக்கிறார் ஜி.ஆர்.ஆதித்யா. இந்த கதையை ராம், மிஷ்கின், பூர்ணா என அனைவரும் அவர்களது மாறுபட்ட நடிப்பில் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். வழக்கமான காமெடி படமாக இல்லாமல், வித்தியாசமான, புதுமையான காமெடி படமாக உருவாக்கி இருக்கும் இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யாவுக்கு பாராட்டுக்கள்.
படத்தில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் எதுவும் இல்லாமல் உருவாக்கியிருக்கிறார். முதல் பாதி காமெடி கலந்து விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாவது பாதியில் ஒரு சில இடங்களில் சிறிய சறுக்கல்கள் இருப்பது போல தோன்றுகிறது. இரண்டு பாடல்களையும் சரியான இடத்தில் காட்சிக்கு பங்கம் விளைவிக்காமல் வைத்திருப்பது சிறப்பு. மாறுபட்ட முயற்சி. ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.
அரோல் கோரெலியின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. பாடல்களும் கேட்கும் ரகம் தான். கார்த்திக் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.
மொத்தத்தில் `சவரக்கத்தி’ கூர்மை.   நன்றி tamilcinema.news