( கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை )
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர
நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் “
இது மகாகவி பாரதியின்
தீர்க்கதரிசனம் மிக்க தாரகமந்திரம்.
தனது ஞானகுருவாக பாரதி ஏற்றுக்கொண்டவர் எமது
இலங்கைத்திருநாட்டின் வடபுலத்தில் பிறந்த அருளம்பலம் சுவாமி அவர்கள்.
எமக்கு ‘ இலங்கையில் பாரதி ‘ என்ற
ஆய்வு நூலை வராக்கியிருக்கும்
எழுத்தாளர் முருகபூபதி அவர்கள்
பாரதியை தனது ஆதர்சமாகவும் ஞானத்தந்தையாகவும் ஏற்றுக்கொண்டு வாழ்பவர்.
சுப்பிரமணியன் பிறந்த எட்டயபுரத்தையும், அவர் பாரதியாக
பட்டம் பெற்ற எட்டயபுரம் அரண்மனையையும் இறுதியில் பாரதி சென்னையில் வாழ்ந்த
இல்லத்தையும் - அங்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மதம்பிடித்த
யானையொன்று பாரதியை தூக்கி எறிந்த
இடத்தையும் மாத்திரம் தரிசித்து எழுதாமல், யாழ்ப்பாணத்தீசன் என்று பாரதி வர்ணித்த அருளம்பலம் சுவாமி
சமாதியாகியிருக்கும் பருத்தித்துறை
வியாபாரிமூலை ஆலயத்தையும் தரிசித்துவிட்டு வந்தே, இந்த அரிய
நூலை எமக்கு வழங்குகின்றார்.
முருகபூபதி அவர்களுக்கு அறிமுகம் அவசியமில்லை. இவர் எமது தாயகத்தில்
நீர்கொழும்பூரில் பிறந்தவர். அங்கு 1954
ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் முதலாவது
மாணவர். அக்காலத்தில் அதன்பெயர் விவேகானந்தா
வித்தியாலயம். இவருக்கு 1954 ஆம்
ஆண்டு ஏடுதுவக்கி வித்தியாரம்பம் செய்வித்த ஆசான் பண்டிதர் க. மயில்வாகனன்
அவர்களுக்கே இந்த நூலை சமர்ப்பணம் செய்துள்ளார். பண்டிதரே அந்தக்கல்விச்சாலையின்
முதல் அதிபர்.
முருகபூபதி கடந்த
ஜனவரி மாதம் இலங்கை வருவதற்கு
முன்னர், பிரான்ஸ்
நாட்டிற்குச்சென்று, அங்கு நடந்த பண்டிதர் மயில்வாகனனார்
நூற்றாண்டு விழாவில் கலந்துரையாற்றிவிட்டு, அவுஸ்திரேலியா திரும்பும் வழியில் இங்கும்
வந்து தனக்கு எழுத்தறிவித்த பண்டிதர் அவர்களின் நூற்றாண்டை எமது
கல்லூரியிலும் நடத்திவிட்டே சென்றார்.
அந்தக்கல்லூரியில்தான்
நானும் கல்வி கற்றேன். எனது தமிழ் ஆசிரியர் வேறு யாருமல்ல..! அவர்தான் திருமதி
மாலதி முருகபூபதி அவர்கள்.
இந்த நூலின் உள்ளடக்கத்தை
முருகபூபதி அவர்கள் முதலில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் காலைக்கதிர் நாளிதழின்
வாரப்பதிப்பில்தான் நாற்பது
வாரங்கள் எழுதினார்.
அதன் தேவை உணர்ந்து
பலரதும் வேண்டுகோளின் பிரகாரம் இந்தத்
தொடர் அவுஸ்திரேலியா –
சிட்னியிலிருந்து வெளியாகும் தமிழ்முரசு இணைய இதழிலிலும் வெளியாகியிருக்கிறது.
தற்காலத்தில் எம்மவர்கள்
மத்தியில் நூல்களை வாசிக்கும் பழக்கம்
அருகிக்குறைந்து வருவதனால், இந்தத்
தொடரை தனியாக ஒரு நூல் வடிவில் வெளியிடும் எண்ணத்தை இவர் கொண்டிருக்கவில்லை
என்பதையும் இவருடனான உரையாடலின்போது தெரிந்துகொண்டேன்.
எனினும், இந்த நூலின்
உள்ளடக்கம், பல
செய்திகளை சொல்வதனாலும் இளம் தலைமுறையினர் அறியாத பல அரிய தகவல்களை
பதிவுசெய்திருப்பதனாலும், இதனை நூலாக்குமாறு முருகபூபதி
அவர்களைத் தூண்டிக்கொண்டிருந்தவர் எனது ஆசிரியர் திருமதி மாலதி அவர்கள்.
தூண்டிக்கொண்டிருந்தது
மட்டுமன்றி இலங்கை வந்து இதனை நூலாக்கி அதன் பதிப்பாளராகி இங்கு எங்களுக்கு
வரவாக்கியிருக்கிறார். அதனால் அவரை முதலில் பாராட்டுகின்றேன். எனது உரையின் தொடக்கத்தில்
“ அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள்
யாவும், பெயர் விளங்கி ஒளிர
நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம்
கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் “
என்ற மகாகவியின்
தாரகமந்திரத்தை இங்கு உச்சரித்தமைக்கும் முக்கிய காரணம் ஒன்றுண்டு.