சிட்னியில் "செஞ்சொற் செல்வர்" கலாநிதி ஆறு. திருமுருகன் - அனுபவப் பகிர்வு

 Aaruthirumurugan.png

தற்போது சிட்னி வருகை தந்திருக்கும் ஆறு.திருமுருகன் அவர்களால் ஈழத்தில் முன்னெடுக்கப்படுப்படும் அறப்பணிகளின் நீட்சியும், சவால்களும் அனுபவங்களுமாக நமது ATBC வானொலிக்கு வழங்கிய பேட்டியைக் கேட்கலாம்.


இந்தப் பேட்டியின் வழியாக கோவிட் முடக்க காலத்தில் சந்தித்த புதிய சவால்கள், சிவபூமி என்று திருமூலரால் சிறப்பிக்கப்பட்ட ஈழத்தில் நிலவும் சைவ மதம் எதிர் நோக்கும் சவால்கள், நமது வரலாற்றை ஆவணப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் வேண்டிய தேவைகள் அதன் சார்பில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் என்று பரந்து விரிந்த தளத்தில் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.
கானா பிரபா
21.04.2023

கவிதை - ஏன் போனேன்? - மெல்போர்ன் அறவேந்தன்

 


முதல் சந்திப்பு: பல்துறை ஆற்றல் மிக்க கலா வித்தகி ஆனந்தராணி பாலேந்திரா முருகபூபதி


உள்ளார்ந்த கலை, இலக்கிய, ஊடக ஆற்றல் மிக்கவர்கள் தமது தாயகம்விட்டு உலகில் வேறு தேசங்களில் வாழ நேர்ந்தாலும், தமது ஆற்றல்களை வெளிப்படுத்திக்கொண்டேயிருப்பார்கள் என்பதற்கு மற்றும் ஒரு உதாரணமாகத்திழ்பவர் ஆனந்தராணி பாலேந்திரா.

இவரை 1970 களில் செல்வி ஆனந்தராணி இராஜரட்ணம் என்ற பெயருடன் முதல் முதலில் சந்தித்தது  இலங்கை வானொலி கலையகத்தில்தான்.

1970 – 1977 காலப்பகுதியில்  இவர் பங்கேற்ற மேடை நாடகங்கள், 


நாட்டிய நாடகங்கள்,  திரைப்படங்களில் இவரைப் பார்த்திருக்கின்றேன்.

நடன நர்த்தகி கார்த்திகா கணேசரின் நெறியாள்கையில் அரங்கேறிய எல்லார – காமினி நாட்டிய நாடகத்தில் கெமுனுவின் தாய் விகாரமாதேவியாகவும்,  கலைஞர் தாசீஸியஸின் பிச்சை வேண்டாம் நாடத்திலும்,  வாடைக்காற்று,  கோமாளிகள் திரைப்படங்களில் முக்கிய நாயகியாகவும் பார்த்தேன்.

எனினும்,   நாம் மீண்டும் சந்தித்து எமது கலை, இலக்கிய, வானொலி ஊடகத்துறை நட்பை வளர்த்துக்கொண்டது புகலிடத்தில்தான்.

இவரது கணவர் பாலேந்திராவை  1974 இல் சுஹேர்  ஹமீட்டின் ஏணிப்படிகள் நாடகத்தில் பிரதான பாத்திரத்தில்தான் முதல் முதலில் பார்த்தேன்.

இவர்கள் இருவரையும் இல்லற வாழ்க்கையில் இணைத்தது, இந்திரா பார்த்தசாரதியின் மழை நாடகம்தான்.

இந்த நாடகத்திற்கென ஒரு அபூர்வ செய்தி இருப்பதாக  எழுத்தாளர்  இ. பா. அடிக்கடி சொல்வார். மழை நாடகத்தில் நடிக்கும் நாயகனும் நாயகியும் பின்னர் மணம் முடித்து இல்லற வாழ்வினை தொடங்கிவிடுவார்களாம்.

ஆனந்தராணி – பாலேந்திராவுக்கும் இதுதான் நடந்தது.

மிக நீண்ட இடைவெளிக்குப்பின்னர் 2008 இல் இங்கிலாந்திலும், அதன்பிறகு  சில வருடங்கள் கழித்து, அவுஸ்திரேலியாவிலும்  இவர்களைச்  சந்தித்தேன்.

ஆனந்தராணி,  நாடகத் துறையில் 46 வருடங்களாக இயங்கி வரும்  கலைஞர்.

 நாடக நடிகையாக மட்டுமன்றி  சினிமா, வானொலி நடிகையாக, பரதநாட்டிய ஆசிரியையாக, தொலைக்காட்சி, வானொலி, மேடை அறிவிப்பாளராக தடம் பதித்தவர்.

 பூர்வீகம் வல்வெட்டித்துறை.  இளமைக் காலம் கொழும்பில்.  வெள்ளவத்தை சைவ மங்கையர் கல்லூரி பழைய மாணவி.  பிச்சை வேண்டாம்  நாடகத்தில்  பாலேந்திராவுடன் இணைந்து மேடை நாடகத்துறைக்கு அறிமுகமானவர். அப்போது இவருக்கு வயது 19.

க. பாலேந்திரா நெறிப்படுத்திய மழை நாடகத்திலிருந்து இற்றைவரையில்  அவரின் நெறியாள்கையில் சுமார் 40 நாடகங்களில் முக்கிய பாத்திரங்கள் ஏற்றவர்.

பல நாடகங்கள் பெண்களை மையமாகக் கொண்டவை.  நடிப்பதற்கு சிக்கலான சவாலான நாடகங்களில்  தனது நடிப்பாற்றலால் தான் ஏற்ற பாத்திரங்களுக்கு உயிர் ஊட்டியவர்.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 61 இறந்தவரின் அஸ்தியை வீட்டினுள் வைத்து பிரார்த்தனை ! அயோத்தி திரைப்படத்தின் ஊடாக நனவிடை தோய்தல் !! முருகபூபதி


எனது இந்தத் தொடரின் கடந்த 60 ஆவது அங்கத்தை படித்திருந்த சிலர்,  மின்னஞ்சலிலும்  வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசியிலும் தொடர்புகொண்டு,  தத்தமது கருத்துக்களை சொன்னார்கள்.

ஒரு சிலர் சினிமா பார்ப்பதுபோன்றிருந்ததாகவும் குறிப்பிட்டனர்.

அந்த அங்கத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் யாவும் உண்மை.  ஏற்கனவே அறிமுகமில்லாத ஒரு நாட்டில், ( பிலிப்பைன்ஸ் – சிபு தீவில் ) அம்மக்கள் எம்மிடத்தில் காண்பித்த கரிசனையை  என்றைக்குமே என்னால் மறக்க முடியவில்லை.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் நாம் அங்கிருந்த அந்த சில நாட்களில் எம்மீது பொழிந்த பாசத்தைப் பற்றி  அவர்களுக்குப்  புரியாத எனது தாய்மொழியில்தான் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

அங்கே நின்ற அந்த சில நாட்களில் நான் அவர்களின் மொழியில் சில சொற்களை கேட்டு தெரிந்துகொண்டு பேசியபோது   எனது உச்சரிப்பை ரசித்து அட்டகாசமாக சிரித்தார்கள்.

எனது மனைவியின் அப்பாவின் இறுதி நிகழ்வை நாம் முடித்துக்கொண்டு அவர்கள் ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் வீடு திரும்பினோம்.

வரும் வழியில்,  இறுதி நிகழ்வின்போது, நாம் அமரருக்கு செய்த சடங்கில் பயன்படுத்தப்பட்டவற்றை ( வாய்க்கரிசி உட்பட ) கடலில் கலந்துவிட்டு, வீட்டுக்கு வந்து,  ஒவ்வொருவராக குளித்துக்கொண்டிருந்தோம்.

நான் அந்த வீட்டின் முன் கூடத்திலிருந்து ,  மனைவியின் தங்கை சூரியகுமாரியின் ஏக புதல்வன்  காரூண்யனுக்கு வேடிக்கை காண்பித்துக்கொண்டிருந்தேன். அப்போது அவனுக்கு  மூன்று வயதுதான் இருக்கும்.  என்னோடு நெருக்கமாக ஒட்டிக்கொண்டான்.

அப்போது அந்த வீட்டிலிருந்த ஒரு பத்து வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை வெளி வாயிலிலிருந்து விரைந்து வந்தாள்.

அவளது கையிலே ஊதா நிறத்தில் சிறிய பெட்டகம் இருந்தது.

 “ அங்கிள்… அவர்கள் கொண்டுவந்து கொடுத்துவிட்டுச்செல்கிறார்கள்  “ என்றாள். வாங்கிப்பார்த்தேன்.

மாமனாரின் அஸ்தியுள்ள பெட்டகம்.  நான் அதனை பவ்வியமாக எடுத்து வந்து அந்த வீட்டின் பிரதான கூடத்தில் இருந்த யேசுநாதர் – தேவமாதா  உருவச்சிலைகளுக்கு முன்பாக வைத்தேன்.

அந்த வீட்டின் மூத்த மகள் மரியா உடனே அதற்கு அருகில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்தார். 

எமது சைவர்களின் வீடுகளில் இவ்வாறு மறைந்தவர்களின் அஸ்தியை உள்ளே கொண்டுவரமாட்டார்கள்.  அதனை கடலில் கரைப்பதற்குரிய குறிப்பிட்ட நாள் வரும் வரையில் வெளியேதான் வைத்திருப்பர். பெரும்பாலும் மயானத்தின் அலுவலக அறையில்தான் இருக்கும்.

ஆனால், பிலிப்பைன்ஸில்,  இந்த நடைமுறைகள் ஏதுமின்றி,  வீட்டினுள்ளே மாமனாரின் அஸ்தி வைக்கப்பட்டது.

ஏற்றுமதிக்கு தயாராகும் குரங்குகளும் இறக்குமதியாகும் கடன் உதவிகளும் ! அவதானி


என்னமோ தெரியவில்லை.  இலங்கையில் குரங்குகளின் வகிபாகம் ஐதீகத்திலிருந்தே தொடங்கியிருக்கிறது.

இந்திய வனத்தில் மேய்ந்துகொண்டிருந்த மானைப் பிடித்துத் தாருங்கள் என்று சீதாப் பிராட்டியார், கேட்டதனால் வந்த வினையால்  அத்தருணத்தில் இரவணனால் அவள் சிறைப்படுத்தப்பட்டு இலங்காபுரியின் அசோக வனத்தில் வைக்கப்பட்டாள்.

அவளை மீட்டுவருவதற்கு இராமர் அனுப்பிய தூதுவர் குரங்கு இனத்திலிருந்து வந்த அனுமார்.  அவரோ இராவணனின் சேவகர்களினால் வாலில் நெருப்பு வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.  பழி தீர்க்க அவர் லங்காவை தகனமாக்கினார்.  இராமாயணத்தில் லங்கா தகனம் பகுதியும்


முக்கியமானது.

இந்த ஐதீகக் கதைகள் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரும்  தொடர்ந்திருப்பதை அறிவீர்கள்.  கலவர காலத்தில்  தீய சக்திகள் சிறுபான்மை இனத்தவரின் சொத்துக்களுக்கு நெருப்பு வைத்தன.  அந்தத்  தீய சக்திகள் யாழ். பொது நூலகத்தையும் விட்டு வைக்கவில்லை. அவ்வேளையில் அது கண்டும் மௌனமாக அமைதி காத்திருந்தவரான  ரணில் விக்கிரமசிங்காவின் வீட்டு நூலகத்தையும் கடந்த ஆண்டு கோத்தா கோ போராட்டத்தில்  தீய சக்திகள் எரித்தன.

இலங்கைக்கு  தூதுவனாக வந்த அனுமார், இறம்பொடையில் சிலையாக கோயில் கொண்டுள்ளார். இராவணனால் சிறை வைக்கப்பட்ட சீதாப்பிராட்டிக்கும் கோயிலிருக்கிறது. இராமருக்கும் கோயில் இருக்கிறது.

இவர்கள் சிலையாக குடியிருக்கும் பிரதேசங்களில் மாத்திரமின்றி,  பொலன்னறுவை, கேகாலை,  தம்புள்ளை, முல்லைத்தீவு முதலான வனம் சார்ந்த பகுதிகளில்  குரங்குகளின் பிறப்பு வீதம் அதிகம்.  இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் சிறிய உடைமைகளையும் அவை பறித்துக்கொண்டு மரத்தில் தாவி ஏறிவிடும்.

சிறுவயதில் நாம் படித்த தொப்பி வியாபாரி கதையைப்போன்று எதனையாவது குரங்கை நோக்கி விட்டெறிந்தால், தான் பறித்து வந்ததை அதுவும் விட்டெறியும்.

நாட்டில் பெருகியிருக்கும் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்போகிறார்கள் என்ற செய்தி பரவலாக வெளியானதும்  சமூக வலைத்தளங்களில்  “ மீம்ஸ்   “ பதிவேற்றும் நவீன கலைஞர்கள் தங்கள் குசும்புத்தனத்தை தொடங்கிவிட்டனர்.

குதிரைப் பந்தயத்திடலில் என்ன நடக்கிறது..?  என்பதே தெரியாமல்,  ஓடும் குதிரைகள் போன்று,  இலங்கையில் சுதந்திரமாக தாவித்தாவி ஓடித் திரிந்து  உயிர்வாழ்வதற்காகவும் தம் பசி போக்குவதற்காகவும்  வாழ்ந்துகொண்டிருக்கும்  குரங்குகளும் தற்போது இலங்கை அரசின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றவிருப்பதை அறியாமலிருக்கின்றன.

இந்த ஜீவராசிகள் தொடர்பாக இவற்றை வாங்கவிருக்கும் சீனாவுடன்  பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கிறது இலங்கை  அரசு.  எப்பொழுதும் சீனாவுக்குப் போட்டியாக களம் இறங்கும் அமெரிக்காவும் குரங்குகளை கேட்டு இலங்கையுடன் பேசுவதற்கு தயாராகியிருக்கிறது.

இவ்வாறு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பான விவாத அரங்கும் ஊடகங்களில் ஆரம்பமாகிவிட்டன.

இவை செறிந்து வாழும் பிரதேசங்களில்  வேட்டைத் தொழிலில் ஈடுபட்டவர்கள்,  குரங்குகளையும் வேட்டையாடி  “ தொங்கு மான் இறைச்சி  “ என்ற பெயரில் விற்றனர் என்ற கதையும் முன்னர் உலாவியது.

குரங்குகளினால் தென்னைப் பயிர் உட்பட பல பயிர்கள் சேதமடைவதாக பொதுமக்களின் புகாரும் நீண்டகாலமாக தொடருகிறது.

சீனாவுக்கு ஒரு இலட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பான வழிமுறைகளை ஆராய்வதற்காக குழுவென்றை அமைப்பதற்கான அமைச்சரவை பத்திரமும் தயாரிக்கப்படவிருக்கிறது.

கடவுளை கண்டேன் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 திராவிட முன்னேற்ற கழகம் தமிழக அரசியலில் வேரூன்ற தொடங்கிய காலத்தில் அதன் அங்கத்தவர்களாகவும், அனுதாபிகளாகவும் இருந்த பலர் திரையுலகிலும் ஈடுபட்டு வந்தார்கள். அவர்களில் ஓருவர் தான் கே ஆர் பாலன்.


கலைஞர் கருணாநிதிக்கு ஏதோ விதத்தில் சொந்தக்காரரான இவர் பலவித தொழில்களில் ஈடுபட்டிருந்தார். கண்ணதாசன் தொடங்கி நடத்திய தென்றல் திரை என்ற பத்திரிகையை விலைக்கு வாங்கி அதனையும் சில காலம் நடத்தி விட்டு கண்ணதாசனின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் கண்ணதாசனுக்கே விற்றும் விட்டார். இது தவிர ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வந்தார். இந்த பாலன் தனது பெயரிலேயே பாலன் பிக்சர்ஸ் என்ற ப

ட நிறுவனத்தை ஆரம்பித்து முதன் முதலில் தயாரித்த படம் தான் கடவுளை கண்டேன்.

இந்தப் படத்தில் நடிப்பதற்கு முதலில் ஒப்பந்தமானவர் புரட்சி நடிகர் எம் ஜி ஆர். ஆனால் படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுதவும் , நகைச்சுவைக்கு சந்திரபாபுவும் , டைரக்ட் செய்ய ஏ எஸ் ஏ சாமியையும் பாலன் , எம் ஜி ஆரின் அனுமதி இன்றி ஒப்பந்தம் செய்திருந்தார். அன்றைய சூழலில் இவர்கள் மூவருடனும் எம் ஜி ஆருக்கு மனஸ்தாபம் இருந்து வந்த காரணத்தால் படத்தில் நடிக்க எம் ஜி ஆர் மறுத்து விட்டார். ஆனால் பாலன் அசரவில்லை. உடனடியாக வளர்ந்து வரும் நடிகரான கல்யாணகுமாரை ஒப்பந்தம் செய்து படத்தை தயாரித்து வெளியிட்டு விட்டார்!

கிராமத்தில் சமூக சேவகனாக சுற்றி வரும் ரத்தினம் நல்லவன் ஆனால் முரடன். பணக்காரரான பூபதியின் பகை ரத்தினத்துக்கு ஏற்படுகிறது . இதனால் அவன் தங்கை கனகாவின் திருமணமும் நின்று விடுகிறது. தான் பூபதியின் மகள் என்பதை சொல்லாமல் ரத்தினத்தை காதலிக்கிறாள் சித்ரா. அவனது முரட்டுத்தனத்தையும் மெல்ல மெல்ல மாற்றுகிறாள். இதனைத் தொடர்ந்து இராணுவத்தில் சேருகிறான் ரத்தினம். மீண்டும் ஊர் திரும்பும் அவனுக்கு பல சிக்கல்கள் காத்திருக்கின்றன. அதனை எவ்வாறு சமாளிக்கிறான் என்பதே மீதிக் கதை.

கதாநாயகன் ரத்தினமாக வரும் கல்யாணகுமார் தனது வழமையான நடிப்புடன் முரட்டுத்தனமான வேசத்தையும் இதில் வெளிப்படுத்தி இருந்தார். ஆனாலும் அவரின் நடிப்பு சுமார்தான். சித்ராவாக வரும் தேவிகா துடுக்காகவும், அழகாகவும் வந்து நம்மை கவருகிறார். சோகத்தை கொட்ட சௌகார் ஜானகி. அவருக்கு ஜோடி முத்துராமன். இவர்களுடன் குமாரி ருக்மணி, டி எஸ் முத்தையா, ஜெமினி சந்திரா, கரிக்கோல் ராஜு ஆகியோரும் நடித்தனர்.

இவர்களின் கதை ஒருபுறம் இருக்க இன்னுமொரு கதையும் படத்துடன் இணைந்து நகருகிறது. எம் ஆர் ராதா, எம் ஆர் ஆர் வாசு, சந்திரபாபு, நாகேஷ், கொட்டப்புளி ஜெயராமன் இவர்கள் பண்ணும் அட்டகாசம், கூத்து மிகை என்றாலும் சிரிக்க வைக்கிறது. படத்தின் ஓட்டத்துக்கும் துணை புரிகிறது. இந்தப் படம் மீண்டும் திரையிட்ட காலத்தில் விளம்பரங்களில் இவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது.

படத்தின் பாடல்களை கண்ணதாசன் இயற்ற கே வி மகாதேவன் அருமையாக இசையை வழங்கி இருந்தார். தீபத்தை வைத்துக் கொண்டு திருக்குறளும் படிக்கலாம் பாடல் கருத்தாழம் மிக்கதாக சுசிலாவின் குரலில் அமைத்தது. அண்ணா அண்ணா சுகம் தானா பாடல் சகோதரியும், காதலியும் தங்கள் உரிமையை வலியுறுத்தும் புதுமையான பாடலாக எழுதப் பட்டு அதனை ஜமுனாராணியும், சுசிலாவும் குழைவாக பாடியிருந்தார்கள். இது தவிர விடிய விடிய பேசினாலும் தூக்கம் வராது, உங்கள் கைகள் உயரட்டும் , பாடல்களும் கவரும் படி அமைந்தன. சந்திரபாபுவும், சுகுமாரியும் ஆடிப் பாடும் கொஞ்சம் தள்ளிக்கணும் பாடலில் சந்திரபாபுவின் ஸ்டைல் சூப்பர்!

அவுஸ்திரேலிய நிகழ்வுகள் 2023

சிட்னி


 திகதி

 விபரங்கள்

 27/05/2023

Sat - 6 pm

  சிலப்பதிகார விழா சிட்னி துர்க்கை அம்மன் கோயில்   மண்டபம்


'800' திரைப் படத்தின் First Look வெளியீடு

- தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் விரைவில்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள், சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் '800' திரைப்படத்தின் First Look நேற்று வெளியிடப்பட்டது.

முத்தையா முரளிதரனின் 51 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்றுக் காலை 08 மணிக்கும் இதன் முதற்பார்வை வெளியிடப்பட்டது.

இலங்கைச் செய்திகள்

250,000 டொலர் முதலீடு: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு 5 அல்லது 10 வருட Golden Visa 

தொழில்நுட்பக் கோளாறு, முப்பது மணிநேரம் தாமதமான விமானம்

அரச விரோத செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது

தப்புல டி லிவேரா சார்பில் நேற்று சட்டத்தரணி ஒருவர் TIDயில் ஆஜர்

நுவரெலியாவில் மலர்க் கண்காட்சி


250,000 டொலர் முதலீடு: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு 5 அல்லது 10 வருட Golden Visa

நாட்டிலுள்ள உள்ளூர் வங்கியொன்றில் 2,50,000 அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் சுற்றுலாப் பயணிக்கு ஐந்து அல்லது பத்து வருட காலங்களுக்கான கோல்டன் விசாவை விநியோகிப்பதுடன் குடியுரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்கும் புதிய வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

உலகச் செய்திகள்

‘கொவிட் இன்னும் ஓயவில்லை’ சுகாதார அமைப்பு எச்சரிக்கை 

ஆண்டின் இறுதியில் உலகம் சாதனை வெப்பநிலையை எதிர்கொள்ள வாய்ப்பு

உலகின் ‘இராட்சத ரொக்கெட்’ நடுவானில் வெடித்துச் சிதறியது

ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை விட இந்திய மக்கள்தொகை 3 மில். அதிகம்

சீன அமைச்சர் புட்டினுடன் பேச்சு


‘கொவிட் இன்னும் ஓயவில்லை’ சுகாதார அமைப்பு எச்சரிக்கை 

கொவிட்–19 இன்னமும் தீர்மானிக்க முடியாத நோயாகவே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

நோய் எந்தப் போக்கில் செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நாளாகலாம். அதற்குமுன் அது மேலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பாலாமுருகன் கோயில் வருடாந்த திருவிழா 20/04/2023 - 02/05/2023


 



திருக்குறள் மனனப் போட்டிகள் - 2023




ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி – 2023


தமிழ் வளர்த்த சான்றோர் விழா ! 30/04/2023