மழைபெய்த ஈரம் மறையாத பொழுதொன்றில்
அல்பேட் பூங்காவின் டஃபடில் மலர்களில்
வைரங்கள் ஜொலிப்பதாய் இன்னமும் தூங்கும் மழைத்துளிகள்,.
வானவில்லின் கீழே
விளையாட வந்தனர் குழந்தைகள்.
கையோடு கைகோர்த்து
இதமாகச்சிரிக்கும் இளஞ்சூரியனின் கீழே...
பழுத்த கோதுமைக் கதிர்களாய் அசைந்தாடும் தலைமுடிகள்
சிவந்த கன்னக் கதுப்புகளுடன் சிறகு விரிக்கும் சின்னத் தேவதைகள்,
துள்ளித்துவளும் ஆட்டுக்குட்டிகளாய்
தேவைகள் ஏதுமற்ற திருப்தியுடன் விளையாடும்,
வசந்தகாலச் சூரியனின் கீழே.
அருகே நின்ற ஒரு குழந்தையிடம்
ஏனைய குழந்தைகள் கேட்டனர்.
" கதையொன்று சொல்லேன்?
ம்..... ஆ..உனது மண்ணில் கறுப்பின மக்களுக்கு
'அவர்கள்' இழைத்த கொடுமையின் கதையைச்சொல்லேன்.
அந்த விறுவிறுப்பான கதையை எங்களுக்குச் சொல்லேன்?"
அந்தக் குழந்தையின் முகம் இருண்டு போயிற்று.
சின்ன முகத்தில் ஜொலித்த பரவசம் தொலைந்து போயிற்று.
தீவிரமான தேடலில் கண்கள் படபடவென இடம்மாறின.
அங்கு யாருமே இருக்கவில்லை.
சலனமற்று உறைந்துபோன சாம்பல் நிற நிழல்கள்
மட்டுமே இருந்தன