வாழ்த்தியே மகிழ்ந்திடுவோம் ! - எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண்


              நிலவென்போம் மலரென்போம் நீதானே உலகென்போம்
                     அழகெல்லாம் உன்னிடத்தே ஆரம்பம் ஆகுதென்போம் 
              வரமாக வந்திருக்கும் வாழ்வென்று கூறிநின்று 
                     வையத்தில் மகளிர்தமை வாழ்த்தியே மகிழ்ந்திடுவோம் !

           பொன்னென்போம் புகழென்போம் பொறுமைக்கு நிகரென்போம் 
                மண்ணினையும் பெண்ணென்போம் மதிப்புடனே வணங்கிடுவோம் 
           ஓடிகின்ற நதியினுக்கும் பெண்பெயரைச் சூட்டிநின்று 
                 உலகினிலே பெண்மைதனை உயர்வென்றே வாழ்த்திநிற்போம் !

           மனிதனது வாழ்க்கையிலே மகளிர்நிலை உயர்வாகும்
                   மகளிர்நிலை தாழ்வுற்றால் மனிதவாழ்வு கீழாகும் 
           ஒழுக்கமுடை மகளிர்தாம் உன்னதத்தின் இருப்பிடமே 
                  ஒழுக்கமது குலைந்துவிடின் உலகவாழ்வே சீரிழக்கும் ! 

           நாடுயர வீடுயர நல்மகளிர் தேவையன்றோ 
               நல்லொழுக்கப் பிறப்பிடமே நல்மகளிர் பிறப்பாகும் 
           தீயொழுக்கம் மகளிரிடம் குடிகொண்டு விட்டுவிட்டால்
                  திறலுடைய சமுதாயம் சிறப்பிழந்து போகுமன்றோ !

இரத்தப் பிஞ்சுகளும், சிரியாவின் கொடூர பணக்கால்களும்… (கவிதை) வித்யாசாகர்


ணந்தின்னிக் கழுகுகள்
உயிர்த்தின்ன துவங்கிவிட்டன..
மதங்கொண்ட யானைகள்
பிணக்குழியில் நின்று சிரிக்கின்றன..,
அடுக்கடுக்காய் கொலைகள்
ஐயகோ’ அதிரவில்லையே எம் பூமி,
பிள்ளைகள் துடிக்கும் துடிப்பில், அலறலில்
நாளை உடைந்திடுமோ வானம்..,
பணக்கார ஆசைக்கு
விசக் குண்டுகளா பிரசவிக்கும்??
வயிற்றுக்காரி சாபத்தில்
எந்த இனமினி மூடர்களுக்கு மீளும்..???
குடிகார வீடு போல ஆனதே
ஒரு அழகு நாடு..,

சிட்னி அம்மன் கோவில் திருவிழா 2018

புதிதாக கட்டப்பட்ட சிட்னி அம்மன் திருக்கோவிலில் பல்லாயிர பக்க்தர்கள்  மாதம் மார்ச் மாதம் 1ம் திகதி மாசி மக தீர்த்தத்தையும் பத்து நாள் திருவிழாக்களயும்   கண்ட காட்சியின்  சில படங்களை காணலாம் .  

சொல்லத்தவறிய கதைகள் - 03 பத்துவயதில் ஆடிய கரகாட்டமும் பண்டிதரின் பரிவோடு வாழ்ந்த பால்யகாலமும் - முருகபூபதி

  
" அலங்கரிக்கப்பட்ட செம்பு அல்லது பித்தளை குடத்தைத் தலையில் வைத்துக்கொண்டு நையாண்டி மேள இசைக்கு ஏற்றவாறு குடம் கீழே விழாதவாறு பெண்களும் ஆண்களும்  ஆடும் ஆட்டம் கரகாட்டம். கரகம் என்ற வார்த்தைக்கு கமண்டலம், பூக்குடம், கும்பம், செம்பு, நீர்க்குடம் முதலான பல அர்த்தங்கள் உண்டு. கரகாட்டத்திற்கு 3 கிலோ எடையுள்ள செம்பினுள் 3 அல்லது 4 கிலோ மண்ணோ, அரிசியோ இட்டு ஒரு ரூபா நாணயமும் வைத்து கரகச் செம்பு தயாரிக்கப்படும். கரகம் என்பது விதைப்பாதுகாப்பின் ஒரு அங்கமாகவும்  இருந்து வந்திருக்கிறது. கரகத்தின் உள்ளே விதைகளை இட்டு வைத்து, வழிபட்டு, அந்த விதைகளை முளைப்பாரி என அழைக்கப்படும் விதைத்தேர்வு முறைக்கு அனுப்பி வைக்கும் கலாச்சாரம் நீண்ட காலமாக இருந்து வருகிறதுஒரு விதத்தில் விதைகளை கரகத்தின் வழியாக வழிபடும் முறை என்றும் சொல்ல முடியும். தெய்வ வழிபாட்டிற்கு ஆடும் கரகம் "சக்திக்கரகம்' என்றும் தொழில்முறைக் கரகத்தை "ஆட்டக்கரகம்' என்றும் சொல்வர். தோண்டிக்கரகம் என்றால் மண்ணால் செய்யப்படுவது. பித்தளையால் செய்யப்படுவது செம்புக்கரகம் என்றும் அழைக்கப்படும். முன்பு ஆண்கள் பெண் வேடமிட்டு ஆடியதை இன்று பெண்களே ஆடுகின்றனர். இவ்வாட்டத்திற்கு நையாண்டிமேளம், சிறிய உடுக்கை, பெரிய உடுக்கை, சத்துக்குழல், செண்டை, பறை என்பன இசைக்கப்படுகின்றன. நாதஸ்வரத்தில் பாடல் வாசிக்க மேளம் முழங்க அந்த இசைக்கேற்ப கரகாட்டக் கலைஞர்கள் ஆடுவார்கள்."
சொல்லத்தவறிய கதைகளுக்குள் கரகாட்டம் ஏன் வருகிறது என்று யோசிக்கிறீர்களா?
நானும் ஒருகாலத்தில் கரகாட்டம் ஆடியிருக்கின்றேன்! கரகாட்டக்காரனாகியிருக்கவேண்டியவனின் விதியை,  காலம் எழுத்தாளனாக்கியிருக்கிறது. கரகம் பற்றியும் கரகாட்டம் பற்றியும் எந்த அரிச்சுவடியுமே தெரியாத பத்துவயதில் எங்கள் ஊரில் அந்த ஆட்டத்தைச்சொல்லித்தந்தவர் சாமி என்ற கரகாட்டக்கலைஞர்.
இந்தப்பத்தியின்   தொடக்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் கரகம், கரகாட்டம் பற்றிய தகவல்களை விக்கிபீடியாவில்தான் பார்த்தேன். இவ்வாறு எமது தொன்மையான கலைகள் எதிர்காலத்தில் விக்கிபீடியா  ஆவண ஊடகத்திலும்  பதிவாகும் என்பது தெரியாத பால்யகாலத்தில்,  அந்த  ஆட்டத்தை ஆடநேர்ந்த அனுபவம் பசுமையானது.
எங்கள் ஊர் பாடசாலைக்கு தற்போது 64 வயதாகிறது. அக்காலத்தில் முகாமைத்துவ பாடசாலைகளே இயங்கின. நீர்கொழும்பில் 1954 இல் உதயமான விவேகானந்தா வித்தியாலயத்திற்கு கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்திலிருந்து தலைமை ஆசிரியராக வந்தவர் பண்டிதர். க. மயில்வாகனம். அவருடன் திருமதி மரியம்மா திருச்செல்வம் என்ற ஆசிரியையும் பணியாற்றவந்தார். இவர்களுக்குத்துணையாக பணியாற்ற வந்த  எங்கள் ஊரைச்சேர்ந்த செல்வி திலகமணி என்ற எஸ்.எஸ்.சி. சித்தியடைந்த மாணவியும்தான் எமது ஆசிரியர்கள் 32 பிள்ளைகளுடன் தொடங்கப்பட்டது எங்கள் பாடசாலை.

ஜெர்மனியிலிருந்து வெளிவரும் 'மண்' சஞ்சிகையில் ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களுக்கு கௌரவம்


ஜெர்மனியிலிருந்து நீண்ட காலமாக வெளிவரும் ' மண்' சஞ்சிகையின் 186, 187 ஆவது இதழ்களில், ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் (அமரர்) எஸ்.எம். கோபாலரத்தினம் மற்றும் படைப்பிலக்கியவாதி லெ. முருகபூபதி ஆகியோரின்  வாழ்வும் பணிகளையும் சித்திரிக்கும் கட்டுரைகளுடன் அவர்களின் படத்தையும் முகப்பில் பதிவுசெய்துள்ளனர்.
ஈழத்தில் தமிழ்ப்பிரதேசங்களில் போர்க்காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான  வாழ்வாதார உதவிகளிலும் அக்கறை காண்பிக்கும் 'மண்' சஞ்சிகை, போரினால் உடல் ஊனமுற்றவர்கள், நிரந்தரமாக முடமாக்கப்பட்டவர்கள் மற்றும் வாழ்வாதாரம் வேண்டி நிற்பவர்களுக்கு அமைப்பு ரீதியாக உதவி வரும் மண் சஞ்சிகை, காலத்துக்கு காலம் ஈழத்தின் மூத்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்  பற்றிய கட்டுரைகளையும் வெளியிட்டு, அவர்களின் படங்களையும் முகப்பில் பதிவுசெய்து வருகிறது.
புகலிடத்தில் வளரும் தமிழ்க்குழந்தைகளுக்காகவும் நீண்ட காலமாக வாழும் மூத்த தலைமுறையினருக்காகவும் சிறுவர் இலக்கியம், சிறுகதை, கட்டுரை, விமர்சனம் உட்பட பலதரப்பட்ட, கலை, இலக்கிய விடயங்களையும் வெளியிட்டுவருகிறது.
ஈழத்தில் தமிழ்ப்பிரதேசங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு முதலான மாவட்டங்கள் வறுமைக்கோட்டின் கீழிருப்பதாகவும்,  அதற்கு ஆதாரமாக சனத்தொகை புள்ளிவிபரத்திலிருந்து தகவல்களையும் சுட்டிக்காண்பித்து, அரசும், நாடாளுமன்றிற்கு தெரிவாகி  இருக்கும் தமிழ்த்தலைவர்களும், வடமாகாண சபையும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும், நாடுகடந்த தமிழீழ அரசும், புலம்பெயர் சமூக அமைப்புகளும் இதுவிடயத்தில் கூடுதல் கவனம் எடுக்கவேண்டும் எனவும் ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவித்துள்ள 'மண்'  சஞ்சிகையின்186 ஆவது இதழ் மூத்த ஊடகவியலாளர் (அமரர்) எஸ்.எம்.கோபாலரத்தினம்,  நெருக்கடியான காலகட்டத்தில் எவ்வாறு துணிவுடன் இதழியல் பணிகளை தொடர்ந்தார் என்பதை சித்திரிக்கும் கட்டுரையையும் வெளியிட்டுள்ளது.
ஜெர்மனியில் வதியும் இளம்தலைமுறையினரின் ஆக்கங்களுக்கும் களம் வழங்கிவரும் 'மண்' சஞ்சிகையின் 187 ஆவது இதழில், தற்போது அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான லெ. முருகபூபதியின்  எழுத்துலகத்தையும் அவர் மேற்கொண்ட இலக்கியப்பணிகளையும் விபரிக்கும்  கட்டுரையையும் வெளியிட்டு ,  அவரது படத்தையும்  குறிப்பிட்ட இதழின் முகப்பில் பதிவுசெய்துள்ளது.
இவ்விதழில் இலங்கையில் போர்க்காலத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒருவருடத்திற்கும் மேலாக நடத்தும் அறப்போராட்டத்தையும் சுட்டிக்காண்பித்து, தேர்தல் காலங்களில் மக்கள் தமது உள்ளத்துணர்வுகளை, அந்த உறவுகளின் கண்ணீரின் சார்பாக  வெளிப்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
" பிள்ளை ஒன்றைப்பெற்றதிலிருந்து, முதிய வயதை அடைந்து இறுதியாகச்செல்லும் இடம்வரை தமிழருக்கு கொண்டாட்டத்திற்குக் குறைவே கிடையாது பாருங்கோ" என்ற ரீதியில் "இப்படியும் நடக்குது இங்கே" என்ற அங்கதச்சுவை பத்தியினை மதவடி மயிலர் மண் சஞ்சிகையில் எழுதிவருகிறார்.
புகலிட வாழ்வுக்கோலங்களையும், அதில் படர்ந்திருக்கும் நல்ல அம்சங்களையும் அதேவேளை நீடிக்கும் போலித்தனங்களையும் இந்தத்தொடர் பகிர்ந்துவருகிறது.

இலங்கைச் செய்திகள்


“அரசாங்கம் தீர்வைத் தராதென  ஜனாதிபதி தெரிவித்துள்ளதால் சர்வதேச விசாரணையே எமக்கான தீர்வு”

அம்பாறைத் தாக்குதல் சம்பவம் :  பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டதென்ன  ?

கண்டியில் பதற்றம் : வீதியெங்கும் மக்கள் கூடியுள்ளதால் பொலிஸார் குவிப்பு, 11 கைது !

கண்டி அசம்பாவிதம் தொடர்பில் அக்குறணை பள்ளிவாசலில் கலந்துரையாடல்

கண்டியில் ஊரடங்குச் சட்டம் 

கண்டியில் தற்போதைய நிலைமை என்ன ? தீயில் கருகி இளைஞர் பலி

கண்டி கலவரம் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு.!

கண்டி சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்தது இதுதான்.!

கண்டி சம்பவம் : பதற்றம் தொடர்கிறது.! 

“திகன சம்பவம் நாட்டிற்கு புதியதல்ல ; வரலாற்றில் சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்களே அதிகம்”

 கண்டி ஊரடங்கு சட்டம் நீக்கம்.!

அரசாங்கம் துரித நடவடிக்கை..!

குண்டு வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு

கண்டி அசம்பாவிதம் : இதுவரை 146 பேர் கைது

கண்டியில் மீண்டும் ஊரடங்குச் சட்டம்.!



“அரசாங்கம் தீர்வைத் தராதென  ஜனாதிபதி தெரிவித்துள்ளதால் சர்வதேச விசாரணையே எமக்கான தீர்வு”

08/03/2018 அரசாங்கம் தமக்கு எந்த தீர்வையும் தராது என்பதை 3 தடவைகள் தம்மை சந்தித்த நாட்டின் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ள நிலையில்  சர்வதேச விசாரணையே தமக்கான தீர்வாக அமையும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான விடைதேடி கடந்த வருடம் பங்குனி மாதம் 08 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (08-03-2018) உடன் ஒருவருட பூர்த்தியை எட்டியுள்ளது.
கடந்த காலத்தில் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டும் யுத்த காலப்பகுதியில் யுத்தப்பிரதேசங்களில் விசேடமாக யுத்தம் முடிவடைந்து, இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சிட்னி முருகன் - சைவசமய அறிவுத்திறன் தேர்வு 2018









சிட்னி ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தான அறிவுத்திறன் போட்டி 18/03/2018 @ 2pm


http://www.sydneydurga.org/

திருக்குறள் மனனப் போட்டிகள் 18/03/2018 10AM - துர்க்கை அம்மன் ஆலயம்



"நல வாழ்வு நம் கையில் புகழ்" மருத்துவர் கு சிவராமன் அவர்களின் சொற்பொழிவு 18/03/2018

18/03/2018

தமிழ் நாட்டிலே புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்திப் பல ஆயிரக்ணக்கானோர் மனதிலே தடம் பதித்த 
டாக்டர் சிவராமன சிட்னி வருகிறார்! சொற்பொழிவைக் கேட்டுச் சுகம் பெறுங்கள்! 



தகவல் 
அ லோகதாசன் 
0421 853 270 ;      02 8065 1458 




உலகச் செய்திகள்


“வடகொரிய அணு ஆயுத பயன்பாடு உலக அமைதிக்கு அச்சுறுத்தல் :பன்னாட்டு ஊகவியலாளர் மாநாட்டில் கவனத்தில் கொள்ளப்படும்”

பதற்றத்தை தணிக்க ஆலோசனை !!!

 பாகிஸ்தான் பாராளுமன்றில் முதன் முறையாக இந்து தலித் பெண்!!!

சிரியாவில் ரஷ்ய விமானம் வீழ்ந்து விபத்து ; 32 பேர் பலி

சவுதி அரேபியாவின் தேசிய தினத்தில் பெண்களுக்கான மரதன் போட்டியில் 1500 பெண்கள்




“வடகொரிய அணு ஆயுத பயன்பாடு உலக அமைதிக்கு அச்சுறுத்தல் :பன்னாட்டு ஊகவியலாளர் மாநாட்டில் கவனத்தில் கொள்ளப்படும்”

04/03/2018 உலக ஊடகவியலாளர் மாநாடு தென் கொரியாவின் சியோல் நகரில் அமைந்துள்ள கொரிய ஊடகவியலாளர் மையத்தில் நாளை  திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது . 

தமிழ் சினிமா


கேணி – திரை விமர்சனம் 


நேர்மையான அரசு அதிகாரியின் மனைவி ஜெயப்பிரதா. சில சூழ்ச்சி காரர்களால் இவரது கணவர் ஜெயிலுக்கு செல்கிறார். அங்கு எதிர்பாராதவிதமாக திடீரென இறந்துவிடுகிறார். கணவரின் கடைசி ஆசைக்கேற்ப சொந்த கிராமத்திற்கு செல்கிறார் ஜெயப்பிரதா.
இவரோடு தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞனின் மனைவியான பார்வதி நம்பியாரும் செல்கிறார். இவர்கள் போகும் இடத்தில் மக்கள் தண்ணீரின்றி தினந்தினம் செத்து மடிவதைக் கண்டு மனம் வருந்துகிறார் ஜெயப்பிரதா. அதே நேரத்தில் தன் வீட்டுத் தோட்டக் கேணியில் வற்றாத நீர்வளம் இருப்பதைக் காண்கிறார்.
தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் அந்த ஊர் மக்களுக்காக கேணியில் இருக்கும் தண்ணீரை தர முடிவெடுக்கிறார். அதன் பின்னர் தான் அந்தக் கேணிக்குப் பின்னால் இருக்கும் எல்லைப் பிரச்சினையும், அரசியல்வாதிகளின் சூழ்ச்சியும் இருப்பது ஜெயப்பிரதாவிற்கு தெரிகிறது.
ஆனால் மக்களின் தாகத்தைப் போக்கியே ஆக வேண்டும் என்று தீவிரமாக களமிறங்குகிறார் ஜெயப்பிரதா. இதற்கு பல தடைகள் வருகிறது. இதில் ஜெயப்பிரதா வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் இந்திரா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் ஜெயப்பிரதா. இவருடைய அனுபவ நடிப்பால் படம் முழுவதையும் தாங்கி பிடித்திருக்கிறார். பல இடங்களில் இவருடைய நடிப்பு ரசிக்கும் படி இருக்கிறது. இவர் கண்கலங்கும் போது, நமக்கே அந்த உணர்வை கொடுத்து விடுகிறார்.
பஞ்சாயத்து தலைவராக இடையிடையே வந்து நியாயம் பேசி, குறும்புத்தனமான நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார் பார்த்திபன். வக்கீலாக வரும் நாசர், கலேக்டர் ரேவதி, ஊர் மக்களில் ஒருவராக வரும் அனு ஹாசன், நீதிபதி ரேகா, ஆகியோர் கதையின் ஓட்டத்திற்கு மிகவும் உதவி இருக்கிறார்கள். ஜெயப்பிரதாவுடன் படம் முழுவதும் பயணிக்கும் பார்வதி நம்பியாரின் நடிப்பு சிறப்பு. கணவனை பிரிந்து தவிப்பது, தன் மீது ஆசைப்படும் போலீசின் வலையில் இருந்து தப்பிப்பது என நடிப்பால் கவர்ந்திருக்கிறார்.
டீக்கடையில் வெட்டியாக பேசும் சாம்ஸின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. அதுபோல் டீ மாஸ்டராக வரும் பிளாக் பாண்டியும் காமெடியில் துணை நின்றிருக்கிறார்.
தமிழ்நாடு – கேரளா எல்லைப் பங்கீட்டினை அடிப்படையாகக் கொண்டு படக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் எம்.ஏ.நிஷாத். கேணியில் யாரும் தண்ணீர் எடுக்கக் கூடாது என்பதற்காக இருமாநில காவல்துறையையும் பாதுகாப்பிற்காக நிறுத்தும் போது, முல்லை பெரியாறு அணை பிரச்சனை ஞாபகம் வருகிறது.
படத்தின் இயக்குனர் எம்.ஏ.நிஷாத் ஒரு மலையாளி. படத்தைத் தயாரித்திருக்கும் சஜீவ் பி.கே மற்றும் ஆன் சஜீவ் இருவருமே மலையாளிகள். இப்படி மலையாளிகளால் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் தமிழர்களுக்கான உரிமையைப் பேசுவது சிறப்பு. சண்டைகளில்லாமல், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் அழகாய் ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். மனிதனின் வாழ்வாதாரமாய் விளங்கும் தண்ணீரையும் எப்படி அரசியல் படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறார்.
தாஸ் ராம் பாலாவின் வசனம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பல வசனங்கள் பட்டாசு போல் வெடித்திருக்கிறது. ஒளிப்பதிவில் மிரட்டி இருக்கிறார் நௌஷாத் ஷெரிப். பச்சைப் பசேலென இருக்கும் பூமியையும், வறண்டு வெடித்துக் கிடக்கிற பூமியையும் அழகாக நம் கண்முன் நிறுத்திருக்கிறார்.
ஜெயச்சந்திரன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்திருக்கிறது. அதிலும் ‘ஐய்யா சாமி…’ பாடல் தாளம் போட வைக்கிறது. ‘கலையும் மேகமே…’ பாடல் முணுமுணுக்கும் ரகம். சாம்.சி.எஸ் பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘கேணி’ சமுக அக்கறையுள்ள படம்.
நன்றி tamilcinema.news