கிறிஸ்தவம் - புனித வெள்ளி

March 26, 2024 10:52 am 

ஆணியில் அறைந்தது

ஆணவம் செய்தது

அளவிலா கருணையோடு

அன்றுயிர்த் தெழுந்த

ஆண்டவன் செய்கையோ

அன்பின் எல்லையது…

மாயையால் மனிதர்

மாண்பினை இழந்தனர்

மாசிலா தேவனோ

மன்னித்து அருளினார்…

இன்றிந்த நாளிலே

இறைவன் அருளினை

இதயத்தில் ஏற்றுவோம்…

என்றும் போற்றுவோம்….

புனித வெள்ளி

நம் மனத்தை

புனிதமாக்கட்டும்!!

உமா

நன்றி தினகரன் 

அல்லாஹ்வின் அருள்மிகுந்த மாதம்

 March 27, 2024 7:00 am 0 comment


ஓர் இறை நம்பிக்கையாளன் அல்லாஹ்வின் ஏவல்களை ஏற்று நடப்பதற்கும், விலக்கல்களை தவிர்ந்து கொள்வதற்கும், பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், சுவனத்தில் நுழைவதற்கும், அல்லாஹ்வின் அருள் மிகவும் இன்றியமையாததாகும்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் அருளின்றி யாரும் சுவர்க்கம் நுழைய முடியாது’ என்றார்கள். அதற்கு ஸஹாபாக்கள் நீங்களுமா? என்று கேட்க, நபியவர்கள் என்னையும் அல்லாஹ்வின் அருள் சூழ்ந்து கொள்ளவில்லையென்றால் சுவர்க்கம் நுழைய முடியாது’ என்று பதிலளித்தார்கள் (ஆதாரம்- ஸஹீஹுல் புஹாரி)அதனால் அல்லாஹ்வின் அருள் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் மிக மிக அத்தியவசியமானதாகும்.

கிறிஸ்தவம் - தவக்கால சிந்தனை திருவிழிப்பு சனி

March 30, 2024 6:47 am 

ஆண்டவரின் பாடுகளின் பின் வருகின்ற சனிக்கிழமை அமைதியானது. நாம் எல்லோரும் கிறிஸ்துவின் இராவுணவுப் பெருவிழா, அவரது பாடுகள், மரணம் என்கிற பெரிய வெள்ளி வழிபாடு போன்றவற்றை கடந்து சில மணித்தியாலங்கள் அமைதியாக அவருடன் காத்திருக்கின்றோம்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாரதி வாசகர் வட்டம் அமைத்த சுவாமி விபுலானந்தர் ! மார்ச் மாதம் அன்னாருக்கு 132 ஆவது பிறந்த தினம் ! முருகபூபதி

 மயில்வாகனன்  என்ற  இயற்பெயருடன்  இலங்கை,   கிழக்கு


மாகாணத்தில் காரைதீவில் 27-03-1892 ஆம்  திகதி பிறந்து பின்னாளில் சுவாமி விபுலானந்தர் என அழைக்கப்பட்டவர், 1947 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி  தமது 55 ஆவது வயதில் மறைந்தார். 

மார்ச் மாதம் சுவாமி விபுலானந்தரின் 132 ஆவது பிறந்த தினம்,  தமிழ் கூறும் நல்லுலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

கல்முனை  மெதடிஸ்த  ஆங்கிலப் பாடசாலையில்  ஆரம்பக்கல்வியை பெற்றதன்  பின்னர்,  மட்டக்களப்பு  புனித  மைக்கல்  கல்லூரியிலும் பயின்று  கேம்ப்ரிட்ஜ்  பரீட்சையில்  சித்திபெற்று,   தான்  முன்னர்  கற்ற புனித  மைக்கல்  கல்லூரியில்  ஆசிரியராக  சிறிதுகாலம் பணியாற்றிவிட்டு,   கொழும்பில்  ஆசிரியப்பயிற்சிக்கல்லூரியில் இணைந்தவர்.

மதுரைத் தமிழ்ச்சங்கம்  நடத்திய  பரீட்சையில்  பண்டிதர்


பட்டத்தைப்பெற்ற   முதல்  இலங்கையர்  இவரே.  கொழும்பு  அரசினர் தொழில்   நுட்பக்கல்லூரியிலும்  யாழ்ப்பாணம்  புனித சம்பத்தரிசியார்  கல்லூரியிலும்  பணியாற்றியவர்.    லண்டன் பல்கலைக்கழகத்தின்   தேர்விலும்   சித்தியடைந்து,  மானிப்பாய் இந்துக்கல்லூரியிலும்   அதிபராக  பணியாற்றியவர்.   பின்னாளில் திருகோணமலை    இந்துக்கல்லூரியிலும்  அதிபராக  இருந்தவர் இந்தக்கல்விமான்.

யாழ்ப்பாணம்  ஆரியா  திராவிட  பாஷா  அபிவிருத்திச்சங்கத்தை அமைத்தவர்களில்  இவரும்  ஒருவராக   அறியப்படுகிறார். இராமகிருஷ்ண  இயக்கத்தில்  இணைந்து 1924 இல்  துறவறம் பூண்ட மயில்வாகனன்,  அதன் பிறகு  சுவாமி விபுலானந்தராகிறார்.

துறவியானபோதிலும்  தொடர்ச்சியாக  கல்விப்பணியாற்றியவர். அத்துடன்   இதழாசிரியர்.   ஷேக்‌ஸ்பியரின்  நாடகங்களை  ஆய்வுசெய்த எழுத்தாளர்.   இசை  ஆராய்ச்சியாளர்.   இசைத்தமிழ்பற்றிய   இவரது யாழ் நூல்  காலத்தையும்  வென்று  வாழ்கிறது.  1943  ஆம்  ஆண்டில்  இலங்கை  பல்கலைக்கழகம் இயங்கத்தொடங்கியதும்  அதன்  தமிழ்த்துறையில்  முதலாவது பேராசிரியராக  நியமிக்கப்பட்டவர்.   தமிழில்  ஆய்வுத்துறையை நெறிப்படுத்திய   முன்னோடி.

1947  ஆம்  ஆண்டு  மறைந்த  அடிகளாரின்  சமாதி  மட்டக்களப்பு கல்லடியில்   அமைந்துள்ளது.   அடிகளாருக்கு  இலங்கையில் ஞாபகார்த்த  அஞ்சல்  தலை  வெளியிடப்பட்டது. இலங்கையில்   இராமகிருஷ்ண  இயக்கத்தில்  அவர்  இணைந்திருந்த ஆரம்பகாலத்தில்,   அதன்  பொறுப்பிலிருந்த  பாடசாலைகளில்  முதல் வகுப்புத்தொடக்கம்,   எட்டாம்  வகுப்புவரையில்  மாணவர்களின் தமிழ்ப்பாடத்திட்டத்தில்   பாரதியின்   பாடல்களைச்சேர்த்திருக்கும் விபுலானந்தர், இந்திய சுதந்திரப்போராட்டக்காலத்திலேயே அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில், 1932 இல் Bharathi Study Circle என்னும் அமைப்பை நிறுவியவர்.    அத்துடன் அண்ணாமலைப்பல்கலைகழக வெளியீடுகளிலும் பாரதி பற்றி ஆங்கிலத்திலும் கட்டுரைகள்  எழுதியிருக்கிறார்.

சுவாமி விபுலானந்தரைப்பற்றிய ஆவணப்படமும் வெளியாகியுள்ளது.

விபுலானந்தரும் சுந்தர ராமசாமியும்

சுவாமி விபுலானந்தர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது பொருத்தம்.

இலக்கிய உலகில் மிகுந்த கவனத்தைப்பெற்றவரான தமிழகத்தின் மூத்த எழுத்தாளரும் காலச்சுவடு இதழின் ஸ்தாபகருமான சுந்தரராமசாமி, இலங்கைப்பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களுக்கு 13-10-1992 ஆம் திகதி எழுதிய கடிதத்தைப் பார்ப்போம்.

"........ விபுலானந்த அடிகளைப்பற்றி இரண்டு புத்தகங்கள் படித்தேன். ஒன்று செ. யோகநாதன் எழுதியது. மற்றொன்று பெ.சு. மணி எழுதியது. இரண்டுமே அறிமுகம் என்ற அளவில் எனக்கு உபயோகமாக இருந்தன. அடிகள் மீது மிகுந்த மதிப்பு ஏற்பட்டது. தமிழுக்கு உண்மையான தொண்டாற்றியிருப்பவர்கள் பலருக்கும் தெரியாமல் இருக்கிறார்கள். மேலோட்டமானவர்கள் மிகுந்த புகழ் பெற்றிருக்கிறார்கள். கலாசாரவாதி, அரசியல்வாதிகளின் தயவில் வாழவேண்டிய பரிதாப நிலைதான் இன்றும் இருக்கிறது. அங்கு எப்படி என்று தெரியவில்லை. ( ஆதாரம்  கிழக்கிலங்கை ஏடு களம் - மே 1998)

எழுத்தாளர் ( அமரர் ) எஸ். அகஸ்தியரைப் பின்தொடரும் கலை, இலக்கிய பன்முக ஆளுமை நவஜோதி ஜோகரட்னம் ! முருகபூபதி


எமது  இலங்கைத்  தமிழ் சமூகத்தில் எழுத்தாளர்களாக நன்கு அறியப்பட்டவர்களின் பிள்ளைகள் அனைவருமே எழுத்தாளர்களாகிவிடுவதில்லை.

எழுத்தாளரின் பிள்ளை எழுத்தாளராகத்தான் இருக்கவேண்டும் என்ற விதியும் இல்லை !

எழுத்தாளர்களாக வாழ்ந்தவர்களின்  சந்ததிகளில் எழுத்தாளர்களாக வளர்ந்த சிலரை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

நானறிந்த மட்டில், மஹாகவி உருத்திரமூர்த்தியின் மகன் சேரன்,  மகள் ஓளவை , நீலாவணனின் மகன் எழில்வேந்தன், இலங்கையர்கோனின் மகள் சந்திரலேகா, காரை சுந்தரம்பிள்ளையின் மகள் மாதவி சிவலீலன், கோகிலா மகேந்திரனின் மகன் பிரவீணன், மருதூர்க்கொத்தனின் மகன் ஆரீஃப்,  எஸ். எம். கார்மேகத்தின் மகள் கனகா, தி. ஞானசேகரனின் மகன்


பாலச்சந்திரன், த. கலாமணியின் மகன் பரணீதரன், தகவம் இராசையா மாஸ்டரின் மகள் வசந்தி தயாபரன்   ஆகியோர் எனது நினைவுக்கு வருகிறார்கள்.

இவர்களின் வரிசையில்  மற்றும் ஒருவராக  நவஜோதி  ஜேகரட்னம் அவர்களின் வாழ்வும் பணிகளும் பற்றி இங்கே சொல்ல வருகின்றேன்.

ஈழத்து முற்போக்கு இலக்கிய முகாமில் குறிப்பிடத்தகுந்த ஒருவரான ( அமரர் ) எஸ். அகஸ்தியரின் மகள்தான் நவஜோதி.

நான் இலங்கையிலிருந்த காலப்பகுதியில் அகஸ்தியரை நன்கு அறிவேன். இறுதியாக அவரை 1983 ஆம் ஆண்டில்தான் சந்தித்தேன். அதன்பிறகு, அவர் பிரான்ஸுக்கும் நான் அவுஸ்திரேலியாவுக்கும் புலம்பெயர்ந்து வந்துவிட்டோம்.

என்னுடன் தொடர்ச்சியாக கடிதத் தொடர்பிலிருந்த அகஸ்தியர் பற்றி நான் பல பதிவுகளும் எழுதியிருக்கின்றேன்.  அவருடனான எனது நேர்காணல் பதிவும் எனது சந்திப்பு நூலில் இடம்பெற்றுள்ளது.

இந்த நூல் வெளியானபோது அகஸ்தியர் இல்லை. அவரை நினைவுகூர்ந்து குறிப்பிட்ட நூலை  மெல்பனில் வெளியிட்டேன்.

1990 களில் அகஸ்தியரும் அவருடைய புதல்விகள் நவஜோதி, நவஜெகனி ஆகியோரும் என்னுடன் கடிதத் தொடர்பிலிருந்தனர்.

எனினும்,  நவஜோதியை 2008 ஆம் ஆண்டுதான் லண்டனில் முதல் முதலில் சந்தித்தேன்.

நூலகர் நடராஜா செல்வராசா ஒழுங்கு செய்திருந்த இலக்கிய நிகழ்வில்தான் அந்தச் சந்திப்பு  நிகழ்ந்தது.

அதன்பிறகு லண்டனுக்குச்  செல்லும் சந்தர்ப்பங்களிலெல்லாம் நவஜோதியை சந்திக்கவும் நான் தவறுவதில்லை.

இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு நடுப்பகுதியில்  நான் லண்டனில் இருந்தபோது, அங்கு நடந்த  விம்பம்  அமைப்பின் நிகழ்ச்சிக்கு என்னை அவரே அழைத்துச்சென்றார்.

ஈழத்தின் பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் மூத்த மகளான நவஜோதி ,  யாழ்ப்பாணம் இளவாலை மகளிர் கல்லூரியில்  தனது கல்வியை மேற்கொண்டவர். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர்,  1980 களின் முற்பகுதியில் பிரான்ஸுக்குப்  புலம்பெயர்ந்தார்.

அங்கு பிரெஞ்சு மொழியை கற்றுத் தேறினார்.

அவுஸ்திரேலியா இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஆதரவில், யாழ்., முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட மாணவர்களுக்கு உதவி


அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அனுசரணையில் அண்மையில் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம்,  முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வதியும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு  உதவும் வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான முதல் மூன்று மாத கால நிதியுதவி வழங்கப்பட்டது.

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் யாழ் – முல்லை, கிளிநொச்சி


மாணவர் தொடர்பாளர் அமைப்பான சிறுவர் அபிவிருத்தி நிலைய பணியாளர்கள் இந்நிகழ்ச்சியை ஒழுங்கமைத்திருந்தனர்.

சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் திட்ட அமுலாக்கத்துடனும்  அவுஸ்திரேலியா   இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிப்பங்களிப்புடனும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மாணவர்களின் கல்விக்கான உதவி நன்கொடைத் திட்டத்தின் பிரகாரம்  இவ்வருடததிற்கான ( 2024 ) முதலாம் காலாண்டு கொடுப்பனவு  இம்முறை ஒரு மாணவருக்கு  மாதாந்தம் தலா நான்காயிரம் ரூபா வீதம் பன்னிரண்டாயிரம் ரூபா வழங்கப்பட்டது.

உதவிப்பிரதேச இலங்கையில் தோன்றியிருக்கும் பொருளாதார நெருக்கடியை கவனத்தில்கொண்டு, 2024 ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இம்மாணவர்கள் மாதாந்தம் மூவாயிரம் ரூபாவை பெற்று வந்தனர்.

அவுஸ்திரேலியாவில் வதியும் தமிழ் அன்பர்களின் நிதிப்பங்களிப்புடன் மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக இயங்கி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்துடன் தொடர்பாடல்களை மேற்கொண்டு,  போரிலும் வறுமையிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களை வடக்கில் தெரிவுசெய்து இந்த நிதிப்பங்களிப்பினை வழங்கி வருகிறது.

  “ யாழ். சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்திற்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்குமான நட்புறவு பல வருடங்களுக்கும் மேல்  தொடர்ந்து செல்கின்றது.  அதற்கான காரணம்  பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் கைகொடுத்து உதவவேண்டும் என்ற எண்ணத்துடன் இரண்டு அமைப்புகளும்  செயற்பட்டு வருவதால் இவ்வுறவு நீடித்துக்கொண்டு செல்வதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.  “ என்று இந்நிகழ்வில் உரையாற்றிய பணியாளர்கள் நிதியுதவியை பெறும்   மாணவர்களின் தாய்மார் மற்றும்  பாதுகாவலர்கள் முன்னிலையில் தெரிவித்தனர்.

கலைக் கோயில் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 காதலிக்க நேரமில்லை வெற்றி படத்தை இயக்கிய கையோடு ஸ்ரீதர்


இயக்கிய அடுத்தப் படம் கலைக் கோயில். ஆனால் இந்தப் படத்தை அவர் தனது சித்ராலயா பட நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவில்லை. கலரிலும் உருவாக்கவில்லை. சிறிய பஜட்டில் , இரண்டாம் நிலை நட்சத்திரங்களை வைத்து படமாக்கினார்.

அறுபது ஆண்டுகளுக்கு முன் இளம் இசையமைப்பாளர்களாக , மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டத்துடன் படு பிசியாக படங்களுக்கு

இசையமைத்துக் கொண்டிருந்த விசுவநாதன் ராமமூர்த்தி இருவரில் ஒருவரான விஸ்வநாதனுக்கு வரக் கூடாத ஆசையாக படம் தயாரிக்கும் ஆசை வந்தது. அதன் விளைவாக படத் தயாரிப்பாளராக அவர் உருவெடுத்தார். ஆனால் தன்னுடைய இசை பாட்னரான ராமமூர்த்தியுடன் அல்லாமல் , பிரபல அரங்க அமைப்பாளராக கங்காவுடன் இணைந்து படத்தை தயாரித்தார்.

இசையமைப்பாளர் தயாரித்த படத்தின் கதையும் இசை கலைஞன் ஒருவனின் கதைதான். வீணை வித்துவானான நிதியானந்தத்திடம் அடைக்கலமாக வருகிறான் கண்ணன். வாரிசு இல்லாத நித்தியானந்தன் கண்ணனிடம் இருக்கும் இசைத் திறமையை அறிந்து அவனுக்கு இசைப் பயிற்சி கொடுத்து அவனையும் வீணை வித்துவானாக்குகிறார். அத்துடன் தன் சகோதரியின் மகள் கமலாவையும் அவனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
என்னத்தான் அமைந்தாலும் தன்னுடைய இசைத் திறனை வெளிப்படுத்தும் விதத்தில் கச்சேரி நடத்தும் வாய்ப்பு கிட்டவில்லையே என்று கண்ணன் பொருமுகிறான். நித்தியானந்தன் வீணை வாசிப்பை நிறுத்தினால்தான் தனக்கு வாய்ப்பு கிட்டும் என்று நம்பி அவரிடம் அதனை கோரிக்கையாக வைக்கிறான். அவரும் அதனை ஏற்று வீணை வாசிப்பை நிறுத்தி , வீட்டை விட்டும் வெளியேறி விடுகிறார்.

இதே காலகட்டத்தில் நடனக்காரியான சரோஜாவின் அறிமுகம் கண்ணனுக்கு ஏற்பட்டு அதுவே காதலாக மாறுகிறது. பலவீனமான மனநிலையில் மதுவுக்கு கண்ணன் அடிமையாகிறான். அவனது வித்துவத்துக்கும் பங்கம் ஏற்படுகிறது. இதில் இருந்து அவன் மீண்டானா என்பதே மீதிக் கதை.

விஸ்வநாதனின் வாழ்வில் நடந்த ஒன்டிரண்டு சம்பவங்களை உள்ளடக்கி படத்தின் கதையை ஸ்ரீதர் எழுதியிருந்தார். படத்துக்கு வசனத்தை அவரும் கோபுவும் இணைந்து எழுதினார்கள். இசைத் துறையில் புகழ் பெற்று விளங்குபவர்கள் எவ்வாறு மதுவுக்கும், மாதுவுக்கும் அடிமையாகி தங்கள் உன்னத நிலையில் இருந்து கீழே விழுகிறார்கள் என்பதை படம் தெளிவாக உணர்த்தியது.

செக்கியூரிட்டி - சிறுகதை - கே.எஸ்.சுதாகர்


வவனியாவில் இருந்து மன்னார் போகும் பாதையின் தொடக்கத்தில் எமது வேலைத்தலம் இருந்தது. வேலைத்தலத்திற்கு முன்னே சில அரச அதிகாரிகளின் வசிப்பிடம். பின்னே புகையிரதப்பாதை. எதிரே மன்னார் வீதிக்கு அப்பால் ஒரு சிங்கள மகாவித்தியாலயம்.

வளவிற்குள் ஒரு டோசர், மூன்று பக் லோடர், ஒரு ஹெவி றக், ஒரு கல்லுடைக்கும் இயந்திரம், இரண்டு வைபிறேஷன் மிஷின்கள், ஏழெட்டு டிராக்டர்கள்.

வளவைச் சுற்றி முட்கம்பி வேலி நாற்புறமும் ஓடுகிறது. தற்காலிக வேலிதான். அதற்குள்ளால் மனிதர்களும் நாய்களும் நுழைந்து வெளியேறலாம். வாகனங்களை நகர்த்த முடியாது; களவெடுத்துக் கொண்டு போக முடியாது. வாகனங்களை முன்னேயுள்ள செக்கியூரிட்டி கேற்றிற்குள்ளால் பதிவு செய்துவிட்டுத்தான் கொண்டுபோக முடியும். ஒரு பொறியியலாளர், அவருக்கு உதவியாக ஒரு அட்மினிஸ்றேற்றிவ் அஷிஸ்டென்ற், இரண்டு செக்கியூரிட்டிகள் மற்றும் இருபத்தைந்து தொழிலாளர்கள். இங்கே ஒரு பெண் பிரஜைகளும் வேலை செய்யவில்லை.

ஆனந்தனும் ரானும் எமது நிரந்தர செக்கியூரிட்டிகள். தலமைப்பீடத்தால் நியமிக்கப்பட்டவர்கள். வேலைநாட்களில் மாலை நான்குமணியிலிருந்து மறுநாள் காலை எட்டுமணி வரையும் - சனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேரமும் வேலை செய்வார்கள்.

இந்த ஒற்றைப்பட எண்களால் எப்பவுமே பிரச்சினைதான். வாரத்தில் ஏழுநாட்கள் இருப்பதாலும், அந்த ஏழுநாட்களில் ஐந்துநாட்கள் வேலைநாட்கள் என்பதாலும் - எப்பவுமே ஆனந்தனுக்கும் ராமனுக்கும் றோஸ்ரர் போடுவதில் அஷிஸ்டென்ற் செல்வாவுக்குப் பிரச்சினைதான். பிள்ளையாருக்கும் முருகனுக்கும் கூட ஒரு மாம்பழத்தால்தானே பிரச்சினை வந்தது. இரண்டுமாம்பழங்கள் இருந்திருந்தால் பிரச்சினை வந்திருக்குமா? இதன் காரணமாக ஒவ்வொரு மாதக்கடைசியிலும், அவர்கள் இருவரும் வேலை பார்த்த நேரத்திற்கு அமைய றோஸ்ரர் அஜஸ்ட் பண்ணப்படும். சிலவேளைகளில் கடைசி இரண்டு நாட்களும் ஒருவரே வேலை செய்ய வேண்டி வரும். அதனடிப்படையில் நேற்றும் இன்றும் ஆனந்தனுக்கு முறை. இதை அவர்கள் இருவருக்குமே ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இருப்பினும் ராமன் இன்று தன்னுடைய வேலைநாள் என்று சொல்லிக் கொண்டு வந்து விட்டான். எப்படிச் சொன்னாலும் அவன் புரிந்து கொள்வதாக இல்லை. தனக்கு மாற்றித் தரும்படி கெஞ்சிக் கொண்டு நிற்கின்றான். மாற்றிக் கொடுப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் எல்லாக் கணக்கு வழக்குகளும் பிழைத்து விடும். நாலுமணியானதும் ஆனந்தன் வேலையைப் பாரமெடுத்தான். அதன் பிறகுதான் ராமனுக்கு விசர் பிடித்தது. அங்கும் இங்கும் ஓடித் திரிந்தான். பின்னர் ஆனந்தனுடன் செக்கியூரிட்டி அறைக்குள் போய் இருந்து கொண்டான். அங்கிருந்தபடியே என்னை நோக்கி அக்கினிப்பார்வையை வீசி எறிந்தான்.

தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் – 2024 – மெல்பேர்ண்


பாரததேசத்திடம் 2 அம்சக்கோரிககைகளை முன்வைத்து மட்டுநகரல் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில்  19-03-1988 முதல் 19-04 -1988 வரையான முப்பதுநாட்கள் உண்ணாநோன்பிரந்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட  தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 36வதுஆண்டு நினைவுநாளும் தாயக விடுதலைப் போராட்டத்தில் பின்புலமா உழைத்து சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர்களையும் நினைவு கூருகின்ற நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் இவ்வாண்டும் விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ணில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

 

குடும்பவாழ்வியலில் ஈடுபட்டிருந்தபோதும் இடர்மிகுந்த நெடிய மிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் உறுதுணையாக உழைத்து உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூருவது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் தலையாய கடமையாகும்.

 

ஸ்ரேலியாவில் தமிழ்த் தேசிய விடுதலைப்பயணத்தில் முன்னோடிகளாகத் திகழ்ந்து உயிர்நீத்து தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் அதிஉயர்விருதான மாமனிதர் விருது வழங்கிக்கெளரவிக்கப்பட்ட மாமனிதர்களான தில்லை ஜெயக்குமார் பேராசிரியர் எலியேசர்நாட்டுப்பற்றாளர் மகேஸ்வரன் மற்றும் மாமனிதர் மருத்துவக் கலாநிதி பொன் சத்தியநாதன், சக தமிழ்த் தேசிய பற்றாளர்களையும் இந்நாளில் நினைவுகூருவது இந்நினைவுநாளின்  சிறப்பம்சமாகும்.