தேர்ந்திடு நல்லவை வாழ்க்கையில் ! -

 .

 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண்  - அவுஸ்திரேலியா 



பனி உருகினால் நீராகும்
பகை பெருகினால் அழிவாகும்
மனம் குறுகினால் பகையாகும்
குணம் சிறந்திடில்  உயர்வாகும்

பணம் பெருகினால் திமிராகும்
தனம் வழங்கினால் மிடிபோகும்
குறை நிறைந்திடில் இருளாகும்
தரை குளிர்ந்திடில் ஒளியாகும்

உயிர் வதைத்திடல் இழிவாகும்
ஊழல் களைந்திடல் சிறப்பாகும்
எழில் குலைத்திடல் பழியாகும்
பழி அழித்திடல் தெளிவாகும்

நீதியை மிதிப்பது முறையல்ல
நேர்மையை இழப்பது முறையல்ல
தோல்வியை தொடுவது முறையல்ல
துவளா திருப்பதே முறையாகும்

கற்றிடல் ஒதுக்குதல் சீரல்ல
நற்செயல் வெறுப்பது நன்றல்ல
கற்பவை கசடறக் கற்றிடு
கற்றதை வாழ்கையாய் ஆக்கிடு 

வேதனை தருவதை விட்டிடு
விருப்புடன் நல்லவை செய்திடு
போதனை மனத்தினில் இருத்திடு
சாதனை ஆக்கிடு வாழ்வினை

அறமதை அனைத்திலும் பார்த்திடு
அகமதில் ஒழுக்கத்தை இருத்திடு
திறமையாய் செயற்பட நினைத்திடு
தேர்ந்திடு நல்லவை வாழ்க்கையில் 

இறையதை மறவா இருந்திடு
பொறையுடன் யாவையும் செய்திடு
கறையினை கண்டதும் ஒதுங்கிடு
கடவுளைத் துணையென நம்பிடு 

சிட்னியில் அப்துல் ஹமீத் அவர்களின் நூல் அறிமுக விழா - செ.பாஸ்கரன்

 .

"வான் அலைகளில் ஒரு வழிப்போக்கன்" என்ற பி ஹெச் அப்துல் ஹமீத் அவர்களின் நூல் அறிமுக விழா சிட்னியில் 17 09 2023, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு ஓபன் சிவிக் சென்டர் மண்டபத்தில் இடம் பெற்றது. உலக அறிவிப்பாளராக பரிணமித்துக் கொண்டிருக்கும் திரு பி ஹெச் அப்துல் ஹமீத் அவர்களுடைய நூலை அறிமுகப்படுத்துவதற்காக டாக்டர் கேதீஸ்வரன், டாக்டர் நளாயினி, திரு . கதிர், திரு விந்தன் ஆகியோர் இன்னும் பலருடன் இணைந்து ஒரு குழுவாக இந்த நிகழ்வை சிட்னியிலே ஏற்பாடு செய்திருந்தார்கள்.

விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார் மறைந்த வானொலியாளர் திரு சுந்தா சுந்தரலிங்கம் அவர்களின் மருமகனும், SBS வானொலியின் அறிவிப்பாளருமான திரு சஞ்சயன் குலசேகரம் அவர்கள். நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார் டாக்டர் கேதீஸ் அவர்கள் அதனைத் தொடர்ந்து நீண்ட காலம் வானொலியில் பணியாற்றிய திரு அப்துல் ஹமீத் அவர்களை நீண்ட காலம் அறிந்தவரும் மெல்பனிலே வசித்து வருபவருமான எழுத்தாளர் முருக பூபதி அவர்கள் இந்த நூலைப் பற்றிய அறிமுகத்தை மிகச் சிறப்பாக செய்தார்.

அப்துல் ஹமீத்அவர்கள் பற்றி, அவர்களுடைய நடவடிக்கைகள், சிறு வயதிலேயே அவர் செய்த விடையங்கள், வளர்ந்த பின் பணியாற்றும் போது செய்து கொண்ட விடயங்கள், நூலிலே பதிந்துள்ள விடயங்கள் என்று மிக அழகாக அந்த அறிமுக உரையை ஆற்றி இருந்தார் எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள்.

வாழ்த்துரையை வழங்க வந்தார் இன்பத் தமிழ் ஒலி நிறுவனரும் அறிவிப்பாளருமான திரு பாலசிங்கம் பிரபாகரன் அவர்கள். அவருக்கே உரித்தான பாணியில் நகைச்சுவையாகவும் ரசிக்கும் படியாகவும் அந்த வாழ்த்துரையை வழங்கி இருந்தார். அப்துல் ஹமீத்அவர்களின் பொறுமை, தன்னடக்கம் என்பவற்றை குறிப்பிட்டு வாழ்த்தினார்.


அவுஸ்திரேலியாவில் தாமரைச்செல்விக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - லெ .முருகபூபதி

. அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழாவில் படைப்பிலக்கியவாதி தாமரைச்செல்விக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது





அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்மாதம் 10 ஆம் திகதி, சிட்னியில் நடத்திய 23 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் , படைப்பிலக்கியவாதி தாமரைச்செல்வியின் ஐம்பது ஆண்டுகால இலக்கியச்சேவையை பாராட்டி வழங்கப்பட்ட சாதனையாளர் விருது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட பாராட்டுரை. 

 இவ்வுரையை சங்கத்தின் நிறுவன உறுப்பினரும் தற்போதைய துணை நிதிச்செயலாளருமான எழுத்தாளர் முருகபூபதி நிகழ்த்தினார். 

சங்கத்தின் உறுப்பினர் சட்டத்தரணி கலாநிதி ( திருமதி ) சந்திரிக்கா சுப்பிரமணியனின் தலைமையில் நடந்த எழுத்தாளர் விழாவின் முதல் அமர்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் கம்பர்லாந்து மாநகர மேயர் லிஸா லேக் அவர்கள் தாமரைச்செல்விக்கான விருதினை வழங்கினார்.

 திருமதி. ரதிதேவி கந்தசாமி என்ற இயற்பெரைக்கொண்டிருப்பவரும், அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து மாநிலத்தில் தற்போது வதிபவருமான படைப்பிலக்கியவாதி , நீண்ட காலமாக தாமரைச்செல்வி என்னும் புனைபெயரில் படைப்பிலக்கிய பிரதிகளை எழுதிவருகின்றார்.

 அங்கயற்கண்ணி, கானா மணிவண்ணன், வெண்ணிலா சூரியகுமாரன், இந்துமதி முதலான புனைபெயர்களுக்கும் இவர் சொந்தக்காரர். 

 வட இலங்கையில் வன்னி பெருநிலப்பரப்பில் பரந்தன் – குமரபுரத்தில் சுப்பிரமணியம் – இராசம்மா தம்பதியரின் செல்வப்புதல்வியான தாமரைச்செல்வி, சின்னையா கந்தசாமி அவர்களை வாழ்க்கைத்துணைவராக பெற்றபின்னரும், தொடர்ந்து இலக்கியத்துறையில் ஈடுபட்டுவந்தவர். 

B H Abdul Hameed interview - by c paskaran





வானலைகளில் ஒரு வழிப்போக்கன் ✍️B.H.அப்துல் ஹமீத் நூல் நயப்பு 📚 கானா பிரபா

.


“உலகத் தமிழ் ஒலிபரப்பாளர்” என்ற அடையாளத்துக்குச் சர்வ இலட்சணங்களும் பொருந்தியவர் யார் என்ற கேள்விக்கு உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் தமிழரும் ஒரே ஆளுமையை அடையாளம் காட்டுவர். அது எங்கள் பேரபிமானத்துக்குரிய “எல்லோருக்கும் பொதுவான” B.H.அப்துல்ஹமீத் அவர்கள்.

 நாம் சந்திக்கும் “பத்துத்” தமிழகத்தவரில் “பத்துப்பேராவது” இரண்டு பேரைப் பற்றிப் பேச்செடுப்பார்கள் ஒருவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம்இன்னொருவர் தமிழ் தன் நாவில் சிம்மாசனம் இட்டு வீற்றிருக்கும் பி.ஹெச்.அப்துல் ஹமீத் அவர்கள்.

 

தன் அரை நூற்றாண்டு வானொலி வாழ்வியலைப் பதிவாக்கிய “வானலைகளில் ஒரு வழிப்போக்கன்” நூலை எடுத்து விரித்தவுடனேயே அந்த வழிப்போக்கனோடு நாமும் பயணிக்க ஆரம்பிக்கிறோம்.

 

ஒரு குழந்தை தனக்குப் பிடித்த உலகத்தில் இறக்கி விட்ட பின்னர் அங்கே எல்லாவற்றையும் அளைந்துதொட்டுப் பார்த்துப் பூரித்து நெஞ்சில் நிறைத்து வைப்பது போல இந்த “வானலைப் பேராசைக்காரரின்” அனுபவங்கள் அமைந்திருக்கின்றன.

அது தன் எல்லை தாண்டி வானொலியைக் கண்டு பிடித்தவரின் தேசம் சென்று “மார்க்கோனியின் ஒலிபரப்புக் கலையகம் சென்று பார்த்த அனுபவங்களோடு தான் தொடங்க வேண்டும் என்று அவரின் மூளைக்குத் “தந்தி” அனுப்பியிருக்கிறது போல.

 

இன்று உலகத் தமிழ் வானொலிகள் பல்கிப் பெருகி விட்ட சூழலில் இலங்கை வானொலி பேரதிஷ்டம் செய்ததென்று தான் சொல்ல வேண்டும். கடல் கடந்து தமிழ் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட இலங்கை வானொலியின் ஆளுமைகள், கலைஞர்கள் படைத்த நூல்கள் வெறுமனே தன் வரலாற்றுச் செய்திகளாக ( மன ஓசை – சுந்தா சுந்தரலிங்கம்ஒரு சருகுக்குள்ளே கசியும் ஈரங்கள் – ஜோர்ஜ் சந்திரசேகரன்காற்று வெளியினிலே – அப்துல் ஜப்பார்)  மட்டுமல்லாமல், வானொலி நாடகச் சுவடிகள் (தணியாத தாகம் – சில்லையூர் செல்வராசன்லண்டன் கந்தையா – செ.சண்முகநாதன் (சானா) முகத்தார் வீட்டுப் பொங்கல் – எஸ்.ஜேசுரத்தினம் )  (வானொலி நாடகங்கள்வானொலி நாடகம் எழுதுவது எப்படி போன்ற படைப்புகளோடு அராலியூர் நா.சுந்தரம்பிள்ளை எழுதிய நூல்கள்இலங்கை வானொலியின் தமிழ் நாடக வரலாறு – மறைமுதல்வன் ஜி.பி.வேதநாயகம்)

தமிழகம் உட்பட இலங்கை வானொலியை நேசித்த நேயர் நெஞ்சங்களின் நனவிடை தோய்தல்களின் தொகுப்பு (பன்முகப் பார்வையில் இலங்கை வானொலிஒலிபரப்பாளர்களின் நினைவுப் பகிர்வுகள் (நினைவலைகளில் வானொலிக் குயில் ராஜேஸ்வரி சண்முகம்இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள் – தம்பிஐயா தேவதாஸ்),  வானொலி வர்ணனைச் சுவடிகள் ( நல்லை நகர்ச் செவ்வேள் – செ.தனபாலசிங்கன்)  அது மட்டுமன்றி செய்தி ஊடகர்கள் (The News Read by S.Punniamoorthy) , நிர்வாகப் பணியில் இயங்கிய பணிப்பாளர்கள் (The Green Light by Gnanam Rathinam) , கே.எஸ்.பாலச்சந்திரனின் “நேற்றுப் போல இருக்கிறது”விமல் சொக்கநாதனின் “வானொலிக் கலை” என்று நீண்டு சமீபத்தில் வெளியான வி.என்.மதி அழகனின் “தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு" (இதற்கு முன்னர் என் மனப் பதிவுகள்) , வானொலி மற்றும் தொலைக்காட்சி என்று இருமுகப்பட்ட பரிமாணங்களில் நீண்ட வரலாற்று மற்றும் தகவல் களஞ்சியமாகத் திகழும் பி.விக்னேஸ்வரன் படைத்த “நினைவு நல்லது” என்று நீளும்.


அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் திரு அப்துல் ஹமீத் அவர்கள்

 .உலக ஒலிபரப்பாளர் திரு அப்துல் ஹமீத் அவர்கள் அவர்கள் அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திற்கு வருகை தந்த போது 







தமிழ் மாணவர்களின் எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சிட்னியில் நடந்த தமிழ் எழுத்தாளர் விழா



“அறிந்ததைப் பகிர்தல் , அறியாததை அறிந்து கொள்ள முயல்தல்” என்ற சிந்தனையை முன்னிறுத்தி 2001 ஆம் ஆண்டு  அவுஸ்திரேலியாவில் தொடங்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் விழா இயக்கம், பின்பு ஆண்டுதோறும் மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்டது.

இவ்விழாவை வருடந்தோறும் தங்கு தடையின்றி நடத்திவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்,  இம்முறை சிட்னியில் கடந்த 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  தூங்காபி சமூக மண்டபத்தில் சிறப்பாக நடத்தியது.

சங்கத்தின் உறுப்பினர்  எழுத்தாளர், சட்டத்தரணி ( கலாநிதி ) திருமதி சந்திரிக்கா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இவ்விழா நிகழ்ச்சிகளை எழுத்தாளரும், வானொலி ஊடகவியலாளருமான திரு. கானா. பிரபா தொகுத்து வழங்கினார்.

நாட்டியக் கலாநிதி ( திருமதி ) கார்த்திகா கணேசரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இவ்விழாவில், உலகெங்கும் போர் அநர்த்தங்களினால் உயிர் நீத்த இன்னுயிர்களின் ஆத்ம சாந்திக்காக  மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், அவுஸ்திரேலியா ஆதிவாசிக்குடிமக்களும் நினைவு கூரப்பட்டனர்.

தமிழ் வாழ்த்துடன், அவுஸ்திரேலியா தேசிய கீதமும் பாடப்பட்டது.

எழுத்தாளர் விழாவின் முதல் அமர்வில் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் கம்பர்லாந்து மாநகர மேயர் திருமதி லிஸா லேக் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

சிட்னியில் தமிழ் கற்றுவரும் மாணவர்களின் எழுத்தாற்றலை இனம்கண்டு,  அவர்களை ஊக்குவிக்கும் முகமாக சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக படைபிலக்கியத்துறையில் ஈடுபட்டு, பல இலக்கியப் பரிசில்களும், இலங்கை தேசிய சாகித்திய விருது உட்பட பல இலக்கிய விருதுகளும் பெற்றிருப்பவருமான எழுத்தாளர் தாமரைச்செல்விக்கு வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

யா/ மத்திய கல்லூரியின் "இசை அமுதம்" 2023. 22 SEP 2023

 .



இலக்கிய விருது 2023 போட்டியில் தேவகி கருணாகரனின் யாழினி’ குறுநாவல் பரிசு பெற்றுள்ளது.

 .

ஸிரோடிகிரி நடாத்திய  இலக்கிய விருது 2023 போட்டியில் தேவகி கருணாகரனின் யாழினி’ குறுநாவல் பரிசு பெற்றுள்ளது. இப் போட்டிக்கு 70க்கும் மேற்பட்ட குறுநாவல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அதில் தர வரிசையில்லாமல் மூன்று குறுநாவல்களை நடுவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.  அந்த மூன்றில்   ‘யாழினி’ குறுநாவல்  அடங்கியிருப்பததை பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி



இலங்கை தேசிய சாகித்திய விழாவில் “ சாகித்தியரத்னா “ விருது பெறும் எழுத்தாளர் க. சட்டநாதன் - முருகபூபதி

 .

இம்முறை எழுத்தாளர் க. சட்டநாதனுக்கு இலங்கை அரசின் சாகித்தியரத்னா விருது கிடைத்துள்ளது.  எமது நீண்ட கால இலக்கிய நண்பர்  க. சட்டநாதனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்கின்றோம்.

 

வட இலங்கையில் வேலணையில் பிறந்திருக்கும் சட்டநாதன் அந்தத்  தீவுப்பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்களுடனும் நெருக்கமான உறவைப் பேணி வளர்த்தவர். இவரை நண்பராகப் பெற்றவர்கள் எளிதில் இவரை மறந்துவிடமாட்டார்கள்.  இவரை இழக்கத் தயாராகமாட்டார்கள்!

வேலணையில் மறுமலர்ச்சிக்கழகம், தீவுப்பகுதி எழுத்தாளர் சங்கம் முதலானவற்றிலும் அறுபதுகளில் சட்டநாதன் இணைந்திருந்த காலத்திலேயே தரமான இலக்கிய ரசனை மிக்கவராகவே திகழ்ந்திருந்திருப்பதாக  பேராசிரியர் சிவச்சந்திரன் பதிவுசெய்துள்ளார்.

” எனது கதைகள் பற்றி நானே ஏதாவது சொல்லவேண்டும் போலிருக்கிறது. விஸ்தாரமாக அல்ல, சுருக்கமாக. எந்தப்புற நிகழ்வுகளுமே என்னைப்பாதிக்கிறது. மனதைத் தொட்டு நெருடுகிறது. சில சமயங்களில் காயப்படுத்துகிறது. இந்த அனுபவங்களையெல்லாம் சிறைப்பிடிக்கும் எத்தனம்தான்  எனது கதைகள். இறுக்கமான குடும்ப உறவுகளில் ஆணின் அதிகாரமுனை மழுங்க, பெண் தன்னைச்சுற்றிப்பிணைந்து கிடக்கும் தளைகளைத்தகர்த்து, விட்டு விடுதலையாவது எனது கதைகளில் இயல்பாகவே சாத்தியமாகிறது. ஆண் – பெண் உறவு உணர்வு விவகாரங்களைக்கடந்து சமூகத்துடனான மனித உறவுகளின் சித்திரம்தான் பிச்சைப்பெட்டிகளும் அந்தக்கிராமத்துச் சிறுமியும் முதலான சிறுகதைகள்.  இக்கதைகளிலும் ஏனைய கதைகளிலும் வருபவர்கள் நமது சிநேகத்திற்கும் நேசத்திற்கும் உரியவர்கள்.  மனிதநேசம் சாஸ்வதமானது.”

தரிசனம் 2023 ஒருபார்வை - Dr Chandrika Subramaniyan

 .

இலங்கையில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக தேவைப்படும் உதவிகளை செய்யும் நோக்கத்தோடு ஆண்டு தோறும்  தரிசனம் அமைப்பு ஆஸ்திரேலியாவில் நடத்தும் இளைய நிலா பொழிகிறது இசைநிகழ்ச்சி இந்த ஆண்டு மிகச்சிறப்பாக நடந்தேறியது.

இளையோரால் இளையர்களுக்காக நடத்தப்படும் நிகழ்வு என்ற வாசகங்களுடன் மிகச்சிறப்பாக இந்த நிகழ்ச்சியை ஒழுங்கமைத்து நடத்தியவர் செல்வி கேஷிகா அமிர்தலிங்கம்.

 

கடந்தாண்டுகளில் இதே தலைப்பில் ஆண்டுதோறும் நிகழ்வுகளை நடத்தி மலையக பள்ளிக்கூடங்களுக்கு நீர் வசதி,  கல்வி உபகரணங்கள், பிள்ளைகளுக்கான புத்தகங்கள் இவற்றையெல்லாம் வழங்கியிருந்த கேசிகா இந்த முறையும் அந்த முயற்சியில் தென்னிந்திய இலங்கை பாடல்களை வரவழைத்து மிகச்சிறப்பாக இந்த நிகழ்வினை நடத்தினார்.

 

விழா தொடக்கத்தில் ஜனரஞ்சனி இசை அகாடமியின் மாணவர்கள் இன்னிசை பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். விழாவுக்கு கலாநிதி சந்திரிகா சுப்ரமணியன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்

 

தென்னிந்திய இசை கலைஞர்களையெல்லாம் விஞ்சும் வகையில் செல்வி கேஷிகாவின் குரலில் இழையோடிய நளினமும், குரல்வளமும், மெருகும் பாராட்டத்தக்கதாக இருந்தது. இசையில் ஒரு நல்ல எதிர்காலத்தை எதிர்பார்க்கலாம்.

 

நிகழ்வு புது வெள்ளை மழை என்ற முதல் பாடலுடன் தொடங்கிய போது அரங்கு அதிர்ந்தது. செல்வி கேஷிகா மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடலை பாடியபோது அரங்கமே மயங்கி சாய்ந்தது.

 

உலகம் சுற்றும் வாலிபன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 .

தமிழ் திரையுலகில் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்த எம் ஜி ஆர் மீது பொதுவாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுவதுண்டு. அவரை வைத்து படத்தை ஆரம்பித்தால் உரிய காலத்துக்குள் அதில் நடித்து கொடுக்க மாட்டார் என்பதே அந்த குறையாகும். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் எம் ஜி ஆர் தான் சொந்தமாக தயாரித்த மூன்று படங்களையே உரிய காலத்துக்குள் நடித்து முடிக்கவில்லை என்பதாகும். நீண்ட கால தயாரிப்பில் இருந்த நாடோடி மன்னன் பல இலட்சங்களை விழுங்கி விட்டே திரைக்கு வந்து வெற்றி கண்டது. அடிமைப்பெண் ஆரம்பிக்கப் பட்டு , பின்னர் நிறுத்தப்பட்டு , பிறகு கதை, நடிகர்கள் மாற்றப்பட்டு திரைக்கு வந்து வெற்றி கண்டது. அதே நிலை தான் உலகம் சுற்று வாலிபனுக்கு ஏற்றப்பட்டது.

சிவாஜி நடிப்பில் சிவந்த மண் ஐரோப்பிய மண்ணில் உருவானதைத் தொடர்ந்து அதே போல் தானும் வெளிநாடுகளில் படம் தயாரிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எம் ஜி ஆருக்கு ஏற்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு சித்ரா கிருஷ்ணசாமி, ஆனந்த விகடன் மணியன் இருவரிடமும் கொடுக்கப்பட்டது. ஜப்பானில் நடக்கும் எக்ஸ்போ 70 படத்தில் இருக்க வேண்டும் என்ற ஏற்பாட்டில் 70ம் ஆண்டில் தொடங்கிய படப்பிடிப்பு மூன்று ஆண்டுகள் இழுபட்டு 73ம் ஆண்டே படம் திரைக்கு வந்தது.

இந்த வகையில் நடிகர் எம் ஜி ஆர் தயாரிப்பாளர் எம் ஜி ஆரை மூன்று படத் தயாரிப்பின் போதும் கஷ்டப்படுத்தி இருக்கிறார் என்பதே உண்மை! ஆனாலும் மூன்று படங்களும் வெற்றி கண்டதால் தயாரிப்பாளர் எம் ஜி ஆர் தப்பி விட்டார்.

நான்கு கதாநாயகிகள், ஏழு வில்லன்கள் , பத்து பாடல்கள், ஐந்து ஆசிய நாடுகளில் படப்பிடிப்பு இந்த அமைப்பில் தான் உலகம் சுற்றும் வாலிபன் உருவானது. ஆனால் படத்துக்காக எடுக்கப்பட்ட எக்கச்சக்கமான காட்சிகளை எடிட்டிங் மேசையில் அமர்ந்து , எடிட்டர் எம் உமாநாத் அனுசரணையுடன் எம் ஜி ஆர் நேர்த்தியாக வெட்டி ஒட்டி , சேர்த்து படத்தை முழுமையாக்கி விட்டார்.

சயன்டிஸ் முருகனை அவன் காதலியோடு சேர்த்து வில்லன் பைரவன் கடத்தி சென்று மிரட்டுகிறான். முருகனை தேடி அவன் தம்பி ராஜு பல நாடுகளுக்கு அலைகிறான். இந்த அலைச்சலில் மூன்று காதலிகளும் , சில வில்லன்களும் அவன் வாழ்வில் குறுக்கிடுகிறார்கள். அவர்களை எப்படி சமாளித்து தானும் தப்பி, தன் அண்ணணையும் அவன் காதலியையையும் அவன் எப்படி காப்பாற்றுகிறான் என்பதே படத்தின் கதை.

படம் முழுவதும் வந்து சதித் திட்டங்களை தீட்டும் எஸ் ஏ அசோகன் நடிப்பு ஒரு ஸ்டைல் என்றால் மேக் அப் இன்னுமொரு ஸ்டைல். சில காட்சிகளில் மட்டும் வருகிறார் நம்பியார். அவரின் ஜப்பானிய மேக் அப் , ஆஜாபாகுவான உடல்வாகு எல்லாம் மிரட்டுகின்றன. அவருக்கு மேக் அப் போட்ட மேக்கப்மேன் ராமுவுக்கு ஸ்பெஷல் பாராட்டு! மனோகர் முக பாவத்திலேயே கொடுமையை வெளிப்படுத்துகிறார். இவர்கள் போதாதென்று ஜஸ்டின் வந்து குறைந்தளவு வசனம் பேசி நீண்ட நேரம் ஆக்ரோஷயமாக சண்டை போடுகிறார். இந்த படத்தில் எம் ஜி ஆரின் தாய் , தந்தை செண்டிமெண்ட் ஏதும் இல்லை. ஆனால் காதலியாக உருகியவள் திடீரென்று மனம் மாறி அண்ணா என்று அழைக்கும் சகோதர செண்டிமெண்ட் உண்டு!