வீரகேசரி
வாரவெளியீட்டில் முதலில் இலக்கியச்செய்திகள் என்ற பத்தி எழுத்தினை எழுதுமாறு ஊக்கமளித்த
அதன் பொறுப்பாசிரியர் பொன். இராஜகோபால், எனக்கு ரஸஞானி என்ற புனைபெயரைச்சூட்டியபோது, ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்த சில நண்பர்கள் அதனைக்கேட்டு
சிரித்தார்கள்.
அதென்ன
ரஸஞானி…? சொதிஞானியும் இருக்கிறாரா..? என்று கேலிசெய்தார்கள் !
மல்லிகையில்
கதை, கட்டுரை எழுதிக்கொண்டிருந்தபோது அதற்கு எதிர்வினைகள் வரவில்லை. வெகுஜன ஊடகத்தில் எழுதத்தொடங்கினால், வரும் எதிர்வினைகளையும் எதிர்நோக்கவேண்டும். அதனால்தான் உமக்கு அந்தப்புனைபெயரை சூட்டினேன் என்று
இராஜகோபால்
சொன்னார்.
அவர்
இலக்கிய மேடைகளுக்கெல்லாம் செல்லமாட்டார்.
பத்திரிகை ஆசிரியர்கள், திரைப்பட இயக்குநர்களைப்போன்று
மறைந்திருக்கவேண்டும் என்பார். அக்காலத்தில்
வெளியான தமிழ்த்திரைப்படங்களில் இயக்குநர்கள் ஏ. பிம்சிங், கே. எஸ். கோபாலகிருஷ்ணன்,
ஶ்ரீதர், கே. விஜயன், கே. மாதவன், எஸ். பி. முத்துராமன் முதலானோரை திரையில் பார்க்கமுடியாது.
அவர்களின் பெயர்தான், எழுத்து ஓடும்போது இறுதியில் காண்பிக்கப்படும்.
இராஜகோபால்,
தனது படத்தையும் எவருக்கும் கொடுக்கமாட்டார்.
எழுத்தாள நண்பன் காவலூர் ஜெகநாதன், அடிக்கடி தமிழகம் சென்றுவருவார். அவர் ஊடாக பல தமிழக இலக்கிய புதினங்களை பெற்றும்
எனது பத்தியில் எழுதினேன். சில மாதங்களில் இலக்கியச்செய்திகள், இலக்கிய பலகணி என பெயர்மாற்றம்
பெற்றது.
தினகரன்
வாரமஞ்சரியில் நண்பர் எஸ். திருச்செல்வம் அறுவடை என்ற பத்தி எழுத்தையும், சிந்தாமணியில்
அதன் ஆசிரியர் எஸ். டி. சிவநாயகம் இலக்கிய மேடை என்ற பத்தி எழுத்தையும் அதே காலப்பகுதியில்
எழுதினர்.
ஈழத்து
இலக்கிய வாசகர்கள் வார இறுதியில் இந்த மூன்று பத்திரிகைகளையும் கையில் எடுத்தால், முதலில்
இந்தப்பத்திகளை படிக்கும் ஆர்வம் மிக்கவர்களாக விளங்கினார்கள்.
எனது
இலக்கியப்பலகணியில், மூத்த – இளம்தலைமுறை இலக்கியவாதிகளையும் கலைஞர்களைப் பற்றியும்
எழுதினேன். நூல்களின் இலக்கிய இதழ்களின் அறிமுகம், இலக்கிய கூட்டங்களின் செய்திகள், பிரதேசவாரியாக
நடக்கும் இலக்கியப்போட்டிகள் முதலான பல தகவல்களை அந்தப்பத்தியில் தொடர்ந்து தொகுத்து
எழுதினேன்.