குற்றமும் தண்டனையும்! - உமாஜீ

.

நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் எமக்கான ஓர் சேதி இருக்கலாம் என்பது என் நம்பிக்கை. நாம் தெரிந்துகொள்ள, கற்றுக்கொள்ள ஓர் வாழ்க்கை! நமக்கான சேதியைக் கொண்டுவருபவர்கள் இறைதூதர்களாகவோ, மகான்களாகவோ மட்டும் இருக்க வேண்டியதில்லை. அவர்கள் கொலைத் தண்டனைக் குற்றவாளிகளாகக் கூட இருக்கலாம்.
கடந்த வாரம் பலர் மனதை உலுக்கிய நிகழ்வு Bali 9 எனக்குறிப்பிடப்படும் இந்தோனேஷியப் போதைப்பொருள் கடத்தல் வழக்கின் தீர்ப்பான மரணதண்டனை. அதிலும் நம்மை அதிகம் பாதித்தது மயூரன், அன்ட்ரூ சானின் இறுதிநாட்கள். இவர்கள் இருவரும் அறியாமல் தவறு செய்த அப்பாவிகளோ, தாம் செய்யும் குற்றத்தின் தீவிரத்தன்மையும் தெரியாதவர்களோ அல்ல. மாட்டிக் கொண்டால் என்னவாகும் என்பதும் தெரிந்தே நன்கு திட்டமிட்டு கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள். சமூக விரோதிகள். ஆனாலும் இவர்களின் இறுதிநாட்கள் பலரின் மனத்தைக் கலங்கச் செய்திருந்தது. இந்த அனுதாபத்துக்கும் ஒருவிதமான அபிமானத்துக்கும் காரணம் ஊடக வெளிச்சத்துக்கு வந்த அவர்களின் இறுதிக்கால வாழ்க்கை.   


பத்து வருடச் சிறை ஏற்படுத்திய மனமாற்றம், வாழ்க்கை குறித்த புதிய நம்பிக்கை, எதிர்காலம் குறித்த கனவுகள் எல்லாமே ஊடகங்கள் வாயிலாக நமக்குச் சொல்லப்பட்டிருந்தன. இல்லாவிட்டால் 'போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை' என்று சாதாரண செய்தியாகக் கடந்திருக்கும். இவர்களுடன் சுட்டுக் கொல்லப்பட்ட ஏனைய ஆறு பேருக்குப் பின்னாலும் இதே போன்ற, இதைவிட உருக்கமான வாழ்க்கை ஒன்று இருக்கும் எங்களுக்குச் சொல்லப்படவில்லை, அவ்வளவுதான்.
தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாளிரவு அன்ட்ரூ சான் தன் காதலியைத் திருமணம் செய்துகொள்கிறார். மயூரன் இறுதிக் கணங்களை தனக்கு மிகவும் பிடித்த ஓவியம் வரைதலில் செலவிடுகிறார். ஒருவேளை விடுவிக்கப்பட்டால்? அது ஓர் மறுபிறவி. அதன்பின்னரான புதிய வாழ்க்கை குறித்து அவர்களுக்கு ஒரு கனவு இருந்திருக்கிறது. அது நிகழப் போவதில்லை என்று உறுதியாகத் தெரிந்தபின்பும் உடைந்து போய்விடவில்லை. இருக்கும் சில மணித்துளிகளையும் வீணாகிவிடாமல் தாம் வாழ நினைத்த வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியையேனும் வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
அதுதான்  அந்த சேதி! பலரையும் மிக மனவுளைச்சல் கொள்ள வைத்ததும் அதுதான்! குற்றமிழைத்த ஒருவர் பத்துவருடங்கள் சிறைத்தண்டனை அதையுணர்ந்து மனந்திருந்தி வாழமுற்படும்போது அவர்களின் உயிரைப்பறிப்பது சரியா? அவர்கள் செய்த குற்றம் பாரதூரமானது. ஒரு சமுதாயத்தையே சீரழிப்பது. கடுமையான தண்டனை வழங்கப்படுவதுதான் நியாயம். அது சாகும்வரை ஆயுள்தண்டனையாகக்கூட இருந்துவிடலாம். ஆனால் மரணதண்டனை? அப்படியானால் சட்டம் குற்றவாளிகளைத் திருத்தமுடியாதா? அவர்களை இந்த உலகிலிருந்து அகற்றிவிடுவதுதான் ஒரே வழியா?  மரணதண்டனை ஒருவகையில் அவர்களுக்கு விடுதலையே. ஆக, குற்றவாளிகளுக்கு விடுதலையும் குடும்பத்தினருக்கு தண்டனையையும்தான் இந்த தீர்ப்பு வழங்கியிருக்கிறது
ஒருவர் சுட்டுக் கொல்லப்படுவது அவ்வளவு பெரிய அதிர்ச்சியளிக்கும் விடயமாக நினைக்குமளவிற்கு அப்படியொரு அமைதிப் பூங்காவான நாட்டில் பிறந்து வளரவோ, வாழவோ இல்லை. சிறுவயது முதலே அது சாதாரண ஒரு சம்பவம், எமக்கு தெரிந்தவர்களாக, வேண்டியவர்களாக இல்லாத பட்சத்தில்! அது இயல்பானதாகிவிட்ட மனநிலை. செய்தியாகக் கேட்கும்போது அப்படியே கடந்துசெல்ல முடிந்தாலும் ஒரு காணொளியாக, புகைப்படமாக, கட்டுரையாக விவரித்த பின்னர்தான் கொல்லப்பட்ட மனிதனின் மனநிலை, குடும்பம், வாழ்க்கை குறித்து மன உளைச்சலைடைகிறோம். அது யாராக இருந்தாலும், எந்த நாட்டவராக இருந்தாலும் அப்படித்தான்! அடிப்படையில் நம்மில் பலரும் , அநியாயம் நம் கண்முன்னால் நடக்காதுவிட்டால் போதுமானது என்கிற மனநிலை உடையவர்கள்தான்.

ஒரு மனிதனோ, குழுவோ, இன்னொரு மனிதனின் உயிரைப் பறிப்பதென்பது தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டிருப்பதுதான். ஒரு வெறிபிடித்த கும்பல், தீவிரவாதிகள் அதனை நிகழ்த்தும்போது கோபமடைகிறோம் அல்லது வேறுவழியில்லாமல் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். ஏதோ ஒருவகையில் அதற்குச் சமாதானமும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் ஒரு அரசாங்கம், சட்டம், நீதிமன்றம் இணைந்து வருடக்கணக்கில் காத்திருக்கவைத்து, நாள்குறித்து ஒரு மனிதனின் உயிரைப் பறிப்பதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
மரணதண்டனைக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் குற்றவாளிகளுக்குச் சார்பானவர்களோ அவர்களின் குற்றங்களை நியாயப்படுத்துபவர்களோ அல்ல. ஒரு மரணதண்டனை விதிக்கப்படும்போதுதான் அதற்கெதிரான குரல்களும் எழ வேண்டியுள்ளது. அவை மனித உயிர்கள் பறிக்கப்படக் கூடாது என்கிற கொள்கையுடையவை. மொழி, இன, மதம், நாடு சார்ந்த வேறுபாடுகளில்லாதவை. அது ரிசானாவாக இருக்கலாம், அப்சல் குருவாக இருக்கலாம், டெல்லி வன்புணர்வுக் கொலைக் குற்றவாளிகளாக இருக்கலாம். எல்லோருக்குமானவை.

மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது. ஆதிகாலம் தொடக்கம் வழங்கப்பட்டுவரும் முறையை  மனித நாகரீகம் வளர்ச்சியடைந்த பின்னரும் இன்னமும் கடைப்பிடித்து வருவது கொடூரமானது. ஒரு மனிதனின் உயிரைப் பறிப்பதற்கு இன்னொரு மனிதனுக்கோ, ஓர் அமைப்புக்கோ எந்த அதிகாரமும் கிடையாது. கண்ணுக்கு கண், கைக்குக் கை என்னும் ஆதிகாலத்திலா நாம் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? என்பது மனித உரிமை ஆர்வலர்களின் கருத்து. இல்லை தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் குற்றங்கள் குறையும். கொடூரமான குற்றவாளிகளுக்கு இதைவிட வேறு தண்டனை கிடையாது என இதனைக் கடுமையாக மறுப்போர் கூறுவார்கள். குற்றங்களின் தன்மையைப் பொறுத்து குறிப்பாகத் திட்டமிட்ட கொலைகள், பாலியல் வன்புணர்வுகள், சிறுவர் துஷ்பிரயோகம்  போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கலாம் என்போரும் நம்மிடையே பலர்.

 மரணதண்டனையை ஆதரிக்காவிட்டாலும் ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட செய்தியைப் படிக்கும்போதோ, யாரோ ஒருவர் கொல்லப்படும் புகைப்படத்தை, காணொளியைப் பார்க்கும்போதோ நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடிவதில்லை. அவர்களைக் கொல்லவேண்டும் என்பதே எமது உடனடியான எதிர்வினை. உணர்ச்சிவேகத்தில் நாங்களே நீதிவழங்கத் தயாராகிவிடுகிறோம்.

மரண தண்டனைக்கெதிரான குரல்கள் மாட்டிக்கொண்ட, இனியும் இதுபோன்ற தண்டனைகளை எதிர்கொள்ளப்போகும் குற்றவாளிகளுக்கானவை மட்டுமேயல்ல. மிக முக்கியமாக அநியாயமாக மாட்டிக்கொள்ளப்போகும் அப்பாவிகளுக்காகவே. பொய்க்குற்றச் சாட்டுகளிலும், சரியாக எதிர்கொள்ள முடியாமலும் உயிரை விடுபவர்கள்தான் அதிகம்.

மரணதண்டனையைக் கடும்போக்குடன் நடைமுறைப்படுத்தும் பெரும்பான்மையான நாடுகளின் நீதியும், விசாரணை முறையும் அவ்வளவு நம்பகத்தன்மையானவை அல்ல. குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீதான விசாரணைகளை நடத்தும் விதமும் வெளிப்படையானதல்ல. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விசாரணையின்போது மொழிபெயர்ப்பாளர்களை ஒழுங்கு செய்வதில்லை. பலவந்தமாக ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படுகின்றன போன்ற குற்றச்சாட்டுகள் மனித உரிமை ஆர்வலர்களால் வெளியிடப்பட்டிருக்கின்றன. தவிர,வெளிப்படையாகவே தெரியும் சொந்தநாட்டுப் பிரஜைக்கும், வெளிநாட்டுப் பிரஜைகளுக்குமான பாரபட்சம். வெளிநாட்டுப் பிரஜைகளில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கொரு நீதி, மூன்றாம் உலக நாடுகளுக்கொரு நீதி. அப்படியே உண்மையான குற்றவாளியாக இனங்காணப்பட்டாலும் யாருக்குத் தண்டனை தரவேண்டுமென்பதில் மிகப் பக்கச்சார்பான ஒரு தெளிவு அவர்களிடம் உள்ளது. ஆக, உயிரை விடுபவர்கள் ஒருவகையில் வழியற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள்தான்.

'தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும்' என்பது மரணதண்டனையை ஆதரிப்பவர்களின் நிலைப்பாடு. அப்படியானால் இவ்வளவு காலமாக வழங்கப்படும் கடுமையான தண்டனைகள் குற்றங்களைக் குறைத்திருக்கிறதா? அல்லது குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதா? தண்டனை பற்றிய அச்சம் குற்றம் செய்வதைத் தடுக்கிறதா? அல்லது திட்டமிடுதலை இன்னும் தீவிரமாக்குகிறதா என்பதுதான் கவனிக்கப்படவேண்டியது. ஏனெனில் தண்டனைகள், பின்விளைவுகள் பற்றி யோசித்து குற்றச்செயல்களில் ஈடுபடுவது அல்லது அதற்கான அவகாசம் இருப்பது திட்டமிட்ட குற்றங்களில்தான். அவர்கள் தண்டனைக்குப் பயந்து ஒதுங்கி விடுவார்களா? அல்லது சட்டத்திடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க தீவிர ஏற்பாடுகளுடன் களமிறங்குவார்களா?

நம் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பலர் குற்றவாளிகள் ஆகாமல் இருப்பதற்கான காரணங்களை இப்படியும் யோசிக்கலாம்.

குற்றம் செய்ய விரும்பாதவர்கள் - இதில் தனிமனித ஒழுக்கத்தைப் பேணுபவர்கள், நேர்மையானவர்கள், சட்டத்தை மதிப்பவர்கள், பழி பாவத்திற்கு அஞ்சுபவர்கள், கடவுளுக்குப் பயந்தவர்கள் எல்லோரும் அடங்குவர்.

சட்டத்தை வளைப்பதற்கு, சட்டம் கடைமையைச் செய்யாது தவிர்ப்பதற்கு அதிகார வர்க்கச் செல்வாக்கும், பணபலமும் இல்லாதவர்கள்.

உங்களைக் குற்றவாளியாகச் சித்தரித்துவிடக்கூடிய சந்தர்ப்பத்தை நீங்கள் எதிர்கொள்ளவில்லை. அல்லது அப்படிச் சிக்கவைக்ககூடிய பலம்வாய்ந்த ஒருவரோடும் நீங்கள் மோதவில்லை.

முதலாவது வகையில் குற்றம் செய்யத்துணிந்தால், 'தண்டனைகள் கடுமையானால் குற்றம் குறையும்' என்கிற கருத்தை கொஞ்சமேனும் ஏற்றுக் கொள்ளளலாம். ஆனால் நடைமுறையில் அப்படி நிகழ்வதில்லை.

இரண்டாவது வகையில் - வாய்ப்பு இருக்கிறதா? அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டாலும், அதே வாய்ப்புகளுடன் இருக்கும் ஒருவர் மனம் திருந்துவாரா? இன்னும் கச்சிதமாகச் செயற்படுத்தவேண்டும் என்று நினைப்பாரா?

மூன்றாவது வகையினர்? அவர்களின் நிலை?
மரணதண்டனை கொடுமையானது என்பதால் குற்றவாளிகள் எல்லோரையும் மன்னித்து விட்டுவிடலாமே என்று அர்த்தமில்லை. தண்டனை எவ்வளவு கொடூரமானதாகவும் இருக்கலாம். ஆனால் மரணதண்டனை வேண்டாம். சமயங்களில் மரணம் ஒருதண்டனையல்ல. அதுவும் ஒருவகை விடுதலையே. ஆயுள் தண்டனை ஒன்றே சரியானதாக இருக்கும். மனம் வருந்த வைக்கும். திருந்த வைக்கும். தண்டனைகள் செய்த குற்றத்தை உணர வைக்க வேண்டாமா? டெல்லி நிர்ப்பயா வன்புணர்வு வழக்கில் குற்றவாளி ஒருவனுக்கு பெண்கள் இரவில் வெளியே வருவது குற்றம். அவன் தண்டித்திருக்கிறான் என்பதே அவன் நம்பிக்கை. ஆக, அவன் ஏன் சாகிறான் என்பதுகூட அவனுக்குத் தெரியாது. அவன் வரையில் கொண்ட லட்சியத்துக்காக இறுதிவரை போராடிய சமூகப் போராளியாகத் தன்னை நினைத்துக்கொண்டே உயிர்த்தியாகம் செய்திருக்கிறான்! இது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது.

நம் இலங்கை, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் ஆயுள்தண்டனை என்பது அதிகாரவர்க்கத்தினர் உள்ளே போயிருந்து சகல சுகபோகங்களையும் அனுபவித்து வெளிரவரும் இளைப்பாறும் திட்டம் போன்றதே. ஆகவே நம் நாடுகளுக்கு மரணதண்டனை அவசியம் என்றும் சொல்லப்படுகிறது. அவர்களெல்லாம் அதிகார வர்க்கத்தினர். சட்டத்தை வளைப்பதற்கு, சட்டம் கடைமையைச் செய்யாது, பின்தொடராது தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடியவர்கள். அவர்கள்தான் மாட்டிக்கொள்ளவே போவதில்லையே.  தவிர, சிறைக்குள்ளாவது சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதற்கேற்ப வழிவகைகளைச் சட்டம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

திட்டமிட்டுப் பாரிய குற்றம் செய்ய துணிந்தவனுக்கு தண்டனைகள் பற்றி தெரிந்தே இருக்கிறது. அதை உதறி தள்ளிவிட்டுத்தான் அவன் குற்றம் செய்ய ஆயத்தமாகிறான். மாட்டிக் கொண்டால் மரணம் என்று தெரிந்தும் எதற்கும் துணிந்து திட்டமிட்டு, குற்றம் புரியும் ஒருவனுக்கு வழங்கப்படும் மரணம் எப்படித் தண்டனையாக இருக்க முடியும்? சாகும்வரை ஆயுள் தண்டனைதான் சரியான தண்டனையாக இருக்கும். திட்டமிட்ட இனப்படுகொளையாளிகள், கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கும் ஆயுள் தண்டனைதானா? என்றால், ஆம்!

அதிகாரம் கைவிட்டுப்போய், பதவியிழந்து கண்முன்னே தன் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருப்பதே பாதி மரணம்தான்! அதன்பின்பு மரணதண்டனை என்பது விடுதலையாகிவிடாதா? தான் பேசுவதை மட்டும் கேட்க முடிந்த தனிமைச்சிறையில், மீதமிருக்கும் வாழ்நாள் முழுவதும் நான்கு சுவரை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதைவிட கொடுமையான தண்டனை வேறேதும் இருக்க முடியுமா?

நான் எப்போதும் மரணதண்டனைக்கு எதிரானவன்!
 -4தமிழ்மீடியாவிற்காக : உமாஜீ
Nantri 4tamilmedia.com

No comments: