சுழல் ஜாம்பவான் ஷேன் வோர்ன் காலமானார்

 Friday, March 4, 2022 - 8:46pm

சுழல் ஜாம்பவான் ஷேன் வோர்ன் காலமானார்-Shane Warne Passed Away

சுழல் ஜாம்பவான் ஷேன் வோர்ன் காலமானார்-Shane Warne Passed Awayஉலகப் புகழ் பெற்ற சுழற்பந்து ஜாம்பவானான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வோர்ன் (52) காலமானார்.

Shane Keith Warne யின் மரணத்திற்கு மாரடைப்பு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

கிரிக்கெட்டின் ஆல் டைம் ஜாம்பவான்களில் ஒருவரான ஷேன் வோர்ன் தனது 52ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார். அவரது பிறந்ததினம் 1969 செப்டெம்பர் 13.

இங்கிலாந்து ஆடவர் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க ஆர்வமாக உள்ளதாக ஷேன் வார்ன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1992 மற்றும் 2007 க்கு இடையில் விஸ்டனின் ஐந்து துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக பெயரிடப்பட்ட வோர்ன், ஆஸ்திரேலியாவுக்காக 15 வருடங்கள் விளையாடி 708 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றினார், மேலும் 1999 இல் உலகக் கோப்பையை வென்றவர்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பொங்கல் விழா

 


சிட்னி, ஆஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் முன்னெடுப்பில் பொங்கல் விழா ஏழாம் ஆண்டாக இவ்வருட பாராளுமன்ற முதல் அமர்வு நாளான பெப்ரவரி 15ம் நாள்  இனிதே நடந்தேறியது. முக்கிய பிரமுகர்களால் குத்துவிளக்கேற்றலுடன் தமிழ்த் தாய் வாழ்த்து, இந்திய ஆஸ்திரேலிய

தேசிய கீதத்துடன் தொடங்கிய நிகழ்வு பரதநாட்டியம், பறையாட்டம் மற்றும் கிராமியக் கலை நிகழ்வுகளுடன் ஜொலித்தது.  மேலும் ஆஸ்திரேலிய கம்பன் கழக மாணவர்களின் பொங்கல் பண்டிகை பற்றிய சிறப்புரை மெருகேற்றியது. விழாவில் அமைப்பின் தலைவர் அனகன் பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவில் நியூ சவுத் வேல்ஸ் சட்டமன்ற சபாநாயகர் மாண்புமிகு ஜொனாதன் அமைச்சர் பெருமக்கள் மார்க் குரே, ஜெப் லீ, சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் கிறிஸ் மின்ஸ், இந்திய தூதரக அதிகாரி மனிஷ் குப்தா, கம்பர்லண்ட்   மேயர்  லிசா லேக், பரமாட்டா துணை மேயர் சமீர் பாண்டே உள்ளிட்ட பிரமுகர்களும், பல்வேறு கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறுப்புரையாற்றி சிறப்பித்தனர்.  விழாவில் அமைப்பின் துணைத் தலைவர் சுமதி ரவி நன்றியுரையை வழங்கினார். செல்வி பாரதி ஷண்முகம்  விழாவை ஒருங்கிணைத்தார்.  வண்ணமயமாய் அலங்கரிக்கப்பட்ட அரங்கமும், விழா முடிவில் கலந்து கொண்டோருக்கு வழங்கப்பட்ட பொங்கலும் விழாவை முழுமையடைய செய்தது.

பெருஞ் சக்தியானவளை பேணிநிற்போம் வாரீர் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா




மாநிலத்தில் மாதவமாய் வந்தவளே பெண்தான்
மங்கலமாய் திகழ்பவளும் மாநிலத்தில் பெண்தான்
ஊணுறக்கம் தனைமறந்து உழைப்பவளும் பெண்தான்
உயர்நிலைக்கு வருவதற்கும் உந்துசக்தி பெண்தான் ! 

பெண்ணவளை மனமிருத்தி பெயர்களையும் வைப்போம்
மண்பார்த்தால் நதிபார்த்தால் பெண்ணவளே வருவாள்
கல்வியொடு செல்வம்வீரம் தருஞ்சக்தி தனையும்
பெண்பெயரால் அழைத்துமே பெருமகிழ்வு அடைவோம் ! 

எம்பெருமான் சிவனாரின் இடதுபுறம் இருக்கும்
இயங்கு சக்தியானவளும் பெண்ணாக உள்ளாள் 
வெங்கொடுமைத் தீயிடையே விழுந்தெழுந்து வந்து
மேதினியே வியக்கும்படி நின்றசீதை பெண்ணே !

நீதியினை நிலைநாட்டத் தவறிநின்ற மன்னன் 
நெஞ்சுறைக்க சபையேறி நின்றவளும் பெண்ணே
பாதை தடுமாறியே சமணம் நெறிபுகுந்தர் 
பக்குவமாய் அப்பராய் ஆக்கியவளும் பெண்ணே ! 

நூற்றியைந்து ஆண்டுகளில் சோவியத்தில் நேர்ந்த மாற்றங்கள் ! எங்கிருந்து எங்கே….?! அவதானி


இந்தப்பதிவை எழுதிவரும் அவதானிக்கு

ரஷ்யா – உக்ரேய்ன் மோதல் தொடங்கியதும்  பின்வரும் குறிப்பு வந்து சேர்ந்தது. அதனை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இரண்டாம் உலகப் போரின்போது, சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது.

தனது வீட்டின் அருகே உள்ள தெருவை அந்த வீரர் அடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனங்களில் சடலங்கள் ஏற்றப்பட்டிருப்பதைப் பார்த்ததும், எதிரிகள் தனது நகரத்தில் குண்டு வீசியுள்ளனர் என்பதைப் புரிந்துகொண்டார்.

டஜன் கணக்கில் சடலங்கள் கூட்டுக் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையில் இருந்தன. அடுக்கப்பட்ட சடலங்களின் முன்னால் அந்த சிப்பாய் சற்றுநேரம் நின்றார்.

ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த பாதணிகளை அவர் திடீரெனக்


கவனித்தார். முன்பு தனது மனைவிக்காக தான்  வாங்கி வந்த ஷூ போல் இருந்தது.

உடனே வீட்டுக்கு ஓடினார். வீட்டில் யாரும் இல்லை. வேகமாகத் திரும்பி வந்து வாகனத்தில் இருந்த அந்த உடலைப் பரிசோதித்தார். அது அவரது மனைவியேதான். அதிர்ச்சியடைந்தார்.

பொதுக் கல்லறையில் மனைவியைப் புதைக்க விரும்பவில்லை என்றும் தனிக் கல்லறையில் புதைக்க விரும்புவதாகவும் கூறி உடலைத் தருமாறு வேண்டினார். அனுமதி கிடைத்தது.

வாகனத்தில் இருந்து உடலை வெகு சிரமத்துடன் வெளியே எடுக்கும்போது,  மனைவி இன்னும் உயிருடன் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.

உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தேவையான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் உயிர் பெற்றாள்

அந்த வீரரின் மனைவி.



இந்த விபத்து நடந்து பல வருடங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட உயிருடன் புதைக்கப்பட இருந்த அந்த மனைவி கர்ப்பமுற்றாள். ஆண் குழந்தை பிறந்தது.


பிரசவம் பார்த்தவர்கள் பையனுக்கு பெயர் சூட்டினர். பெயர் என்ன தெரியுமா..?

விளாடிமிர் புடின். அவர்தான் ரஷ்யாவின் தற்போதைய ஜனாதிபதி.

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி கிளின்டனின் மனைவியும்  அமெரிக்காவில்  முன்பு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவருமான திருமதி ஹிலாரி கிளின்டன்,  தான் எழுதியிருக்கும்  "Hard Choices"  என்ற புத்தகத்தில் இந்தத் தகவலை  குறிப்பிட்டிருக்கிறார்.

தீக்குள் விரலை வைத்தால் ! - கிறிஸ்டி நல்லரெத்தினம்


போர் ஆரம்பம்!


இந்த இரு வார்த்தைகளின் பின்னே உள்ள சோகங்களையும் இழப்புகளையும் வேதனை வடுக்களையும் பற்றி சொற் சுணாமிகள் இனியே கரைதட்டத் தொடங்கும்.

'ஏன் போர்?'  என்பதற்கான வியாக்கியானங்களை போர் ஆராய்வாளர்கள் எம்முன் படைக்கத் தொடங்கிவிட்டனர்.

எந்தப் போருக்கும் பல பரிமாணங்கள் உண்டு. இப்பரிமாணங்கள் முற்றிப் பழுத்து போராய் வெடிக்கும் போது நிகழும் இழப்புக்கள் மீட்டெடுதலுக்கு அப்பாற்பட்டவை!

நேட்டோவில் (NATO)  இணைவதற்கான உக்ரையினின் நகர்வு, ரஷ்ய ஆதிக்கத்தை விஸ்தரிக்க ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் முன் நகர்வு, அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்குமான பனிப்போரின் உச்சம் என பல பரிமாணங்கள் இங்கு உண்டு.

இப்பரிமாணங்களின் தொகுப்பை ஆராய்ந்து அவற்றை ஒரு கட்டுரையில் அடக்கிவிட முடியாததால்  ரஷ்ய- உக்ரைன் போரின் ஒரு பரிமாணத்தை  மட்டும் இங்கே பார்ப்போம்.

மணித்துளியில் மன்பதையின் அழிவைத் தடுக்க மன்றுளாடி கண்திறந்து அருளிட வேண்டும்



 பல்வைத்திய கலாநிதி   பாரதி இளமுருகனார்

                                                                                                  

 

 


இரஸ்யா  --  உக்றேன் போர் 



கட்டுப்பாட் டில்என்றோ இருந்த நகர்கள்

                                  கைவிட்டுப் போகவிட்ட இரஸ்யாவும் செல்வம்

                         கொட்டித்தரும் அவற்றையென்றும் விடமன மின்றிக்

                              கோரப்போர் ஒன்றையுக் கிறேன்மீது தொடுத்து

    கிட்டவுள்ள அவற்றைத்தான் மீட்டெ டுக்கக்

                                      கிளர்த்தெழுந்து முழுமூச்சாய்ப் போர்தொ டுத்துத்

          தட்டிநின்று கேட்பவர்கள் பலர்எதிர்த் தபோதும்

                                    தயங்கிடாது குண்டுமழை பொழியக் கண்டோம்!

 


எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் -05 “ காலமும் கணங்களும் “ நெடுங்கதையின் நான்காம் அத்தியாயம் முருகபூபதி

 


பேர்த்தில்…. உமக்கு வேலை எடுப்பது கொஞ்சம் கஷ்டம் சந்திரன். இன்றைக்கு டிலக்ஸ்ஸில் அல்லது அன்ஸட் பயணியரில் உமக்கு சீட் புக்பண்ணுவோம்.  “

 பாலேந்திரா சொல்வதை அருகே அமர்ந்து கதை கேட்பது போல் கேட்டுக்கொண்டிருந்தான் சந்திரன்.

 “ இன்றைக்கு வேலை இல்லையா..? “

 “ இங்கே எமக்கு மாதத்தில் ஒருநாள்  ‘ ரொஸ்டர் டே    என்று விடுமுறை தருவார்கள். அதனை எப்போதும் எடுக்கலாம். இன்றைக்கு எனக்கு நிறைய அலுவல்கள், பேங்க் லோன்… வீட்டின் மோட்கேஜ் தவணைப்பணம், கார் இன்ஸுரன்ஸ்… யுனிவர்சிட்டியில் ஒரு கோர்ஸுக்காக விண்ணப்பம்… இப்படி… அதோடு உமக்கும் மெல்பன் போவதற்கு பஸ்ஸில் சீட் புக் பண்ணிவிடலாம் என்று பார்க்கிறன். 

 “ உங்கட மிஸிஸுக்கு இன்றைக்கு வேலையாக்கும்…? “

   ஓமோம்… சந்திரன்… சொல்ல மறந்திட்டன்.  நேற்று… வசந்தி அப்படி கத்தியதை இப்பவும் மனசில் வைத்திருக்கிறீரோ…? “  சிக்னலுக்கு


முன்னே காரை நிறுத்தி, ஸ்டியரிங்கில் இரண்டு கைகளையும் முழங்கை வரையில் பதிந்து நெஞ்சையும் முகத்தையும் முன்னெடுத்து, முகத்தை திருப்பிக்கேட்டார் பாலேந்திரா.

 “இல்லை… இல்லை… எனக்குப்புரிந்தது 

 “வெரி குட் 

கார் மீண்டும் புறப்பட்டபோது, சந்திரன் சொன்னான்:   “என்னை நீங்கள் இருவரும் மன்னிக்கவேண்டும் 

 “ ஏன்…?   “ பாலேந்திரா சற்று உரத்த தொனியிலேயே கேட்டார்.

 “ வந்து… என்ர தம்பியும்… அந்த  ‘ஒப்பரேஷன்  ‘ ல ஒருத்தனாய் இருக்கவேண்டும் 

  ஓ…  ஐ ஸீ… அதனாலென்ன சந்திரன்…?  நடந்தது நடந்துபோய்விட்டது. இனி அதைப்பற்றி பேசிப்பயனில்லை.  உம்மட தம்பியும் அதில் ஒருத்தன்தான் என்பதை வசந்தி இப்போது அறிந்தாலும் கோபப்படமாட்டாள். 

 “அப்படியென்றால்….?! 

 “ சும்மா ஒரு பெருமூச்சுத்தான் விடுவா….” 

 “ நான் சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன். இரண்டு மூன்று நாட்களாக உங்கள் வீட்டில் உப்பைத் தின்றுகொண்டு, அந்த உண்மையை மறைக்க என் மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை. 

 “ ஊரில் நிறைய தமிழ்ப்படங்கள் பார்த்திருக்கிறீர் போலத் தெரியுது…..”  பாலேந்திரா சிரித்துக்கொண்டே கேட்டு அவனது உணர்வை அடக்கினார்.

 அன்ஸட் பயணியர்  அலுவலகத்தில் சந்திரனுக்காக ஒரு ஆசனத்தை பதிவுசெய்துவிட்டு திரும்பும்போது,  “ இன்றைக்கு இரவுக்கு அந்தப்புலவரின்ட ரெலிபோன் இலக்கத்தையும் அட்ரஸையும் தாரன். பிறகு ஞாபகப்படுத்தும்.  “ என்றார் பாலேந்திரா.

 “ புலவரா…? யார்…?  

ஈழத்தின் முது பெரும் எழுத்தாளர் செங்கை ஆழியான் நினைவில் ஆறாண்டுகள்

 


இன்று என் எழுத்துலக ஆசானும், ஈழத்து இலக்கியப் பரப்பில் தாரகையாக ஒளி வீசிய செங்கை ஆழியான் அவர்களது நினைவில்

அவரோடு நான் 20 ஆண்டுகளுக்கு முன் கண்டிருந்த வானொலிப் பேட்டியைப் பகிர்கின்றேன்.
கானா பிரபா
28.02.2022

பெண்மையின் பெருமையை கண்ணெனப் போற்றுவோம் !

 

முருகபூபதியின் ஏழாவது கதைத் தொகுதி புலம்பெயர் தமிழரின் வாழ்வுக்கோலங்களை சித்திரிக்கும் “ கதைத்தொகுப்பின் கதை “ கனகா கணேஷ் – சிட்னி


பிரபல எழுத்தாளரும் இலக்கிய செயற்பாட்டாளருமான முருகபூபதி ஈழத்து இலக்கிய உலகில் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர். படைப்பிலக்கிய வாதியாகவும் ஊடகவியலாளராகவும் இயங்கி வருபவர். சிறுகதைக்காகவும், நாவலுக்காகவும் இரண்டு தடவைகள் இலங்கையில் தேசிய சாகித்திய விருது பெற்றவர். அவரது ஏழாவது  கதைத் தொகுதியான    "கதைத் தொகுப்பின் கதை"  யாழ்ப்பாணம் ஜீவநதி வெளியீடாக வரவாகியுள்ளது.  

பதினைந்து சிறுகதைகளைக்கொண்ட  இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையைப்பற்றியும்  பதினைந்து தேர்ந்த வாசகர்கள்,  தங்கள் வாசிப்பு அனுபவத்தை இந்நூலில் பகிர்ந்துள்ளனர்.  அவர்கள் இலங்கை, அவுஸ்திரேலியா,  கனடா, இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். அதனாலும் இந்நூல்    தனிச் சிறப்படைகிறது.   கதைகளின்  பாத்திர அமைப்பும் கதைகளை சுவாரஸ்யமாக சொல்லிய விதமும் ஆசிரியரின் நேர்த்தியான நடையில் அழகாக மிளிர்கின்றது.

ஈழம் மற்றும் புலம் பெயர் மக்களின் வாழ்க்கை, அந்நிய நாட்டில்


அவர்களுக்கென அமைத்துக் கொண்ட கலாச்சாரம் மற்றும் சம்பிரதாய முறைகளை அடிப்படையாகக்  கொண்ட இக்கதைத் தொகுப்பில் நாம் நிஜ வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பாத்திரங்களையே கதைகளின் நாயகர்களாக  நினைவில் நிறுத்துகிறார் ஆசிரியர்.

புலம் பெயர் மக்கள் அந்நிய தேசங்களில் தங்களின் அடையாளங்களை  தொலைத்து தங்கள் நடை உடை பாவனைகளில் கூட தங்களை அந்நிய தேசத்தவர்களாகவே  இனம் காட்ட முயற்சிப்பதை மிக நாசூக்காக நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்.

 ஒவ்வொரு கதைக்கும் தேர்ந்தெடுத்த தலைப்புகள் கதையின் போக்கோடு ஒத்து போகின்றன.

 தலைப்பினை ஒட்டிய சம்பவக் கோர்வைகளும் தொய்வின்றி  கதை சொல்லிய விதமும் ஆசிரியருக்கே உண்டான தனிச் சிறப்பு.

 "கதைத் தொகுப்பின் கதை"யைக்  கதையென்று மேலோட்டமாக படித்து விட்டு செல்ல முடியாதபடி, கதையின் நாயகி நம் மனதை விட்டு அகல மறுக்கிறார்.  தங்களது  தனித்திறமைகளையும் கனவுகளையும் சமூக அமைப்புக்கு  கட்டுப்பட்டு  ஆழ் மனதுக்குள்ளேயே புதைத்து நடைப் பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ சுந்தரி டீச்சர்களை நம்மில் கிளர்ந்தெழச் செய்கிறது ஆசிரியரின்  அந்தப் பாத்திர படைப்பு.

 "கணங்கள்" சிறுகதை புலம்பெயர் புகலிடச்சிறுகதை நூல் "முகங்கள்" தொகுப்பில் இடம் பெற்றிருப்பதோடு சிங்கள மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டது.

கற்பதருவினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை முப்பத்து இரண்டு ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா
               


    பனையொடு தானும் சரிநிகர் சமமாக நிற்கவேண்டும் என்று


தென்னையும் முயன்றபடியேதான் இருக் கிறது.ஒவ்வொரு தருணத்திலும் தென்னை முந்திக்கொண்டு வந்துநிற்கும். ஆனால் பனையோ எந்தவிதச் சலனமுமின்றி தன்பாட்டில் , தனது பங்களிப்பினை வழங்கியபடியே இருக்கும்.பாளையினை வெளியிடும் விதத்தில்  தென்னையும் பனையும் ஒத்துப் போவதாகவே இருக்கிறது. அப்படி இருந்தாலும் தென்னையி னைப் பின்னுக்குத் தள்ளி பனையானது முன்னால் வந்து நின்றுவிடுகிறது. தென்னையில் ஆண் ,   பெண்,   என்னும் நிலை இல்லை. பனையோ ஆண்பனை, பெண்பனை என்று இரண்டாக நிற்கிறது.தென்னையில் ஒரே இனம் மட் டுமே இருப்பதால் தென்னை பாளையினைத் தந்துவிட்டு நின்றுவிடுகிறது. பனையில் ,   ஆண்பனையும் பாளையினைத் தருகிறது. பெண்பனையும் பாளையினைத் தருகிறது. தென்னை இதனைப் பார்த்துவிட்டு ஒதுங்கியே நின்று விடுகிறது.தென்னையைப் பார்க்கப் பரிதாபமாகவே இருக்கிறதல்லவா ?

  நுங்கினைப் பனை தந்தது. அதற்கு இணையாக இளநீரை


தென்னையும் தந்தது. பனை பனம் பழத்தைத் தந்தது. தென்னையால் அப்படித் தரமுடியா நிலையில் தலை கவிழ்ந்து நின்று விடுகிறது. என்றாலும் தென் னையும் ஒவ்வொரு தரமும் முயற்சித்தபடியேதான் இருந்து கொண்டே  வருகிறது. பாளையிலிருந்து பெறப் படும் சாற்றினை பனையும் தருகிறது. தென்னையும் தருகிறது. அந்தச்சாறு " கள் " என்னும் பெயரினுக்கு உரித்தாக மாறும் நிலையிலும் பனையுடன் தென்னையும் சரிநிகர் சமமாகவே முன்வந்து நிற்கிறது. ஆனால் தொடர்ந்தும் தென்னையினால் முன்வந்து நிற்கமுடியாமலேயே ஆகிவிடுவதையே காணு கிறோம். தென்னையிலிருந்து பெறப்படும் கள்ளினையும் குடிக்கிறார்கள். பனையின் கள்ளினையும் குடிக் கிறார்கள். எனினும் தென்னங்கள்ளைவிடப் பனங்கள்ளினையே பலரும் விரும்பத்துடன் குடிக்கிறார்கள் என்பதுதான் நோக்கத்தக்கதாகும்.தென்னங்கள் பற்றிய குறிப்புகள் அவ்வளவு சொல்லும் அளவுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பனங்கள்ளுப் பற்றிய செய்திகள் சங்ககால இலக்கி யத்திலும் அதன் பின்வந்த புலவர்களின் பாடல்களிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கதேயாகும். பனங் கள்ளின் பயன்பாடு என்பது சமூகத்தில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது என்பதும் நோக்கத்தக்க தாகும்.