நெஞ்சாரச் சித்திரையை வரவேற்று மகிழ்வோம் !


 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா 



முன்பனி பின்பனி மாறிய பின்னே
இளவேனில் துளிர்க்க சித்திரை மலரும்
தைப் பொங்கலுண்டு  தளர்வகலும் வேளை
புத்துணர் வூட்டச் சித்திரை  கைகோர்க்கும்

பெற்றோரும் மகிழ்வர் பிள்ளைகளும் மகிழ்வர் 
உற்றவரும் மகிழ்வர் உறவுகளும் மகிழ்வர்
மணமேடை அமர மங்கலநாள் அமைய
சிறப்பான நாளை சித்திரையே திறக்கும் 

வருடத்தின் தொடக்கம் சித்திரையே என்போம்
சித்திரையே தொடக்கமாய் பஞ்சாங்கம் காட்டும் 
பஞ்சாங்கம் பார்ப்போம்  பலன்களையும் அறிவோம் 
நெஞ்சாரச் சித்திரையை வரவேற்று மகிழ்வோம் 

யுதிஸ்றா, தனிகா இந்திரகுமாரின் நடன அரங்கேற்றம் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 .

சுகந்தி தயாசீலன் சிஷ்யையரான யுதிஸ்றா, தனிகா இந்திரகுமாரின் அரங்கேற்றம் 2 ஏப்ரல் 2023 அன்று NIDA parade அரங்கில் வெகு விமரிசையாக நடந்தேறியது. கலாஷேத்திரா புகழ் லீலா சாம்சன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

சிட்னி மாநகரில் சிறந்த கலைஞர்கள் எனப் போற்றப்படும் அகிலன் சிவானந்தன் குரலிசை வழங்க ஜனகன் சுதந்திரராஜா மிருதங்கம் வாசிக்க, கிராந்தி கிரண் முடிகொண்டா வயலின் இசைக்க, தியாகராஜன் றமணி வேணுகானம் பொழிய இவர்களுடன் சௌமியா ஸ்ரீதரன் வீணை மீட்ட, சுகந்தி தயாசீலன் நட்டுவாங்கத்துடன் நிகழ்ச்சி இனிதே ஆரம்பமானது.

கமல மனோகரி இராகத்திலான புஷ்பாஞ்சலியை ஆடி நர்த்தகிகள் இறைக்கும் குருவிற்கும் இசைக்கலைஞர் மற்றும் சபையோருக்கும் தமது அஞ்சலியுடன், அலாரிப்பை ஆடினார்கள். ஆபோகி இராகத்திலான ஜதீஸ்வரம் மிகவும் கவர்ச்சிகரமாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்திருந்தது. இருவரும் இணைந்து இரசித்து ஆட பார்வையாளரும் ஆடலுடன் இணைந்து மகிழ்ந்தனர். காளி கௌத்துவத்திலே காளியின் பல்வேறு கோலங்கள் சித்தரிக்கப்பட்டன. காளி மகிஷனைக் கொன்றமை அழகாகக் காட்சிப்படுத்தியமையை இரசித்தேன்.

வர்ணம் பரதக் கச்சேரியில் நடுநாயகமாக விளங்குவது. பரதத்தில் உள்ள அத்தனை அம்சங்களையும் தன்னுள் கொண்டது. அடவு கோர்வையால் ஆன ஜதிகள் பாடலுக்கான அபிநயத்துடன் மாறி மாறித் தோன்ற, அடுத்து நர்த்தகி கால்கள் தாளத்துடன் ஆட, கைகளிலே அபிநயம் காட்டி, உள்ளத்து உணர்வுகளை முகபாவமாக வெளிப்படுத்தி ஆடுவாள். பரதக் கச்சேரியில் வர்ணம் நர்த்தகியின் முழுத் திறமையையும் காட்டும் நீண்ட உருப்படி. அன்று செஞ்சுருட்டி இராகத்திலான ‘புன்னகையில் மயங்கி விழுந்தேன்’ என அழகன் முருகனின் இள நகையில், அவன் அழகிய கோலத்தில் மயில் மேல் பவனி வரும் காட்சியில் தன்னை இழந்த இள நங்கையாக அவர்கள் ஆடினார்கள்.

அன்பாலயத்தின் இளம் தென்றல் 2023 ஒரு பார்வை - செ பாஸ்கரன்

.

 

ஆஸ்திரேலியாவில் இலங்கையில் இருக்கின்ற ஈழத் தமிழர்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் அன்பாலயம் அமைப்பானது "இளம் தென்றல் 2023" என்ற நிகழ்ச்சியை சென்ற சனிக்கிழமை ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி 2023 அன்று சிட் னியில்  அமைந்திருக்கின்ற பகாய் சென்ரர் மண்டபத்தில் வருடாந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தது.


 மாலை 6 மணிக்கு நிகழ்வு ஆரம்பிக்கும் என்று குறிப்பிட்டு இருந்தது. அதேபோல் மாலை 6 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது நிகழ்வு ஆரம்பிக்கப்படுகின்ற போது மண்டபத்தினுள் மக்கள் குறைவாக இருந்தாலும் கூட சரியான நேரத்தில் தொடங்க வேண்டும் என்ற அவர்களது குறிக்கோள் சரியாக 6 மணிக்கு அந்த நிகழ்வை ஆரம்பித்தார்கள். சற்று நேரம் செல்லச் செல்ல மண்டபம் நிறைவாக காணப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவில் இருக்கின்ற இளைஞர்கள், யுவதிகளை ஊக்குவிப்பதற்காகவும், நிதி சேகரிப்பதற்காகவும் என இரு  நோக்கங்களை கொண்டதாக வருடம் தோறும் அமைகின்ற ஒரு நிகழ்வாக்கும். இது ஆஸ்திரேலியாவில் சிட் னியில் இருக்கின்ற மக்களுக்கு நன்றாகவே தெரியும். 

அன்பாலயத்தின் பொறுப்பாளர் திரு ரமேஷ் நடராஜாவும் அவரோடு இணைத்து பயணிக்கும் குழுவினரும் பல வருடங்களாக இதற்காக உழைத்து வருகின்றார்கள்.


பாடல் நிகழ்வு சக்தி இசைக் குழுவின் இசையிலே ஆரம்பமானது. சக்தி இசைக் குழு வருடம் தோறும் அன்பாலயத்திற்காக இசை அமைத்து சிட் னியில்  இருக்கின்ற இளைஞர்கள் யுவதிகளை  பாடுவதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவதடற்காக,  உள்ளூர் கலைஞர்களை  ஊக்குவிப்பதற்காக,  இசைக்கருவிகளை மீட்டுவதற்காக, சந்தர்ப்பங்களை வழங்கி இந்த இசையை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதேபோல் உள்ளூர் நடன ஆசிரியர்களுடைய நடன நிகழ்வுகளும் இடையிடையே நிகழ்த்தப்படும். அப்படி ஒரு நிகழ்வு தான் இந்த நிகழ்வு.  இந்தியாவிலிருந்தோ, இலங்கையிலிருந்தோ  பாடகர்களை அல்லது மிகப்பெரிய இசை குழுக்களை அழைத்து இவர்கள் நிகழ்ச்சியை நடத்துவதில்லை. அதில் செலவு செய்யப்படும் பணத்தை சேகரிக்கவும்,  உள்ளூர் கலைஞர்களுக்கு ஊக்கம் கொடுக்கவும் முடியாது என்ற காரணத்தினால் அதை இவர்கள் தவித்துக் கொள்ளுங்கள்.


 நிகழ்வு மிக சிறப்பாக ஆரம்பித்தது முதலிலே தமிழ் வாழ்த்து , ஆஸ்திரேலியா தேசிய கீதம் போன்றவைகள் இசைக்கப்பட்டு அதைத் தொடர்ந்து சக்தி இசைக் குழுவின் உடைய இசையிலே பாடகர் வினோதன் எட்டுத்திக்கும் என்ற பாடலோடு மேடைக்கு வந்தார். அதனை தொடர்ந்து நித்தியா நிமலன் கொஞ்சும் மைனாக்களே என்ற பாடலை மிக அருமையாக கொடுத்திருந்தார். இப்படி தொடர்ந்து பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. ரோஹித் பரமேஸ்வரன் மின்னலே நீ வந்தது என்னடி என்ற பாடல். அதைத் தொடர்ந்து அண்மையிலே மறைந்த  இந்திய திரை உலக பாடகி இசைக்குயில் வாணி ஜெயராம் அவர்களுக்கு ஒரு கௌரவ நிகழ்வாக வாணி ஜெயராமினுடைய பாடலை கேஷிகா  அமிர்தலிங்கம் யாரது  சொல்லாமல் நெஞ்சள்ளி போனது என்ற பாடலோடு அந்த அஞ்சலி நிகழ்வு வழங்கப்பட்டது.


எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 59 எழுத்தாளன் ஒரு நாட்டின் முதுகெலும்பா..? முதுசமா..? முருகபூபதி

இயக்குநர் ஶ்ரீதரின்   கதை ,  வசனம் இயக்கத்தில் 1959 இல்


வெளியான கல்யாணப்பரிசு திரைப்படம் பார்த்திருப்பீர்கள்.

இதில் நகைச்சுவை நடிகர் தம்பதியர் கே. ஏ. தங்கவேல் – சரோஜா நடித்த காட்சிகளை மூத்த தலைமுறை ரசிகர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.  தங்கவேல்  நிறைய பொய் சொல்லி மனைவியிடம்  அடிக்கடி மாட்டிக்கொள்வார்.

அவருக்கு ரசிகர்கள் மத்தியில்   டூப் மாஸ்டர் எனவும் பெயர் தோன்றியது. அக்காலத்தில் இலங்கை வானொலியில் இவர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் குரல் வடிவில் அடிக்கடி ஒலிபரப்பாகும்.

கல்யாணப்பரிசு திரைப்படத்தில் தங்கவேலுவின் லூட்டியை


மறக்கவே முடியாது.

இறுதியில் அவர் தன்னை எழுத்தாளர் பைரவன் என்ற புனைபெயரில் அழைத்துக்கொண்டு மனைவியை ஏமாற்றுவார்.  தனக்கு ஒரு சங்கம் பாராட்டு விழா நடத்துவதாகவும் பொய் சொல்லி, ஒரு பூக்கடையில் மலர்மாலையும் பூச்செண்டும் வாங்கி வந்து மனைவியை ஏமாற்றி, கையும் களவுமாக பிடிபடுவார்.

         அந்த விழாவில் தான்  “ எழுத்தாளன் இந்நாட்டின் முதுகெலும்பு  “ எனச்சொன்னதும்,  “ தட்டினான் பாரு  “ என்பார்… உடனே மனைவி,   “ உங்களையா..?  “ எனக்கேட்பார்.

அதற்கு தங்கவேலு,  “அடி பைத்தியமே… தட்டுனான் தட்டுனான்…. கை தட்டிக்கிட்டே  இருந்தான்….    என்பார்.

 “ தானும் பங்கஜமும் விழாவுக்கு வந்திருந்தோம். அந்தக்கண்றாவியை கண்ணால பார்த்தோம்  “ என்று சொல்லும் மனைவி சரோஜா, தங்கவேலுவின் குட்டை அம்பலப்படுத்துவார்.

கணவனின் பொய் பித்தலாட்டங்களை பொறுத்துப்பொறுத்து பார்த்த மனைவி, இறுதியாக,  “ பத்து நாளைக்கு உப்பில்லாத கஞ்சி தந்தால் எல்லாம் சரியாகிப்போய்விடும்  “ என்பாள்.

அவரும் அதன்பின்னர் திருந்தி,  சொந்தமாகவே  தேயிலை தூள் பக்கட் விற்பனையை ஒரு வாகனத்தில் தொடங்குவார். அங்கும் அவருக்கு சோதனை வரும்.  ஒரு இடத்தில் அவர் அந்த வாகனத்தை நிறுத்திவிட்டு விற்பனையை கவனித்தபோது அவ்விடத்தில் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகள் திறந்திருந்த வாகனத்துள் ஏறி தேயிலை பக்கட்டுக்களை தின்று தீர்த்துவிடும்.

எமது தமிழ் சமூகத்தில் எழுத்தாளனாக வாழ முற்படும் ஒருவர் சந்திக்கும் சிக்கல்களை ஒரு முன்கதைச்சுருக்கமாக இங்கே சொல்ல வந்தேன்.

நானறிந்தவரையில் இலங்கையில் நான் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில்,  ( 1970 களில் )  முழுநேர எழுத்தாளராக வாழ்ந்த தமிழர்கள் இருவர்தான்.

ஒருவர் சுபைர் இளங்கீரன், மற்றவர் டொமினிக் ஜீவா. இளங்கீரன் மரகதம் என்ற இலக்கிய சிற்றிதலையும் நடத்தி போட்ட முதலுக்கே நட்டமடைந்து சிரமப்பட்டார். இறுதியில் குமார் ரூபசிங்க நடத்திய ஜனவேகம்  வார இதழில் ஆசிரியராக பணியாற்றினார். அவ்விதழும் சிறிது காலத்தில் நின்றுவிட்டது. இத்தனைக்கும் இளங்கீரனுக்கு ஒரு தொழில் நன்கு தெரியும். அவர் சிறந்த தையல்காரர்.  மலேசியாவிலும் முன்னர் வசித்திருப்பவர். அந்தத் தொழிலை உதறிவிட்டு,  முழு நேர எழுத்தாளரானவர்.

சித்திரைப் புத்தாண்டு சிந்திக்க வைக்கும் புத்தாண்டாகுமா…? அவதானி



இலங்கையிலும்  இந்தியாவிலும் சிங்கப்பூர் , மலேசியாவிலும் மற்றும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் புகலிட தேசங்களிலும்,  சித்திரைப் புத்தாண்டு இம்மாதம் நடுப்பகுதியில் களைகட்டத் தொடங்கிவிடும்.

குறிப்பாக இந்துக்களின் பண்டிகை நாளாக சித்திரைப்                     புதுவருடமானது , தமிழர்களின் புதுவருடப் பிறப்பு என சொல்லப்பட்டாலும்,  இது ஆரியர்கள் சொல்லித்தந்த பாடம், தமிழர்களின் புத்தாண்டு ஒவ்வொரு வருடமும் தை மாதம் 01 ஆம் திகதிதான் பிறக்கிறது. அதுவே தைப்பொங்கல்,  தைத்திருநாள் என்று தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் சொல்லி, வாதிட்டு வருகிறார்கள்.

இலங்கையிலும் புலம்பெயர்ந்தும் வாழும் சிங்கள பௌத்தர்களுக்கு


இப்படி ஒரு விவாதம்  தமிழர் தரப்பில் இருப்பது கூட பெரும்பாலும் தெரியாது.

அவர்கள் இலங்கையிலிருந்தாலும், வெளிநாடுகளில் வசிக்கநேர்ந்தாலும் ஏப்ரில் மாதம் நடுப்பகுதியில் வரும் சித்திரைப் புத்தாண்டை  வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

இலங்கை அரசும், தனியார் துறையினரும் விடுமுறை தருவதனால்,  தென்னிலங்கையிலிருந்து வெளியாகும் பத்திரிகை நிறுவனங்களும்  தமது ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கிவிடும். குறிப்பிட்ட நாளில் அந்த நிறுவனங்களின் வெளியீடுகளும் அச்சிடப்படமாட்டா.

முதல்நாளே ,  “ நாளைய தினம் பத்திரிகை வெளிவராது  “ என்ற குறுஞ்செய்தியையும் வெளியிடுவார்கள்.

அதே சமயம் நாட்டின் உயர் தலைவர் – ஜனாதிபதி, மற்றும் பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள்,  தொழிற்சங்கங்களின் தலைவர்கள், மற்றும் சமயத் தலைவர்கள், பிரமுகர்களின் சித்திரைப் புத்தாண்டு நற்செய்திகளையும் வெளியிட்டுவிடும்.

இந்த நடைமுறை காலாகாலமாக நடந்துவருகிறது.

சிங்கள பெளத்த மக்கள் சித்திரைப் புதுவருடத்தை கோலாகலமாக கொண்டாடுவார்கள்.  அவர்கள் வசிக்கும் பிரதேசங்களில்  திறந்த அரங்குகளில் விளையாட்டுப் போட்டிகள் உட்பட அழகுராணி போட்டிகளும் நடைபெறும்.

இந்துக்கள் மருத்து நீர் வைத்து நீராடி ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு, உறவினர் வீடுகளுக்கும் சென்று விருந்துகளில் பங்கேற்று கொண்டாடி மகிழும் நாள் இந்த சித்திரைப் புத்தாண்டு தினம்.

பௌத்த சிங்கள மக்களிடத்திலும் இத்தகைய சடங்கு சம்பிரதாயங்கள் நீடித்திருக்கிறது.

அவர்கள் மூன்று அல்லது நான்கு நாட்கள் இந்த சித்திரைப் புதுவருடப்பிறப்பினை கொண்டாடுவார்கள்.

இலங்கையில் தமிழ் – சிங்கள புதுவருடப்பிறப்பு என விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், இரண்டு இனத்தவர்களும் இணைந்து இதனை இதுவரையில் எங்காவது பொது வெளியில் கொண்டாடியிருப்பார்களா..? என்பது தெரியவில்லை.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் மாறி மாறி பதவிக்கு வந்த ஆட்சியாளர்கள்,  வருடம்தோறும் சித்திரைப்புத்தாண்டு தினத்தன்று பத்திரிகைகளில் வாழ்த்துச்செய்தி விடுத்துவிட்டு, வீட்டில் பாற்சோறும்,  பணியாரமும், கொக்கிஸ் போன்ற தின்பண்டங்களும் வாழைப்பழமும்  சாப்பிட்டு ஏப்பம் விடுவார்கள். 

ஆனால், ஏன் இந்த இரண்டு இனங்களும் இந்த நாட்டில் புரிந்துணர்வுடன் வாழ முடியாதிருக்கிறது என்பது பற்றி சில கணமேனும் சிந்திக்க மாட்டார்கள்.

ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும் எனவும்  பூமிசூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது எனவும்  இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும் என்றும் சொல்லப்படுகிறது.

இதனை சோதிட ரீதியாகவும் கணித்திருப்பதனால்,  தமிழ்தேசிய உணர்வாளர்கள்,   “  இது ஆரியர்களின் கூற்று… எங்களுக்கு புதுவருடம் தை மாதம் 01 ஆம் திகதிதான் பிறக்கிறது எனச்சொல்லி வருகிறார்கள். அதற்காக இந்த சித்திரைப் புத்தாண்டை இந்துக்கள் கொண்டாடாமல் விட்டதுமில்லை.

ஆலயங்கள் இப்போதே இந்த நாளுக்கு தயாராகியிருக்கும். அங்கிருக்கும் பூசகர்களுக்கும் வருவாய் பெருகும் நாள்தான் இது. ஆலயங்களுக்கும் வருமானம் அதிகரிக்கும் தினம்தான் இது.

நீண்ட நெடுங்காலமாக தமிழ் – சிங்கள உறவு நலிவடைந்திருப்பதற்கு கடும் போக்காளர்களும் அரசியலமைப்புகளை உருவாக்கியவர்களும்தான் பிரதான காரணம்.

ஆனால், அவர்களின் பிள்ளைகள் காதலித்து மணம் முடிக்கும்போது இனம், மதம், மொழி பார்ப்பதில்லை.

அவ்வாறு மணம் முடித்தால் இன ஐக்கியம் , தேசிய ஒருமைப்பாடு பிறந்துவிடுமா..? இல்லை !  பிள்ளைகள்தான் பிறப்பார்கள்.!

காதல் , அன்பிலிருந்து துளிர்ப்பது.  அதற்கு இனவேறுபாடு தெரியாது.  அதனால்தானோ காதலுக்கு கண் இல்லை என்பார்கள் காதலை வெறுப்பவர்கள்.

சித்திரை வருடப்பிறப்பு - 14/04 /2023




"ஆன்மீக செல்வன்" தனாசிவம்

சிட்னி, அவுஸ்திரேலியா.
 





            
சோபகிருது வருடப்பிறப்பு

சோப கிருதுதன்னிற் றொல்லுலகெல் லாஞ்செழிக்குங்
கோப மகன்று குணம்பெருகுஞ் - சோபனங்கள்
உண்டாகு மாரி யொழியாமற் பெய்யுமெல்லா
முண்டாகு மென்றே யுரை

இந்த சோபகிருது வருடத்தில் பூமியில் மக்கள் நோய்நொடிகள் இன்றி சுக வாழ்வு வாழ்வர். மண்வளம் செழிப்புற மழை உண்டு.நெல் விளைச்சல் மிகு.

இராஜா - புதன்
மந்திரி - சுக்கிரன்
சேனாதிபதி - வியாழன்


*நேரம் - சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1ம் நாள் (14.04.2023) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.03 மணியளவில் பிறக்கிறது.

* புண்ணிய காலம் -சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1ம் நாள் (14.04.2023) வெள்ளிக்கிழமை முற்பகல் 10.03 மணி முதல் பிற்பகல் 6.03 மணி வரை உள்ளது.

* மருத்துநீர் - சிரசில் கொன்றை இலையும், காலில் புன்கிலையும் வைத்து ஸ்தானம் செய்தல்.

* வருடப்பிறப்பு நிறம் - வெள்ளை நிறமுள்ளது அல்லது வெள்ளைக்கரையமைந்த ஆடைகள் அணியலாம்.(வெண்மை - தூய்மை )

இந்த வருடப்பிறப்பு சகல செளபாக்கியங்களையும் நலன்களையும் பெற்று தருவதோடு மக்களுக்கு நல்புத்தியும் சிறந்த பக்தியும் ஞானத்தையும்(நல்லறிவு நற்பண்புகள் நல்லொழுக்கம்  அனுபவம்) தந்து தூயதவத்தாற் பெற்ற மானிடப் பிறவியில் இனிது சிந்தித்து மங்களகரமாக வாழக்கடவர்.

நீதிக்கு பின் பாசம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 



ஒரு படம் ஓடி வெற்றி பெற்றவுடன் அந்த படத்தின் கதை என்னுடையது அதை திருடி படமாக்கி விட்டார்கள் என்று வழக்குப் போடுவது தமிழ் திரையுலகில் அவ்வபபோது நடப்பதுதான். சில ஆண்டுகளுக்கு முன் கூட விஜய்யின் ஒரு படத்துக்கு இந்த நிலை ஏற்பட்டது. ஆனால் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் எம் ஜி ஆர் நடித்து தேவர் பிலிம்ஸ் தயாரித்த நீதிக்கு பின் பாசம் படத்துக்கும் இதே போன்ற ஒரு பிரச்னை உருவானது.

எம் ஏ அபபாஸ் என்ற கதாசிரியர் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாக திகழ்ந்தார். இவர் எழுதிய கள்ளத்தோணி என்ற நாவல் இலங்கையிலும், தமிழகத்திலும் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் நாட்டின் பிரபல வர்த்தகரும், படங்களுக்கு நிதி உதவி செய்பவருமான யாசின் என்பவர் மூலம் இவருக்கு சின்னப்பா தேவரின் அறிமுகம் ஏற்பட்டது . தேவருக்கு இவர் சொன்ன இரண்டொரு கதைகள் பிடிக்கவில்லை. ஆகவே தேவர் அப்பாஸிடம் நான்கு வரிகளில் ஒரு கதையை சொன்னார்.

அந்த கதைக்கு திரைக்கதை எழுதி வரும்படி அப்பாஸிடம் கூறினார். சில மாதங்கள் கழித்து அப்பாஸிடம் நான்கு வரியில் சொன்ன கதையை நீதிக்கு பின் பாசம் என்ற பேரில் படமாகத் தயாரித்து தேவர் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அப்பாஸிடம் இருந்து தேவருக்கு வக்கீல் நோடீஸ் ஒன்று வந்தது. அதில் நீதிக்கு பின் பாசம் படத்தின் கதை தன்னுடையது என்றும் அதனை தன்னுடைய அனுமதி இன்றி தேவர் படமாக்கிவிட்டார் என்றும் படத்தின் கதையை தான் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் உரிமை கொண்டாடி இருந்தார்.

தேவர் தனக்கு நிதியுதவி அளிக்கும் யாசினை அணுகினார். அவரின் மத்தியஸ்தத்துடன் அப்பாஸுக்கு பத்தாயிரம் ரூபாயை வழங்கி பிரச்னையை முடித்துக் கொண்டார் தேவர்!

ஒரு போலீஸ் அதிகாரி, அவர் மனைவி ஒரு மருத்துவர், ஒரு மகன் அரச தரப்பு வக்கீல், மற்றைய மகன் எதிர் தரப்பு வக்கீல் . இளைய மகன் கோபால் வீட்டில் முறை பெண் காத்திருக்க கிராம பெண்ணான கௌரியை காதலிக்கிறான். காதலுக்கு தாய் தடை போடுகிறாள். அதே சமயம் கௌரியின் தந்தை சிவசாமி மர்மமான முறையில் கொல்லப் படுகிறார். கொலை பழி கோபாலின் தாய் மீது விழ போலீஸ் அதிகாரியான அவள் கணவனே அவளை கைது செய்கிறார் . மூத்த மகன் அரச தரப்பில் அவளுக்கு எதிராக வாதாடுகிறான். இளைய மகன் தாயின் விடுதலைக்காக வாதாடுகிறான், போராடுகிறான். இதுதான் படத்தின் கதை.

படத்தில் எம் ஜி ஆரின் தாயாக கண்ணாம்பா மிடுக்குடன் நடித்திருந்தார். இதுவே இருவரும் சேர்ந்து நடித்த கடைசி படமாகும்.

படத்தில் கோபாலாக எம் ஜி ஆர் நடித்திருந்தார். கதாநாயகி சரோஜாதேவிக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுக்கிறார், வயதானவர் போல் வந்து காதலிக்கிறார், காதலியை பிரிந்து துடிக்கிறார் , தாய்க்காக நீதிமன்றில் வாதாடுகிறார் , வில்லன் நம்பியார் , சின்னப்ப தேவருடன் போராடுகிறார், ஈற்றில் வெற்றி வகை சூடி காதலி கரம் பற்றுகிறார். எல்லா விதத்திலும் குறை இல்லாத நடிப்பை வழங்குகிறார் எம் ஜி ஆர்.

ஆடி இடையை அசைந்து , பின்னழகை காட்டி அறுபதாண்டுகளுக்கு முன்னரே ரசிகர்களை பரவசப் படுத்துகிறார் சரோஜாதேவி. இடை இடையே உருக்கமான நடிப்பையும் வெளிப்படுத்துகிறார். படம் முழுதும் கண்டிப்பான அம்மாவாக வருகிறார் கண்ணாம்பா. அப்படி இருந்தும் முறைப் பெண்ணை விடுத்து வேறு பெண்ணை காதலிக்கிறான் மகன்! ரங்காராவ் போலீஸ் அதிகாரி, அசோகன் அரச தரப்பு வக்கீல். இவர்களுடன் நம்பியாரும் வந்து முறைப்பு, விறைப்பு காட்டி எம் ஜி ஆருடன் மோதுகிறார்.

முதல் சந்திப்பு நூல் விற்பனையில் கிடைத்த நிதியை ஏழை மாணவர்க்கு வழங்கிய பெருந்தகை ஞானலட்சுமி ஞானசேகரன் ! முருகபூபதி

மகாகவி பாரதி தொடர்பாக ஒரு வினா விடையை படித்திருக்கின்றோம். அதில் ஒன்று உங்கள் தாய்நாடு எத்தகையது..? எ


ன்ற வினா.

அதற்கு பாரதி இவ்வாறு சொல்வார்:

“ ஞானத்திலே பர மோனத்திலே உயர்
மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு.  “

இலங்கையில் 2001 இற்குப்பின்னர் வெளிவரத்தொடங்கிய ஞானம் இதழின் ஆசிரியரின் பெயர் தி. ஞானசேகரன். அவரது துணைவியார் பெயர் ஞானலட்சுமி.  இவர்கள் இருவரின் பெயர்களில் முதலில் வரும் ஞானம் என்ற சொல்லே அந்த இதழின் தோற்றமோ என்றும் நான் யோசிப்பதுண்டு.

பெரும்பாலான எழுத்தாளர்கள், கலைஞர்களை கூட்டங்களில், மாநாடுகளில், கலை, இலக்கிய சந்திப்புகளில்தான் முதல் முதலில் சந்தித்திருப்பேன்.

ஆனால்,  கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தங்கு


தடையின்றி வெளிவந்துகொண்டிருக்கும் ஞானம் இதழின் இணையாசிரியர் திருமதி ஞானலட்சுமி ஞானசேகர ஐயர் அவர்களை நான் முதல் முதலில் சந்தித்தது, ஒரு அதிகாலைப்பொழுதில்  அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தின்  மெல்பன் நகரில் சிட்னிக்குச்செல்லும் வீதியின் பஸ் தரிப்பு நிலையத்தில்தான் எனச்சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால், அதுதான் உண்மை.

இவரது கணவர் மருத்துவர் தி. ஞானசேகர ஐயரையும் நான் அதற்கு முன்னர் 1999 ஆம் ஆண்டு முற்பகுதியில்தான் முதல் முதலில் நான் வதியும் மெல்பனுக்கு அவர் முதல் தடவையாக வந்தபோது சந்தித்தேன்.

  அவர் அந்த ஆண்டு வரும்போது மல்லிகை ஜீவாவிடம் எனது முகவரியை பெற்றுக்கொண்டு புறப்பட்டிருந்தார். ஞானம் தம்பதியரின் மூத்த புதல்வன் இராஜேஸ்வரன்  சிட்னியில் இருந்தார். அவரிடம் வந்திருந்த மருத்துவர் ஞானசேகரன்,  இலங்கையில் அப்போதே  பிரபல எழுத்தாளராக அறிமுகமாகியிருந்தவர்.  அவரது குருதி மலை நாவல் உட்பட வேறு கதைகளையும்  படித்திருந்தாலும்,  நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.

1999 முற்பகுதியில் தனியாக வந்திருந்த மருத்துவர் ஞானசேகரன், அதன்பின்பு வரும்போது தனது பயண அனுபவங்களை எழுதிய  அவுஸ்திரேலிய பயணக்கதை என்ற நூலுடன் வந்தார். அப்போது அவருடன் வருகை தந்திருந்த திருமதி ஞானலட்சுமி ஞானசேகரன் அவர்கள் தான் எழுதியிருந்த இந்து மதம் என்ன சொல்கிறது..? என்ற நூலுடன் வந்திருந்தார்.

இரவிரவாக பயணித்து மெல்பனுக்கு பஸ்ஸில்  வந்திறங்கிய  இந்தத் தம்பதியரை குறிப்பிட்ட சிட்னி வீதியில் அதிகாலையில் சந்தித்து வரவேற்று அழைத்து வந்தேன்.

மெல்பனில் அவர்களின் இரண்டு நூல்களும் கலைஞர் மாவை நித்தியானந்தன் தலைமையில் நடந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது.  திருமதி ஞானலட்சுமியின் நூல் பற்றி எங்கள் மத்தியில் வதியும் தமிழ் அறிஞர் திருமதி பாலம் லக்‌ஷ்மணன் அம்மையாரும்,  ஞானசேகரனின் அவுஸ்திரேலிய பயணக்கதை நூலைப்பற்றி இலக்கிய ஆர்வலர் திரு. சிவசம்புவும் உரையாற்றினர்.

இறுதியில் தம்பதியர் தங்கள் ஏற்புரையின்போது,  எம்மை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினர். நூல்களின்  விற்பனையில் கிடைத்த நிதியனைத்தையும் நாம் நடத்தி வரும்  தன்னார்வத்  தொண்டு  நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்கே வழங்கவிருப்பதாக சொன்னார்கள். அவர்கள் வழங்கிய உதவி கல்வி நிதியத்தின் நிரந்தர வைப்பு நிதியில் சேர்க்கப்பட்டது.

இவ்வாறு கல்விக்காக உதவிசெய்த திருமதி ஞானலட்சுமி அவர்கள் சிறந்த கல்விப்பின்புலத்திலிருந்து வந்தவர்.      கீரிமலை ராமஐயர் -  காமாட்சி அம்மாள் தம்பதியின் மகளாவார். தந்தை திருவனந்தபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். மகா மகோபாத்தியாய பட்டம்பெற்றவர். பி.ஏ. (லண்டன்) பட்டத்துடன்  இராமநாதன் கல்லூரி சமஸ்கிருத ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

தாயார் காமாட்சி அம்மாள் கீரிமலை நகுலேஸ்வர ஆலய பிரதமகுரு குமாரசாமிக் குருக்களின் மகளாவார்.

கு.ப.ராவின் ‘விடியுமா?’ (கன்பரா யோகன்)



கு..ரா என்று அறியப்பட்ட கு. .ராஜகோபாலன் அவர்கள் எழுதிய சிறுகதையொன்றை  அண்மையில் வாசித்தது பற்றிய சிறு குறிப்புகளே இவை.

தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடிகளில் ஒருவர் என்று

இவரைக் குறிப்பிடுகிறார்கள்.  42 வருடங்கள் மட்டுமே வாழ்ந்து மறைந்த கு..ரா வின் சில சிறுகதைகளை வலைத்தமிழ் என்ற இணையத் தளத்தில்  அண்மையில் காண முடிந்தது.

 'விடியுமா?'  என்ற கதை எழுதப்பட்டு எப்படியும் இப்போது  80 வருடங்கள் கடந்திருக்க வேண்டும். ஏனென்றால் கு.ப.ரா 1944 யிலேயே இறந்து விட்டார்.

தந்திகள் அவசரச் செய்திகளைத் தாங்கி வந்த காலத்தை நினைவூட்டுகிறது கதை. தந்திச் செய்தியைக் கேட்டு கதை சொல்லி தனது தமக்கையுடன்  ரயிலில் பயணிக்கும் பின்னணியில் கதை நகருகிறது.

 கதை சொல்லிக்கு விடிந்து விட்டது என்ற பொருளில் கதையை முடிக்கிறார் கு..ரா. அதே வேளை அவர் இன்னொரு பக்கத்தை வேண்டுமென்றே சொல்லாமல் தவிர்த்து விடுவது அதில் இரு வகை ஊகங்களும் சாத்தியம் என்பதாலோ, அல்லது கலையின் அழகியல் என்ற இலக்கணத்தை நிறுவ முயன்றதாலோ என்று தெரியவில்லை. எப்படியாயினும் கதையின் முடிவுக்குப் பிறகு வாசகர்களை  சிந்திக்க வைக்கும் உபாயம்தான் அது.

இலங்கைச் செய்திகள்

 நியுசிலாந்துக்கு பயணமான 248 இலங்கையர் உயிரிழந்தனரா?

இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்துக்கு சீனா உதவியது

பொருளாதார மீட்சிக்கு அமெரிக்கா ஆதரவு!

தலைமன்னார் - தனுஷ்கோடி கப்பல் சேவையுடன் சுற்றுலா அபிவிருத்தி

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 14 வருடங்களின் பின் விடுதலை!


நியுசிலாந்துக்கு பயணமான 248 இலங்கையர் உயிரிழந்தனரா?

2019 இல் நியுசிலாந்துக்கு ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்ட இலங்கையர் தொடர்பாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இவர்கள் காணாமல் போயிருக்கலாமென, நியுசிலாந்தின் ஊடகமொன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

உலகச் செய்திகள்

ட்ரம்ப் மீது நீதிமன்றத்தில் 34 குற்றச்சாட்டுகள் பதிவு 

இந்திய எல்லையை காக்க அமெரிக்கா உதவ திட்டம்

லெபனான், காசா மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் கடும் தாக்குதல்

சிரியாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

  ‘ஒபெக்’ நாடுகளின் திடீர் எண்ணெய் உற்பத்தி குறைப்பால் விலை உயர்வு

ஹொங்கொங்: 15,000 பேர் நாடுகடத்தப்படும் அச்சம்


ட்ரம்ப் மீது நீதிமன்றத்தில் 34 குற்றச்சாட்டுகள் பதிவு 

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை 76 வயது ட்ரம்ப் மறுத்துள்ளார்.

தமிழ் படங்கள் - விடுதலை & பத்து தலை வாரம் 2 சினிமா பட்டியல்.

 திரையரங்குகளில் பரவலாகப் பாராட்டப்பட்ட இந்தப் படங்களைத் தவறவிடாதீர்கள்.