“
ஒரு புறம் வேடன், மறுபுறம் நாகம், இரண்டுக்கும்
நடுவே அழகிய கலைமான் “ என்ற திரைப்படப்பாடலைக் கேட்டிருப்பீர்கள்.
சமகாலத்தில் இலங்கை நிலைவரங்களைப் பார்க்கும்போது இந்தப்பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
கொவிட் பெருந்தொற்று முற்றாக
நீங்காத நிலையில் அதன் திரிபடைந்த ஒமிக்ரோன்
பரவியிருக்கும் சூழலில், எரிபொருள்
தட்டுப்பாடு, விலைவாசி ஏற்றம், கேஸ் சிலிண்டர் வெடிப்புகள், வெதுப்பகங்கள் மூடப்படும்
சூழல்… என பல்வேறு நெருக்கடிகளுக்கு மக்கள் முகம் கொடுத்துவருகின்றனர். தினமும் மின்வெட்டும் மக்களை சிக்கலுக்குள்ளாக்கியிருக்கிறது.
அந்த அழகிய கலைமானுக்குத்தான்
இரண்டு புறத்திலிருந்தும்
ஆபத்து, ஆனால், ராஜபக்ஷ
குடும்பத்தினரை பல எதிர்பார்ப்புகளுடன் பதவியில் அமர்த்திய அப்பாவி மக்களுக்கு பல வழிகளிலும் துயரமும் நெருக்கடிகளும் தொடருகின்றது.
முன்னரும், பின்னரும் பதவிக்கு
வந்த ஆட்சியாளர்களின் தீர்க்கதரிசனமற்ற பல செயற்பாடுகளினால், இன்று இலங்கை தேசத்திற்கு
இத்தகைய சோதனை வந்துள்ளது.
கொவிட் பெருந்தொற்றை காரணம்
காண்பித்து காலத்தை கடத்திய ஆட்சியாளர்களுக்கு, சமகாலத்தில் தோன்றியிருக்கும் ரஷ்ய – உக்ரேய்ன் மோதல்
மற்றும் ஒரு காரணத்தை கூறுவதற்கு வழிகோலியிருக்கிறது.
கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக
பதவியேற்றபின்னர் எத்தனை தடவை அமைச்சரவையில் மாற்றங்கள் நடந்துவிட்டன…?
ஒரு நாட்டின் பொருளாதார
அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் நிதியமைச்சரின் வகிபாகம் மிகவும் முக்கியமானது.
அதற்காக முன்பிருந்த நிதியமைச்சரை
மாற்றிவிட்டு, அமெரிக்க குடியுரிமையுடனிருந்த
தமது சகோதரரை அழைத்தார்கள் அண்ணன் பிரதமரும், தம்பி ஜனாதிபதியும்.
அவருக்காக தமது கட்சியைச்சேர்ந்த
மக்களால் தெரிவான ஒரு எம்.பி. யை வீட்டுக்கு
அனுப்பிவிட்டு, தேசியப்பட்டியல் ஊடாகவே அவருக்கு
நாடாளுமன்றில் அரியாசனம் வழங்கி, அவரது வாழ்வில் மீண்டும் அரசியல் விளக்கை ஏற்றினார்கள்.
ஆனால், வந்திருப்பவரோ வீதிவிளக்குகளை
அணையுங்கள் என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்.
2009 ஆம் ஆண்டின்பின்னர், நடந்த நாடாளுமன்ற மற்றும் அதிபர் தேர்தல்களில் தமிழ்
மக்களில் பெரும்பான்மையானவர்கள் தமக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பதை நன்கு தெரிந்து
வைத்திருந்தவர்கள்தான் ராஜபக்ஷ குடும்பத்தினர்.
அதனால், சிங்கள பௌத்த பெரும்பான்மையினரின் வாக்குகளை சேகரிப்பதில் மாத்திரமே
குறியாகவிருந்து பதவிக்கு வந்தவர்கள்.
இறுதியாக 2019 இல் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபாயவை எவ்வாறாயினும் வெற்றிபெறவைக்கவேண்டும்
என்பதற்காக வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் தீவிர பிரசாரங்களை முன்னெடுத்தவர்கள்தான்
உதய கம்மன் பிலவும், விமல் வீரவன்சவும்.
விமல், மகிந்த ராஜபக்ஷவின் செல்லப்பிள்ளையாக, 2010 இற்கு முன்னரும் பின்னரும் அலரிமாளிகையில் வலம் வந்தவர்தான்.