-->
" கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிடு.
நனைந்த அவள் உடலை நழுவாமல் தூக்கிவிடு.
மணக்கும் அவள் உடலை மணல் மீது தோயவிடு.
நடுக்கும் ஒளியுடலை நாணல்கொண்டு போர்த்திவிடு."
-- இந்த வரிகளுடன் தொடங்கும் கிணற்றில் விழுந்த நிலவு கவிதையுடன் 1960 ஆம் ஆண்டிலும் அதற்கு முன்னரே முத்தாரம் என்னும் சிறுகதையுடன் 1957 இலேயே இலக்கிய உலகிற்கு அறிமுகமானவருமான தமிழக கவிஞர் எஸ். வைதீஸ்வரனுக்கு தற்பொழுது 82 வயது.
உடலுக்குத்தான் இந்த வயது. ஆனால், இன்றும் அவரது கவிதைகளும்
கதைகளும் புதிதாக பிறந்திருப்பதுபோன்ற தோற்றம்கொள்வன.
திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் தேவமகள் விருது, சிற்பி அறக்கட்டளை விருது, அமெரிக்கத்தமிழர்கள்
வழங்கும் புகழ்பெற்ற ' புதுமைப்பித்தன் விளக்கு' விருது முதலானவற்றைப்பெற்றவர்.
தமிழ்த்திரையுலகிலும் நாடகத்துறையிலும் புகழ்பெற்ற குணச்சித்திர
நடிகர், மூத்த கலைஞர் சகஸ்ரநாமம் அவர்களின்
மருமகன். தி. ஜானகிராமன், சி.சு. செல்லப்பா, க. நா. சு. , பி.எஸ்.ராமையா, கு. அழகிரிசாமி ஆகியோருடன்
நேரடித்தொடர்பும் இலக்கியப்பரிச்சியமும் கொண்டிருந்தவர்.
சகஸ்ரநாமம் நடத்திய சேவாஸ்டேஜ் நாடகக்குழுவில் இணைந்திருந்தவர்,
பி. எஸ். ராமையாவின் தேரோட்டி மகன், தி. ஜானகிராமனின் வடிவேலு வாத்தியார் , கோமல் சுவாமிநாதனின்
புதிய பாதை முதலானவற்றிலும் நடித்திருப்பவர்.
ஜானகிராமன் எழுதிய நாலுவேலி
நிலம் கதை திரைப்படமானபோது அதில் மட்டுமன்றி வேறும் சில திரைப்படங்களிலும் தோன்றியிருப்பவர்.
தமது 22 வயதிலேயே எழுத்துலகில் பிரவேசித்த வைதீஸ்வரன் பிறந்தது
கோயம்புத்தூரில். சேலத்தில் படித்துவிட்டு, 1948 முதல் சென்னை வாசியானவர்.
சி.சு. செல்லப்பா நடத்திய எழுத்து இதழில் இவரது முதல்கவிதை வெளியானது. அதனையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான
சிற்றிதழ்களிலெல்லாம் எழுதியிருப்பவர்.
உதயநிழல், நகரச்சுவர்கள், விரல் மீட்டிய மழை, வைதீஸ்வரன்
கவிதைகள், கால - மனிதன் அதற்கு மட்டும் ஒரு ஆகாயம், மனக்குருவி முதலான கவிதைத்தொகுப்புகள், கால் முளைத்த மனம்,
திசைகாட்டி, வைதீஸ்வரன் கதைகள், ஆகிய கதைத்தொகுப்புகளையும், தேவனின் எழுத்துலகம் என்ற
ஆய்வு நூலையும் வரவாக்கியிருப்பவர். அண்மையில் அவர் எழுதிய அனைத்துக்கவிதைகளும் செம்பதிப்பாக
மனக்குருவி என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.
சென்னை ஏயர் இந்தியா நிறுவனத்தில்
பல வருடங்கள் நிருவாகியாக பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்றிருப்பவர். கவிஞர், சிறுகதைப்படைப்பாளி,
ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், அத்துடன் ஓவியர். இவரது நூல்களின் முகப்போவியங்களும் இவருடையதுதான்.
இவ்வாறு பன்முக ஆற்றலும் மிக்க வைதீஸ்வரன் எமது அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கியகலைச்சங்கத்தினதும் நெருக்கமான நண்பர்தான்.
2010 இல் நாம் மெல்பனில் நடத்திய பத்தாவது எழுத்தாளர் விழாவின்
கருத்தரங்கில் " இலக்கியப்படைப்பு படைப்பாளியின்
பிம்பத்தை உணர்த்துமா?" என்ற தலைப்பில் கருத்துச்செறிவுள்ள உரையை நிகழ்த்தினார்.
அந்தவுரை பின்னர் வீரகேசரியிலும் வெளியானது. கொழும்பில் 2011 இல் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலரிலும்
இடம்பெற்றது.
இப்பொழுது அதனைப்படித்தாலும் புதிதாக படிக்கும் உணர்வையே
தரக்கூடியது. வைதீஸ்வரனின் கதைகள், கவிதைகள் அனைத்திற்கும் இந்தத்தன்மை இருப்பது வியப்பானது. வைதீஸ்வரனின் குறிப்பிட்ட அந்தக்கட்டுரை இவ்வாறு
தொடங்குகிறது:
" எழுத்தாளன் என்பவன் மனிதகுலத்தின் மனசாட்சி என்ற பொன்மொழி
மாறி, அவன் தன் சமுதாயத்தின் பிணசாட்சியாக
எல்லாவற்றையும் தயக்கமான குரலில் முணுமுணுத்துக்கொண்டிருப்பவனாக இன்று செயல்படவேண்டியிருக்கிறது.
பொதுவாக நமக்கு எழுத்தாளர்களைப்பற்றிய அறிமுகம் என்பது அவர்களுடைய
புத்தகங்கள்தான். நாம் வாசிக்கும் புத்தகங்கள் மூலம் விவரிக்கப்படும் கதா பாத்திரங்களின்
சாயல்களில் ஏதாவது ஒன்றை அந்த எழுத்தாளருடைய ஆளுமையுடன் சம்பந்தப்படுத்திக்கொள்கிறோம்.
ஆனால், நடைமுறையில் அது வேறாக இருக்கிறது.
இந்த சமயம் எனக்கு ஒரு பழைய சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது.
1971 என்று நினைக்கிறேன். திருச்சியில் ஒரு கவிதைக்கூட்டத்துக்காக நான் அழைக்கப்பட்டிருந்தேன்.
ரயிலில் இருந்து இறங்கியவுடன் வரவேற்க வந்திருந்தவர்களில் ஒருவர் " ஏன் வைதீஸ்வரன்
வரவில்லையா? " என்று என்னைப்பார்த்துக்கேட்டார். " நான்தான் அது" என்றேன்.
எனக்கு அப்போது 35 வயது இருக்கும். " என்ன ஸார்... நீங்களா...வைதீஸ்வரன்?"
உங்கள் கவிதைகளைப்படித்தபோது வயதான முதியவராக நீண்ட தாடியும்
காவி ஜிப்பாவும் போட்டுக்கொண்டு கைத்தடியுடன் நிற்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். நீங்கள், உங்கள் கவிதையின் முதிர்ச்சிக்கும் உங்களுக்கும்
சம்பந்தமில்லாத ஆளாக இருக்கிறீர்களே?" என்று சொல்லிச்சிரித்தார்.
ஒரு படைப்பு நம் மனதிற்குள் அதன் ஆசிரியரின் பிம்பத்தை உருவாக்கிவிடுகிறது.
ஒரு படைப்பை வாசிக்கும்போது அதை எழுதிய ஆசிரியர் இப்படித்தான் இருக்கவேண்டுமென்று தீர்மானத்திற்கு வந்துவிடுகின்றோம்."
வைதீஸ்வரனின் இந்தக்கூற்றிலிருக்கும் உண்மை, அனுபவித்துப்பார்த்தவர்களுக்கு புரியும். அகிலனின் பாவைவிளக்கு திரைப்படமாகிய வேளையில் படப்பிடிப்பு
தளத்திற்கு வந்திருந்த அகிலனைப்பார்த்துவிட்டு சிவாஜி கணேசனும் அவ்வாறு ஏமாற்றமடைந்தவர்தான்.
வைதீஸ்வரன் முதல் முதலில் எனக்கு தொலைபேசி ஊடாகவே 1994 ஆம்
ஆண்டு காலப்பகுதியில் அறிமுகமானார். அவர் சிட்னியில் தமது பிள்ளைகளிடம் வந்திருந்தசமயம்
தொடர்புகொண்டார். நண்பர் இந்திரா பார்த்தசாரதியிடத்திலேயே
எனது தொலைபேசி இலக்கம் பெற்றிருக்கிறார். ஒருநாள் தொடர்புகொண்டு " வைதீஸ்வரன் பேசுகின்றேன்"
என்றார். அன்றிலிருந்து இற்றைவரையில் கடிதங்கள், தொலைபேசி, மின்னஞ்சல் வாயிலாக என்னோடு பேசிக்கொண்டிருப்பவர்.
இவருடனும் நேர்காணல் நடத்தி, பிரான்ஸிலிருந்து வெளியான நண்பர்
குகநாதன் நடத்திய ஈழநாடு இதழில் எழுதியிருக்கின்றேன். 1998 இல் வெளியான எனது சந்திப்பு நேர்காணல் தொகுப்பிலும் இவர் இடம்பெற்றுள்ளார்.