.
எனக்கு காலிமுகத்திடலிலும் அதன்பிறகு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமை அலுவலகத்திலும் பணிகள் கிடைத்தமையால், கொழும்பில் அக்குவைனஸில் படித்துக்கொண்டிருந்த நண்பர் செல்வரத்தினத்தை வீரகேசரி பிரதம ஆசிரியருக்கு தொலைபேசி ஊடாகவே அறிமுகப்படுத்தி அந்த நிருபர் பணிக்கு இணைத்துவிட்டேன்.
எமது குடும்ப மருத்துவர் சோ. பாலசுப்பிரமணியம் கடற்கரை வீதியில் நடத்திக்கொண்டிருந்த சிகிச்சை நிலையத்தில் இலவசமாக தொலைபேசி இணைப்பு கிடைக்கும். அவர்
இந்துவாலிபர் சங்கத்தின் செயலாளராக இருந்தபோது அவருக்கு சென்ற கூட்ட அறிக்கை எழுதுவதற்கு நான் உதவிசெய்வதுண்டு. அதனால் அவருக்கும் நான் ஒரு செல்லப்பிள்ளை.
1977 இல் அரசு மாறியதனால் கொழும்பில் ஊடகவியலார்கள் பலருக்கு நன்மை நிகழ்ந்தது. ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் முன்னைய அரசின் தடையுடன் சீல்வைக்கப்பட்ட எம். டீ. குணசேனாவின் பத்திரிகை சாம்ராஜ்யத்திற்கு ஜே.ஆர், பிரேமதாசவின் புண்ணியத்தினால் விடுதலை கிடைத்தது.
அங்கு வெளியான தினபதி நாளேடு, மற்றும் சிந்தாமணி வாரவெளியீடு என்பன மீண்டும் வெளிவரத் தொடங்கின. செல்வரத்தினத்திற்கு தினபதியில் அலுவலக – நாடாளுமன்ற நிருபர் வேலை கிடைத்தது.
எனக்கு வீரகேசரியில் ஒப்புநோக்காளர் வேலை கிடைத்ததை தொடர்ந்து, அவ்வப்போது நீர்கொழும்பு பிரதேச செய்திகளை எழுதிக் கொடுத்தேன். எனினும் நீதிமன்ற செய்திகளை பெறுவதில் தொடர்ச்சியாக நெருக்கடிகள் நீடித்தன.