கறுப்பு ஜூலை நினைவு நாள் - சிட்னி


வழமைபோன்று, கறுப்பு ஜூலை நினைவு நாள் நிகழ்வு, தமிழர் நினைவு நினைவுத்தூபியில் எதிர்வரும் 25-07-2020 சனிக்கிழமை மாலை 4 மணி தொடக்கம் 5 மணி வரை நடைபெறும்.
தற்போதைய COVID-19 நடைமுறைகளுக்கு அமைவாக 10 பேருக்கு அதிகமாக ஒன்றாக கூடாதவாறு, படிப்படியாக நினைவுத்தூபிக்கு சென்று நினைவேந்தலில் பங்குகொள்ளமுடியும்.
தனித்திருக்கும் நாட்களிலும் எம்முறவுகளின் நினைவுகளில் விழித்திருப்போம்!



வானவில்லின் கீழே - 'கிறிஸ் மகஸ்டா' என்ற சிம்பாப்வே நாட்டுக் கவிஞரின் கவிதை

.
மழைபெய்த ஈரம் மறையாத பொழுதொன்றில்
அல்பேட் பூங்காவின் டஃபடில் மலர்களில்
வைரங்கள் ஜொலிப்பதாய் இன்னமும் தூங்கும் மழைத்துளிகள்,.

வானவில்லின் கீழே
விளையாட வந்தனர் குழந்தைகள்.
கையோடு கைகோர்த்து
இதமாகச்சிரிக்கும் இளஞ்சூரியனின் கீழே...
பழுத்த கோதுமைக் கதிர்களாய் அசைந்தாடும் தலைமுடிகள்

சிவந்த கன்னக் கதுப்புகளுடன் சிறகு விரிக்கும் சின்னத் தேவதைகள்,
துள்ளித்துவளும் ஆட்டுக்குட்டிகளாய்
தேவைகள் ஏதுமற்ற திருப்தியுடன் விளையாடும்,
வசந்தகாலச் சூரியனின் கீழே.

அருகே நின்ற ஒரு குழந்தையிடம்
ஏனைய குழந்தைகள் கேட்டனர்.
" கதையொன்று சொல்லேன்?
ம்..... ஆ..உனது மண்ணில் கறுப்பின மக்களுக்கு
'அவர்கள்' இழைத்த கொடுமையின் கதையைச்சொல்லேன்.
அந்த விறுவிறுப்பான கதையை எங்களுக்குச் சொல்லேன்?"

அந்தக் குழந்தையின் முகம் இருண்டு போயிற்று.
சின்ன முகத்தில் ஜொலித்த பரவசம் தொலைந்து போயிற்று.
தீவிரமான தேடலில் கண்கள் படபடவென இடம்மாறின.
அங்கு யாருமே இருக்கவில்லை.
சலனமற்று உறைந்துபோன சாம்பல் நிற நிழல்கள்
மட்டுமே இருந்தன

ஆடிப்பிறப்பு பாடலும் நனவிடை தோய்தலும் - கானா பிரபா


16/07/2020. இன்று ஆடிப்பிறப்பு தினமாகும்.
ஈழத்தவரின் வாழ்வியலில் ஆடிப்பிறப்பு மிக முக்கியமானதொரு பண்டிகை. இந்தத் தினத்தை நினைத்தால் “தங்கத்தாத்தா” நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் “ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தமானந்தம் தோழர்களே” பாடலும், “ஆடிக் கூழும்” நினைவில் மிதக்கும்.
இந்த நிலையில் ஒரு புதுமையானதொரு பகிர்வோடு வந்திருக்கிறோம். இந்தப் பகிர்வில் தாயார் அனுராதா பாக்யராஜா அவர்கள் “ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை” பாடலைப் பாட, கானா பிரபாவின் “ஆடிப்பிறப்பு நனவிடை தோய்தலையும்”, “ஆடிக்கூழ்” செய்முறையையும் மகள் சங்கீதா தினேஷ் பாக்யராஜா அவர்களும் பகிர்கிறார்கள்.
கலாபூஷணம் திருமதி அனுராதா பாக்யராஜா அவர்கள் சிறுகதை, நாடகம், ஆன்மிகக் கட்டுரைகள் என்று இலக்கிய உலகில் தடம் பதித்தவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலிக் கலைஞர், இலங்கை ரெலிகொம் நிறுவனத்தினர் நடத்திய “இலங்கை நாட்டுப் பாடல்” போட்டியில் பல்லாயிரக்கணக்கான போட்டியாளர்களில் முதலிடத்தில் வந்த பெருமைக்குரியவர்.
சங்கீதா தினேஷ் பாக்யராஜா இலங்கையின் தனியார் வானொலி யுகத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, தொகுப்பாளராக, நாடக நடிகையாகத் தனக்கென அடுத்த தலைமுறை வானொலி ரசிகர் வட்டத்தைச் சம்பாதித்தவர்.

எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் - 02 எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை ! ஈழத்து இலக்கிய உலகில் முதல் காலடித்தடம் !! முருகபூபதி


வாழ்க்கை பற்றிய ஏராளமான விளக்கங்களையும், தத்துவ போதனைகளையும் கவிதை, மற்றும் திரைப்படப் பாடல்களையும் கடந்து வந்துகொண்டிருக்கின்றோம்.
எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை என்பதுதான் ஒவ்வொருவருக்கும் கிட்டிய புத்திக்கொள்முதல். எனக்கும் அப்படித்தான்!
மல்லிகை ஜீவா, 1972 ஆம் ஆண்டு  பெப்ரவரி மாதம் வெளியிட்ட மல்லிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழுடன், எனக்கு மிகவும் நெருக்கமானவரானார்.
அந்த  இதழில் எமது இல்லத்தில் அக்காலப்பகுதியில்  இயங்கிக்கொண்டிருந்த வளர்மதி நூலகம் பற்றி நானும் ஒரு சிறிய கட்டுரை எழுதியிருந்தேன்.  நீர்கொழும்பூர் முத்துலிங்கம்,  தருமலிங்கம், சிவம், செல்வரத்தினம், மு. பஷீர் ஆகியோரும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியிருந்தனர்.
அதன் வெளியீட்டு  அரங்கினை நடத்துவதற்காக நீர்கொழும்பு
இந்து இளைஞர் மன்றத்தின் கட்டிடத்தை வாடகைக்கு கேட்டேன். அதன் ஆட்சிமன்றத்தினர் சாக்குப்போக்குச்சொல்லி தருவதற்கு மறுத்துவிட்டனர்.
ஜீவா, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்.  அவ்வேளையில் பதவியிலிருந்த ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் அமைந்த அரசில் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்திருந்தது.
இந்து இளைஞர் மன்றத்தின் ஆட்சிமன்றத்தில் முக்கிய  பொறுப்புகளில் இருந்தவர்கள் தமிழரசுக்கட்சியின் தீவிர ஆதரவாளர்கள்.
1965 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றியீட்டிய ஐக்கிய தேசியக்கட்சியுடன் அன்றைய அரசில் தமிழரசுக்கட்சியும் தமிழ்காங்கிரசும் இணைந்திருந்தபோது,  இதே  இந்து இளைஞர் மன்றம் அமைச்சர் மு. திருச்செல்வம், தந்தை எஸ். ஜே.வி. செல்வநாயகம், வி. தருமலிங்கம், ஈ.எம். வி. நாகநாதன் முதலானோரை கடற்கரை வீதியில்  ஶ்ரீமுத்துமாரியம்மன் தேவஸ்தானத்திலிருந்து மேளதாளம் , குடை , கொடி ஆலவட்டங்கள்,   மாலை மரியாதைகளுடன்  அழைத்துவந்து பாராட்டி விழாவெடுத்திருந்தது. நீர்கொழும்பு தொகுதியிலும் ஐ.தே.க. வேட்பாளர் குவின்டின் பெர்னாந்து அதிகப்படியான வாக்குகளினால் வெற்றியீட்டியிருந்தார்
அவ்வாறு  இரண்டு வர்க்கமும் இணைந்து அந்த மண்டபத்தில் பெருவிழா எடுத்தவர்கள், எமது ஈழத்து இலக்கியவாதி மல்லிகை ஜீவா யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிட்ட மல்லிகை நீர்கொழும்பு பிரதேச இலக்கிய சிறப்பிதழை தங்கள் மண்டபத்தில் வெளியிடுவதற்கு அனுமதி தரவில்லை!

ஆடிப்பூரம் உற்சவம் - சிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோயில் - ஆரம்பம் 15/07/2020 - தேர்த் திருவிழா- 24/07/2020





அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 23 – கொடுகொட்டி – சரவண பிரபு ராமமூர்த்தி


கொடுகொட்டி/கொடுங்கொட்டி – தோற்கருவி
அமைப்பு
இரு கருவிகள் இணைந்த தோலிசைக்கருவி கொடுகொட்டி.
அடியில் குறுகி, முகம் படர்ந்த இக்கருவிகள் இரண்டின் நடுப்புறமும் ஒன்றாக பிணைக்கப்பட்டிருக்கும். இடுப்பில் கட்டிக்கொண்டோ, கழுத்தில் மாட்டியபடியோ இசைப்பார்கள். மரச்சட்டிகளில் தோல் கொண்டு வார்த்து தயாரிக்கப்படும் கருவி இது. கனத்த பலா மரத்தை குடைந்து, சட்டி போன்ற உருவம் செய்து, மேலே ஆட்டுத்தோல் அல்லது மாட்டுத்தோல் கொண்டு வார்க்கப்படும். ஒன்று, தொப்பி. ‘தொம்... தொம்...’மென இசையெழுப்பும். மற்றொன்று வளந்தலை. இதில் ‘தா... தா...’வென ஒலி எழும்பும். ஒன்று பெரிதாகவும், மற்றொன்று சற்றே சிறிதாகவும் இருக்கும். தொப்பி மென்மையான தோலாலும், வளந்தலை கடினமான தோலாலும் வார்க்கப்படும். இக்கருவியின் வலந்தலையை புளியங்குச்சி கொண்டு இசைக்கிறார்கள். தடிமனற்ற புளியங்குச்சியை உடைத்து, தண்ணீரில் நன்கு ஊறவைத்து, ”உ” வடிவில் வளைத்து கட்டி, பின் நெருப்பில் வாட்டி வளைத்து  வலந்தலையில் வாசிக்கத் தகுந்ததாகிறது. இடந்தலைக்கு மூங்கில் பயன்படுதுவார்களாம்.

குறிப்பு
கிரிகிட்டி, கிடுகிட்டி, கிடிக்கட்டி, கொடுங்கொட்டி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது இக்கருவி. தமிழறிஞர் வீ.பா.கா.சுந்தரனார் அவர்கள் இக்கருவியானது தொன்மையாக ஒரு பகுதி மண்சட்டியாலும் மற்றொரு பகுதி உலோகத்தாலும் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். 10 அல்லது 12 அங்குலம் உயரமும் எட்டு அங்குல குறுக்களவும் உடைய மண்சட்டி இதை விட இரண்டு அங்குலம் அளவில் குறைந்த சிறிய உலோக சட்டி, இவைகளில் தோல் போர்த்தி, இரண்டையும் சேர்த்து இடுப்பில் கட்டிக் கொண்டு இசைப்பார்கள் என்று குறிப்பிடுகிறார். புதுச்சேரி மாநிலத்தில் சில இடங்களில் நாட்டார் இசைக் கலைஞர்கள் இக்கருவியை பண்டைய குறிப்புகளின்படி மீட்டுருவாக்கம் செய்து கச்சேரிகளில் பயன்படுத்தி வருகிறார்கள். புதுச்சேரியை சேர்ந்த திரு பிரபாகரன் அவர்கள் இவர்களில் குறிப்பிட தக்கவர்.  

தமிழர் பண்பாடு இரண்டாயிரம் ஆண்டுப் பயணம்


தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் முன்னெடுப்பில் “தமிழர் பண்பாடு இரண்டாயிரம் ஆண்டுப் பயணம்” என்ற கால வரைக்குள் அழைத்திருப்பவர் திரு ஜி பாலச்சந்திரன் ஐ ஏ எஸ் அவர்கள் வழங்கிய கருத்தரங்கம் நேயர் கேள்வி பதில்களோடு






பெண்களின் தார்மீகக் குரலாக ஒலித்த பத்மாசோமகாந்தன் ! ஈழத்து இலக்கிய உலகில் வலம்வந்த அயராத உழைப்பாளியை இழந்தோம் !! முருகபூபதி


ழத்து இலக்கிய வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பை வழங்கியவரும்,  தனது பள்ளிப்பருவத்திலிருந்தே இலக்கிய எழுத்தூழியத்தில்  ஈடுபட்டவருமான திருமதி பத்மா சோமகாந்தன்   கடந்த  15 ஆம் திகதி கொழும்பில் மறைந்தார். 
கொழும்பில்  தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் சுதந்திரன் பத்திரிகையை தொடக்கியபொழுது சிறுமியாக இருந்த பத்மா, 1954 இல், அந்தப்பத்திரிகை நடத்திய அகில இலங்கை சிறுகதைப்போட்டியில் முதல் பரிசுபெற்றவர். இவருடன் போட்டியிட்ட, இரண்டு முக்கிய படைப்பாளிகள், இரண்டாம், மூன்றாம் பரிசுகளைப்பெற்றார்கள்.


அவர்கள்தான் டானியல், டொமினிக்ஜீவா ஆகியோர்.

பத்மா எழுதி பரிசுபெற்ற சிறுகதை இரத்தபாசம்.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில், பிரம்மஶ்ரீ ஏரம்பக்குருக்கள், ஶ்ரீமதி அமிர்தம்மாள் தம்பதியரின் செல்வப்புதல்வியாக பிறந்த பத்மாவுக்கும் சில சமூகப்பின்னணிகள் இருந்திருக்கின்றன. பெரியதந்தையார் பிரம்ம ஶ்ரீ தி. சதாசிவம் தற்காலத்திலிருக்கும் கல்விப்பணிப்பாளர் தகுதிக்குரிய வித்தியாதரிசகர்.

அத்துடன் கல்விமான். யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட ஆரிய திராவிட பாஷா விருத்திச்சங்கத்தின் ஸ்தாபகர். தாய்மாமன், பிரம்மஶ்ரீ மு. சபாரத்தினம் அய்யர் அக்காலத்தில் வெளியான கவிகலாதீபம் என்ற பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தியவர்.
இலங்கையிலும் இந்தியாவிலும் இந்த அய்யர்மார் குடும்பங்களில் தோன்றி பிரபலமான பலரின் வாழ்வையும் பணிகளையும் சமுதாயக்கண்ணோட்டத்தில் ஆராயமுடியும். அந்த வரிசையில் மகாகவி பாரதி முதலிடம் வகிப்பார். கோயில் பூசகர்களாகியிருக்கவேண்டியவர்கள், படைப்பாளிகளாகவும் கல்விமான்களாகவும், மருத்துவர், பொறியிலாளராகவும் மாறுவதும் அவரவர் மனவெழுச்சிகளின் விளைவே.


பாடசாலையில் ஏழாம் வகுப்பு படிக்கும்போதே கதைகள் கட்டுரைகள் எழுதத்தொடங்கிய பத்மா, சுதந்திரன் சிறுகதைப்போட்டிக்கு புதுமைப்பிரியை என்ற புனைபெயரில்தான் இரத்தபாசம் என்ற சிறுகதையை எழுதி அனுப்பி முதல் பரிசைப்பெற்றுள்ளார்.

நான் பார்த்து ரசித்த திரைப்படம் மெய் - செ .பாஸ்கரன்

.

இந்தத் திரைப்படம் பற்றி பேசுவதாக இருந்தால் மருத்துவ உலகின் சில சிந்திக்க
வேண்டிய பக்கங்கள் என்று கூறிவிடலாம் . இலவச மருத்துவ முகாம் என்ற
பெயரில் தகவல்கள் திரட்டுவதும் அதன் பின்னால் நடக்கின்ற கூட்டுச் சதியும்
நெஞ்சை உறுத்துகிறது. இலவச மருத்துவ முகாம் என்பது மக்களுக்கு
கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்றால் அது இல்லை என்று கூறமுடியாது
ஆனால் அதன் பின்னால் இடம்பெறுகின்ற இப்படியான மோசடிகள்
நிறையவே இந்தியாவில் இருக்கின்றது. பண முதலைகள் மீண்டும் மீண்டும்
பணத்தை குவித்து கொள்வதற்காக மனிதாபிமானத்தை நீக்கிவிட்டு இப்படியான
பாதக செயல்களை செய்கின்றார்கள். கோடிக் கணக்கான பணத்தை
கொட்டி தனியார் நிறுவனங்களில் படித்து டாக்டராகி மீண்டும் அந்தப் பணத்தை
எப்படி திரும்ப பெறலாம் என பலர் பல தப்பான வழிகளை முன்னுடுப்பதும்
நாம் அறிந்ததே . இதைத்தான் இந்த திரைப்படம் சொல்ல முன் வருகின்றது.

நடிகர் நிக்கி சுந்தரம் அவரோடு ஐஸ்வர்யா ராஜேஷ் மிக யதார்த்தமாக
தங்களுடைய பாத்திரத்தை செய்திருக்கின்றார்கள். கிஷோர் பல படங்களில்
போலீஸ் வேடத்திலேயே வந்து கொண்டிருக்கிறார் இங்கும் அந்தப் போலீஸ்
மிடுக்கோடு வராமல் ஒரு போலீஸ் ஆய்வாளராக வந்தது மட்டுமல்ல
மனிதாபிமான செயல்பாட்டையும் மிக அழகாக தன்னுடைய
முகபாவத்தில் காட்டிச் செல்கின்றார். அதிக செலவில்லாமல் இந்த திரைப்படம்
எடுக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கின்றேன் காரணம் இதிலே பலர்
புதியவர்களாக காணப்படுகின்றார்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள்.
அதிலே படத்தொகுப்பாளர் எடிட்டிங் பிரீர்த்தி மோகன் மிக அருமையாக
அனைத்தையும் செய்திருக்கின்றார் என்று தான் கூற வேண்டும். அடுத்து
பேசப்பட வேண்டியவை ஒளிப்பதிவாளர் வி என் மோகன். சென்னையிலே
இப்படி ஒரு இடம் இருக்கின்றதா என்று ஆச்சரியப்பட வைக்கிறார் .
சென்னையினுடைய வீதிகள் எப்படி இருக்கின்றது என்பதையும் மிக
அருமையாக தன்னுடைய கமராவில் பதிவாக்கியிருக்கிறார். ஒரு முக்கியமான
ஒன்று இந்த திரைப்படத்தில் பார்க்கக்கூடியதாக இருந்தது இசையமைப்பாளர்கள்
அனில் ஜான்சன் பின்னணி இசையை பின்னி தள்ளுகிறார் அதேபோல்
பிருத்வி குமாரின் இசை பாடலுக்கு மெருகூட்டி மனதைத் தொட்டுச்
செல்கின்ற பாடல்களாக அமைந்து விடுகின்றது.

அத்தனையும் வாழ்வினுக்கு அர்த்தமாய் ஆக்கினரே ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ....மெல்பேண் .... அவுஸ்திரேலியா

          ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
          ஆனந்தம் ஆனந்தம் தோழர் களே 
           கூடிப்பனங் கட்டி   கூழும் குடிக்கலாம்
           கொழுக் கட்டை தின்னலாம் தோழர்களே 
           எனக்களிப்போடு கூடி நின்று மகிழ்ந்தோமே 
           கொழுக் கட்டை அவிப்பாரும் இல்லை
           கூழ்தன்னை நினைப் பாரும் இல்லை
            அக்கால மிப்போ அடிமனதில் எழுகிறதே  ! 

           படித்தோம் படித்தோம் பட்டமும் பெற்றோம்
           நாகரிக மெம்மை நன்றாகக் கெளவியது 
           நம்முடைய நற்பழக்கம் நாடோடி யாகியது 
           அன்னியரின் வாழ்க்கை யெமை அபகரிக்கலாயிற்று 
           வருடமெலாம் வளமாக்க வந்தமைந்த வெல்லாம் 
           வரலாற்றில் மட்டுமே பதிவாக வாயிருக்கு 
            அடிவேரும் இப்போது  வலிவிழக்க லாயிற்று 
            நினைவழியா நாட்கள்தான் நிற்கிறதே யிப்போது  ! 

            அக்கால நினைவெல்லாம் ஆனந்த மல்லவா
            வசதியில்லா நிலையினிலும் வாழ்ந்தோமே யின்பமாய்
            முற்றத்துத் தென்னை பின்வளவு பலாமரமும் 
            நினைத்தாலே இப்போதும் நெஞ்சமெலாம் கனக்கிறது 
            ஓடியோடி உழைக்கின்றோம் ஊரூராய்ச் செல்கின்றோம்
            தேடிவைத்த பலவற்றை தெரியாமல் தொலைத்துவிட்டோம்
            ஆடிவரும் பின்னாலே ஆவணியும் அடுத்துவரும்
            மாறிமாறி வந்தாலும் மனமெங்கோ தேடுதிப்போ ! 

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் – அங்கம் - 22 “ தளிரொன்று எழுங்கால் சருகொன்று உதிர்ந்தே கழியும் ! “


தமிழ் ஆராய்ச்சி சார்ந்த எந்தவொரு மாநாடுகளுக்கு நான் பேசுவதற்கு சென்றாலும், மருத்துவத்தமிழ் முன்னோடி கிறீன் பற்றி உரையாற்றுவது எனது வழக்கம்.
அவ்வாறு நான் சென்ற ஒரு நாடுதான் மொரிஷியஸ் தீவு.  இது ஆபிரிக்கா கண்டத்துக்கு அருகில் இருக்கும் அழகிய தீவு.
பூகோளத்தில் இதற்குரிய இடம் சிறிதாக இருந்தாலும் கீர்த்திமிக்க நாடு.  இங்கும்  தமிழர்கள் வாழ்ந்தார்கள் தமிழும்  வாழ்ந்தது.
இந்தத்தீவுக்கும் செல்வதற்கு எனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வாய்த்தது. இந்த நாட்டைப்பற்றி நீங்கள் மேலும் தகவல்களை அறிந்துகொள்வதற்கு இணையங்கள் தற்போது  உதவுகின்றன.
நான் பாப்புவா நியூகினியில் இருந்த காலப்பகுதியில், 1989 ஆம் ஆண்டு, மொரிஷியஸ் தீவிலிருந்து ஒரு அழைப்பு வந்தது.
அப்பொழுது நான், பாப்புவா நியூகினியில் கணித பாடத்துறையில் தலைமைப்பொறுப்பிலிருந்தேன்.
அந்த அழைப்பினை ஏற்று ,  “ ஆம்… நான் வருகிறேன்  “ எனத்தெரிவித்துவிட்டு, ஒரு கட்டுரை எழுதுவதற்கும் தயாரானேன்.
எனது பணியிலிருந்து இரண்டு வாரகாலம் விடுமுறை பெற்றுக்கொண்டு, அங்கே சென்றேன்.
அங்கு எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இலங்கைச் செய்திகள்


இணைப்பற்ற இதயத்துடிப்புமானி (stethoscope) ஜனாதிபதியிடம் கையளிப்பு

அமைச்சுப் பதவி எனும் எண்ணமோ கொள்கையோ TNAயிடம் இல்லை

24ஆவது கடற்படைத் தளபதியாக நிஷாந்த உலுகேதென்ன நியமனம்

நாட்டில் வேறெங்கும் இல்லாத தேர்தல் சட்ட மீறல்கள் வடக்கில் பதிவாகியுள்ளன

நான் பெற்றுக்காடுத்த சமாதானச் சூழலில் எனக்கெதிராகவே கொக்கரிக்கும் கோடீஸ்வரன்



இணைப்பற்ற இதயத்துடிப்புமானி (stethoscope) ஜனாதிபதியிடம் கையளிப்பு




'கொணர்க வருக': -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-



லகை நேசிக்கும் ஒப்பற்ற மாமுனி விசுவாமித்திரர்,
தன்னிகரற்ற தலைவனாம் தசரதனைத் தேடி அயோத்தி வருகிறார்.
புதிய பிரம்மனும், புதிய உலகமும்,
புதிய உயிர்களும், புதிய தேவரும்,
படைப்பேன் என்று முன்பு எழுந்த பரமயோகி அவர்.
மடங்கல் போல் மொய்ம்பினான் முன்னர் மன்னுயிர்
அடங்கலும் உலகும் வேறமைத்து தேவரொடு
இடம் கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டு எனாத்
தொடங்கிய துனி உறு முனிவன் தோன்றினான். (கம்ப. பால: 317)
🎆 🎆 🎆
வந்த மாமுனியை வணங்கி வாழ்த்தி,
அடிகளின் அடிகளில்  அர்ச்சனை செய்து,
யான் வலம் செய்து வணங்க எளிவந்த இச்செயல்,
என் குலம் செய்த தவம் எனக் கூறி மகிழ்கிறான் தசரதன்.
நிலம் செய் தவம் என்று உணரின் அன்று நெடியோய் என்
நலம் செய் வினை உண்டு எனினும் அன்று நகர் நீ யான்
வலம் செய்து வணங்க எளிவந்த இது முந்து என்
குலம் செய் தவம் என்று இனிது கூற முனி கூறும்.  (கம்ப. பால: 320)
🎆 🎆 🎆

'பத்துத்தலை படும் பாடு' - பகுதி 1: -பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன்-




🌻 🌻 🌻
ராமர் கோயில் - பாபர் மசூதி வழக்குத் தீர்ப்பு வந்து, இராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டலாமென, ஒரு படியாய் இந்தியா அமைதியடையத் தொடங்குகையில், புதிய பிரச்சினையொன்று அவதாரம் எடுத்திருக்கிறது.
இந்த முறை நேபாளத்திலிருந்து,
அந்நாட்டு பிரதமர், 'இந்தியாவிலிருப்பது அல்ல அயோத்தி, உண்மையில், நேபாளத்தில் இருப்பதுதான் அயோத்தி, இராமன் நம்மவன்' என்பதாகக் கருத்துக்கூற, அக்கருத்து இந்தியாவை அதிர வைத்திருக்கிறது.

இந்தியத் தலைவர்கள், அறிஞர்கள் பலரும் நேபாள பிரதமரின் கருத்தைக் கண்டித்த வண்ணம் இருக்கின்றனர். மூத்த தலைவர் ஒருவர், 'நேபாளப் பிரதமருக்கு மனநலம் சரியில்லை, அவருக்கு வைத்தியம் பார்க்க வேண்டும்' என்கிறார்.

இது எவ்வளவோ பரவாயில்லை, நம் நாட்டுக் கூத்துகளோடு ஒப்பிடும்போது.
அங்கே, நடையில் நின்றுயர் நாயகனான இராமன், எங்களவன், அவன் பிறந்த இடம் எங்களது என்று போட்டி.
இது வழமையே. 
சாதனை செய்த ஒருவனை, தங்களவனாகக் காட்டும் விருப்பு ஒவ்வொரு இனத்துக்கும் - ஒவ்வொரு தேசத்துக்கும் இருப்பது இயல்புதான். 
🌻 🌻 🌻 

மழைக்காற்று ( தொடர்கதை ) - அங்கம் 45 இன்று வெளிவரவில்லை முருகபூபதி

.


தொடராக வெளிவரும் மழைக் காற்று இன்று வெளிவரவில்லை என்பதை அறியத்  தருகிறோம் . எழுத்தாள நண்பர் திரு முருகபூபதி அவர்கள் சுகயீனமாக மருத்துவ மனை சென்றுள்ளதால் இவ்வாரம் வெளிவரவில்லை.
விரைவில் அவர் நலம் பெறவேண்டும். 

உலகச் செய்திகள்


உலகளவில் கொரோனா பேரழிவை ஏற்படுத்தும் நிலை

தென்னாபிரிக்க தேவாலயத்தில் தாக்குதல்: ஐவர் உயிரிழப்பு

சீனாவில் வரலாறு காணாத வெள்ளம்

திடீர் மூச்சுத் திணறல்; ஐஸ்வர்யா ராய் வைத்தியசாலையில் அனுமதி

அண்டை நாடுகளுக்கான அமெரிக்க எல்லைகள் பூட்டு



உலகளவில் கொரோனா பேரழிவை ஏற்படுத்தும் நிலை



உலக சுகாதார அமைப்பின் தலைவர் கவலை
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மிக மிக மோசமான நிலையை எட்ட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கவலை தெரிவித்துள்ளார். 
ஜெனீவாவில் பேசிய அவர், கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல நாடுகள் தவறான திசையில் பயணித்து கொண்டுள்ளதாக எச்சரித்தார். உலக மக்களின் முதல் எதிரியாக கொரோனா வைரஸ் உருவெடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடுகள் விரிவான யுக்திகளை கையாளாவிட்டால், இன்னும் சில காலத்திற்கு இயல்பு நிலை திரும்பப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
அமெரிக்காவில் அதிக அளவு தொற்றுகள் பதிவாவதையும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், 'சுகாதாரம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க தவறினால் கொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும். பரவுதல் மற்றும் உயிர்களைக் காப்பாற்றுவதை மையமாகக் கொண்ட ஒரு விரிவான திட்டத்தை அரசாங்கங்கள் வகுக்க வேண்டும். மக்கள் சமூக இடைவெளி , கை கழுவுதல், முகக்கவசம் அணிவது, இருமல் மற்றும் தனிமைபடுத்துதல் போன்ற அடிப்படை பொது சுகாதாரக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை என்றால் இந்த நோய் நம்மை மோசமான நிலைக்கு இழுத்து செல்லுமென தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கொரோனா வைரஸின் பரவல் தொடக்கம் குறித்து ஆராய சீன சென்றிருக்கும் தங்களது குழு, பணியை தொடங்கும் முன்பு தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக உலக சுகாதார நிறுவன அதிகாரி மைக் ரியான் தெரிவித்துள்ளார்.    நன்றி தினகரன்    

பசுமை நிறைந்த நினைவுகளில் ஆடி அமாவாசை விஜிராமச்சந்திரன் - மெல்பன்


ஆடி அமாவாசை இன்று.  மனதிலே அம்மாவின் நினைவுகள் சுனாமி போல எம்பிக் குதிக்கிறது.  எமது அம்மா இந்திரா கோபாலகிருஷ்ணன் இன்று  இல்லாத நினைவு கனமானது.  எங்களுக்கு ஆடி அமாவாசை மிகப் பெரிய நோன்பு.
எங்கள் வீட்டில் நான் உட்பட நான்கு பெண்கள். இந்த நோன்பு எங்களுக்கு மிகவும் விசேஷம்.  ஏனென்றால், பெண் குழந்தைகள் தங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல கணவன் அமைய வேண்டி, இறைவனை பிரார்த்தனை செய்யும் நோன்பு.
வருடத்தில் முதல் நோன்பு. இதைத் தொடர்ந்து வரிசையாக பண்டிகைகள்தான். ஆவணி அவிட்டம், வரலக்ஷ்மி நோன்பு, நாக சதுர்த்தி, நாக பஞ்சமி, கோகுலாஷ்டமி என வாரம் ஒன்று வந்து கொண்டே இருக்கும்.
ஆடி  அமாவாசைக்கு எங்களுக்கு புதுத்துணி கிடைக்கும். சீருடைப் போல எல்லோருக்கும் ஒரே டிசைனில் சீட்டிப் பாவாடை தான்.
 ஆனாலும் நாங்கள் நால்வரும் மகிழ்வின் உச்சத்தில் இருப்போம்.  இன்று போல் எப்போது வேண்டுமானாலும் ஷாப்பிங் மால் போய் துணி மணிகள் வாங்கிய காலம் அல்ல அது. வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தான் புதுத்துணி. ஆடி துவங்கினால் நிறைய பாயசம் சாப்பிடலாம். சில அபூர்வ பட்சணங்களும் கிடைக்கும்.
அப்பாவிற்கு ரயில்வேயில் உத்தியோகம்.  ஒரு நாளைக்கு ஒரு வண்டி அல்லது இரண்டு  வண்டிகள் மட்டுமே நிற்கும் சிறிய ஸ்டேஷன்களில் ஸ்டேஷன் மாஸ்டர் வேலை. மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை வீடு வருவார். என்ன நாள், கிழமை எதுவும் அவருக்குத் தெரியாது. உத்தியோகம் புருஷ லக்ஷணம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அப்பா இருந்தார். 
வீட்டிற்கு வந்தாலும் தொடர்ந்து இரவு பகலாக வேலை செய்த களைப்பில் தூங்குவார். அந்த நாட்களில் நாங்கள் எல்லாம் ரகசிய குரலில் தான் பேசிக்கொள்வோம். அம்மா தான் எல்லா குடும்பப் பொறுப்புகளும் சுமந்தாள். நடுத்தர வர்க்கம். சிறிய வாடகை வீடு. வேலைக்கு ஆள் கிடையாது. கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்க வேண்டும்.  நான்கு குழந்தைகள். நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம் அம்மாவின் வேலை பளுவை.

பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 9 - தேடிவந்த மாப்பிள்ளை- சுந்தரதாஸ்

.

வீர பாண்டிய கட்டபொம்மன் கப்பலோட்டிய தமிழன் கர்ணன் போன்ற வரலாற்று படங்களை பிரம்மாண்டமாக தயாரித்து இயக்கிய பெருமைக்குரியவர் பிஆர் பந்துலு. சிவாஜி நடித்த படங்களையே தயாரித்த இவர் பின்னால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் எம்ஜிஆரை போட்டு படங்களை உருவாக்கி வெற்றி கண்டார். அந்த வரிசையில் எம்ஜிஆர் நடிப்பில் பந்துலு தயாரித்து டைரக்ட் செய்த இறுதிப் படம்தான் தேடிவந்த மாப்பிள்ளை.

எம்ஜிஆர் நடிப்பில் இவர் உருவாக்கிய முதல் படமான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அவருக்கு ஜோடியாக முதல் தடவையாக ஜெயலலிதாவை அறிமுகப்படுத்திய பந்துலு இந்த படத்திலும் அவர்கள் இருவரையும் ஜோடியாக நடிக்க வைத்தார். இவர்களுடன் பந்துலுவின் மனைவி எம் வி ராஜம்மா அசோகன் சுந்தரராஜன் ஜோதிலட்சுமி சோ ஆகியோரும் நடித்தனர். படத்தின் கதை எம்ஜிஆருக்கு ஏற்றாற்போல் அமைக்கப்பட்டிருந்தது. ஆகவே படம் முழுவதும் உற்சாகத்துடனேயே எம்ஜிஆர் காட்சியளித்தார்.

தன் தந்தையை கொலை செய்து சொத்துக்களை அபகரித்தவனை பழிதீர்க்கப் புறப்படும் கதாநாயகன், அவனுக்கு உதவும் நண்பன், எதிரியின் மகளையே காதலிக்க வேண்டிய நிலைமை, இடையில் வில்லனுடைய சதித்திட்டங்கள் என்று அமைந்த கதையை ரசிக்கும்படியாக எம் ஜி ஆர் நடிப்பில் டைரக்ட் செய்திருந்தார் பந்துலு.


புகலிடத் தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம் - அங்கம் -04 பயண இலக்கியத்திலிருந்து பத்தி இலக்கியம் வரையில்


( மதுரை  உலகத் தமிழ்ச்சங்கமும் அவுஸ்திரேலியத் தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து நடத்திய தொடர் ஆய்வரங்கில்,  மெல்பனிலிருந்து காணொளியூடாக சமர்ப்பிக்கப்பட்ட உரை )
                                                            முருகபூபதி

நாம் வாழும் அவுஸ்திரேலியா பயண இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ளதையும் நாம் கவனித்தல் வேண்டும். பல வருடங்களுக்கு முன்னர்  தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்து சென்றிருக்கும் இதயம்பேசுகிறது மணியன் ஆஸ்திரேலியப் பயணக்கதையை எழுதியவர்.  ஆனந்தவிகடனில் துணை ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் பல  நாடுகளுக்கும் சென்றுவந்திருக்கும் அவர், இதயம்பேசுகிறது என்ற தலைப்பில்தான் அந்தத் தொடரை எழுதிவந்தார்.
அதனால் அவரை வாசகர்கள்  இதயம்பேசுகிறது மணியன் என்றே அழைத்தனர். அவருடைய அந்த பயண இலக்கியத் தொடருக்கு வாசகரிடம் நல்ல வரவேற்பிருந்தமையால், பின்னாளில் அவர் ஆனந்தவிகடனிலிருந்து வெளியேறி இதயம் பேசுகிறது என்ற பெயரிலேயே வார இதழும் நடத்தியவர் என்பதை அறிவீர்கள்.
அவர் சிங்கப்பூர் மார்க்கமாக வந்து எழுதிய தொடர்தான் ஆஸ்திரேலிய – சிங்கப்பூர் பயண இலக்கியம்.
உங்களில் பலருக்கும் நன்கு தெரிந்தவர்  தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் தி. ஜானகிராமன்.  இவருடைய நாவல்கள், சிறுகதைகள் தற்போதும் இலக்கிய உலகில் பேசுபொருளாக விளங்குகின்றன. இவருடைய கதைகள் நாலுவேலி நிலம், மோகமுள் என்பன திரைப்படங்களாகியுள்ளன.
இவர் எழுதிய  புகழ்பெற்ற அம்மா வந்தாள்  நாவல், Appu’s Mother  என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு,  குஷ்வந்த் சிங் ஆசிரியராக பணியாற்றிய Illustrated Weekly  என்ற இதழிலும் வெளியானது.
இவர் தமது ஜப்பானிய பயணம் தொடர்பாக உதயசூரியன், சோவியத் பயணம் தொடர்பாக கருங்கடலும் கலைக்கடலும், தென்னிந்தியாவில் தற்போதும் பிரச்சினைக்குரியதாக விளங்கும் காவிரி நதி பற்றி சிட்டியுடன் இணைந்து நடந்தாய் வாழி காவேரி ஆகியனவற்றை பயண இலக்கிய வரிசையில் வரவாக்கியிருப்பவர்.
அவருடைய நூற்றாண்டு காலம்  தற்போது  தொடங்கியிருக்கிறது.

புதன் போற்றுதும் ( கன்பரா யோகன்)


ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதிகாரம் மத சார்புத்தன்மை
இல்லாத இலக்கியம் என்று சொல்லப்படுகிறது.
இறைவணக்கம் என்று வழமையான ஆரம்பம் இல்லாமல் இயற்கையை வாழ்த்தும் பாடல் முதலில் வருகிறது.
திங்களைப் போற்றுதும்  என்றும்  ஞாயிறு போற்றுதும் என்றும் தொடங்கும் கவிதை வரிகளுடன் சிலப்பதிகாரம் ஆரம்பிக்கிறது.  நிலவையும் , சூரியனையும் போற்றி பிறகு மழையையும் மறந்து விடாமல் வாழ்த்தி விட்டுத்தான்  சிலம்பின் கதையை இளங்கோவடிகள் சொல்லத் தொடங்குகிறார்.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்று இவ்
அங்கண் உலகளித்த லான் 


ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல்
மேல்நின்று தான்சுரத்த லான்
                                 (சிலப்பதிகாரம்:1: 1-9)

               (இளங்கோவடிகள்)

Toronto பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை முயற்சி


கனடாவில் இன்று மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர் வாழும் சூழலில் Toronto பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்கும் வாய்ப்பைத் தேடி வந்து வழங்கியிருக்கிறார்கள் பல்கலைகழகத்தார். 

இந்த மாதிரியானதொரு வாய்ப்புக் கிடைக்க பல்லாண்டுகளுக்கு முன்னர் முயற்சி எடுத்தும் பலனளிக்காத சூழலில் இப்போது ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று நிறுவப்பட்ட சூழலில் அந்த வெற்றிகரமான முயற்சியைக் கண்டு Toronto பல்கலைக்கழக இயக்குநர்கள் தமிழ் மக்களிடம் தமிழ் இருக்கை அமைப்பதற்கான சம்மதத்தை வழங்கி வரவேற்றிருக்கிறார்கள்.

ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ எப்படித் தன்னார்வலர்கள் மில்லியனில் இருந்து உண்டியல் கணக்கு வரை உலகெங்குமிருந்தும் அள்ளிக் கொடுத்து ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களை நிரப்பி நிறுவினார்களோ அது போன்றதொரு இன்னொரு முன்னெடுப்பு இது. இம்முறை இந்தத் தமிழ் இருக்கைக்கான வைப்பு நிதியாக மூன்று மில்லியன் டொலர்கள் தேவை. இதுவரை 1.3 மில்லியன் டொலர்கள் திரட்டப்பட்டுள்ளன.
Toronto பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை இணையப்பக்கம்