.
ரேடியோ முருகேசன் என்ற முருகேசனை சந்தித்ததை உங்கள் நம்பிக்கை சார்ந்து, தற்செயல் அல்லது ஊழ் அல்லது வேறு ஏதொன்றுமாக நீங்கள் வைத்துக் கொள்ளலாம். கதையின் முடிவில் அதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம். முருகேசனை நான் சந்திக்க வேண்டியிருந்தது என்ற எளிய உண்மை இப்போதைக்குப் போதுமானது.
சிங்கப்பூர் மாமா, அம்மாவிற்கு சீதனமாகக் கொடுத்த சோனி டிரான்சிஸ்டர் ரேடியோ ஒன்று எங்கள் வீட்டில் நீண்ட காலமாக பாடிக்கொண்டு இருந்தது என்று சொன்னால், பக்கத்து வீட்டு சுப்பையா தாத்தா அடிக்க வருவார். அவரைப் பொறுத்தவரை அது கத்திக் கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு மட்டுமென்ன எங்கள் தாத்தாவிற்கும்தான். எங்கள் என்றால், எனக்கும் என் அக்காவிற்கும்.
அக்கா நன்றாகப் பாடுவாள், அம்மா அப்படித்தான் சொல்கிறாள். அப்பா உண்மையில் ஒரு தீர்க்கதரிசி என்றுதான் சொல்ல வேண்டும். இல்லையென்றால் வாணி என்று பெயர் வைத்திருப்பாரா?! வாணிஜெயராம் என்றால் போதும் அவருக்கு. "மல்லிகை என் மன்னன் மயங்கும்' - என்று ரேடியோவில் காதோடு மயங்கிடுவார் மனுசன் என்பாள் அம்மா, அம்மாவுக்கு வாணிஜெயராம் குரல் இல்லை என்பதில் அப்பாவுக்கு வருத்தம் ஏதும் உண்டா என்று தெரியாது. ஆனால் அம்மாவுக்கு உண்டு என்றாலும் அம்மா பாடி பார்த்ததில்லை, என்றால் கேட்ட தில்லை. சின்ன முணுமுணுப்பாகக்கூட, ஆனால் அப்பா பாடுவார். அது மெலிசாக, குண்டுமணி உருள்வது போல இருக்கும். ஆனால் அது வாணிஜெயராம் போல இருக்காது. எப்படி இருக்க முடியும்...! ஆனால் பெண்குரல் பாடலை ஆண்கள் பாடினால் ஏன் நன்றாக இருக்கக் கூடாது?! "வசந்தகால நதிகளிலே'... பாடலை ஜெயச்சந்திரனும் கூடத்தான் அதே நளினத்தோடு பாடுகிறார். இதை நான் சொல்லவில்லை அப்பாதான் சொன்னார். அப்படிச் சொல்லும் அவர் வாணிஜெயராம் பாடலை ஹம்மிங் அல்லது சீழ்க்கையில் தான் ஏனோ பாடுவார்.
இதற்கெல்லாம் குறையில்லாமல் தான் அக்கா பாட ஆரம்பித்தாள். முதலில் ரேடியோவோடு ரேடியோவாக என்றால் விவிதபாரதி இல்லை இலங்கை வானொலி. விவிதபாரதி இரவில்தான் சற்று தெளிவாகக் கேட்க இயலும். பகலென்றால் பாடலும் இரைச்சலாக இருக்கும். கேட்க காதுவலிதான் மிஞ்சும். இலங்கை வானொலி அப்படி அல்ல; கழுவி விட்டதுபோல சுத்தமாக இருக்கும். அவர்களது தமிழும் அப்படித்தான். அதில் வரும் பாடலோடு பாடலாகச் சேர்ந்து பாடுவாள். பாடல், சங்கீதம் என்ப தெல்லாம் சினிமா பாட்டுதான். கர்நாடக சங்கீதம், அது இது என்பதெல்லாம் யாருக்கும் இங்கு விளங்குவதில்லை. பரிச்சயமுமில்லை. தாத்தாவிற்கு, அப்பாவின் அப்பாவிற்கு, சினிமா பாடல் என்பதும் அப்படித்தான்.