தமயந்தி, மகன் உதயசங்கரை அழைத்துச்செல்ல வந்தபோது, அவன் தன்னிடத்தில் சொன்ன கனவுபற்றி சொல்லுவோமா..? என்றும் அபிதா ஒரு கணம் யோசித்தாள்.
தாயிடம் அதுபற்றி சொல்லவேண்டாம் என்று அவன் கெஞ்சியிருக்கையில், சொல்வது தவறு, பிஞ்சுமனதில் வாக்கை மீறும் எண்ணங்களை விதைப்பது மகா தவறு என்ற தீர்மானத்துடன், களைத்து திரும்பியிருந்த தமயந்திக்கு தண்ணீரும் அருந்தக்கொடுத்துவிட்டு, “ ரீயா…? கோப்பியா..? ஏதும் குளிர்பானமா..? “ என்று அபிதா கேட்டாள்.
“ தண்ணீரே போதும் அபிதா. டேய் வாரியா போவோம். இனிப்போய்த்தான் சமைக்கவும் வேணும். “ தொலைக்காட்சியில் கார்டுன் பார்த்துக்கொண்டிருந்த மகனை தமயந்தி தட்டி எழுப்பினாள்.
“ பிளீஸ் அம்மா.. கொஞ்சம் பொறுங்களேன். உங்களுக்கு அவசரம் என்றால் போங்கோ… நான் பிறகு வாரன். “ “ இல்லை… இல்லை… வீட்டுப்பாடம் எல்லாம் இருக்கு. ஸ்கூல் இல்லை என்பது உனக்கு
ஒரு சாட்டாகிப்போச்சுது… எழும்பு… எழும்பு… “ தமயந்தி அவனை துரிதப்படுத்தினாள்.
“ சரி… சரி… விடுங்க. இன்னும் சில நிமிடங்களில் அந்த கார்டுன் முடிந்துவிடும். நீங்க வாங்க , வந்து இருங்க…. “ அபிதா, தமயந்தியை அழைத்துச்சென்று சமையலறை மேசைக்கு அருகில் ஆசனத்தை இழுத்துப்போட்டு அமரச்செய்துவிட்டு, கேத்திலில் தண்ணீர் கொதிக்கவைத்தாள்.
“ தமயந்தி… எனக்கு ஒரு உதவி.. உங்களுக்கு ஒரு அண்ணன் அவுஸ்திரேலியாவிலிருக்கிறார் என்று சொன்னீங்கதானே…? அவர் இங்குள்ள பேப்பர்களிலெல்லாம் கதை, கட்டுரை எழுதுபவர் என்றும் முன்பு ஒரு தடவை சொல்லியிருந்தீங்க… நானும் படித்திருக்கிறேன். ஜீவிகாவும் சொல்லியிருக்கிறா… அவை வெளியான பழைய பேப்பர்களை கொடுத்துவிட்டோம்.
எனக்கு அவருடைய போன் நம்பரும், அவருடைய மின்னஞ்சலும் தெரிந்தால் அதனையும் தரமுடியுமா..? “ அபிதா கேட்டதும், “ வெரி சொறி அபிதா, அவருடைய டெலிபோன் இலக்கம்தான் இருக்கிறது. வேண்டுமென்றால் தாரன்.
அவர்தான் இடைக்கிடை வைபர், வாட்ஸ் அப்பில் எடுக்கிறவர். நானும் ஏதும் அவசரம் என்றால் மாத்திரம் அவருக்கு எடுப்பேன். நேரங்களும் வித்தியாசம்தானே… ஒரு நாள் அங்கத்தைய நேரம் நடுச்சாமத்தில் எடுத்துப்போட்டு நல்லா ஏச்சும் வாங்கிக்கட்டியிருக்கிறன்.