தியாகி தீலீபனின் 34ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள்

 ஒஸ்ரேலியாவின் முக்கிய தலைநகரங்களில் தியாகி திலீபனின் 34 வது ஆண்டு நினைவு நிகழ்வுகள், செப்ரம்பர் மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று இணையவழி ஊடாகவும், அடேலயிட் பிரிஸ்பன், பேர்த் ஆகிய இடங்களில் மண்டப நிகழ்வாகவும் நடைபெறவுள்ளது. 





தற்போதைய கொரோனா வைரஸ் இடர்கால நிலையை கருத்திற்கொண்டு, தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 34வது ஆண்டு நினைவு நிகழ்வு, செப்ரம்பர் மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று இணையவழி ஊடாகவும் அடேலயிட் பிரிஸ்பன் பேர்த் ஆகிய இடங்களில் மண்டப நிகழ்வாகவும் நடைபெறவுள்ளது.

ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன், காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினான். தமிழ் மக்களின் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, திலீபன் மேற்கொண்ட பயணம் எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது.

பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Time: 26-09-2021 Sunday 6pm (Canberra, Sydney, Melbourne)
Contact: 0401 842 780, 0433 002 619

EVENT Youtube Advertisement Link: Thiyagi Thileepan Australian memorial/தியாகி திலீபன் அவுஸ்திரேலிய நினைவேந்தல் நிகழ்வுகள்:


வேட்டி !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி    இயக்குநர் 
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 


   காவிவேட்டி கட்டினால் கயமைக்குணம் ஓடிடும்
   வெள்ளைவேட்டி கட்டினால் நல்லவுள்ளம் வந்திடும் 
    பட்டுவேட்டி கட்டினால் பகட்டுவந்து ஒட்டிடும்
   கிளிசல்வேட்டி கட்டுவார் கிடப்பரென்றும் தரையிலே !

    வேட்டிகட்டும் போதிலே விதம்விதமாய் கரையெலாம்
    காட்டிநிற்கும் தரத்தினை கண்டபோது தெரிந்திடும்
    அரசியலில் உள்ளார்கள் அவர்கள்கட்சி நிறத்தினை
    வேட்டிக்கரை ஆக்கியே விரும்பிநின்று காட்டுவார் !

    வெள்ளைவேட்டி கட்டினால் நல்லவுள்ளம் வரவேணும்
    கள்ளஞ்செய்யும் பலருமே வெள்ளைவேட்டி கட்டிறார்
    பள்ளிக்கூட ஆசான்கள் பாங்காய்கட்டிய வெள்ளையை
    கொள்ளை கொள்ளும்கூட்டமும் கூடவைத்து இருக்குது !

    துறவுகொண்ட உள்ளத்தார் தூய்மைகாட்டும் காவியை
    அறவுணர்வு அழிப்பவர் ஆடையாக்கி நிற்கிறார்
    காவிவேட்டி கண்டதும் கதிகலங்கும் நிலையினை
    காவிகட்டி கொண்டுளார்  காட்டியிப்போ நிற்கிறார் !

ஈழத்து எழுத்தாளர் நந்தினி சேவியருக்குத் தன் நூலை அர்ப்பணம் செய்த இரா.பாரதிநாதன் - கானா பிரபா

 .

ஈழத்து எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் இன்று நம்மை விட்டுத் திடீரென்று மறைந்த அதிர்ச்சியைத் தமிழுலகம் எதிர்கொண்டு அஞ்சலிப் பகிர்வுகளை வழங்கி வரும் வேளை,


நந்தினி சேவியர் அவர்கள் வாழும் காலத்திலேயே "ஆண்டோ எனும் மாயை" எனும் தன் சிறுகதைத் தொகுப்பை அவருக்குச் சமர்ப்பணம் செய்த தோழர் இரா.பாரதிநாதன் அவர்கள் நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்துக்காக (ATBC) சற்று முன்னர் வழங்கியிருந்த நினைவஞ்சலிப் பகிர்வு

பாரதி தரிசனம் அங்கம் - 02 மெல்பன் 3 C R வானொலி தமிழ்க்குரலில் பாரதியின் மறுபக்கம் ஒலித்தது !! முருகபூபதி

மெல்பன் 3 C R  வானொலி தமிழ்க்குரல் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்


நண்பர் சண்முகம் சபேசன் ஒருநாள் தங்கள் வானொலிக்கு  கலை , இலக்கியம் சம்பந்தப்பட்ட ஒரு தொடர் உரை நிகழ்த்த முடியுமா..? எனக்கேட்டார்.

அவரது நிகழ்ச்சி பிரதி செவ்வாய்க்கிழமைகளில் மெல்பனில் Fitzroy  என்ற இடத்தில் இயங்கிய  வானொலி கலையகத்திலிருந்து ஒலிபரப்பாகியது.

அவர் தமது கடமை முடிந்து அங்குசென்று,  நிகழ்ச்சிகளை தொகுத்தளிப்பார். மிகுந்த அர்ப்பணிப்புணர்வோடு அதனை சுமார் இருபத்தியைந்து வருட காலமாக செய்துவந்தவர்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடத்தில் அபரிமிதமான நம்பிக்கையும், நேசமும் கொண்டிருந்தவர்.  வன்னிக்குச்செல்லும்போதெல்லாம் அவரைச்  சந்தித்து மீண்டிருக்கும் சபேசன்,  3 C R  வானொலி தமிழ்க்குரல் நிகழ்ச்சியை புலிகளின் குரலாகவே நடத்தியிருந்தாலும், இடைக்கிடை கலை, இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் தந்தவர்.

அத்துடன் நாம் நடத்திவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் செய்திகளையும் சமூகஅறிவித்தலாக வெளியிட்டவர். இந்தத் தன்னார்வத்தொண்டு நிறுவனம் 1988 இல் தொடங்கப்பட்ட காலத்தில் பாரதியின் கருத்தையே அதன் அறைகூவலாக விடுத்திருந்தோம்.

 “ அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்  “

எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 59 ஊடகத்துறையில் உறவும் பிரிவும் பிணக்கும் ! முரண்பாடுகள் , மேன்மையை இனம் காண்பதில் தவறிழைக்கலாகாது ! ! முருகபூபதி


எங்கள் நீர்கொழும்பூரிலிருந்து ஒரே காலப்பகுதியில்  நாங்கள் மூவர் கொழும்பு தமிழ்ப்பத்திரிகைகளில் பணியாற்றினோம். இம்மூவரும் விதிவசத்தால்  புலம்பெயர நேர்ந்தது.

தினபதி – சிந்தாமணியில் பணியாற்றிய துணை ஆசிரியரும் நாடாளுமன்ற நிருபருமான செல்லையா செல்வரத்தினம் பிரான்ஸுக்கும்,  தினகரின் பணியாற்றிய அதன் உதவி ஆசிரியர் ஈ . கே. ராஜகோபால் லண்டனுக்கும்,  இவர்களைத் தொடர்ந்து நானும் 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கும் வந்துவிட்டோம்.

நாட்டைவிட்டு வெளியேறியபின்னரும் ஊடகத்துறையுடன் எமது உறவு நெருக்கமாகவே தொடருகின்றது.

நண்பர் செல்வரத்தினம் எனது பால்யகால நண்பர்.  அவரது


தந்தையார் செல்லையா,  நீர்கொழும்பில் பிரபல சுருட்டுக்கம்பனி வைத்து பலருடைய குடும்பங்களுக்கும் வாழ்வாதாரம் வழங்கியவர். அத்துடன் அன்றைய  நீர்கொழும்பு இந்து வாலிபர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர். அவரும் மற்றும் பலரும் இணைந்தே அன்றைய நகரபிதா எஸ்.கே. விஜயரத்தினம் அவர்களின் தலைமையில் அங்கு வசித்த இந்து தமிழ்க்குழந்தைகளுக்காக 1954 ஆம் ஆண்டு விஜயதசமியின்போது விவேகானந்தா வித்தியாலயத்தை ஸ்தாபித்தார்கள்.  அன்று 32 மாணவக்குழந்தைகளுக்கு ஏடு துவக்கப்பட்டு வித்தியாரம்பம் செய்து வைக்கப்பட்டது.


அச்சமயம் அந்தப்  பாடசாலையின் முதல் மாணவனாக எனது பெயர் ( சேர்விலக்கம் -01 ) இணைத்துக்கொள்ளப்பட்டது.  அப்பாடசாலையிலிருந்தே நானும் எனது தாய்மாமனார் சுப்பையாவின் மகன் முருகானந்தனும் 1963 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து யாழ். ஸ்ரான்லி கல்லூரிக்குச்சென்றோம்.

அதுவரையில் நாமிருவரும் யாழ்ப்பாணத்தையோ பனைமரங்களையோ பார்த்திருக்கவில்லை.

செல்வரத்தினத்தின் தந்தையார் யாழ்ப்பாணத்திலிருந்து தொழில் நிமித்தம் நீர்கொழும்புக்கு இடம்பெயர்ந்து அங்கே மிகுந்த செல்வாக்குடன்  வாழ்ந்தவர். ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபையிலும் முக்கிய பங்காற்றியவர்.  அங்கு நடைபெறும் வருடாந்த உற்சவத்தில் நான்காவது திருவிழா செல்வரத்தினத்தின் தந்தையார்  செல்லையாவின் தலைமையில்தான் வெகு கோலாகலமாக நடக்கும். அவர்தான் எங்கள் ஊருக்கு யாழ்ப்பாணத்திலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் பிரபல நாதஸ்வர – தவில் வித்துவான்களை அழைத்துவந்து விடிய விடிய கச்சேரிகள் நடத்தி அறிமுப்படுத்தியவர். அவர்தான் எங்கள் ஊருக்கு சின்னமேளம் நடன தாரகைளையும் அறிமுகப்படுத்தினார்.

ஒரு தடவை பெங்களுர் ரமணி அம்மாவையும் அழைத்து நிகழ்ச்சி நடத்தினார்.

வாசகர் முற்றம் – அங்கம் 15 “ புத்தகங்கள் நல்ல நண்பன் “ மெல்பன் வாசகர் – எழுத்தாளர் வி. எஸ். கணநாதன் மனம் திறக்கிறார் ! சந்திப்பு : முருகபூபதி

 


“ அம்மாவை இழந்தால் அன்புபோய்விடும். அப்பாவை இழந்தால் அறிவுபோய்விடும், மனைவியை இழந்தால் வாழ்க்கையே போய்விடும்   என்று எமது முன்னோர்கள் முன்னர் சொல்லியிருப்பதாக சிலர் கூறக்கேட்டுள்ளேன்.

ஆனால், இந்த நூற்றாண்டில் இந்த உணர்வுபூர்வமான கருத்து செல்லுபடியாகுமா..? என்று நான் யோசிப்பதுண்டு.

ஒரு பஸ் போனால் என்ன..?  மற்றும் ஒரு பஸ்ஸில் ஏறி பயணித்துவிடலாம் என்ற வாழ்க்கையை இந்த அவசர யுகம் தந்திருக்கிறது.

வாழ்க்கைத்துணை விடயத்தில்தான் அவ்வாறு ! ஆனால், பெற்றவர்களின் இடத்தை வேறு எவராலும் நிரப்பிவிட முடியாது.

Old is gold என்று சொல்லி, அதனை பொற்காலம் எனவும் , அதுவெல்லாம் ஒரு கனாக்காலம் எனவும் தங்கள் மனதை தேற்றிக்கொள்பவர்களையும் பார்த்திருப்பீர்கள்.

எனது வாசகர் முற்றம் தொடரில் இம்முறை நான் அறிமுகப்படுத்துபவர், தற்போது வாசகர் என்ற நிலையிலிருந்து மாறி,  எழுத்தாளராக எமது சமூகத்தில் அறிமுகமாகியிருப்பவர்.

தமிழ் வாசகர்களுக்கு இது துயரத்தின் பருவமோ, பிரான்சிஸ் கிருபா மறைந்துவிட்டார்!

 .


ஒரு நாள் முடிய
இன்னும் ஒரே ஒரு வினாடியே மீதமிருக்கிறது
ஒரு இரவு விடிய
சேவலின் ஒரே ஒரு கூவல் மட்டுமே மீதமிருக்கிறது
ஒரு கனவு கலைய
இன்னும் ஒரே ஒரு பார்வை மட்டுமே மீதமிருக்கிறது
ஒரு உறவு முறிய
இன்னும் ஒரே ஒரு சொல் மாத்திரமே மீதமிருக்கிறது
மண்டியிட்டால் மன்றாடினால்
உன் கடிகாரப் பைக்குள் கை நுழைத்து
அள்ளி எறியக்கூடும்
சில சில்லறை வினாடிகளை...
வேண்டாம்
ஒரு வாழ்வு முடிய
இன்னும் ஒரு உயிர் மீதமிருக்கிறது.
 
©️ ஜெ. ஃபிரான்சிஸ் கிருபா 🌺
 
----------
 
விருந்துக்கு வந்தவனை கூலிக்கு பேசி வேலைக்கு அமர்த்தும் இந்த வாழ்க்கையோடு இன்னும் விவாதித்து விசனப்பட்டுக் கொண்டிராமல் ஒரு பூஞ்செடியை நட்டு அதன் வேர்களில் என்னுயிரூற்றை பின்னிவிட்டு போகவே விரும்புகிறேன் என்னைவிட்டு.
- பிரான்சிஸ் கிருபா

பெருங்கவிஞன் பிரான்சிஸ் கிருபா மறைந்துவிட்டார். பல்லாண்டுகளாக மிகவும் தீவிரமான தளத்தில் இயங்கிய கிருபாவின் மரணம் மிகவும் துயரம் தருவதாக அமைந்துவிட்டது. உடல் உபாதைகளும், தேடிக்கொண்ட விட்டொழிக்க முடியாத போதையும் அவரை வாழ்வதற்கு வேறு நோக்கங்களே இல்லாத துயரமான தனிமைக்குள் தள்ளிவிட்டது.


மிகக் காத்திரமான கவிதைகளையும் யாராலும் பிரதியெடுக்க முடியாத 'கன்னி'யையும் தந்தார். சிற்றிதழ்களில் தொடங்கியவர், திரைப்படங்களில் பாடல்கள் எழுத முனைப்புக் காட்டினார். எழுத்தின்மீது ஆர்வம் கொண்டவர். கவிஞனாக, இருந்ததை விற்று காசாக்கியவர் இல்லை. சில வெற்றி பெற்ற கவிஞர்களைப் போல தன்னையோ தன் படைப்புகளையோ முன்னிறுத்தாதவர். உலக சாதூர்யங்களைத் துறந்தவர். தடுமாற்றங்கள், தத்தளிப்புகள், நிகாகரிப்புகளால் ஆனது அவரது வாழ்க்கை. இருப்பினும் ஆழ்ந்த பிரியத்தின் சுடரை இடைவிடாமல் தன் கவிதைகளில், நாவலில் எரியச் செய்தவர் அவர். அதனால் அவர் படைப்புகளில் வன்முறையில்லை. முளைத்தெழும் குரூரம் இல்லை.

புலம்பெயர்ந்தோரின் அடையாளங்கள் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

 .

எங்கோ பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் பிறந்து, வளர்ந்தோம். ஆம், நாம் சுவாசித்த அந்தக் காற்று, ஓடி விளையாடிய நிலம், படித்த பள்ளிக் கூடம், பேசிப்பழகிய உறவுகள் அத்தனையும் இன்று எம்மிடம் இல்லை. எமது பாரம்பரியம் என்பது; நமது பண்பாடு என்பது; நாம் வாழ்ந்த நாட்டு பழக்க வழக்கங்களே. அந்தப் பேசிய மொழி, உண்ட உணவு, அந்த உறவுகள் அத்தனையும் எம்மை உருவாக்கியுள்ளன.


ஆம், நாம் இத்தனைக்கும் வாரிசுகள். பலநூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த தொடர்பு அறுந்து போகாது எம்முடன் வாழ்ந்த ஒன்று. நாம் மண்வீடுகட்டி விளையாடிய அந்த மண்ணினை உதறி விட்டு, இன்று புதிய சூழலில் வந்து நிற்கிறோம்.

பொருளாதார முன்னேற்றத்தால் ஏற்பட்ட சொகுசுகள் அத்தனையும் எம்மை முற்றாக மாற்றி விடவில்லை. நாம் விட்டு வந்த நிலத்தின் பாரம்பரியம் அத்தனையும் எமது பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் நாம் ஆர்வம் காட்டுகிறோம். அதை முற்றாக நாம் இங்கு நம்மால் கொண்டுவரமுடியாவிட்டாலும் எம்மால் முடிந்த அளவுக்கு அதை நாம் செய்து வருகிறோம். தமிழ் பாடசாலைகள், இந்துக் கோயில்கள், இவையாவும் நமது பாரம்பரியத்தில் நாம் கொண்ட பற்றின் வெளிப்பாடு.

எமது பிள்ளைகளுக்கு நாம் எமது பாரம்பரியத்தைக் காட்டும் திறவுகோலாக இவற்றை ஆக்கி உள்ளோம். Multicultural சமுதாயத்தில் வாழும் எமது வாரிசுகளுக்கு, நாமும் ஒரு சிறந்த பண்பாட்டின் வாரிசுகள் என்ற எண்ணத்தை; அதனால் ஏற்படும் சுயமரியாதையை; இது வளர்க்கும் என நம்புகிறோம்.

பல இன மக்கள் வாழும் சமுதாயத்திலே, உனக்கான ஓர் அடையாளம் இல்லாவிட்டால் நீ மதிக்கப்பட மாட்டாய். ஆனாலும் நாம் மாறிக் கொண்டும் இருக்கிறோம். இதை மறுக்க முடியாது. இந்த நிலையிலே இங்கு வாழும் எமது வாரிசுகள் ; இவர்கள் எமது வாரிசுகள் தான். ஆனால் எமது பாரம்பரியம் பண்பாடு இத்தனைக்கும் வாரிசுகளா? என்ரு கேட்டால்  கவலையுடன் இல்லை என்று தான் கூற வேண்டும். ஒரு நாட்டின் பண்பாடு, பாரம்பரியம் என்பது அந்த மண்ணுடன் ஒட்டி உறவாடும் போது வருவது.