மரண அறிவித்தல்

.
மரண அறிவித்தல் 
அமுதன் அண்ணாமலை

                                தோற்றம்: 15.07.1989      மறைவு: 25.01.2013
(மருத்துவ பீட இறுதியாண்டு மாணவன்,James Cook School of Medicine, Townsville, QLD)
தமிழ்நாடு, காரைக்குடியைப் பிறப்பிடமாகவும்,NSW-INGLEBURN, ஐ வதிவிடமாகவும் கொண்ட அமுதன் அண்ணாமலை 25.01.2013 அன்று காலமானார்.அன்னார் அண்ணாமலை மீனாட்சி சுந்தரம், சாந்தினி அண்ணாமலை ஆகியோரின் அருமைப் புதல்வரும் அழகு அண்ணாமலையின் பாசமிகு அண்ணனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகளின் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புகளுக்கு:
சுப்பிரமணியம் – 0451074701 – geosubra@yahoo.com
மணி – 0413563254 – mramasamy1@bigpond.com

நான் நம்பியதும் நம்பவில்லை என்பதும் - கவிதைகள்

 
கருணாகரன்
ஓவியம்: செல்வம்

நான் நம்பவில்லை
இத்தனை கடினமானதாயும் இலகுவானதாயும்
நீ இருப்பாய் என

அப்படித்தான் நம் வாழ்க்கையும் இருக்கிறது
என்றாய்

வெல்லவும் முடியா தோற்கவும் முடியா
முடிவற்ற சதுரங்க ஆட்டத்தில்
இனிமையும் கசப்பும் நிரம்பியிருக்கிறது
என்னருகிலே உள்ள
எல்லாக் கிண்ணங்களிலும்
நீயும் அப்படித்தானுள்ளாய்
கசப்பாயும் இனிப்பாயும்

உன்னிடமும் உலகிடமும்
அப்படித்தானுள்ளது என்றாய்

சிட்னி ஆருகன் ஆலயத்தில் தைப்பூச திருவிழா

.
தைப்பூச நன்னாளான ஞாயிற்றுக்கிழமை இரவு அபிசேக ஆராதனைகளும் அதனைத்தொடர்ந்து முருகப் பெருமான் வீதி உலாவரும் அழகிய காட்சியும் பக்த கோடிகள் மழையையும் பொருட்படுத்தாமல் பக்திப் பரவசத்தோடு காணப்படுவதையும் காணக்கூடியதாக இருந்தது.


                                                                   படப்பிடிப்பு ஞானி




ஒரு முத்தமும் பல கேள்விகளும் - - ஞாநி

.
ஒரு முத்தமும் பல கேள்விகளும்

- ஞாநி

kadalபம்பாய்’ படத்துக்குப் பின் மறுபடியும் மணிரத்னம், ராஜீவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியுடன் எழுத ‘அறம்’ புகழ் எழுத்தாளர் ஜெயமோகன், நடிக்க கார்த்திக்கின் மகன், ராதாவின் மகள், மறுபடியும் அரவிந்த்சாமி, முதல்முறையாக மணிரத்னம் படத்தில் அர்ஜுன் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் பல விளம்பர அம்சங்களுடன் வரவிருக்கும் ‘கடல்’ படத்தின் முதல் டிரெய்லர் பார்த்தேன்.

பார்க்கச் சொன்னவர் திரையுலகில் பணி புரியும் ஒரு நண்பர்தான். படத்தில் நடிக்கும் ராதாவின் மகள் துளசிக்கு 15 வயதுதான் ஆகிறது. அந்த சிறுமியை இப்படி முத்தமிடும் காட்சியில் பயன்படுத்தியிருப்பது சரிதானா என்ற கேள்வியை அவர் ‘பேஸ்புக்’ சமூக இணைய தளத்தில் எழுப்பியதாகவும் யாருமே அதை கண்டுகொள்ளவில்லை என்றும் அந்த நண்பர் சொன்னார். அதனால் நானும் பார்த்துவிட்டு பேஸ்புக்கில் இவ்வாறு எழுதினேன்.

“நாம் எல்லாரும் சிந்திக்க சில கேள்விகள் : 15 வயது சிறுமியை லிப் கிஸ் அடிக்கும் காட்சியில் நடிக்க வைத்து படம் தயாரித்து வெளியிடுவது மணிரத்னத்துக்கு நல்ல வியாபாரமாக இருக்கலாம். ஆனால் அது ‘அறமா’குமா? படத்துக்கான கடல் படக் குழுவின் நிருபர் சந்திப்பை தொகுத்து வழங்கிய சுஹாசினி லட்சக்கணக்கில் பணம் திரட்டி மகளிர் நல அமைப்பு நடத்தி வருகிறாரே, அவரும் அந்த அமைப்பும் பெண்கள் பாதிக்கப்பட்ட பிறகுதான் உதவி செய்வது மெழுகுவத்தி கொளுத்துவதெல்லாம் செய்வார்களா? பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்களா? இன்றைய சினிமாக்களில் சிறுமியை வைத்து உருவாக்கிக் காட்டும் இத்தகைய காட்சிகள் விடலை மனங்களில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி யாருக்கும் கவலையில்லையா? டெல்லி, ஸ்ரீவைகுண்ட நிகழ்வுகளுக்கெல்லாம் பொங்கி எழுந்த பேஸ்புக் வீரர்களில் சிலர் சினிமா துறை என்று வரும்போது மட்டும் பம்மிப் பதுங்கிக் காணாமற் போவது ஏன் ?”

மெல்பேர்ன் ஸ்ரீ முருகப் பெருமானின் தேர்த்திருவிழா அல்லமதேவன்-

.

மெல்பேர்ன் மாநகரில் சண்சயினில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகப் பெருமானின் மகோற்சவத் தேர்த்திருவிழா




மெல்பேர்னில் உள்ள சண்சயினில் வீற்றிருந்து அடியார்களுக்கு தெய்வ அருள்பாலித்துக் கொண்டிருக்கும் தமிழ்க் கடவுள் என்று கூறப்படும் அழகிய கந்தன் ஸ்ரீ முருகப் பெருமானின் வருடாந்த மகோற்சவத் திருவிழா கடந்த 18.01.2013 வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இறைவன் உடைய ஜந்து தொழில்களான படைத்தல்ää காத்தல்ää அழித்தல்ää அருளல்ää மறைதல் ஆகியவற்றை விளக்குவதையே இந்த திருவிழாக்கள் குறிக்கின்றது. மற்றும் நித்திய பூசைகளில் நிகழும் குறைகளை நீக்கி ஒரு நிவர்த்தி கிடைக்க இந்த மகோற்சவத் திருவிழாக்கள் நடைபெறுகின்றது என்று சொல்லப்படுகின்றது. பதினொருநாட்கள் விஷேச அபிஷேக ஆராதனைகளுடன் பகல்ää இரவுத் திருவிழாக்களாக நடந்து கொண்டிருக்கின்றன. மகோற்சவத் திருவிழாவில் கடந்த சனிக்கிழமை 26.01.13 அன்று தேர்த்திருவிழா நடைபெற்றது. ஸ்ரீமுருகப் பெருமானின் விஷேச தினமான தைப்பூசத்திலன்று ஞாயிற்றுக்கிழமை 27.01.13 தீர்த்தத் திருவிழாää கொடியிறக்கம்ää மறுநாள் திங்கட்கிழமை 28.01.13 பூங்காவனம் ஸ்ரீ முருகப் பெருமானின் திருக்கல்யாணத்துடன் மகோற்சவத் திருவிழா நிறைவு பெறுகின்றது.



சந்திரனில் தமிழர்கள் காலடி வைக்க சூப்பர் ஐடியாக்கள்!

.

                                                                                          எழுத்துருவாக்கம்: செ.நிரூபன்
நிலவில் தமிழன் கால் வைக்கும் நாள் வெகு விரைவில் நிகழுமா?

உலகில் வெறும் இரு நூறு ஆண்டுகள் வரலாற்றினை உடைய ஆஸ்திரேலியா இன்று உலகமே வியந்து நோக்கும் வண்ணம் சகல துறைகளிலும் முன்னேறியிருக்கின்றது. அமெரிக்கப் பொருளாதாரத்துடன் போட்டி போடுமளவிற்கு, அமெரிக்க நாணயப் பெறுமதியினை அடிக்கடி முந்தும் அளவிற்கு வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நாடு தான் ஆஸ்திரேலியா. நம்ம தமிழர்களின் வரலாறு என்ன என்று கேட்டால் நாம் அனைவரும் வாய்ல இருந்து சீத்துவாய் ஊத்தா குறையா "கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி” அப்படீன்னு ஒரு வசனத்தை திரும்ப திரும்ப பேசி, மூவாயிரம் ஆண்டுகள் பழமையான இனம் தமிழினம் அப்படீன்னு சொல்லி எம் பெருமையை நாமே பீத்திக்குவோம்.

ஆனால் வெள்ளைக்காரங்க சொல்லை விட எப்போதும் செயலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. அதனால எல்லா துறைகளிலும் துரித கதியில் வளர்ச்சி காண்றாங்கோ. மூவாயிரம் ஆண்டுகள் பழமையான ஓர் இனத்தால மூனுக்குப் (நிலாவுக்கு) போக முடியலை எனும் போது வெட்கமா இல்லையா? எம்மை நாமே சுய பரிசோதனை செஞ்சுக்கனுமுங்க. தமிழர்களின் ஒரே பண்பு என்ன தெரியுமா? எதற்குமே ஓர் எல்லை வைப்பது. இத்துப் போன கலாச்சாரப் பண்பிலிருந்து விலக முடியாது இந்த வழியில் தான் நாம வாழ்வோம் என அடம் பிடிப்பது. இந்தப் பண்புகள் உள்ள வரை எந்த ஜென்மத்திலும் தமிழனால முன்னேறவே முடியாதுங்க.

ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி – பரிசளிப்பு நிகழ்ச்சி -02/02/2013

.
சென்ற வருடம் நடைபெற்ற ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டியில் பரிசில்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி எதிர்வரும் சனிக்கிழமை 2ம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கும் ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான இராப்போசன விருந்துவில் நடைபெறும் என்பதை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டிக் குழு அறியத்தருகின்றார்கள்.  மேலதிக விபரங்களுக்கு திரு. கு கருணாசலதேவாவை  0418 442 674 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

போட்டியில் பங்குபற்றிய சில மாணவர்களளை கீழே காணலாம்


சொல்லவேண்டிய கதைகள் 1-


.

பொலிஸ்காரன் மகள் -முருகபூபதி

அவுஸ்திரேலியாவுக்கு நான் புலம்பெயர்ந்து செல்வதற்கு பல காரணங்கள் இருந்தன. 1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி முற்பகல் விமானம் ஏறும்போது அம்மா பயணம் அனுப்ப வரவில்லை. முதல்நாள் இரவு என்னை அருகில் வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தார்கள்.
அதற்குமுன்னர் எனது தம்பிமார் மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைநிமித்தம் புறப்பட்டபோது அம்மா அப்படி அழவில்லை. நான் மூத்த மகன். அப்பாவின் மறைவிற்குப்பிறகு குடும்பத்தின் தலைமைப்பொறுப்பை அம்மா எனக்குத்தந்தார்கள். நான் அவர்களின் அருகிலிருந்து கவனிக்கவேண்டிய பல கடமைகள் இருப்பதை நினைவுபடுத்தியவாறே அழுதார்கள்.
அம்மாவுக்கு ஆறுதல் சொன்னேன்.
அம்மா சொன்ன கடமைகளை உலகில் எந்தப்பகுதிக்குச்சென்றாலும் நிறைவேற்றுவேன்  என்று அம்மாவின் கைபற்றி உறுதியளித்தேன். சற்று அமைதியடைந்தார்கள். ஆனால் மறுநாள் அம்மா விமானநிலையம் வரவில்லை.
நண்பர் ராஜஸ்ரீகாந்தன் வந்தார். மனைவியும் மூத்த தம்பி நித்தியானந்தனும் வந்தார்கள். அப்பொழுது எனது மனைவி நிறைமாதக்கர்ப்பிணி. மூன்றாவது பிள்ளையான எனது மகனை சுமந்துகொண்டிருந்தாள். அவளும் அழுதழுது கண்களை சிவப்பாக்கியிருந்தாள்.
அயலில் சிலரது விமர்சனங்கள் அவளை பாதித்திருந்தன.
1984 இல் இந்தியாவுக்குப்போனார்…. புத்தகங்களுடன் வந்தார்.
1985 இல் சோவியத் நாட்டுக்குப்போனார்….புத்தகங்களுடன் வந்தார்.
1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறார் என்னதான் கொண்டுவருகிறார் பார்ப்போமே…?
எனக்கு பாரதியாரின் மனைவி செல்லம்மாதான் நினைவுக்கு வந்தார்.
விடைபெறும்போது “ புத்தகங்களும் கொண்டு வருவேன்” என்று மனைவியிடம் சொன்னேன்.

துர்க்கை அம்மன் ஆலய கட்டிட நிதிக்கான இரவு உணவு

.



இலங்கைச் செய்திகள்


வடக்கில் கைதான 44 பேரும் பூஸாவுக்கு மாற்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பிரத்தியேக செயலாளர்  பொன்காந்தன் என்றழைக்கப்படும் பொன்னம்பலம் இலட்சுமிகாந்தன் கைது

யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் இருவர் விடுதலை

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை கண்காணிக்க யாழில் அலுவலகம் திறப்பு

பன்றி உருவத்தில் அல்லாஹ்வின் பெயரை எழுதி குளியாப்பிட்டியவில் பிக்குகள் ஆர்ப்பாட்டம்

மத்தள விமான நிலையம் மார்ச் மாதம் திறந்து வைக்கப்படும்: பிரியங்கர


ஓய்வூதியத்தையும் இழந்தார் ஷிராணி பண்டாரநாயக்க!

எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்ற நிலைப்பாடு தொடரக் கூடாது!



வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு -52 “எள்ளு இருக்கா?”


ஞானா:        அம்மா….என்னம்மா நீங்கள்? முறுக்குச் சுட்டுத் தரச்சொல்லிக் கேட்டனான் எல்லே. இப்ப                கேட்டு ஒரு கிழமையாயய் போச்சு. நீகங்கள் பேசாமல் இருக்கிறியள்.     
    
சுந்தரி:        ஞானா முறுக்குக்கு இப்ப என்ன அவசரம்? ஆறதலாய் நேரங்கிடைக்கேக்கை செய்து தாறன்.

ஞானா:        நான் அம்மா என்னோடை வேலை பாக்கிற வெள்ளைக் காறப் பிள்ளை ஒண்டுக்கு முறுக்கைப்            பற்றிச் சொன்னன். அந்தப் பிள்ளை சாப்பிட்டுப் பாக்க ஆசைப் படுகிதம்மா.           
 
சுந்தரி:        பிள்ளை ஞானா…முந்தநாள் முறுக்குச் சுடுவம் எண்டு ஆயித்தம் செய்தனான். ஆனால் எள்ளு            இருக்கேல்லை…..

ஞானா:        முறுக்குச் சுட எள்ளு என்னத்துக்கு அம்மா? உழுத்தம்மா அல்லாட்டில் கடலைமா இருந்தால்            போதும்தானே.

சுந்தரி:        எடி விசர்ப்பிள்ளை. எள்ளுப் போட்டு முறுக்குச் சுட்டால்தான் ருசியாய் இருக்கும். இந்த எங்கடை            பலகாரஞ் சுடுகிற பக்குவங்களையும் கொஞ்சம் தெரிஞ்சுவையுங்கோ. எங்கடை பலகாரங்கள்             தின்ன நல்ல விருப்பம். ஆனால் செய்யிற பக்குவம் தெரியாது உங்கள்க்கு. உன்ரை அப்பரிட்டை            சொன்னனான் எள்ளு வாங்கியாருங்கோ எண்டு. மனிசன் கடைக்குப் போற நேரமெல்லாம் அதை            மறந்து போகுது.

தமிழ் சினிமாவை நூற்றாண்டு சிகரத்திற்கு கொண்டு சென்றுள்ளது விஸ்வரூபம்


.



உலக சினிமாவின் தரத்திற்குள் கால் பதித்துள்ள முதலாவது தமிழ் தயாரிப்பு.. தமிழ் திரைப்படங்கள் பற்றி நாம் வெளியான மறு நாளே எழுதும் விமர்சனம் தமது தொழிலை பாதிக்கிறது என்ற கோரிக்கையால் விஸ்வரூபத்திற்கான உண்மை விமர்சனத்தை எழுத பத்து நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் விஸ்வரூபத்தைப் பார்த்த பிறகு அதுபற்றி உடனடியாக எழுதாவிட்டால் அதுவும் தொழிலைப் பாதிக்கும் செயலே என்ற உண்மையை அப்படம் ஏற்படுத்திவிட்டது.
இதுவரை டண்டுணக்கா.. டணக்கு ணக்கா என்றிருந்தலே போறும் என்றிருந்த இந்திய தமிழ் சினிமாவை ஒரே இழுவையாக இழுத்து, மலையின் உச்சிக்கு ஏற்றியிருக்கிறார் கமல்.
காதல் பாட்டுக்கள் இல்லை, வில்லனுக்கு மரணமில்லை, கிளைமாக்ஸ் இல்லை, கதாநாயகனுக்கு ஆர்பாட்டமான ஒரு தொடக்கமில்லை, ஆனால் கதிரையைவிட்டு எழும்ப முடியாமல் ரசிகரை ஆசனத்தின் நுனிக்கே கொண்டு வந்துவிடுகிறார்.
பிளாஸ்டிக் பையை விரித்துவிட்டு அதிலேயே நிற்க வைத்து தலையில் ஒரு வெடி, தரையில் சிந்தும் இரத்தத்தை துடைக்கும் அவசியம் இல்லாத கொலை..
சூடு வேண்டி இரத்தம் சரமாரியாக ஓட கிடக்கிறது ஓர் உடலம், அந்த நேரம் அதன் மார்பிற்குள் கிடக்கும் தொலைபேசி அடிக்கிறது, அந்த வைப்பரில் இரத்தம் சரக் கரக்கென அசையும் அசைவு, நுட்பமான வெளிப்பாடு.
ஒவ்வொரு நடிகருடைய முகபாவத்திற்கும் கொடுத்துள்ள கால அவகாசம், கைதேர்ந்த நடிப்புக் கலையை கமேராவிற்குள் கொண்டு வரும் கலை நேர்த்தி.. பொறுமையான படப்பிடிப்பு..

ஆப்கானின் சூழலில் ஒரு திரைப்படத்தை அமெரிக்க உலங்குவானூர்திகளின் தாக்குதல்களோடு படமாக்கிய சிறப்பு இந்திய சினிமாவிற்கே சவால் விட்டிருக்கிறது..
படம் பார்க்கத் தொடங்கிய 15 வது நிமிடமே நம்மை அறியாமலே கமல் பற்றிய பயம் மனதை வாட்டத் தொடங்கிவிட்டது காரணம் ஒரு திரைப்பட இயக்கனருக்கு உயிராபத்தைத் தரும் ஆபத்தான கதைக்கரு.
கமல் கால் வைக்கக்கூடாத இடத்தில் கால் வைத்துவிட்டார் என்ற அச்சத்தை ஏற்படுத்திய கதை, அந்த அச்சத்திலேயே நம்மை வாழ வைத்து, வேறு வழியில்லை இந்தக் குகைக்குள் நுழைந்துவிட்டோம் இதனால் வெளியேறியே ஆக வேண்டும் என்ற நிலைக்குள் நீச்சலடிக்க வைக்கிறது..
கமலுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று பிரபல சினிமா கலைஞன் பாலு மகேந்திரா சொல்லியிருப்பது முற்றிலும் பொருத்தமானது.
பணம், பெயர், புகழ், அரசியல் செல்வாக்கு, சினிமாவால் முதல்வராகும் மோசமான கனவு எதுவும் இல்லாமல் சினிமாவிற்காக ஒரு வெறியோடு கமல் உழைத்துள்ளார்.
களத்தூர் கண்ணம்மா படத்தில் சிறுவனாக நடிக்க ஆரம்பித்த கமல் ஆப்கான் காபுலில் தனது களத்தூரை வைத்து இந்தச் சாதனையை படைத்திருப்பது பாராட்டப்பட வேண்டியது.
வெறுப்போடு பார்த்தால் இஸ்லாத்திற்கு எதிரான கருத்தாக கருத முடியும், அதுபோல கமலின் கோணத்தில் பார்த்தால் அவருடைய நியாயங்களும் சரியானதாகவே இருக்கிறது.
மேலும் விஸ்வரூபத்தில் காட்டப்படும் காட்சிகள் யாவும் ஏற்கெனவே இணையத்தில் வெளிவந்த காட்சிகளே என்பதையும் மறுக்க முடியாது.

அவுஸ்திரேலியா மெல்பேணில் கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவான ”தமிழர் விளையாட்டு விழா 2013” பற்றிய செய்தி



 

வங்கக்கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் இருபதாம் ஆண்டு நினைவாகதமிழர் விளையாட்டு விழாஅவுஸ்திரேலியாவின் மெல்பேணில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.


ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் இந்நிகழ்வு, கடந்த ஞாயிற்றுக்கிழமை 20 - 01 - 2013 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை வொன்ரோனாவில் ஜேடபிள்யு மான்சன்  றிசேவ் (J.W. Manson Reserve, Wantirna) மைதானத்தில் நடைபெற்றது.

தமிழ் செயற்பாட்டாளர்கள் திரு. விஸ்னு இராஜன் அவர்கள்; அவுஸ்திரேலிய தேசியகொடியையும், திரு சந்திரகுமார் அவர்கள் தமிழீழ தேசியக் கொடியையும் ஏற்றிவைத்தும், மாமனிதர் தில்லை ஜெயக்குமாரின் துணைவியார் திருமதி யோகா ஜெயக்குமாரினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கத்தைத் தொடர்ந்து, தமிழர் ஓருங்கிணைப்புக் குழு / நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதியுமான திரு டொமினிக் அவர்களின் வரவேற்பு உரையுடன் விழா தொடக்கிவைக்கப்பட்டது. தமிழர் விளையாட்டுவிழாவில் துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம், சிறுவர்களுக்கான கள விளையாட்டுக்கள் என பல்வேறு வயதுப்பிரிவினருக்கான போட்டிகள் நடைபெற்றனஇம்முறை தமிழீழத் தேசிய விளையாட்டான கிளித்தட்டு / தாச்சி விளையாட்டும் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.

வெளிவந்துவிட்டது இம்மாத தமிழோசை

.



உலகச் செய்திகள்

.
மியாமியில் விமானங்கள் மோதியது: 600 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

மக்கள் முன்னிலையில் ஒபாமா பதவி ஏற்பு!

இந்திய உளவாளிகள் பாகிஸ்தானில் கைது!

நோர்வேசிறுவர் காப்பகங்களில் 52 சிறுவர்கள் மீது துஷ்பிரயோகம் : வேலியே பயிரை மேய்ந்த கதை


மக்கள் முன்னிலையில் ஒபாமா பதவி ஏற்பு!

ஜனாதிபதித் தேர்தலில்  இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற ஒபாமா  வொஷிங்டனில், பொது மக்கள் முன்னிலையில் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் கடந்த ஆண்டு  நவம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்தலில் ஒபாமா இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.
http://www.virakesari.lk/image_article/obamidna.jpg

ரொக்கட் செய்த குற்றம் என்ன? -

.

rocket2011 ஆகஸ்ட் மாதம் மெல்பேனின் மேற்குப் பகுதி புற நகரொன்றில் நாயொன்று வீடு புகுந்து நாலு வயதுக் குழந்தையை கடித்துக் கொன்று விட்டது. இந்த பெண் குழந்தையின் குடும்பம் சூடானினில் இருந்து சில வருடங்கள் முன்பாகவே அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளாக வந்தவர்கள்.
இவர்களின் துன்பத்தில் ஏதோ ஒரு விதத்தில் நான் பங்கேற்க வேண்டியிருந்தது.
எப்படி என கேட்கிறீர்களா?
மிருக வைத்தியம் செய்யும் போது சில இக்கட்டான தருணங்களை சந்திக்க வேண்டியிருந்தது. உணர்வு ரீதியாக விடயங்கைளைப் பார்த்து அதன்படி நடந்து கொள்வது இலகுவானது. தானாகவே மனிதர்கள் இப்படி செயல்ப்படுவதற்காக மூளையின் கீழ்பகுதியில் கம்பியூட்டர் மாதிரி ஏற்கனவே புரோக்கிராம் பண்ணப்பட்டுள்ளது.
இதனால் கண்ணீர் விடுவது, கோபம் கொள்வது போன்ற உணர்வின் வெளிபாடுகள் இலகுவானது. அதே நேரத்தில் விடயங்களை அறிவு பூர்வமாக அணுகுவதற்கான தேவை வரும்போது மூளையின் முன்பகுதி வேலை செய்யவேண்டும். இது சிறிது காலம் கடந்து நடக்கும். அத்துடன் சிலவேளைகளில் பெரும்பாலானவர்கள் நடக்கும் திசைக்கு எதிர்திசையில் தனிமையில் பயணப்பட வேண்டியுள்ளது.
இப்படியான சிக்கலை எப்படி கடந்து போவது ?

அவுஸ்திரேலியாவில் இருந்து அனைத்துலகை நோக்கி ஒலிபரப்பாகின்றது புரட்சி எப்.எம்.


.
”உலகத் தமிழ் வானொலி வரலாற்றில் ஓர் புதிய புரட்சி!
தமிழ் வானொலி வரலாற்றில் முதலாவது 3D ஒலித் தெளிவுடன் ஓர் தமிழ் வானொலி!
அவுஸ்திரேலியாவில் இருந்து அனைத்துலகை நோக்கி ஒலிபரப்பாகின்றது புரட்சி எப்.எம்.
ஒவ்வோர் நாளும் அவுஸ்திரேலிய நேரம் இரவு 07.30 மணி தொடக்கம் - காலை 09.00 மணி வரை நேரடி நிகழ்ச்சிகளோடு 24 மணி நேரமும், இணையத் தளத்தினூடாகவும், உங்களின் Smart Phone இலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது உங்கள் புரட்சி எப்.எம்
விபரம் அறிய, http://puradsifm.com/

காணி நிலம் வேண்டும்!-எஸ். கிருஷ்ணமூர்த்தி

.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் காலையில் துவிச் சக்கர வண்டியின் பின்னால் பொருட்கள் வைக்கப் பயன்படுத்தப்படும் கரியரில் ஒரு நெடுக்காக மடிக்கப்பட்ட பேப்பர் கட்டுடன் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை அணிந்து போவார். மதியம் வீடு திரும்புவார. மாலை நேரத்திலும் இதே செற்றப்புடன் செல்வார்.ஆனால் வேட்டி, சட்டை மங்கிய கலராக இருக்கும். சில வேளைகளில் சைக்கிளின் பின்னுக்கிருந்த பேப்பர் கட்டு முன்னுக்குப் போகும். பின்னுக்கு வாழைக்குலையோ, வெங்காயப்பிடியோ, அல்லது செத்தல் மிளகாய் பையோ அந்த அந்த சீசனுக்கு ஏற்ற மாதிரி இருக்கும்.
தினசரி இந்தக் காட்சியைக் காணலாம். சனி, ஞாயிறு மட்டும் இந்த காட்சிக்கு ஓய்வு. இந்தக்காட்சி எண்பதுகள் வரை இடம் பெற்றது. அதற்குப் பிறகு யாழ்குடாவில் சிவில் நிர்வாகத்தின் செயற்பாடுகள் முடங்கிப் போனதால் இதுவும் இல்லாமல் போய்விட்டது. இவரின் முழு நேரத் தொழில் நீதிமன்றம் செல்வது. ஆனால் இவர் வழக்கறிஞரோ, நீதிமன்ற ஊழியரோ கிடையாது. இவருக்கு மல்லாகம் நீதி மன்றத்தில் எல்லா நாட்களும் காணி வழக்கு இருக்கும், அப்படி வழக்கு இல்லாவிட்டாலும் ஏனைய வழக்கைப் புதினம் பார்க்கப் போவார். அதனால் காலையில் உறுதிக் கட்டுடன் (காணிப் பத்திரம்) நீதிமன்றம் போவார். மாலையில் வக்கீல் வீட்டுக்குக் காணி உறுதியுடனும் அன்பளிப்புப் பொருட்களுடனும் போவார். இவருக்கு இது பிடித்த தொழிலா? பிடித்த பொழுது போக்கா என என்னால் அனுமானிக்க முடியவில்லை.

டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி – மண்ணின் மீது பற்றுள்ளவர்


.
இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் படித்து அங்கேயே நிலைத்து விட்டவர்கள் அப்படி நிலைக்க ஆசைப்படுபவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். ஆனால் அங்கேயிருந்து திரும்பி வந்து எதாவது செய்ய வேண்டும் தான் பிறந்த நாட்டுக்கு என்று எண்ணி செய்ய முயன்றவர்கள் மிகக் குறைவு. நூற்றுக்கணக்கிலாவது இருப்பது சந்தேகம். 30, 40 வருடங்களுக்கு முன் சுய முன்னேற்ற நூல் எழுதியவர்கள் இருவரே ஒருவர் தமிழ்வாணன் மற்றொருவர் டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி. ‘நெஞ்சமே அஞ்சாதே நீ, சிந்தனை தொழில் செல்வம், உன்னால் முடியும் தம்பி ஆகிய நூல்கள் அதில் குறிப்பிடத்தகுந்தவை.
சுய முன்னேற்ற நூல்கள் மனதில் ஒரு வெறுமையை விட்டுச் செல்கின்றன. ஏனெனில் அவை சிக்கலில் இருப்பவருக்குப் பொருந்தாத பொதுப்படையான தீர்வுகளைக் கூறுகின்றன. நிதர்சனத்தை ஏற்று போராடும் குணமும், உண்மையான நலம் விரும்பி ஒருவரேனும் அமைந்தால் ஒருவருக்கு இந்த நூல்கள் தேவையில்லை. இருந்தாலும் இத்தகைய நூல்கள் சோர்வுற்ற மனத்திற்கு ஒரு முதலுதவி போல் அமைகின்றன.

ஆகச் சிறந்த பிழை -- அ.முத்துலிங்கம்

.                    

என்னுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் தொடக்கம் ஒரு பழமொழிதான். என்னுடைய ஐயாதான் இந்தப் பழமொழியை கண்டு பிடித்திருக்கவேண்டும். ‘நாங்கள் காலையில் எழுவதை சூரியன் பார்க்கக் கூடாது. சூரியன் எழுவதை நாங்கள் பார்க்கவேண்டும்.’ ஆகவே  அதிகாலையிலேயே உருட்டி உருட்டி நாங்கள் எழுப்பிவிடப்படுவோம். சாதாரண நாளிலேயே இப்படி என்றால் பொங்கல் நாள் பற்றி நினைத்தும் பார்க்க முடியாது. சூரியன் பூமியின் மற்றப் பக்கத்தில் நிற்கும்போதே நாங்கள் எழும்பியாகவேண்டும். புதுப்பானை, புது அடுப்பு, புதுநெல் என எல்லாமே முறைப்படி செய்யப்படும். சூரியன் உதயமாகும்போது கிழக்கு பக்கமாக பால் பொங்கி வழிந்து பொங்கல் தயாராகும். இப்படி சிறுவயதில் ஆரம்பித்த பொங்கல் என்னுடன் பல நாடுகளுக்கும் பயணித்தது.

ஆப்பிரிக்கா என்னை பெரிய அளவுக்கு அலுப்பூட்டவில்லை. அங்கே வாழ்ந்த அத்தனை வருடங்களும் பொங்கல் கொண்டாடினோம். அதிகாலையில் வீட்டின் வெளியே மூன்று கல்வைத்து புதுப்பானையில் கிழக்கு பக்கமாக பால் பொங்கி வழிய பொங்கல் செய்தோம். ஆப்பிரிக்க சிறுவர் சிறுமியர் பள்ளிக்கு ஊத்தை கலர் சீருடை அணிந்து செல்லும்போது வழியில் தங்கள் வேலையை மறந்து எங்களை சூழ்ந்துகொள்வார்கள். இவர்களுக்காகவே நிறைய சர்க்கரைபோட்டு சமைத்த பொங்கலை கையிலே வாங்கி சுவைத்தபடி மறுகையில் புத்தகப்பையை சுழற்றிக்கொண்டு இருபது நிமிடம் லேட்டாக புறப்படுவார்கள். கூரான தோள்மூட்டுச் சிறுமி இரண்டு கைகளிலும் பொங்கல் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு ஓடுவாள். பொங்கல் முக்கியமா, பாடம் முக்கியமா என்பதில் அவளுக்கு ஒருவித சந்தேகமும் கிடையாது.

தமிழ் சினிமா

கண்ணா லட்டு தின்ன ஆசையா

பாக்யராஜ் இயக்கிய ‘இன்று போய் நாளை வா’ என்ற பழைய படத்தின் கதைதான் என்றாலும், திரைக்கதையை இன்றைய ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.
சந்தானம், பவர் ஸ்டார், சேது என்று மூன்று இளைஞர்களும் எதிர் வீட்டுக்கு குடிவரும் விசாகாவை ஒருதலையாக காதலிக்கிறார்கள்.
விசாகா ஒருவரைக் காதலித்தால் மற்றொருவர் விலகிக் கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மூவரும் தனித்தனியாக அவளை அணுகுகிறார்கள்.
நாயகியை கவர்வதற்காக பழைய படத்தில் மூன்று பேரும் நாயகியின் அம்மா, அப்பா, தாத்தா மூலம் விதவிதமான டெக்னிக்குகளைக் கையாள்வது போலவே, இந்தப் படத்திலும்.
ஆனால் ஒரிஜினல் படத்தில் இருந்த உயிர்ப்புடன் கூடிய நகைச்சுவை இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.
விசாகாவை கவர்வதற்காக, அவருடைய அப்பா, சித்தப்பா, சின்னம்மா என்று ஓவ்வொருவரையும் மூவரும் ஐஸ் வைக்கிறார்கள்.
இறுதியில், விசாகா யாரை காதலிச்சார்? முடிவு என்ன ஆச்சு? என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைத்து சொல்லியிருக்கிறார்கள்.
படத்தோட மிகப்பெரும் பலமே பவர்ஸ்டார்தான். பவர்ஸ்டார் நிஜவாழ்க்கையில் அடிக்கும் லூட்டிகளை வசனங்களாக போட்டு தாக்குகிறார் சந்தானம்.
சீனிவாசன் அழுகிற போஸை படமெடுத்து அவரிடமே காட்டுவார் சந்தானம். அவர் இன்னும் அழுதபடி, 'நல்லால்ல' என்று சொல்ல.. 'தெரியுதுல்ல' என்பார்.
இப்படி படம் முழுக்க சந்தானம் தன் பெஸ்ட் ஒன் லைனர்களை அள்ளிவிட்டுக் கொண்டே இருக்கிறார்.
பவர் ஸ்டார் படத்தில் ஸ்கோர் செய்யும் காட்சிகள் ஏராளம். ‘அழகுமலர் ஆட’ பாடலுக்கு நடனம் ஆடுவது, தனது அல்லக்கைகளின் பாராட்டுதல்களுடன் நடனப் பயிற்சி மேற்கொள்வது என்று அசத்துகிறார்.
"என் கிட்ட இல்லாததது சிம்புகிட்ட என்னமா இருக்கு" என்று பவர்ஸ்டார் பேசும் வசனங்கள் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.
சந்தானம் இந்த படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும், தன்னை மட்டுமே முன்னிறுத்தாமல் மற்றவர்களுக்கும் சமவாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்ய நினைக்கும் இவருடைய இந்த முயற்சி அவருக்கு வெற்றியையேக் கொடுத்துள்ளது.
இந்த படத்தின் மூலம் புதுமுகமாக அறிமுகமாகியிருக்கும் சேதுவுக்கு ஓரளவு நடிப்புக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அழகான கதாநாயகி விசாகா நன்றாகவும் நடித்திருக்கிறார்.
சங்கீத வித்வானாக வரும் வி.டி.வி. கணேஷ், தனது குரல் கெட்டதற்கான காரணம் சொல்வது அடக்கமுடியாத சிரிப்பு.
கோவை சரளா, டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர், தேவதர்ஷினி ஆகியோரும் கொமெடியில் நம் வயிரை பதம் பார்த்திருக்கின்றனர்.
படத்தின் ஆரம்பக் காட்சி முதல் கடைசி காட்சி வரை கொமெடியை விடாமல் பிடித்துக் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர்.
பழைய படத்தோடு ஒப்பிட்டு பார்க்காமல் புதிய படமாக பார்த்தால் வயிறு குலுங்க சிரிக்கலாம்.
தமன் இசையில் அனைத்து பாடல்களும் ஓ.கே. ரகம். பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வேகமும், படத்திற்கு உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் லட்டு தின்ற திருப்தியுடன் படம் நிறைவடைகிறது.