பல புதிய குரல்கள் பல அறிந்த குரல்கள் இப்படி விதவிதமான குரல்கள் அந்த தொலைபேசி ஊடாக வந்துபோகும். வணக்கம் என்று கூறியதும் வணக்கம் ஐயா என்று பாசத்தோடு ஒலிக்கின்ற ஒரு குரல் அவரை நேரில் பார்த்து பேசுவது போல் இருக்கும். இவ்வளவு சாந்தமாக, அன்பாக, இனிமையாக அந்தக் குரல் பேசும் . நான்தான் ஐயா பத்மநாதன் பேசுறன் என்பார் காலம்சென்ற பத்மநாதன் ஐயா அவர்கள். சொல்லாமலே அவருடைய குரல் அவரை யாரென்று காட்டிக் கொடுத்துவிடும் ஆனாலும் தன்னுடைய பெயரை சொல்லியே பேசுவார். என்னிலும் பார்க்க எத்தனையோ வயசு மூத்த பெரியவர் ஆனால் அவர் பேசுகின்ற போது என்னை ஐயா என்றுதான் அழைத்துக் கொள்வார். நான் பலமுறை கேட்டிருக்கிறேன் ஏன் ஐயா நீங்கள் பெயரை சொல்லியே அழைக்கலாம் என்பேன் ஒரு சிரிப்பு ஒரு புன்னகை அவ்வளவுதான். தொடர்ந்தும் அப்படியே தான் அழைத்தார்.
பாடல்களைப் பற்றி பேசுவார். இவருடைய வயதொத்தவர்கள் பழைய பாடல்களை ரசித்து கொண்டிருப்பார்கள், பழைய பாடல்களில் இருக்கின்ற இனிமை புதிய பாடல்களிலே இல்லை என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்பார்கள், ஆனால் இவர் கேட்பதில் பல புதிய பாடல்கள் ஆகத்தான் இருக்கும். பல புதிய பாடல்களை எனக்கு அறிமுகம் செய்தவர் திரு பத்மநாதன் ஐயா அவர்கள். "ஐயா இந்த படத்துல ஒரு பாட்டு ஒன்று வந்திருக்கு கேட்ட நீங்களோ தெரியாது" என்பார் சில வேளைகளில் அந்த பாடலை நான் கேட்டு ரசித்து இருப்பேன் சில வேளைகளில் நான் கேட்காமல் இருந்திருப்பேன். அந்த பாடலை உடனடியாக தேடி எடுத்து கேட்டு பார்ப்பேன் மிக இனிமையாக, எனக்குப் பிடித்ததாக இருக்கும். அவருடைய அந்த ரசனையும் என்னுடைய ரசனையும் எங்கோ ஒரு இடத்தில் ஒத்துப் போகின்றததாக இருக்கும்போல் தெரிகின்றது.