2024ஆம் ஆண்டுக்கான பாலபுரஸ்கார் விருது தன்வியின் பிறந்த நாள் கதைத் தொகுப்புக்காக, யூமா வாசுகி அவர்களுக்குக் கிடைத்த செய்தியோடு நேராக இந்தப் புத்தகத்தைத் தேடி Kindle இல் கண்டடைந்தேன்.

ஒவ்வொரு கதையையும் படிக்கப் படிக்க என் பால்ய காலத்து உலகத்தில்  இருந்துவிட்டு வந்தேன். 
அவ்வளவுக்கு எளிமையும், ஆங்கிலக் கலப்பற்ற அழகு தமிழுமாக இவரின் எழுத்துகள் திகழ்கின்றன.
எண்பதுகளில் சிறார் கதைகளோடு வாழ்ந்தவர்களுக்குத் தான் புரியும் இவ்விதமான சிறுவர் இலக்கியத்தையும் நாம் பேணுபவர்கள் என்று.

இந்தக் கதைத் தொகுப்பை 5 முதல் 18 வயது வரையான சிறார்களுக்கானது என்று Kindle வரையறுத்திருந்தாலும், எல்லா வயதினரும் படிக்க வேண்டியது என்றே சொல்வேன்.

இன்று திரைப்படங்களில் மித மிஞ்சிப் போன வன்முறைகள், காண் பகிர்வுகளில் கிடைக்கும் தேவையில்லாத அரட்டைகள் தான் சிறுவர்களுக்கான தீனியாக இருக்கும் சூழலில் இந்த மாதிரியான கதைகள் மனதைச் செழுமைப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

மொத்தம் பத்துக் கதைகள். அனைத்துமே சிறுவர் உலகத்தில் நின்று பேசுகின்றன. அதுதான் பூமா அவர்கள் மீது பேராச்சரியம் கொள்ள வைக்கின்றன. ஒரு ஆற்றொழுக்கான மூத்த படைப்பாளி, சிறார் மொழியிலேயே சிந்தித்து அவர்களோடு உறவாடுவது என்பது இயல்பான காரியமல்ல. ஆனால் இந்தக் கதைத் தொகுப்பைப் படித்து முடித்ததும் இன்ப ஆச்சரியமே மேலோங்குகின்றது.

ஒவ்வொரு கதைகளிலும் ஒவ்வொரு நீதி பேசப்பட்டாலும் அது போதனையாக அன்றி கதைப் போக்கிலேயே சொல்லி விட்டுப் போகின்றது.
உதாரணத்துக்கு “தலைவர் ஜெய் செய்தது சரியா?” என்ற கதையில் ஊருக்கு உதவும் அந்தச் சிறுவனின் செயல் சரியா என்று வாசகரையே கிடுக்குப்பிடி போட்டு விடுகிறது.
மெல்லிய நகைச்சுவையையும் கலந்து எழுதும் நுட்பம் கூட இந்தக் கதைகளின் சுவாரஸ்யத்துக்கான பலம்.