சமூகத்திற்காக பேசுவதும்
சமூகத்தைப் பேச வைப்பதும்தான் கலை, இலக்கியத்தின்
பிரதான நோக்கமாக இருக்கும். இருக்கவும் வேண்டும்.
அந்தவகையில் அண்மையில்
நான் மெல்பனில் பார்த்து, வியந்த Counting and Cracking – எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு நாடகம், எங்கள் சமூகத்தைப் பேசியிருக்கிறது. எங்கள் சமூகம்
எனச்சொல்லும்போது, இலங்கையில் வாழும் இரண்டு மொழிகளைப்பேசும் மூன்று சமூகத்தினதும்
அரசியல் மயமாக்கப்பட்ட வாழ்கையை பேசியிருக்கிறது.
அத்துடன் இனக்கலவரத்தால்
தாயகம்விட்டு அவுஸ்திரேலியா வந்த
ஒரு தமிழ்க்குடும்பத்தின் புகலிட வாழ்வுக்கோலத்தையும் தலைமுறை இடைவெளியினூடாக சித்திரிக்கிறது.
வாக்கு வங்கிக்காக மதம், மொழி, இனம் சார்ந்து அரசியல் நடத்தி, இயற்கை எழில் கொஞ்சும் ஒரு வளமான நாட்டை சீரழித்து
குட்டிச்சுவராக்கியவர்கள் அரசியல்வாதிகள். மக்கள் பலிக்கடாவானார்கள்.
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர்
பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக்கட்சிக்குள் உருவான வாரிசு அரசியல், மற்றும் அதிகாரப்
போட்டியினால், இக்கட்சியிலிருந்து வெளியேறிய
எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்கா தொழிலாளிகள், விவசாயிகள், ஆசிரியர்கள், வைத்தியர்கள், பெளத்த பிக்குகளை இணைத்தவாறு , அதற்கு
ஐம்பெரும் சக்திகள் ( பஞ்சமா பலவேகய ) எனப்பெயர் சூட்டிக்கொண்டு, தேர்தலில் வெற்றிபெற்று
பதவிக்கு வந்தார்.
1956 ஆம் ஆண்டு அவர் சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதற்காக
தனிச்சிங்களச்சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்ததையடுத்து, பிரச்சினை உக்கிரமடைந்தது.
அவ்வேளையில் சட்டமேதையும், சமசமாஜக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான
கலாநிதி கொல்வின் ஆர். டீ . சில்வா, “ ஒரு
மொழி என்றால், இரண்டு நாடுகள், இரண்டு மொழிகள் என்றால் ஒரு நாடு “ என்ற கருத்தியலை முன்வைத்தார். வடக்கிலிருந்த
பெருவாரியான தமிழர்கள் அக்காலப்பகுதியில் அவரது கட்சியை ஆதரித்தனர்.
எனினும் இலங்கையில் விதி
விளையாடியது. தமிழரசுக்கட்சியின் தலைவர் செல்வநாயகமும் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவும் ஒப்பந்தம் செய்துகொண்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம்
வடக்கு – கிழக்கில் ஓரளவு மாநில சுயாட்சி (Regional Autonomy) என்பதை
பண்டாரநாயக்கா ஏற்றுக்கொண்டார்.
இந்த வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.ஆர் ஜெயவர்தனா களனியிலிருந்து கண்டி தலதா மாளிகை
நோக்கி தனது ஆதரவாளர்களுடன் நீண்ட பாதயாத்திரையை மேற்கொண்டார்.
அவ்வேளையில் கம்பகா தொகுதி எம். பி. யும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை
சேர்ந்தவரும், இடதுசாரி சிந்தனை கொண்டவருமான எஸ். டீ. பண்டாரநாயக்கா தலைமையிலான குழு ஒன்று அந்த பாதயாத்திரைக்கு எதிராக களத்தில் நின்று போராடி,
ஜே. ஆர். தலைமையில் ‘வந்தவர்களை அடித்து கலைத்தது.
கடும்போக்காளர்களான பௌத்த
பிக்குகள் பிரதமர் பண்டாரநாயக்காவின் கொழும்பு வாசஸ்தலத்திற்கு முன்னாள் திரண்டு, குறிப்பிட்ட
பண்டா – செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
நடத்தினர். அதனையடுத்து பிரதமர் அந்த ஒப்பந்தத்தை கிழித்து எறிந்தார்.
இறுதியில் அவர் வளர்த்த
கடாக்களே அவரது மார்பில் பாய்ந்தன.