அமரர் கவிநாயகர் கந்தவனம்

ஈழவள நாட்டைப் பிறப்பிடமாகக்கொண்டு கல்விகற்றபின்  ஆசிரியராய், அதிபருமாய்ப் பெரும்பணி இயற்றியபின்னர், கனடாவுக்குப் புலம்பெயர்ந்து அங்கும் தொடர்ந்து மரபு சார்ந்த தமிழ் இலக்கியம் மற்றும் ஆன்மீகப்பணிகளில் அரும்பெருஞ் சாதனைகள் படைத்துவந்த கவிநாயகர் கந்தவனம் அவர்கள் தமது 91 வயதில் சிவபதம் எய்தினார். இத்திருமகனார் எங்களின் குடும்பத்துடன் மிகவும் கேண்மை பூண்டிருந்தவர் .புலவர் பரம்பரையை இலங்கச் செய்து பதினையாயிரம் செந்தமிழ்ப் பாடல்களாலே தமிழன்னையை அலங்கரித்த எனது தாத்தாவாகிய நவாலி ஊர்  “தங்கத்தாத்தா அவர்களுக்கு அருமையான ஒரு நான்மணி மாலை இயற்றிச் சூட்டி அழகு பார்த்தவர் கந்தவனம் ஆவார். நான் ஒருமுறை தங்கத் தாத்தாவின் நூல்களைக் கனடா நாட்டிலே அறிமுகஞ் செய்யும்வண்ணம் ஏற்படுத்திய  விழாவிற்குத் தலைமை தாங்கிச் சிறப்புச் செய்தவர். அவரது 80ஆவது அவையை ஒட்டி ஏற்படுத்தப் பெற்ற விழாவிற்கு நான் ஒரு வாழ்த்துப்பாவை அனுப்பியிருந்தேன். அவரின் நினைவாக தமிழ் முரசு வாசகர்களுடன்  அதனைப் பகிர்வதிலே மகிழ்ச்சி அடைகிறேன்.

   


சைவமென்னும் செஞ்சாலி தழைத்தே ஓங்கத்        

    தகைமைசால் கவிஞரேறே! தமிழ்நீ  ரூற்றி

மெய்வருந்திக் கனடாவில் மிளிரச் செய்தாய்!         

    வித்தகனே உன்னைத்தமிழ் உலகம் போற்ற

ஐயனேயுன் எண்பதாம் அகவையை ஒட்டி

    அன்பர்குழாம் உவந்துவிழா வெடுக்கும் ஞான்று

பெய்வளையாள் சிவசத்தி பெற்ற சேந்தன்     

    பேரருள் சுரந்தருள வாழ்த்து கின்றேன்!    


சிந்தனைசொல் செயற்பாட்டில் தூய்மை காத்துச்

    சீர்பெருக்கிப் புகழ்வளர்த்துப் புகுந்த நாட்டில்

சுந்தரசண் முகன்மாந்தச் செந்த மிழாற்     

    சூட்டிநின்ற கவியாரம் மறக்கப் போமோ?

அந்தமிலெம் தமிழ்வளர்க்க மூவே ழாண்டு         

    அரியபணி கனடாவில் இயற்றிப் உயர்ந்தாய்     

சந்ததமும் நிலைத்திருக்கக் கந்தவனப் பெரியோய்

    தமிழ்தந்து தவவாழ்விற் றிழைத்து வாழி!   


காரைக்கால் அம்மையை கருத்தினிலே வைப்போம் !

 












மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா 




மாநிலத்தில் மொழிகளோ வகைவகையாய் இருக்கிறது
அவற்றுக்குள் தமிழொன்றே தனித்துவமாய் மிளிர்கிறது
காதலை வீரத்தை கண்ணியமாய் சொன்னாலும்
கடவுளையும் பக்தியையும் கருவாக்கி உயர்கிறதே 

எம்மொழியும் பக்தியினை எட்டியும் பார்க்கவில்லை
பக்தியெனும் பெருவெளியில் பயணிக்க நினைக்கவில்லை
எம்மொழியாம் தமிழொன்றே பக்தியினைப் பற்றியது
இதனாலே எங்கள்மொழி தனித்துவமாய் ஒளிர்கிறது

பக்தியை இலக்கியமாய் பாருமே பார்ப்பதற்கு
படைத்திட எங்கள்மொழி பாருக்குள் உயர்வாகும்
பக்திக்குள் மூழ்கிவிட்டால் பரவசமே உருவாகும்
பரவசத்தை அளிக்குமொழி பாங்குடைய தமிழாகும் 
பக்தி இலக்கியத்தை தொடக்கிய முன்னோடி
காரைக்கால் ஈன்றெடுத்த கனிவான பெண்ணாவார்
மாதரில் மாணிக்கமாய் மாசில்லா மங்கையாய்
மாதவத்தின் உருவமாய் வந்துமே பிறந்திட்டார் 

நல்லறமாம் இல்லறத்தில் நங்கையும் இணைந்திட்டாள்
நற்கணவன் கைபிடித்து நலமுடனே வாழ்ந்திட்டாள்
தெய்வமது சித்தத்தால் சீரான குடும்பமதில்
தித்திக்கும் மாங்கனி திசைமாறச் செய்ததுவே 

கைபிடித்த கணவன் கண்ணான மனைவியை
சந்தேக மனத்துடனே சஞ்சலத்துள் ஆழ்த்தினான்
மாங்கனியின் மாயத்தை மனமேற்க மறுத்ததால்
மாதரசி மங்கையினை மனமொதுக்கி அகன்றிட்டான்

பதிறித் துடித்தாள்  பரமனையே பற்றினாள்
அழகுடைக் கோலத்தை அருவருப்பாய் எண்ணினாள்
யாருமே விரும்பாத கோலத்தை மனங்கொண்டாள்
பேயுருவை பெருவிருப்பாய்  பெற்றிட்டாள் இறைவனிடம் 

ஆறு தசாப்த காலங்களுக்கும் மேலாக அயர்ச்சியின்றி இயங்கும் ஆளுமை கலைஞர் க. பாலேந்திரா ! முருகபூபதி


ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1974 ஆம் ஆண்டு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் கொழும்பு கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கத்தின்  தமிழ் விழா நடந்தது.

இவ்விழாவில்  காலை, முதல் மாலை வரையில்  கருத்தரங்குகள் இடம்பெற்றன. இரவு நிகழ்ச்சியில்  நாதஸ்வர கலைமேதை அளவெட்டி என்.கே. பத்மநாதன் குழுவினரின் கச்சேரியைத் தொடர்ந்து சங்கத்தின் நுட்பம் மலர் வெளியிடப்பட்டது.

அதன்பின்னர் இரண்டு நாடங்கள் மேடையேறின. இரண்டுமே அக்காலப்பகுதியின்  இலங்கை அரசியலையும் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளையும் அங்கதச்சுவையுடன் சித்திரித்திருந்தன.

மாவை நித்தியானந்தனின் ஐயா லெக்‌ஷன் கேட்கிறார் என்ற


நாடகம் நவீன நாடக வரிசையில் சபையோரை சிரிப்பிலும் சிந்தனையிலும் ஆழ்த்தியது.

அடுத்து, கலைஞர் ( அமரர் ) சுஹேர் ஹமீட் எழுதி,  இயக்கிய ஏணிப்படிகள்  நாடகம்  மேடையேறியது. வழக்கத்திலிருந்து மாறுபட்ட முற்றிலும் வித்தியாசமான நாடகம் ஏணிப்படிகள்.

இதில் பிரதான பாத்திரம் ஏற்று திறம்பட நடித்தவர் க. பாலேந்திரா என்ற மாணவர்.

அக்காலப்பகுதியில் தங்கமூளை என வர்ணிக்கப்பட்ட  கலாநிதி என். எம். பெரேரா நிதியமைச்சராகவிருந்தார்.  ஏணிப்படிகள் நாடகத்தில் தங்கமூளை என்ற சொற்பதம் அங்கதமாக வெளிப்பட்டது.

தொழிற்சங்கத் தலைவர்கள் எவ்வாறு தொழிலாள வர்க்கத்தினரை தமது நலன்களுக்காக சுரண்டுகிறார்கள் என்ற செய்தியை கருப்பொருளாகக் கொண்டு மேடையேறிய அந்த நாடகத்தை இன்றளவும் மறக்கமுடியாதிருப்பதுபோன்றே, குறிப்பிட்ட பிரதான பாத்திரம் ஏற்று நடித்த கலைஞர் க. பாலேந்திராவையும் என்னால் மறக்கமுடியாது.

1974 ஆம் ஆண்டுதான் பாலேந்திராவை இராமகிருஷ்ண மண்டபத்தில் முதல் முதலில் சந்தித்தேன்.  அதன்பின்னர் கலைஞர் தாஸீசியஸின் இயக்கத்தில் கதிரேசன் மண்டபத்தில் நடந்த பிச்சை வேண்டாம் நாடகத்திலும் பாலேந்திரா பிரதான பாத்திரம் ஏற்று நடித்திருந்தார். பின்னாளில் இவரை மணந்த ஆனந்தராணியும் இந்நாடகத்தில் நடித்திருந்தார்.

1978 ஆம் ஆண்டு கொழும்பில் தமிழ் அவைக்காற்று கலை கழகத்தை நிறுவிய பாலேந்திரா,  பல நாடகங்களை மேடையேற்றினார்.

யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பாலேந்திரா,  ஈழத்தமிழ் நாடக வரலாற்றில்  முக்கிய இடம்வகிக்கின்றார். தற்போது இங்கிலாந்தில் வதியும்  பாலேந்திரா – ஆனந்தராணி தம்பதியர் அங்கும் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும், கனடா, அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலும் தங்கள் அவைக்காற்று கலைக்கழகத்தின் ஊடாக சுமார் 70 நாடகங்களை மேடையேற்றியுள்ளனர்.

கட்டுரை - 14 வருடகால எதிர்ப்புகளின் பயன்

 March 19, 2024


யுத்தம் முடிவுற்று பதினான்கு வருடங்களாகி விட்டன. இந்தப் பதினான்கு வருடங்களில் தமிழர் பக்கத்தில் ஜனநாயக ரீதியில் பலவாறான எதிர்ப்புகள் காண்பிக்கப்பட்டிருக்கின்றன. ‘எழுக தமிழ்’ தொடங்கி ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’யில் மக்களைத் திரட்டி எதிர்ப்பு காண்பிக்கப்பட்டிருக்கின்றது – மக்கள் தன்னெழுச்சியாக திரண்டிருக்கின்றனர். ஒப்பீட்டடிப்படையில் ‘பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை’ என்னும் சுலோகத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட
பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அது தொடர்பில் அதிகம் விவாதிக்கப்பட்டது – கருத்துருவாக்கங்கள் செய்யப்பட்டன.
ஆனால், இறுதியில், அதனால் எதிர்பார்த்த விளைவுகளைப் பெறமுடிந்தனவா? அரசின் ஒரு நகர்வைத் தானேனும் தடுத்து நிறுத்த முடிந்ததா? அரசாங்கத்துக்கு ஒரு முன்னெச்சரிக்கையையாவது கொடுக்கமுடிந்ததா? கடையடைப்பு, பருவகால அடையாள எதிர்ப்புகள் எனப் பல எதிர்ப்பு நடவடிக்கைகள் – பல தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், எந்தவொரு விடயத்தையும் தடுத்து நிறுத்த முடியவில்லை. சர்வதேசத்திடம் செய்யப்பட்ட முறைப்பாடுகளாலும் எதுவும் நிகழவில்லை. இத்தனைக்குப் பின்னரும் அரசு அதன் நிகழ்ச்சி நிரலை தொய்வின்றி முன்னெடுக்கின்றது என்றால் அதன் பொருள் என்ன? – அரசு தமிழரின் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை என்பதுதானே பொருள் அல்லது விடயங்களைக் கையாள தமிழர் தரப்புக்குத் தெரியவில்லையா?
இப்போது எதிர்ப்பு அரசியல் வெடுக்குநாறிமலை சிவனில் தரித்து நிற்கின்றது.
ஆனால், வெடுக்குநாறிமலை விவகாரத்திலும் தமிழருக்கு வெற்றி கிட்டப்போவதில்லை. குருந்தூர்மலை விவகாரத்தைக் கைவிட்டது போன்று – தையிட்டி விகாரை விடயத்தை கைவிட்டது போன்று – வெடுக்குநாறிமலை சிவன் ஆலய விடயமும் சில வாரங் களில் மறந்துபோகும்.

அருணகிரிநாதர் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

தமிழ் திரையிசையில் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டவர் டி எம்

சௌந்தராஜன். மறைந்தும் ரசிகர்களின் மனதில் மறையாமல் வாழும் அவரின் 102 வது பிறந்த தினம் மார்ச் 24ம் தேதியாகும். பல முன்னணி நடிகர்களுக்கு பின்னணிப் பாடி அவர்களின் புகழுக்கு வித்தான அவர் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். அப்படி அவர் நடித்து 1964ல் வெளிவந்த படம் . இசையமைப்பாளர் ஜி ராமநாதன் தயாரித்து

இசையமைத்து வெற்றி கண்ட பட்டினத்தார் படத்தைத் தொடர்ந்து டீ எம் எஸ்ஸை கதாநாயகனாக நடிக்க வைத்து டி ஆர் ராமண்ணா இந்தப் படத்தை டைரக்ட் செய்தார். 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த முருகப் பக்தரான அருணகிரிநாதரின் வாழ்வில் இடம் பெற்ற முக்கிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப் பட்டது. அருணகிரிநாதராக நடிக்க சரியான தேர்வாக டீ எம் எஸ் தெரிவானார். இது படத்துக்கு பலம் சேர்த்தது. சிறு வயதில் தாயை இழந்த அருணகிரி தன் தமக்கை ஆதியின் அன்பான அரவணைப்பில் வளர்கிறான். வாலிபனானவுடன் அவன் மனம் சிற்றின்பத்திலேயே நாட்டம் கொள்கிறது. நித்தம் நித்தம் புதுப் பெண்களுடன் சல்லாபிக்கும் அவனுக்கு பொறுப்பு வர வேண்டும் என்பததற்காக அவனுக்கு ஞானவல்லியை மணமுடித்து வைக்கிறாள் ஆதி. அருணகிரியோ மனைவியை உதாசீனப் படுத்தி விட்டு விலைமாதர்களே கதி என்று கிடக்கிறான். இதனால் மனம் வெறுத்த ஞானவல்லி முருகப் பெருமானிடம் இனிமேல் அருணகிரியுடன் தாம்பத்ய உறவில் ஈடுபட மாட்டேன் என்று உறுதி கொள்கிறாள். காலகதியில் அருணகிரிக்கு குஷ்டரோகம் என்ற நோய் ஏற்றப்படுகிறது. அவனுடன் சல்லாபித்த மாதர்கள் எல்லாம் அவனை ஒதுக்கித் தள்ளுகிறார்கள். ஆனால் அவனோ அவனுக்கு இருக்கும் நோயுடனும் சிற்றின்பத்துக்காக ஏங்குகிறான். மனைவியுடன் ஒன்று சேர முனைகிறான் . அவளோ அவன் விருப்பத்தை நிராகரிக்கிறாள். காம வெறியில் அவன் தவிப்பதைக் கண்ட அவனின் தமக்கை ஆதி அவனின் இச்சைக்கு தன்னையே அவனுக்கு பலியிடத் துணிகிறாள். அவளின் இந்த செய்கை அருணகிரியின் கண்களைத் திறக்கிறது. தான் இனியும் வாழத் தகாதவன் என்ற முடிவில் திருவண்ணாமலை கோயில் கோபுரத்தில் இருந்து குதித்து தன் உயிரை மாய்க்கத் துணிகிறான். அவனை தடுத்தாற் கொள்ளும் முருகப் பெருமான் அவனுக்கு சும்மா இரு என்று ஞான உபதேசம் செய்கிறான். அது மற்றுமின்றி திருப்புகழ் பாட அருள்கிறான். அருணகிரி , அருணகிரிநாதராகி பலருக்கும் அருளுகிறார். இப்படி அமைந்த படத்தின் கதை வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுதியிருந்தார். அத்துடன் நின்று விடாமல் படத்துக்கான சில பாடல்களையும் எழுதி இருந்தார். இரண்டிலும் வெற்றி கண்டார் என்றே சொல்ல வேண்டும். பாடதில் அருணகிரிநாதர் அருளிய பாடல்களும் இடம் பெற்றன. குறிப்பாக முத்தைத் தரு பத்தித் திருநகை என்ற திருப்புகழ் டீ எம் எஸ் குரலில் தேனாக ஒலித்தது. இந்தப் பாடலை அவர் ஒரே டேக்கில் பாடினார் என்று கூறப் படுவதுண்டு. இத்துடன் மேலும் சில திருப்புகழும் டீ எம் எஸ் குரலில் கம்பீரமாக ஒலித்தன. பட்டினத்தார் படத்தை விட இப்படத்தில் சௌந்தர்ராஜனுக்கு தன் நடிப்புத் திறனையும் காட்ட சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அவரும் அதனை பயன் படுத்தியிருந்தார். 

இலங்கை தினகரனுக்கு இம்மாதம் 92 வயது ! தமிழ் இலக்கிய வளர்ச்சியில் தினகரனின் வகிபாகம் ! முருகபூபதி


இலங்கைத் தலைநகரில் ஒன்பது தசாப்தங்களுக்கு முன்னர் தோன்றியிருக்கும் தினகரன் பத்திரிகைக்கு இந்த ஆண்டு,  இம்மாதம் 92 ஆவது பிறந்த தினம்!

குறிப்பிட்ட தொன்னூறு ஆண்டுகளுக்குள்,  இலங்கையில் நேர்ந்த


அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களையெல்லாம் ஊடகப்பெருவெளியில் தொடர்ந்தும் பதிவுசெய்து வந்திருக்கும்  தினகரன், தென்கிழக்காசியாவில் குறிப்பிடத்தகுந்த  நாளேடாகவும் பரிமளிக்கிறது.

காலிமுகத்தில் கடலோடு சங்கமிக்கும் சிற்றேரியின் அருகே தினகரனும் இதர ஆங்கில, சிங்கள ஏடுகளும் வெளியாகும் மாபெரும் கட்டிடம் அமைந்திருப்பதனால், தினகரனுக்கும் ஏரிக்கரை பத்திரிகை ( Lake House) என்ற நாமம் கிட்டியிருக்கிறது.

இதன் நிறுவனர் ( அமரர் ) டி. ஆர். விஜேவர்தனா.

தினகரன்,  1932 ஆம் ஆண்டு முதல் நாளிதழாக வெளியாகிறது.

ஏரிக்கரையிலிருந்து இயங்கும் Lake House  என்ற  பெரிய நிறுவனத்தின் ஒரே ஒரு தமிழ்த்தினசரி  தினகரன்.

தினகரன் முதலாவது இதழ் 1932 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி வெளியானது. தினகரன் வாரமஞ்சரி ( ஞாயிறு பதிப்பு ) 1948 மே மாதம் 23 ஆம் திகதி அதன் முதல்வெளியீட்டை வரவாக்கியது.

தினகரன் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கே. மயில்வாகனம் பணியாற்றினார். அவருக்குப் பின்னர் வி. ராமநாதன், எஸ். ஈஸ்வர ஐயர், எஸ். கிருஷ்ண ஐயர், ரி. எஸ். தங்கையா, வீ. கே. பீ. நாதன், பேராசிரியர்  க. கைலாசபதி ,  ஆர். சிவகுருநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக பணியாற்றினர்.

தினகரனை இலங்கையின் தமிழ்த் தேசியப் பத்திரிகையாக்கிய  பெருமை பேராசிரியர் க. கைலாசபதியையே சாரும். இவருக்கு முன்னர் பணியாற்றிய வீ. கே. பீ.  நாதன்,  பின்னாளில் கொழும்பில் தினபதி, சிந்தாமணி,  வெளியிட்ட  சுயாதீன பத்திரிகை சமாஜத்தின் மாலைத்தினசரியான தந்தியில்   ஆசிரியரானார்.

உலகச் செய்திகள்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோ தாக்குதலில் இதுவரை 115 பேர் பலி

இஸ்ரேலின் உக்கிர தாக்குதலுக்கு மத்தியில் காசாவில் அவசர போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா புதிய தீர்மானம்

காசாவில் பட்டினிச் சாவும் அதிகரிப்பு

இஸ்ரேலின் கடும் தாக்குதலுக்கு இடையே ‘பஞ்ச’ அபாயத்தை நெருங்குகிறது காசா

காசாவின் அல் ஷிபா மருத்துவமனையை இஸ்ரேலிய படை மீண்டும் சுற்றிவளைப்பு

இந்தியாவுடன் அமெரிக்க பங்காண்மை உறுதி

கனடா படுகொலை: இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நிறைவு


ரஷ்ய தலைநகர் மொஸ்கோ தாக்குதலில் இதுவரை 115 பேர் பலி

- 3 சிறுவர்களும் அடங்குவர்; 145 பேர் காயம்

March 23, 2024 3:21 pm 

– இலங்கையர் எவருக்கும் பாதிப்பு இல்லை
– நேரடி தொடர்புடைய 4 பேர் உள்ளிட்ட 11 பேர் கைது

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் புறநகரில் உள்ள Crocus City Hall எனும் பாரிய அரங்கொன்றில் ஆயுததாரிகள் முன்னெடுத்த துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 115 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 145 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கைச் செய்திகள்

 சிவனொளிபாத மலையில் நல்லிணக்க வேலைத்திட்டம்

தினகரனின் பங்களிப்பு அளப்பரியதாகும்

புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை வரவேற்கிறோம்

வெடுக்குநாறி மலை விவகாரம்: குற்றச்சாட்டை நிரூபிக்க தவறிய பொலிஸார்

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான கும்பாபிஷேகம்


சிவனொளிபாத மலையில் நல்லிணக்க வேலைத்திட்டம்


March 22, 2024 9:00 am 

னங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சிவனொளிபாத மலையில் விசேட வேலைத்திட்டம் நேற்று முன்தினம் புதன்கிழமை (20) முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் நல்லதண்ணீர் சிவனொளிபாத மலையின் அடிவாரத்திலிருந்து சிவனொளிபாத மலை உச்சிவரை சமாதான விழுமியப் பண்புகள் அடங்கிய சுமார் 30 பெயர்ப்பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 36 “சட்டநாதன் புனைவுகள் : உரையாடல்”


நாள்:
         சனிக்கிழமை 30-03-2024       

நேரம்:     

 இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30      

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

 வழி:  ZOOM

 Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

 

உரை நிகழ்த்துவோர்:

 கலாநிதி தி.செல்வமனோகரன்

திறனாய்வாளர் அருண்மொழிவர்மன்

கலாநிதி சு.குணேஸ்வரன்

திறனாய்வாளர் சி.ரமேஷ்

 

ஒருங்கிணைப்பு:

அகில்  சாம்பசிவம்

 மேலதிக விபரங்களுக்கு: -  001416-822-6316

 www.ilakkiyaveli.com