மாநிலத்தில் தீபாவளி வாய்த்திருக்கு எமக்கு !


 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

 



மனமகிழ மனநிறைய கொண்டாடி நிற்க

தினமதனை முன்னோர்கள் வகுத்துமே நின்றார் 

அறிவுடனும் தெளிவுடனும் அவரளித்த கொடையே

ஆனந்தம் பெருக்குகின்ற திருநாட்க ளாகும் 

 

தீபமது வாழ்வினிலே சிறப்பளித்து நிற்கும்

தீபவொளி எல்லோர்க்கும் மங்கலமே ஆகும்

மாவிருளைப் போக்குதற்கு தீபவொளி தேவை

மனமகிழ  தீபாவளி வருகிறது வாழ்வில் 

 

பக்தியொடு பக்குவமும் பாங்காகக் கொண்டு

பலர்மகிழத் தீபாவளி வருகிறது பாரில் 

சுற்றமெலாம் சூழ்ந்திருந்து சுவைபயக்கும் நாளாய் 

இப்புவியில் தீபாவளி அமைந்திருக்கு எமக்கு  

 

தீபாவளி தோன்றிய வரலாறு.

24.10.2022 திங்கட் கிழமை தமிழர்களின் பண்டிகையாம் தீபாவளி திருநாள்..


சைவமகன் சிவஸ்ரீ தனாசிவம் 
குருக்கள்
சிட்னி துர்க்கா தேவஸ்தானம், 
அவுஸ்திரேலியா.




தீபாவளி தோன்றிய வரலாறு.

நரகாசுரன் இறந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். இந்த தீபாவளி எப்படி வந்தது என்று பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான்.

இதை அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.

அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்திய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான்.

அஞ்சலிக்குறிப்பு : மலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப் நினைவுகள் முருகபூபதி


இலங்கையின் மூத்த எழுத்தாளரும்  மலையக மக்களின் ஆத்மாவை தனது படைப்புகளில் பிரதிபலித்தவரும், மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக  நீண்ட  காலம் இயங்கியவருமான தெளிவத்தை ஜோசப்  இம்மாதம் 21  ஆம் திகதி அதிகாலை  வத்தளையில் தமது இல்லத்தில் மறைந்துவிட்டார்.

அமைதியான இயல்புகளைக்  கொண்டிருந்த அவர், ஆழ்ந்த    உறக்கத்திலேயே உலகைவிட்டு விடைபெற்றுவிட்டார்.

அவர் உடல் நலக்குறைவோடு இருப்பது அறிந்து சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினேன்.  தனக்கு சற்று சோர்வாக இருப்பதாகச் சொன்னார்.

அவருடனான முதல் சந்திப்பு பற்றி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும்


தீம்புனல் வார இதழில்  அண்மையில் எழுதியிருந்தேன்.  எனினும்,  அவர் அதனைப் பார்த்தாரோ தெரியாது. தற்போது ஆழ்ந்த துயரத்துடன் இந்த அஞ்சலிக் குறிப்புகளை எழுதுகின்றேன்.

அவரது மறைவுச் செய்தியறிந்ததும்,  அவரது புதல்வி சியாமளாவுடன் தொடர்புகொண்டு ஆறுதலும் அனுதாபமும் தெரிவித்துவிட்டே  இந்தப்பதிவை எழுதுகின்றேன்.

அவர் தனது புதல்விகள் திரேசா – சியாமளா ஆகியோரின் பெயர்களிலும் முன்னர் தினகரனில் இலக்கிய பத்தி எழுத்துக்களை எழுதினார்.

சமகாலத்தில் அடுத்தடுத்து எமது கலை, இலக்கிய, ஊடக ஆளுமைகளை இழந்துகொண்டிருக்கின்றோம்.  இறுதியாக 2019 ஆம் ஆண்டு பிற்பகுதியில் தெளிவத்தை ஜோசப்பின் தலைமையில்தான், யாழ். காலைக்கதிரில் 40 வாரங்கள் தொடராக வெளியான எனது இலங்கையில் பாரதி ஆய்வு நூலுருப்பெற்று  கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் காலைக்கதிர் ஆசிரியர் நண்பர் வித்தியாதரனும், கலந்துகொண்டு உரையாற்றினார். அந்த நிகழ்வில் கலந்துகொண்ட இலக்கிய ஆர்வலர் சட்டத்தரணி இராஜகுலேந்திரா, மற்றும் இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன் இலக்கிய ஆர்வலர் பொலிஸ் அத்தியட்சர் அரசரத்தினம் ஆகியோரைத் தொடர்ந்து தெளிவத்தை ஜோசப் அவர்களும் விடைபெற்றிருப்பது மனதில் மிகுந்த சோகத்தை உருவாக்கியிருக்கிறது.

 கடந்த 21 ஆம் திகதி காலையில்  அவரது குடும்பத்தினர், அவரை துயில் எழுப்பச்சென்றபோதுதான், அவரது உயிர் அவரை விட்டு பிரிந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

எவருக்கும் சிரமம் தராமல் அமைதியாக விடைபெற்றுவிட்டார் இந்த இலக்கியவாதி.

சந்தனசாமி ஜோசப் என்ற இயற் பெயரைக் கொண்டிருந்த அவர்,   1934  ஆம் ஆண்டு பதுளை மாவட்டத்தில்  ஊவாக்கட்டவளை என்ற கிராமத்தில் பிறந்தார்.

பின்னாளில்  பெற்றோரின் பூர்வீகமான தமிழ்நாடு கும்பகோணத்தில் படித்துவிட்டு, மீண்டும்  தாயகம் திரும்பி பதுளை புனித பேதுருவானவர் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்து, தெளிவத்தை என்ற மலையகத் தோட்டத்தில் ஆசிரியராக பணியாற்றினார்.

இலக்கியப்பிரதிகளை இந்த ஊரின் பெயரை முன்னிறுத்தி தனது பெயரையும் இணைத்துக்கொண்டு எழுதியவர். தெளிவத்தை என்றால்,  எழுத்தாளர் ஜோசப்தான்.  அந்த ஊருக்கும் ஒரு அடையாளத்தை வழங்கினார்.

மலையகத்தில் ஒரு தோட்டப் பாடசாலையில் ஆசிரிய பணியாற்றியவர், கணக்கியல் படித்து தேர்ந்தார்.  கொழும்புக்கு வந்து அக்காலத்தில் பிரபல்யமான இனிப்புவகையான ஸ்டார் பிராண்ட் டொபி உற்பத்திசெய்யும்  Modern Confectionary Works Ltd  என்ற நிறுவனத்தில்  கணக்காளராக பணியாற்றினார்.  

கவிதை

 




எழுத்தும் வாழ்க்கையும் - ( இரண்டாம் பாகம் ) அங்கம் 36 சிங்கள மொழியில் வெளிவரவிருக்கும் பாட்டி சொன்ன கதைகள் முருகபூபதி

எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் கடந்த 35 ஆவது  அங்கத்தில், 


குழந்தைகளிடமிருந்து நாம்  கற்பதும் பெறுவதும் என்ற தலைப்பின் கீழ் எனது மகன் முகுந்தனது சிறுவயது பேச்சையும் சிந்தனைகளையும் பற்றிச் சொல்லிவிட்டு, இறுதியாக,   அடுத்துவரவிருக்கும் 36 ஆம் அங்கத்தில் வெளிநாடொன்றிலிருந்து தனது புதல்வனுடன் சென்ற ஒரு அன்பர் எனக்குச்சொன்ன கதையுடன் வாசகர்களை சந்திப்பேன். அதுவரையில் காத்திருங்கள். என்று முடித்திருந்தேன்.

அந்த அன்பரும் குடும்பத்தினரும் வசிக்கும்  வெளிநாட்டிலும்  மிருகங்களை வதைப்பது கொடுங் குற்றம்.  அவர் தனது மகனுடன் இலங்கை வந்திருக்கிறார்.

மகனுக்கு ஐந்துவயதிற்கும் குறைவு.  கொழும்பு காலிவீதியில் அவன்


ஒரு மாட்டு வண்டியை பார்த்திருக்கின்றான். வண்டில்காரன் அந்த மாட்டை தடியால் அடிப்பதை கண்டதும்,  “ அப்பா… அங்கே பாருங்கள். அந்த ஆள் மாட்டுக்கு அடிக்கிறான். பொலிஸை கூப்பிடுங்கள்  “ என்று கத்தியிருக்கின்றான்.

 “ எமது இந்த தாய்நாடு மூன்றாம் உலக நாடுகளின் வரிசையில்தான் வருகிறது.  இங்கு மாட்டு வண்டில்களும்  மக்களின் தேவைகளை கவனிக்கின்றன. அந்த வண்டிலுக்கு அந்த மாடுதான் எஞ்சின். இதனையெல்லாம் கண்டுகொள்ளாதே .  “  என்றார் தகப்பன்.

மற்றும் ஒருநாள் அந்தச்சிறுவன், தந்தையுடன் ஒரு வாகனத்தில் கொழும்பு காலி வீதியில் பயணித்தான்.  திடீரென வாகனங்கள் நின்றுவிட்டன. அவன், ஏன் வாகனத் தொடர் அணி தரித்து  நிற்கிறது? என எட்டிப்பார்த்துள்ளான்.

ஒரு மாட்டுவண்டில் வாகனங்களுக்கு முன்னால் நிற்கிறது. அந்த மாடு சிறுநீர் கழிக்கிறது.  அதனால், வண்டில்காரன் நிறுத்தியிருக்கிறான்.

இச்சிறுவன் அந்தக்காட்சியை பார்த்துவிட்டு,                                                  “ அப்பா…அப்பா… அந்த வாகனத்தின் எஞ்சினிலிருந்து பெற்றோல் வடிகிறது.  உடனடியாக தீயணைப்பு படைக்கு அறிவிக்கவும்  “ என்று கத்தியிருக்கிறான்.

குழந்தைகளின் உலகம் இப்படித்தான் இருக்கும்.  அவர்கள் ஜீவராசிகளிடத்தில் பிரியமாகவும் இருப்பார்கள். வெளிநாடுகளில்  வீட்டுக்கு வீடு நாய், பூனை வளர்க்கிறார்கள்.  அவுஸ்திரேலியா  சிட்னியில் எனது நண்பர் ஒருவரின் மகன் கீரிப்பிள்ளையை மிகவும் பிரியமாக வளர்க்கின்றான்.

எனது மகன் முகுந்தன் மிகவும் பாசத்தோடு வளர்த்த பிராண்டி என்ற நாய் இறந்தபோது முழு வீடும் துக்கம் அனுட்டித்தது.  இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவும் எழுதியிருக்கின்றேன்.

இந்த 36 ஆவது அங்கத்தை ஒரு சிங்கள சிநேகிதி வீட்டிலிருந்து எழுதுகின்றேன். அவர் அவுஸ்திரேலியா அரச  S B S வானொலி ஊடகத்தில் பணியாற்றுபவர். அத்துடன் கலை, இலக்கிய ஆர்வலர்.  மொழிபெயர்ப்புகளும் செய்திருக்கிறார்.  இரண்டு  நூல்களிலும்  இவரது மொழிபெயர்ப்புகள்  இடம்பெற்றுள்ளன.

கங்கா - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 சமூகக் கதை,புராணக்கதை,சரித்திரக் கதை என்பனவற்றை


அடிப்படையாகக் கொண்டு தமிழ் படங்கள் வெளிவந்த காலத்தில் 60ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அவற்றில் இருந்து வேறுபட்டு செக்ஸ் & கிரைம் என்ற கதைக்கருவை மூலமாகக் கொண்டு படங்கள் வெளிவரத் தொடங்கின.அப்படிப்பட்ட படங்களில் நடிப்பதற்கு என்று அவதாரம் எடுத்த்தாற் போல் இருந்த ஜெய்சங்கர் இந்தப் படங்களில் நடித்து புகழ் பெறத் தொடங்கினார்.அப்படி உருவாகி 1972ல் வெளிவந்து வெற்றி பெற்ற படம் தான் கங்கா.


பிரபல ஒளிப்பதிவாளராக திகழ்ந்த எம் கர்ணன் தயாரிப்பாளராக

மாறி இது போன்ற கௌ பாய் படங்களை இயக்கத் தொடங்கினார்.அவர் தயாரித்து இயக்கிய காலம் வெல்லும் படம் வெற்றி பெற்றதை அடுத்து கங்கா உருவானது.ஹீரோவாக ஜெய்சங்கர் நடித்தார்.அவருக்கு ஜோடியாக நடிகை மீனாவின் அம்மா ராஜ்கோகிலா நடித்தார்.இவர்களுடன் நாகேஷ்,அசோகன்,ராமதாஸ்,கே கண்ணன்,சி ஐ டி சகுந்தலா,ஓ ஏ கே தேவர்,எஸ் என் லட்சுமி,ஜெயக்குமாரி ஆகியோரும் நடித்தனர்.

படத்தில் வரும் வில்லன்கள் அனைவரும் கொடூரமானவர்களாகவே சித்தரிக்கபட்டர்கள்.அதற்கேற்றாற் போல் அசோகன்,ராமதாஸ்,கண்ணன், ஓ ஏ கே தேவர் ,ஸ்டண்ட் மாஸ்டர் மாதவன் ஆகியோர் காட்சியளித்தார்கள்.நாகேஷின் காமெடி இந்த ரகளைக்குள் பெரியளவில் எடுபடவில்லை.ராஜகோகிலா கவர்ச்சி விருந்து படைத்தார்.நடிப்பை காட்ட ஏது வாய்ப்பு!

கொள்ளைக்காரனாக இருந்து திருந்தி வாழும் கதிரவேலு தன் மகன் கங்காவை வீரனாக வளர்க்கிறான்.மனைவி,மகனுடன் அமைதியாக வாழும் அவன் வாழ்வில் அவனது பழைய நண்பர்கள் குறிக்கிடுகிறார்கள்.மீண்டும் தங்களுடன் இணையும் படி வற்புறுத்துகிறார்கள்.கதிரவேலு மறுக்கவே அதனால் ஏற்படும் மோதலில் அவன் இறக்கிறான்.மகன் கங்கா தந்தையை கொன்றவர்களை பழி வாங்கி விட்டு தான் தாயின் முகத்தில் விழிப்பேன் என சபதம் எடுக்கிறான்.

முதல் சந்திப்பு ( அங்கம் -09 ) இலக்கிய உலகில் அன்பு - அறிவு - உண்மை – தேடல் சார்ந்து இயங்கிய ஆளுமை “ பூரணி “ மகாலிங்கம் முருகபூபதி


எமது தமிழ் சமூகத்தில் எழுத்தாளர்களும் கலைஞர்களும் தம்மை அடையாளப்படுத்திக்கொள்வதற்கு தங்களது பூர்வீக ஊர்களின் பெயர்களையும், தமது பெயருக்கு முன்னால் பதிவுசெய்துகொள்வார்கள்.

அதனால்,  அவர்களை விளிக்கும்போது முழுப்பெயரும் சொல்லவேண்டிய அவசியம் இராது. 

சிலரை உதாரணத்திற்கு சொல்கின்றேன்.

சில்லையூர்,  காவலூர், திக்குவல்லை, தெளிவத்தை, மாவை, வதிரி, உடுவை.  இவ்வாறு ஊரின் பெயரைச் சொன்னாலே எழுத்தாளர் – கலைஞரின் பெயரை நாம் தெரிந்துகொள்ள முடியும்.

இதே சமயம் ஈழத்திலும் புகலிட நாடுகளிலும்   இலக்கிய


சிற்றிதழ்களை  வெளியிட்ட சிலரையும் அவற்றின் பெயரை முதல் பெயராக வைத்து அழைப்பது வழக்கம்.

அவ்வாறு சொன்னால்தான் தெரியவரும்.

உதாரணத்திற்கு :  மல்லிகை ஜீவா, சிரித்திரன் சிவஞானசுந்தரம், செங்கதிர் கோபாலகிருஷ்ணன்,  ஞானம் ஞானசேகரன்,  ஜீவநதி பரணீதரன்,  ஓசை மனோகரன், காலம் செல்வம்.

இவர்களின் வரிசையில் மற்றும் ஒருவர்தான் பூரணி மகாலிங்கம்.

எம்மத்தியில் பல மகாலிங்கம்கள் இருப்பார்கள். ஆனால், பூரணி மகாலிங்கம் எனச்சொன்னால்தான் இலக்கிய உலகில், இவர்பற்றி தெரிந்துகொள்கிறார்கள்.

எனது இலக்கியப்பிரவேச  காலத்தில், என்னையும் அரவணைத்து ஏற்றுக்கொண்டு,  தனது பூரணி இதழில் எழுதுவதற்கு களம் தந்தவர்தான் என். கே. மகாலிங்கம்.

இவருடனான முதல் சந்திப்பு எனக்கு இலக்கிய வட்டாரத்தில் பலரையும் நண்பர்களாக்கியிருக்கிறது.

அதனால், என்னால் மறக்கமுடியாத இலக்கியவாதி.

1972 ஆம் ஆண்டு ஜூலை மாத மல்லிகை இதழில் எனது முதலாவது சிறுகதை கனவுகள் ஆயிரம் வெளியானதையடுத்து,  சில ஈழத்து எழுத்தாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தேன்.

அச்சிறுகதை மேற்கிலங்கையில் நீர்கொழும்பு பிரதேச மண்வாசனையுடன்,  அங்கு வாழ்ந்த கடல் மாந்தர்களின் மொழிவழக்குடன் வெளியாகியிருந்தது.  அக்காலப்பகுதியில்  கொழும்பு பொரளை கொட்டா வீதியில் ( தற்போது கலாநிதி என். எம். பெரேரா வீதி ) இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கியது.

 அங்கிருந்துதான் தேசாபிமானி, புதுயுகம், சக்தி முதலான இதழ்களும் வெளிவந்தன.

இலக்கிய நண்பர் மு. கனகராசன் அங்கே ஆசிரிய பீடத்திலிருந்தார்.    1972 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் .

மெல்பனில் இலக்கிய சந்திப்பு கனடா ஶ்ரீரஞ்சனியின் “ ஒன்றே வேறே “ புதிய கதைத்தொகுதி வெளியீடு


கனடாவில் வதியும் எழுத்தாளரும்
 ஆசிரியருமான ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா அவுஸ்திரேலியா வருகை தருகிறார்.

ஶ்ரீரஞ்சனியுடனான   இலக்கிய சந்திப்பும், அவரது புதிய சிறுகதைத் தொகுதி ஒன்றே வேறே நூலின் அறிமுக அரங்கும் மெல்பனில்  இம்மாதம் 30 ஆம் திகதி  ( 30-10-2022 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 4-00 மணிக்கு அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

சங்கத்தின் தலைவர்,  எழுத்தாளர் திருமதி சகுந்தலா கணநாதன்
அவர்களின் தலைமையில் மெல்பனில் வேர்மன் தெற்கு சமூக இல்லத்தில்
( Vermont South Community House – Karo bran Drive,   Vermont South, Vic – 3133 )  நடைபெறும்.

இலங்கை மகுடம் பதிப்பகத்தின் வெளியீடாக வரவாகியிருக்கும் ஶ்ரீரஞ்சனியின்  ஒன்றே வேறே கதைத் தொகுதியின் வாசிப்பு அனுபவம் சார்ந்த  தமது நயப்புரைகளை  மெல்பன் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலர்கள் திரு. பாலசந்தர் சௌந்தர பாண்டியன், திருமதி கலாதேவி பாலசண்முகன் ஆகியோர்  சமர்ப்பிப்பர்.

இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்  கலை இலக்கிய ஆர்வலர்களையும் வாசகர்களையும் அன்புடன் அழைக்கிறது.

இலங்கையில் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும் பின்னர் கனடா – ஸ்காபரோவை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும்

 ஶ்ரீரஞ்சனி, இலங்கையில் பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞானப் பட்டதாரியாவர். கொழும்பில் ஆங்கில பாட ஆசிரியராகவும் பணியாற்றியவர். இலங்கை, தமிழக மற்றும் புகலிட தேசத்து இதழ்களிலும் சிறுகதைகளை எழுதிவருபவர்.

 ஶ்ரீரஞ்சனியின் நான் நிழலானால் கதைத் தொகுதி 2010 ஆம் ஆண்டிலும்,  உதிர்தலில்லை இனி என்ற கதைத்தொகுதி 2018 ஆம் ஆண்டிலும் வெளிவந்தவை.

ஓஸ்லோவில் ஒரு வாரம் (கன்பரா யோகன்)


பேர்கனிலிருந்து  ஒரு வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு ஒஸ்லோவுக்கு செல்லும் ரயில் ஏறினோம். அந்தப்  பயணத்திற்கு கிட்டத்தட்ட 7 மணி நேரத்துக்கு சற்று அதிகமாக  எடுத்தது. நோர்வேயின் மேற்கிலிருந்து கிழக்காக  செல்லுகிற இந்த ரயிலில்  தெரியும் யன்னல் காட்சிகளுக்காக இது பிரசித்தமானதென்று பலரும் சொல்லியிருந்தால் நாங்களும் இந்த ரயில் பயணத்தை விரும்பியிருந்தோம்.   

நாங்கள் ஏறும்போது பேர்கனில் காலியாகவிருந்த


ஆசனங்களெல்லாம் பிறகு ஒவ்வொரு தரிப்பிலும் ஏறிய பயணிகளால் நிரம்பத் தொடங்கியது. நாங்கள் முன்பு காரில் சென்று பார்த்த பனி மலைகள் ரயில் பாதைக்கு மிக அருகாகத் தென்பட்டன.  மலைகளுக்கு வெள்ளைப் பஞ்சு ஒட்டி விட்டது போல  பனியின் படிவுகள் இன்னும் உருகாமலிருந்தன.

ரயில் அவ்வப்போது தரித்து நின்ற வேளையில் உள்ளே உணவுச்சாலை இருந்த பெட்டியை நோக்கிப் போனேன். மேசைகளில் உணவுடன் பியர் அல்லது சூடாக, குளிராக குடிப்பதற்கு ஏதாவதொன்றை வாங்கி வைத்துக் கொண்டு கூட்டமாகப் பலர் அமர்ந்திருந்தனர். அந்தப் பெட்டி அவர்களின் பேச்சொலிகளால் நிறைந்திருந்தது. பலருக்கு அது ஒரு உற்சாகம் நிரம்பிய பயணம்.  அவர்களில் ஒருவருடன் பேச்சுக் கொடுத்தபோது ஆங்கிலத்தில் பதிலளித்தார். அநேகமானோருக்கு ஆங்கிலத்தில் உரையாடுவதில் சிரமமேதுமில்லை என்று இங்கு வந்ததிலிருந்து அவதானித்திருக்கிறேன்.    

எமது ஆசனத்துக்கு முன்பாக இருந்த வெற்றிடத்தை இப்போது ஒரு இளஞ்சோடிகள் வந்து நிரப்பினர். ஆச்சரியமாக அவர்களும் அவுஸ்திரேலிய பயணிகள், டென்மார்க்கில் பயணத்தை முடித்துக்கொண்டு நோர்வேக்கு வந்திருக்கிறார்கள்.

யன்னலுக்கு வெளியே மலைகளும் , குகைகளும் கடந்து போக மலைப் பிரதேசம் மெல்லமெல்ல மறைந்து  சமதரைப் பிரதேசம் தெரிய ஆரம்பித்தது. ஓஸ்லோ பெரும்பாலும் சமதரைப் பிரதேசம். பேர்கனைப் போல மலைகள், குடாக்  கடல்கள் என்றில்லை.

நாங்கள் ஒஸ்லோவில் நின்றபோது நண்பர் சர்வேந்திரா எங்களையும், லண்டனிலிருந்து வந்திருந்த நண்பர் அ.ரவியையும் தனது காரில் அழைத்துக் கொண்டு சுவீடனின் எல்லையோரத்திலுள்ள நகரமாகிய Stromstad  இற்கு போய்ப் பார்த்து வருவதற்காக காலையில் புறப்படலாம் என்றார்.  இவர்கள் இருவருமே மண் சுமந்த மேனியர் நாடகத்தில் நடித்த நண்பர்கள். ஒஸ்லோவிலிருந்து சுவீடனின் எல்லை சுமார் ஒன்றரை மணி நேரப் பயணம்.

"தடையிலா அருள்பெற்ற தாயுமான சுவாமிகளின் அருள்வாழ்வும் அமுதப் பாடல்களும்"

சிவனடியார்கட்கு  அனைவரும் கேட்டு பயன்பெறக் கூடிய ஆகமவாரிதி முனைவர் சிவஸ்ரீ சபாரத்தினம் சிவாசாரியார் அவர்களது சொற்பொழிவு

 

"தடையிலா அருள்பெற்ற தாயுமான சுவாமிகளின் அருள்வாழ்வும் அமுதப் பாடல்களும்"  https://youtu.be/7UM68-IMQ-U

 




“மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்” 




இலங்கைச் செய்திகள்

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றம்

பலாலி விமான சேவைகள் இம்மாத இறுதியில் ஆரம்பம்

தமிழ் அரசியல் கைதிகள் 08 பேர் நேற்று விடுதலை

2,000 ஏக்கர் அரச காணிகளை விற்பனை செய்த அதிகாரிகள்

முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் இல்லத்தில் மீலாத் சிறப்பு நிகழ்ச்சிகள்

விரைவில் யாழ். நகருக்கு புனர்வாழ்வு நிலையம்


22ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றம்

- 179 பேர் ஆதரவாக வாக்களிப்பு
- சரத் வீரசேகர மாத்திரம் எதிர்த்து வாக்களிப்பு

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உலகச் செய்திகள்

45 நாட்களே பதவி வகித்த பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவி விலகினார்

இம்ரான் கானுக்கு 5 வருடங்களுக்கு அரசியலில் ஈடுபட முடியாது

ஒரு வாரத்திற்குள் பிரிட்டனின் புதிய பிரதமரைத் தேர்வு செய்யப் போட்டி

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்

சூடான் இன மோதல்களில் 2 நாட்களில் 150 பேர் பலி

சாட் நாட்டில் இராணுவம் சரமாரி சூடு: ஆர்ப்பாட்டக்காரர்கள் பலி

கால்நடை ஏப்ப வரி: நியூசிலாந்தில் ஆர்ப்பாட்டம்

 

45 நாட்களே பதவி வகித்த பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவி விலகினார்

- பிரித்தானிய வரலாற்றில் குறைந்த காலம் ஆட்சி செய்த பிரதமர் எனும் பெயரை பெற்றார்

இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ், தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா மெய்நிகரில் இம்மாதம் 29 ஆம் திகதி


அவுஸ்திரேலிய தமிழ்
இலக்கிய கலைச் சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்மாதம்
29 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் நடைபெறுகிறது.

சங்கத்தின் தலைவர் எழுத்தாளர் திருமதி சகுந்தலா கணநாதன் தலைமையில் இடம்பெறவிருக்கும் இந்நிகழ்வில்,  இலக்கியவாதியும் தமிழக முன்னாள் ஐ. பி. எஸ். அதிகாரியுமான திருமதி திலகவதி “ தமிழ்ச் சிறுகதைகள்- இன்று    என்ற தலைப்பிலும், 

 தமிழகத்தைச் சேர்ந்த , தேர்ந்த வாசகரும் வாசிப்பு அனுபவங்கள்


சார்ந்து உரையாற்றி வருபவருமான திரு. பவா செல்லத்துரை                          
 “ வாசிப்பு – ஒரு மானுடத்திறப்பு “ என்ற தலைப்பிலும் உரையாற்றுவர்.

நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசரின்   இந்து மதத்தின் பரிணாமச்சிந்தனைகள் ( கட்டுரைகள் ) நூல் பற்றி  எழுத்தாளர் திரு. லெ. முருகபூபதியும், திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தியின்  “நோபோல்  என்ற சிறுகதைத் தொகுதி பற்றி, இலங்கையிலிருந்து கலாநிதி சு. குணேஸ்வரனும் உரையாற்றுவர்.

நிகழ்வில் இணைந்திருப்பவர்களின் கலந்துரையாடலும் இடம்பெறும்.

கலை, இலக்கியவாதிகளையும் , மற்றும் ஊடகவியலாளர்களையும்  வாசகர்களையும்  இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு, அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அன்புடன் அழைக்கிறது.

மெய்நிகர் இணைப்பு :

https://us02web.zoom.us/j/89529543173?pwd=bUUrQVBrZlZiMjNxcEVNdllXUVVnZz09

தீபாவளி நாளில் லட்சுமி குபேர பூஜை அக்டோபர் 24/10/ 2022 திங்கட்கிழமை

குபேரர் செல்வத்தின் தெய்வீக சக்தியாக பார்க்கப்படுகிறார், அவர் எப்போதும் செல்வத்தின் தெய்வமான ஸ்ரீ லட்சுமியுடன் போற்றப்படுகிறார்.
தீபாவளிப் பண்டிகையின் ஒரு பகுதியாக, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் (SVT) "லக்ஷ்மி குபேர பூஜை"யில், செல்வம் பெருகவும், செழிப்பு பெறவும், கடன்களிலிருந்து மீளவும், தொழில் வளர்ச்சி அடையவும், அக்டோபர் 24 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது.

ஸ்கந்த சஷ்டி விரதம் 2022

 ஸ்கந்த சஷ்டி விரதம் "ஐப்பசி" மாதத்தில் (அக்டோபர்-நவம்பர்)


ஆண்டுக்கு ஒரு முறை "பிறத்தமை"யில் தொடங்கி ஒளிரும் நிலவின் 1st கட்டம் வரை கடைபிடிக்கப்படுகிறது.

பிரபஞ்சத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்த சூரபத்மனை முருகப்பெருமான் வென்ற நாள்.

சூரபத்மன் மறைந்திருந்த ஒரு வன்னி மரத்தில் இறைவன் தன் தெய்வீக ஈட்டி 'சக்தி வேல்' எறிந்தான் அதை இரு பகுதிகளாகப் பிளந்து... அது மயிலாகவும், ரூஸ்டராகவும் (

Rooster) மாறியது தனின் வீர பக்தர்கள்.

இந்த காவியமான 'சூர சம்ஹாரம்' ஸ்கந்த சஷ்டி விழாவின் ஒரு பகுதியாகும்.

SVT - ஹெலன்ஸ்பேர்க்கில், அக்டோபர் 25th செவ்வாய்க்கிழமை தொடங்கி, அக்டோபர் 30th, 2022 ஞாயிறு அன்று நிறைவடைகிறது.

நிகழ்ச்சி அட்டவணை: 25th to 29th Oct 08.00 AM - அபிஷேகமும், அலங்காரமும், மகா தீபாராதனையும், ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு அர்ச்சனையும் (முருக / கார்த்திகை), ஶ்ரீ வள்ளி, ஶ்ரீ தெய்வசேனா.

30th அக்டோபர் - ஞாயிறு - ஸ்கந்த சஷ்டி காலை 10.00 மணி : ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு (முருக / கார்த்திகை), ஶ்ரீ வள்ளி, ஶ்ரீ தெய்வசேனா.

பிற்பகல் 02.00 : ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் (முருக / கார்த்திகை), ஶ்ரீ வள்ளி, தெய்வசேனா.