-->
" கவிதை உலகளவு பரந்து பல்வேறுபட்டது.
கடவுளையும் காதலியையும் போற்றுவது மட்டும் அன்று அதன் பணி.
கட்டித்த சிந்தனை உடைய பண்டிதர்களும்
கோட்பாடுகளை விழுங்கிவிட்டு செமித்துக்கொள்ள முடியாதவர்களும்,
மோப்பதற்கும் மோந்து முணுமுணுப்பதற்குமாக
எழுதப்படுவதன்று கவிதை.
அது சாதாரண மனிதனின் பழுதுபடா உள்ளத்திற் பாயப் பிறப்பது.
ஓய்வு கடமையின் ஒரு கூறே ஆகும்.
எனது குறும்பாக்கள் முற்றும்
ஓய்வுக்குரியனவும் அன்று."
இதனை எழுதிய யாழ்ப்பாணம், அளவெட்டியில் 1927 இல் பிறந்து
1971 இல் மறைந்த "மஹாகவி" உருத்திரமூர்த்தி அவர்களும் மகாகவி பாரதியைப்போன்று
அற்பாயுளில் மறைந்தவரே. அற்பாயுளில் மறைந்த பல இலக்கியவாதிகளின் மேதாவிலாசம் பிரமிக்கத்து.
இலங்கையில் மட்டுமல்ல தமிழர் வாழும் நாடுகள்தோறும் "மஹாகவி" எனச்சொன்னவுடன்,
" யார் மகாகவி பாரதியா..?" என்றுதான் பெரும்பான்மையானவர்கள் கேட்பார்கள்.
இலங்கை மகாகவி எனச்சொன்னாலும் பலர் அறிந்திருக்கமாட்டார்கள். எனினும் ஈழத்து இலக்கிய
வளர்ச்சிக்கு தமது கவிதைகள், காவியங்கள், குறும்பாக்களினால்
வளம் சேர்த்திருக்கும், உருத்திரமூர்த்தி என்ற
இயற்பெயர்கொண்டு எம்மவர் மத்தியின் மஹாகவியாக
அறிமுகமாகியிருக்கும் அந்தக்கவியாளுமை 1966 ஆம் ஆண்டு தமது குறும்பா என்ற நூலுக்கு எழுதியிருக்கும் இரத்தினச்சுருக்கமான முன்னுரையையே
மேலே கண்டீர்கள்.
இந்திய மகாகவிக்கும் இலங்கை மஹாகவிக்கும் பெயரில் ஒரு எழுத்துத்தான்
வித்தியாசம் என்பதையும் நாம் கவனித்தல் வேண்டும்.
வள்ளி, கண்மணியாள் காதை, கோடை, ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம்,
வீடும் வெளியும், கந்தப்ப சபதம், கல்லழகி, தகனம், புதியதொரு வீடு முதலனாவை இவரது புகழ்பெற்ற
படைப்புகள்.
இவருடைய நூல்களை இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் வரதர், எஸ்.பொன்னுத்துரை, பேராசிரியர்
நுஃமான், சாலை இளந்திரையன் முதலானோர் பதிப்பித்துள்ளனர்.
கண்மணியாள் காதை காவியத்தை ஈழத்தின் பிரபல
வில்லிசைக்கலைஞர் லடீஸ் வீரமணி வில்லுப்பாட்டாக அரங்கேற்றியிருக்கிறார். கோடை பா நாடகத்தை கலைஞர் தாஸீசியஸ் இயக்கியிருக்கிறார்.
மீண்டும் தொடங்கும் மிடுக்கு கவிதையைக்கொண்டே
மேடை நாடகம் இயக்கியிருக்கிறார் கோகிலாமகேந்திரன்.
மஹாகவி உருத்திரமூர்த்தியிடத்திலும் பாரதியின் தாக்கம் இருந்திருக்கிறது.
பாரதி குறித்து மகாகவியின் பார்வைகள் எவ்வாறு இருந்தன என்பதை அறிந்துகொள்வதற்கு குறிப்புகள்
கிடைக்கவில்லையாயினும், ஈழத்து மஹாகவி உருத்திரமூர்த்தியையும் இந்திய மகாகவி பாரதியையும்
ஒப்புநோக்கும் இயல்பு விமர்சகர்களிடமும் இலக்கிய
மேடைப்பேச்சாளர்களிடம் மேலோங்கியிருக்கிறது.
மஹாகவி உருத்திரமூர்த்தியின் பிரபல்யமான ஒரு கவிதைதான் மீண்டும் தொடங்கும் மிடுக்கு. மழையைக்காணாத
ஒரு விவசாயியின் வாழ்வைச் சித்திரிக்கும் அந்தக்கவிதை, "
மப்பன்றி கால மழை காணா மண்ணிலே சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது, ஏர் ஏறாது. காளை
இழுக்காது, எனினும் அந்தப்பாறை பிளந்து பயன் விளைப்பான் என் ஊரான்" என ஆரம்பித்து,
" சோ" வென்று
நள்ளிரவிற் கொட்டும், உடன் கூடும் கொலைக்காற்றும் தானுமாய் எட்டுத்திசையும் நடுங்க
முழங்கி எழும், ஆட்டத்து மங்கையர் போல் அங்கு மொய்த்து நின்ற பயிர் பாட்டத்தில் வீழ்ந்தழிந்து
பாழாகிப் போய்விடவே கொள்ளைபோல் வந்து கொடுமை விளைவித்து வெள்ளம் வயலை விழுங்கிற்று....
பின்னர் அது வற்றியதும்,
ஓயா வலக்கரத்தில் மண்வெட்டி பற்றி, அதோ பார், பழையபடி கிண்டுகிறான், சேர்த்தவற்றை முற்றும்
சிதற வைக்கும் வானத்தைப்பார்த்தயர்ந்து நிற்கும் பழக்கமற்றோன் வாழி, அவன் ஈண்டு முதலில்
இருந்து முன்னேறுதற்கு மீண்டும் தொடங்கும் மிடுக்கு" என முடிக்கிறார்.
இந்தக்கவிதையில் அந்த கடும் உழைப்பாளியின் விந்தை மிகு தன்னம்பிக்கையை
பார்க்கின்றோம்.